இது குதிரைதான் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்க இயலும்.
ஓராண்டு ஐந்தாண்டு பத்தாண்டு பதினைந்து ஆண்டு என கடந்து திரையுலகில் நிற்பதற்கு வேறு எதையும் விட படைப்பூக்கமும் படைப்புத்திறனும் ஒருவருக்கு வேண்டும். இந்த படைப்புத்திறன் குறைந்தபட்ச லாபத்தை ஈட்டித்தரும் என்கிற வியாபார உத்தியையும் அந்த படைப்பாளர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வியாபார உத்தி என்பது வேறொன்றுமில்லை ; தனது கலைமொழியை கதைசொல்லும் மொழியைக் கொண்டு ரசிகர்களை பார்க்க வைப்பதுதான்.
இவ்வாறு தன் திரைப்படங்கள் ஈட்டிய குறைந்தபட்ச லாப உத்திரவாதத்துடன் தயாரிப்பாளர்களை காப்பாற்றி வந்ததன் காரணமாக 17 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.
2007 ல் வெளியான கூடல் நகர் தொடங்கி வர இருக்கின்ற கோழிப்பண்ணை செல்லதுரை படம் வரை ஒன்பது படங்களுமே வெவ்வேறு கதைத்தளங்கள் கொண்ட படங்கள். ஒன்று போல் இல்லாத வெவ்வேறு கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் அவைகள்.
சீனுராமசாமி படங்களில் அவர் பார்த்து வளர்ந்த உணர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் நிலமே தவிர்க்கவியலாத பாத்திரமாக வந்து கொண்டே இருக்கும்.
நையாண்டி மேளம் கரகாட்டம் புரவியாட்டம் என மண்சார்ந்த கலைஞர்களும் வந்து கொண்டே இருப்பார்கள்.
கூடல்நகர் தொடங்கி வரவிருவிருக்கின்ற கோழிப்பண்ணை செல்லதுரை வரை சீனுராமசாமியின் படங்கள் சமூகநீதி சமத்துவநீதியை உள்ளீடாகக் கொண்ட படங்கள் ஆகும். பெண் சக மனிசி என உணர்த்தும் படங்கள்.அன்பை மானுட நேயத்தை விதைத்தப் படங்கள்.
சீனுராமசாமி ஈரானில் பிறந்திருந்தால் அப்பாஸ் கிரஸ்டாமி போல மஜித் மஜீதி போல கேரளத்தில் பிறந்திருந்தால் சாஜி கருண் போல பிளஸ்ஸி போல கொண்டாடப்பட்டிருப்பார்.
தமிழ்நாடு நவீனமாக மாறி வளர்ந்திருந்தாலும் கூட, ஆய்வு தேடல் நாட்டம் போன்றவைகளில் ஒன்றில் வைத்த ஒருவரில் வைத்த மனதை கருத்தை மீட்டெடுத்து காலத்தை நோக்கிப் பொருத்தி ஆய்ந்து பயணப்படுவதில் அக்கறை இல்லாத தேங்கிப் போன குட்டை போல இலக்கியம் திரைப்படம் போன்ற துறைகள் மீதான அணுகுமுறைகளில் காண முடிகிறது.
திருப்பரங்குன்றத்தில் தொண்ணூறுகளில் இளைஞனாக பயணித்த சீனிவாசன் , இன்று ரசியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்பட வல்லுநர்கள் மதிக்கும் ஓர் ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார் சீனுராமசாமி என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எழுதியவர்
இரா.தெ.முத்து
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இங்கே கொண்டாடப்பட வேண்டும் என்றால், அவர்களிடம் பணம் கொட்டிக்கிடக்க வேண்டும். பணம் இல்லாத திறமை இங்கே கொஞ்சம் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையான ஒன்று காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று பதிவாக நிலைத்து நிற்கும். எனவே கலைஞர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தன் திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.