அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள் (10 Special Poems of A. Srinivasan) - Bookday Kavithaikal - https://bookday.in/

அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள்

அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள்

1.

வழக்கமாக அலுவலகம்

செல்லும்போது

பூங்கா அருகே அமர்ந்திருக்கும்

பிச்சைக்காரரைக்

காணவில்லை.

ஒரு நாள்

சில்லறை இல்லையென்று

ஒரு நாள்

வாகன நெரிசலென்று

ஒரு நாள்

மனம் சரியில்லையென்று

ஒரு நாள்

உடல் சரியில்லையென்று

அன்று வரை

ஒரு ரூபாய் அவருக்கு

ஈந்ததில்லை.

அவர் இல்லாத தினம்

கருணை சுரக்கின்றது,

இல்லாததால் தான்

சுரக்கிறதோ??

அவருக்கு உடல்

நலமில்லையோ

இடம் மாறிவிட்டாரோ

யாரோ துரத்திவிட்டனரோ

மாலையிலாவது

அவர் இருந்திட வேண்டுமென்று

நாள் முழுதும் எண்ண ஓட்டம்.

வேண்டுதல் பலித்துவிட

பணி முடித்து திரும்பும்போது

அதே இடத்தில் அவர்.

பர்ஸ் பத்திரமாக இருப்பதை

உறுதி செய்துகொண்டு

தானாக வீடு நோக்கி

விரைந்தது வண்டி.

மீண்டும் கருணையும்

மனப்பெட்டகம்

நோக்கி விரைந்து தன்னை

பத்திரப்படுத்திப்

பூட்டிக் கொண்டது.

2.

உனக்கும் எனக்கும் இவ்வளவு பொருத்தம்!

உனக்கும்

உன்னைப் பிடிக்கிறது

எனக்கும்

உன்னைப் பிடிக்கிறது.

அதனால்

உனக்கும்

என்னைப் பிடிக்கவில்லை

எனக்கும்

என்னைப் பிடிக்கவில்லை.3.அப்பாஎந்தக் கோவிலுக்கும்சாமி கும்பிடப் போனதில்ல

கூட்டிட்டும் போனதில்ல.

பசங்களுக்கு
மொட்டை அடிச்சே ஆகணும்
காது குத்தியே ஆகணுங்கற
தாத்தாவோட
கட்டாயத்தில குலதெயவக்
கோவிலோடு சரி
சாமியோட சங்காத்தம்.

அதுக்காக சாமி வெறும்
கல்லு மண்ணுன்னு
பிரசார நெடியோட
சுத்தற ஆளும் கிடையாது.
ஆனா
பூசாரி நெத்தியில லேசா
விபூதி இட்டாக்கூட
ரஜினி ஸ்டைல்ல எப்ப அழிச்சார்னு
தெரியாத மாதிரி துடைக்கற ஆளு!

இப்பல்லாம் நெத்தி நெறய
குங்குமமும் சந்தனமுமா
கலக்குறார்!

நல்ல வேளை அந்த மார்பளவு
போட்டோல கையே கொஞ்சம்
கூட தெரியல.
இல்லண்ணா இப்பவும்
நைஸா அழிச்சிட்டிருப்பார்!!!

4.
கண்களைப் பறிக்க
வேண்டாமென
பூக்களுக்கு
அறிவிப்பு பலகை
யார் வைப்பது!

5.

உன் வருகைக்கு
என்னுள்ளிருந்து
தானியங்கி
ஒற்றைக் கட்டியம்
‘லப்டப்’ ‘லப்டப்’

6.

தோல்வியை
 ஒத்துக் கொள்வது
வெற்றியாகாது.
அது கையாலாகாத்தனம்!

7.

யானைக்கும்
அடி சறுக்கும்.
அடிக்கடி சறுக்காது.

8.

கிராம பாதைகளில்
மிதித்துவிடக்கூடாதென
பார்த்து  பார்த்துச் செல்கையில்
பார்க்கின்ற
தொட்டாற்சிணுங்கி செடிகளுக்கு
 தொட்டு தொட்டு விளையாடிய
 பள்ளி நினைவுகள்
கூடுதல் பசுமை
சேர்த்துவிடுகின்றன.
தெரியாமல்
மிதித்துவிடும் போதெல்லாம்
கால்களுக்கு கைவிரல்கள்
கவனமாக
இடம்பெயர்ந்து விடுகின்றன.

9.

வயிறு
நிரம்பியதறிந்தும்
அறியாதது போல
கூடுதலாய்ப் பாலூட்டியவள்
தூங்கிவிட்டதறிந்தும்
உணராதது போல
கூடுதலாய்த்
தாலாட்டியவள்
போதுமென்று சொல்லியும்
கேளாதது போல்
இன்னொரு தோசை
வார்த்தவள்
இன்று
எதிர்முனையில்
இணைப்பு துண்டிக்கப்பட்டது அறிந்தும்
மேலும் கொஞ்சம் நேரம்
காதிலேயே
அலைபேசியை வைத்திருக்கிறாள்!
அன்னை என்றாலே
கொஞ்சம்
அதிகம் தானே!

10.

ஒரு சிறகு
போதுமானதாய்
இருக்கிறது
ஒரு பறவையை
ஞாபகப்படுத்த
மறக்காமல்
இருக்க!
ஒரு மணற்துகள்
போதுமானதாய்
இருக்கிறது
கடலை
ஞாபகப்படுத்த
மறக்காமல்
இருக்க!!
ஒரு நீலத்துளி
போதுமானதாய்
இருக்கிறது
வானை
ஞாபகப்படுத்த
மறக்காமல்
இருக்க!!!
ஒரு துளி அன்பு
போதுமானதாய்
இருக்கிறது
உனை
ஞாபகப்படுத்த
மறக்காமல்
இருக்க!!!
ஒரெயொரு சொல்
போதுமானதாய்
இருக்க வேண்டும்
ஒரு கவிதையை
ஞாபகப்படுத்த
மறக்காமல்
இருக்க!!!

 

எழுதியவர் : 

அ.சீனிவாசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. RADJA RANGARAMANUJAM

    எப்போதும்போல் தான் என்றாலும் எப்படி முடிகிறது இவரால் இத்தனை எளிமையாகவும் எளிதாகவும் வடிக்க முடிகிறது என்ற எண்ணம் தன்னாலே வந்துவிடுகிறது. சோடை போகாத சொல்லொழுங்கு கவிதைகள்.
    வாழ்த்துகள் அய்யா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *