நூல் அறிமுகம் : ரமாதேவி ரத்தினசாமியின் 16 வயதினிலே பதின்பருவ வலிகளும் வழிகளும் -சரிதா

நூல் அறிமுகம் : ரமாதேவி ரத்தினசாமியின் 16 வயதினிலே பதின்பருவ வலிகளும் வழிகளும் -சரிதா




புத்தகம் : 16 வயதினிலே பதின்பருவ வலிகளும் வழிகளும்
ஆசிரியர் : ரமாதேவி இரத்தினசாமி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 25
பக்கங்கள் : 32
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

16 வயதினிலே வலிகளும் வழிகளும்.

மொத்தம் எட்டுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. பதின்ம வயதில் இளமை மதுவைப் போல ஒரு போதையை உண்டாக்குகிறது என்று 2700 வருடங்களுக்கு முன்பு உரைத்தார் அரிஸ்டாட்டில் என்று தொடங்குகிறது முதல் கட்டுரை.

போதை என்ற பிரதிபலிப்பு சமூகத்தில் எதிரொலிப்பதாலோ என்னவோ எல்லா காலங்களிலும் இந்த வளரிளம் பருவத்தினர் குறித்த பயமும் மிரட்சியும் சமூகத்திடம் விரவிக் கிடக்கிறது என்றே கூறலாம். விடலைப் பருவம் என்று சொல்லும் பொழுதே ஒரு எதிர்மறையான எண்ணம் நம் மனதிற்குள் வந்து விடுகிறது என்பது உண்மைதான் எழுத்தாளர் சொல்வது போல.

சினிமாவிலும் பிற ஊடகங்களிலும் வாய்மொழிக் கதைகளிலும் கூறும் ‘விடலைப் பையன்’ என்ற சொல்லாடல் குறித்த செய்திகள் எதிர்மறையாகவே நமக்குக் கிடைத்துள்ளன.
“எனக்கு எல்லாம் தெரியும்” என்று அந்த வயதில் தோன்றும் எண்ணம் ஆகட்டும் ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சமூகம் அவர்களைச் சாடும் எண்ணம் ஆகட்டும் எழுத்தாளர் மிக அழகாக விவரித்துக் கூறியிருக்கிறார்.

‘வயசுக்கோளாறு’ ‘பிஞ்சிலே பழுத்தது’ என்று இகழ்ச்சியாக கூறப்படுகிறது. இப்படியான காலகட்டத்தில் இந்த பருவம் உடல், மனம், காதல், கனிவு, காமம், உணர்ச்சி, நட்பு, விரோதம், சபலம், சந்தேகம், தன்னம்பிக்கை என பலதரப்பட்ட அழுத்தமான குழப்பமான உணர்வுகளால் ஆக்கிரமிப்பு கொண்டிருந்தாலும், இவர்களுடைய வாழ்க்கையில் அந்தப் பதின் பருவம் என்பது ஒரு பொக்கிஷமாகவே இருக்கும்.

நமக்கும் நம்முடைய சிறு வயதை மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் பொழுது நம்முடைய பதின்பருவ நினைவுகளே மனதில் ஒரு அழகான பூந்தோட்டமாக காட்சியளிக்கும்.

எவ்வளவுதான் பிரச்சினைகளை கையாண்டு இருந்தாலும் அந்தப் பருவம் என்பது வண்ணங்களால் எழுதப்பட்ட ஓவியம்தான். பதின்பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பெண்குழந்தைகளாகட்டும் ஆண் குழந்தைகளாகட்டும் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் புரிய வைக்கத் தவறி விடும் சூழலில் அவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்திக் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெரும்பாலான குழந்தைகளிடம் இருப்பதில்லை.

அந்தக்காலகட்டத்தை ஒரு பயம் கலந்த காலகட்டமாகவே எதிர்கொள்கிறார்கள். இந்த மாதிரியான மாற்றங்களை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்த வகையில் எடுத்துக் கூற வேண்டும் என்பதையும் பெற்றோர்கள் புரிதலோடு குழந்தைகளை கையாள வேண்டும் என்பதையும் அழகாக விளக்கி இருக்கிறார்.

இந்தப் பதின்பருவத்தில் அவர்களுடைய பேச்சை காது கொடுத்து கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபுறம் முந்திரிக்கொட்டை அவசரக்குடுக்கை என்று அவர்களுடைய அந்த பருவத்திற்கு உரித்தான துள்ளலை எள்ளல் செய்யும் பொழுது அவர்களுடைய மனநிலை என்னவாகிறது என்பதையும், அந்த மனநிலை வழியாக குழந்தைகளுடைய வாழ்க்கை எந்த மாதிரியான பாதிப்பை நோக்கி நகர்ந்து செல்கிறது என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

பதின்ம பருவ வயது தொடங்கும் பருவத்தில் பெரும்பாலான பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் கண்ணாடியில் தன்னை அடிக்கடி பார்த்துக் கொள்வது பற்றியும் அதற்கு பெற்றோர்கள் எந்த மாதிரியான ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதையும் மிக அழகாக கூறியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பெற்றோரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.

உளவியல் ரீதியாக உடல் ரீதியாக மனரீதியாக ஏற்படும் பல்வேறு சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் ஒவ்வொரு கட்டுரையும் அழகாக விளக்கிக் கொண்டே செல்கிறது. இந்தக் கட்டுரைகளை எழுதிய ஆசிரியர் பதின்பருவ குழந்தைகளைக் கையாண்டு கொண்டிருக்கும் ஆசிரியர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

ஒவ்வொரு பிரச்சனையும் அதற்குரிய தீர்வுகளும் அவருடைய முதிர்ந்த அனுபவத்தின் வழியாக பெறப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது. ஒவ்வொரு தலைப்பும் திரைப்பாடலின் தலைப்பாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு அது ஒரு அழகிய கனாக்காலம். ஆளும் வளரணும் அறிவும் வளரணும். மயக்கமா கலக்கமா. மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான். இப்படி தலைப்புகள் ஈர்க்கும் வகையில் உள்ளன. தலைப்புகள் மட்டுமல்ல உள்ளிருக்கும் தகவல்களைக் கூட பெரும்பாலும் திரைப்பட வசனங்கள் வழியாகவும் திரைப்படத்தில் இருக்கும் காட்சிகள் வழியாகவும் விளக்கி மிக இயல்பாக அனைவரும் புரிந்து கொள்ள தகுந்த வகையில் கட்டுரைகளை நகர்த்திச் சென்றிருக்கிறார் எழுத்தாளர்.

இது எழுத்தாளரின் இரண்டாவது புத்தகம். முதல்ப் புத்தகம் கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் பெண்களுக்கான ஒரு கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தது. இது பதின்பருவ குழந்தைகளுக்கு.

பறக்கட்டும் பறக்கட்டும் பட்டாம்பூச்சிகள். பதின்பருவக் குழந்தைகளின் ஆசைகளையும் கனவுகளையும் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்து பறக்கவிடும் பட்டாம் பூச்சிகளாய்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *