கடந்த வாரங்களில் என்னிடம் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, 1918ஆம் ஆண்டு காந்தி ஸ்பானிஷ் காய்ச்சலால் படுத்த படுக்கையாக கிடந்தார் என்பது உண்மையா? இரண்டு, இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார்?
முதலாவது கேள்விக்குப் பதிலாக, ஆம் அவர் நோய்வாய்ப்பட்டது உண்மை. கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். உலகெங்கும் தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அந்த கொடிய காய்ச்சல் இறங்கவில்லை. தாறுமாறான இதய துடிப்புடன் மரணத்திற்கு மிக அருகே இருந்தார். அந்த வரலாற்றின் பக்கங்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
அந்த ஆண்டு குஜராத்தில் உள்ள கேடா மாவட்டத்தில மிகவும் சுறுசுறுப்பாக காந்தி இயங்கி வந்தார். தன்னுடைய புதிய, மிகமுக்கியமான கூட்டாளியான வல்லபாய் படேலுடன் சென்று, விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளிடம் நிலவரியைச் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். முந்தைய ஆண்டு சம்பரானில் நடைபெற்ற இண்டிகோ சத்தியாகிரகத்தில் அவர் பெற்றிருந்த வெற்றியே, சத்தியாகிரகம் என்ற ஆயுதத்துடன் கேடாவின் உதவிக்கு காந்தி வருவதற்கு ஊக்கமளித்தது. பம்பாய் மாகாணத்தின் வடக்கு மாவட்ட ஆணையாளர் ஃபிரடெரிக் பிராட், அங்கிருந்து சென்று விடுமாறு காந்தியைக் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் குஜராத்தை அறிந்த, குஜராத்திகளை அறிந்திருந்த அரசு ஊழியரான அவர் ’வருவாய் சட்டத்தை மீறுவது, நிர்வாகத்தை முழுமையாக அழிக்கின்ற நடவடிக்கையை எடுப்பதற்கு ஒப்பாகும்’ என்றார். ஆனால் காந்தி-படேல் இரட்டையர்கள் சத்தியாக்கிரகத்தை தொடர்ந்தனர். நிலவரி செலுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி கடிதத்தில் 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையெழுத்திட்டனர். கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய உறுதிமொழியைக் கடைப்பிடித்தனர். அதே நேரத்தில், முதலாம் உலகப் போரின் நிழல் நீண்டு கொண்டிருந்த நிலையில், ராணுவ ஆள்சேர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவிலே தொடங்கியது.

சம்பரான் இண்டிகோ சத்தியாகிரகத்தைப் பற்றி அறிந்து கொண்டிருந்த வைஸ்ராய் செம்ஸ்போர்ட், காந்திக்கு மரியாதை அளிக்கும் விதத்தில், ஏப்ரல் மாதம் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர் குறித்த மாநாட்டிற்கு வருமாறு மிகுந்த தயக்கத்துடன் காந்தியை அழைத்தார். ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முயற்சியை தான் ஆதரிப்பதாக ஒரேயொரு வாக்கியத்திலான உரையை காந்தி அங்கே நிகழ்த்தினார். அந்த வாக்கியத்தை ஹிந்துஸ்தானியில் பேசியதன் மூலம், அந்த எளிய, ஒற்றை வாக்கிய சைகை மூலம், இந்தியாவின் கௌரவத்துடன் தன்னுடைய ஆதரவை காந்தி இணைத்துக் கொண்டிருந்தார். இருந்த போதிலும் கேடா சத்தியாக்கிரகத்தை அவர் இடைநிறுத்தி விடவில்லை. காந்தியிடம் இருந்த நுணுக்கமான ஒத்துழைப்பை செல்ம்ஸ்ஃபோர்ட் புரிந்து கொண்டதாகவே தோன்றியது.
ஆனால் ஹோம் உறுப்பினரான சர் வில்லியம் வின்சென்ட், உள்ளூர் நிர்வாகத்திற்கு ஏராளமான சிக்கல்களைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நேரடியாக காந்தியை நோக்கி குற்றம் சுமத்தி விட்டு, ’சரி … நீங்கள் ஒரு ஆளையாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். அது கேவலமாக இருந்தது என்றாலும், நன்கு வேலை செய்தது. சத்தியாகிரகத்தை நடத்தி வந்த அதே கேடா மாவட்டத்திலேயே தீவிர ஆள்சேர்ப்பு பணியிலும் காந்தி மூழ்கினார். காந்தி-படேல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கமும் கைமாறு செய்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாக ஜூன் மாதத்தில் அந்த இரண்டு தலைவர்களாலும் அறிவிக்க முடிந்தது. வைஸ்ராயிடம் தான் கூறியிருந்த வார்த்தைக்கு உண்மையாக இருந்த காந்தி, ஆள்சேர்ப்பு பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தினார்.
டெல்லியில் வின்சென்ட் அவரைக் கேவலப்படுத்தியிருந்தாலும், ராணுவ ஆள்சேர்ப்பிற்காக, அகிம்சையை சமரசம் செய்து கொள்வதை அவரது ஆசிரம சகாக்களில் சிலர் கேள்வியெழுப்பினர். அவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில் இல்லாமல், மிகவும் புத்திசாலித்தனத்துடன் காந்தியின் பதில் இருந்தது: முதலாவது, துணிவின்மையை மூடி மறைக்கின்ற திரையாக, அகிம்சை பெரும்பாலும் இருந்தது. இரண்டாவது, ஒழுக்கத்தின் மூலம் – ராணுவ ஒழுக்கம் போன்ற – இந்தியர்களிடையே புதிய தன்னம்பிக்கையை உருவாக்க முடியும் என்பதால், ’நம்மை மோசமாக நடத்தினால், [பிரிட்டிஷ்] பேரரசை எதிர்த்து நாம் போராடவும் முடியும்’.
இந்தியாவை தன்னாட்சி நிலை நோக்கி கேடா விவசாயிகளால் அழைத்துச் செல்ல முடியும். அவர்கள் அரசுப்பிரதிநிதி அலுவலகத்திற்குச் செல்ல ஆசைப்பட முடியும்’. காந்தியைப் பொறுத்தவரை, மூழ்குவது என்ற வார்த்தை சரியான பொருளிலேயே இருந்தது. அவர் ராணுவ ஆள்சேர்ப்பிற்குள் மூழ்கினார் – சோர்வு மற்றும் நிலைகுலைவிற்குள்ளும் மூழ்கிப் போனார்.
கேடா சத்தியாகிரகத்தில் அவர் கலந்து கொண்டது, ஆள்சேர்ப்பு இயக்கத்திலிருந்து அவரை முற்றிலுமாக விலக்கி வைத்தது. ஆகஸ்ட் 11 அன்று, கேடாவில் உள்ள நாடியாடில் அவர் தளர்ந்து போயிருந்தார். ஆள்சேர்ப்பு செய்யத் தவறியது மட்டுமல்லாது, அகிம்சை மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு குறித்து அவருக்குள்ளே ஏற்பட்டிருந்த மோதல்கள் அவரது செயல்பாடுகள் அனைத்தையும் பாதித்தன. அவரது புத்திசாலித்தனமான பதில் அவரிடமே செயல்பட முடியமல் போனது. அப்போது அவர் மோசமான வயிற்றுத் தொற்றுக்குள்ளாகவும் நேர்ந்தது.’நான் உண்மையில் மிகவும் கஷ்டப்பட்டேன்’ என்று ஆகஸ்ட் 29 அன்று சி.எஃப். ஆண்ட்ரூஸுக்கு அவர் கடிதம் எழுதினார்.’அது என்னுடைய தவறு’ என்று மகன் தேவதாஸிற்கும் எழுதினார்.
நதியாடில் இருந்து அகமதாபாத்தில் உள்ள அம்பாலால் சாராரபாயின் வீட்டிற்கும், பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கும் சென்ற காந்தி, தனது முடிவு நெருங்கிவிட்டதாகவே நினைத்தார். கல்கத்தாவில் இருந்த தனது மூத்த மகன் ஹரிலாலையும், அப்போது மெட்ராஸில் இருந்த தேவதாஸையும் வருமாறு அக்டோபர் 1 அன்று தகவல் அனுப்பி வைத்தார். நோயிலிருந்து மிகுந்த வலியோடும், மிகமிக மெதுவாகவும் அவர் மீண்டெழுந்தார்.
விதியின் வழிகள் மோசமாக இருக்கும். காந்தியிடம் அவை எப்போதும் மிக மோசமாக இருந்திருக்கின்றன. வேதனையுடன் மிக மெதுவாக அவர் மீண்டு வந்த நிலையில், அவரது பேரனான சாந்தி – ஹரிலாலின் மூத்த மகன், மற்றும் சஞ்சல் என்றும் அழைக்கப்பட்ட ஹரிலாலின் மனைவி குலாப் ஆகியோர் அந்த மரண நோயின் பிடிக்குள் வீழ்ந்தனர். அவர்கள் விஷயத்தில் நோய்க்கான காரணம் குறித்து எந்த சந்தேகமும் இருக்கவில்லை. கண்டம் முழுவதும் பரவி வந்த இன்ஃப்ளூயன்சா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள், அக்டோபர் கடைசி வாரத்தில், உடல் நலம் கருதி தாங்கள் சென்றிருந்த குஜராத்தின் பதரதா கிராமத்தில் ஒருவர் பின் ஒருவராக சில நாட்களிலேயே இறந்து போனார்கள். தாய் இல்லாத மற்ற மூன்று பேரக்குழந்தைகளை குலாப்பிடமிருந்து கஸ்தூரிபாய் ஆசிரமத்திற்கு கொண்டு வந்தார்.
சுமார் 15 மாதங்களுக்கு நீடித்த அந்த ஸ்பானிஷ் காய்ச்சல், உலகளவில் 50 கோடி மக்களை நோய்வாய்ப்படுத்தியிருந்தது. உலக மக்கள்தொகையில் 3 முதல் 5 சதவீதம் வரை கொன்றிருந்தது. காந்தியை வீழ்த்த முடியாத அந்த நோய் அவரது குடும்பத்தை முடக்கியது.
இந்த சோகத்திலிருந்து தன்னை அகற்றிக் கொள்வதற்கு முன்னாலேயே, காந்தியிடமிருந்து பிரிக்க முடியாத மற்றொரு குடும்பத்தை வித்தியாசமாக, கடுமையாக, ஏறத்தாழ ஒரு காவியத்தின் வடிவில் அந்த நோய் தாக்கியது. பாதுஷா கான், எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அப்துல் கபார் கானின் மகனான கானி அந்த ஸ்பானிஷ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அந்த நோயின் பிடியில் சிறுவன் விழுந்ததாகத் தோன்றிய போது, அவனுடைய தாய் – கபார் கானின் மனைவி மெஹ்ர் காந்த், கடவுள் தன் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மாற்றீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றால், அவனுக்குப் பதிலாக தன்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் பிரார்த்தனை செய்தார்.
பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதை நியாயப்படுத்துவதாக அல்லாமல், வரலாற்று உண்மையை தெரிவிக்கிறேன். கானி குணமடையத் தொடங்கியதும், மெஹ்ர் அந்த நோயில் மிக விரைவாக மூழ்கத் தொடங்கினார். இருவருக்குமிடையே அந்த நோய் தனது இடத்தை மாற்றிக் கொண்டது. உடல் நலம் தேறிய கானி சாந்திநிகேதனின் கலா பவனில் சிறிது காலம் படித்தார். பின்னர் ஒரு கலைஞராகவும், கவிஞனாகவும் மாறினார்.
இரண்டாவது கேள்வி, அதாவது ’நம்மிடையே கோவிட் -19 இருக்கின்ற நிலையில், இப்போது காந்தி இருந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்?’ இதற்குப் பதிலளிப்பது மிகவும் கடினம், ஏனெனில் இந்தக் கேள்விகளுக்கு உண்மையாகப் பதில் சொல்ல முடியாமல், வெறும் ஊகங்களின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டியதாக இருக்கின்றது. ஆயினும்கூட நாம் அதை தவிர்த்து விடத் தேவையில்லை.
உடல்நலக் குறைவு மற்றும் உலகளாவிய தொற்றுநோய்களைக் கையாளும் போது, மிகவும் தீவிரமானவராகவே காந்தி இருந்தார். திட்டவட்டமான நடைமுறைகளையும், முயற்சி தேவைப்படுகின்ற தீர்வுகளையும் அவர் கண்டறிந்தார். அவருடைய மிக முக்கியமான செயல்பாடாக சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது இருந்தது. உடலின் செயல்பாட்டைப் பற்றி தான் வளர்த்து வைத்திருந்த அறிவைக் கொண்டு இயங்கி வந்தாலும், மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவற்றையும் அவர் பரிசீலித்து வந்தார். ஆனாலும் மூடநம்பிக்கை, சடங்குகள் அல்லது அறிவுக்குப் பொருந்தாத கைமருந்து போன்றவற்றிலிருந்து அவர் நன்கு விலகியே இருந்தார். எப்போதும் மருத்துவ ஆலோசனையை நாடுபவராக அவர் இருக்கவில்லை என்றாலும், சரியான காரணமின்றி அதை அவர் ஒருபோதும் நிராகரித்ததுமில்லை.
இன்றைக்கு காந்தி என்ன செய்திருப்பார் என்ற கேள்விக்கு யாரால் நம்பிக்கையுடன் பதில் சொல்ல முடியும்? உண்மையில் யாரும் இல்லை. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காக காந்தி என்ன செய்திருக்கலாம், அநேகமாக அவர் என்ன செய்திருப்பார் என்பதை பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் கூறுகின்றன. கீழ்க்கண்ட குறிப்புகள் அவருடையது என்பதாக இல்லாமல், விழிப்புணர்வு கொண்ட தாழ்மையான பொதுஅறிவைக் கொண்டவையாக இருக்கின்றன.
- அரசாங்கங்களின் சட்டப்பூர்வ அதிகாரம் மற்றும் உள்ளார்ந்த மனசாட்சியை அங்கீகரித்து, குறிப்பாக சுகாதாரம் மற்றும் கிருமி அகற்றுதல் குறித்த நிபுணர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை குடிமக்களாகிய நாம் நன்மதிப்புடன் ஏற்றுக் கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- அதேபோன்று, நமது ஒருங்கிணைந்தஅனுபவத்தையும், இயல்பான நல்லுணர்வையும் அங்கீகரித்து நம்மை ஆளுகின்ற அரசாங்கம், நம்மிடமிருந்து அல்லாமல் நமக்கு வருகின்ற வகையிலே, குறிப்பாக கட்டுப்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொது ஆலோசனையைப் பெறுவதற்காக உதவி மையங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தாங்கள் உதவ விரும்புகின்ற மக்களை யார், எப்படி, எங்கே இந்த கட்டுப்பாடுகளினால் காயப்படுத்துகின்றார்கள் என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும். இடவசதியற்றவர்கள், வேலையற்றவர்கள், குடும்பங்களற்றவர்கள், வயதானவர்கள், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு உண்மையான விதிவிலக்குகள் இருக்கும் என்றால், அந்த விதிமுறைகள் சிறப்பானவை என்று கருதப்படும். செம்ஸ்போர்டால் முதலாம் உலகப் போருக்கு மத்தியில் கேடா சத்தியாக்கிரகத்தைப் பற்றி கேட்க முடிந்திருக்கிறது என்றால், நமது நிர்வாகங்களுக்கும் அது பொருந்துவதாகவே இருக்கும்.
- எவ்விதத்திலும் பயனற்றவணிகம், அரசியல், குறுங்குழுவாதம் சார்ந்து இயங்குபவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியின் உண்மையான கதாநாயகிகள் மற்றும் கதாநாயகன்களாக இருக்கின்ற, இந்த பெரும் காட்டுத்தீயை தைரியமாக அணைக்க முன்வந்திருக்கும் தீயணைப்பு வீரர்களாகத் திகழ்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற மருத்துவ ஊழியர்களை போற்றுதலுக்குரிய புனிதர்களாக கருத வேண்டும். எந்த சோர்வுமின்றி, மிகுந்த வைராக்கியத்துடன் அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருபவர்களையும் அத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
- மெலிந்த கிராமப்புற பொருளாதரங்களிடையே உள்ள வீரர்களாகPARI இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நெசவாளர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், பிற கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெரிய மருத்துவமனைகளுக்கு வெளியில் கிடக்கின்ற கிராமப்புற புற்றுநோயாளிகள், நாடோடி ஆயர்கள், தினசரி கூலிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், மீனவர்கள், முடிதிருத்தும் நபர்கள், தலித்துகள் மற்றும் பல்வேறு தொழில்களில் உள்ள ஆதிவாசிகள் என்று இந்த நேரத்தில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், பி.சாய்நாத்தின் நினைவூட்டலுக்கு பதிலளிக்கின்ற வகையில், வெறுமனே வணக்கம் செலுத்துவது மட்டுமல்லாது, உரிய மரியாதையையும் உதவிகளையும் வழங்க வேண்டும்.
இறுதியாக, மிகத் தெளிவாக காந்தியின் ஆன்மாவின்படி சொல்வதென்றால், நமது கூட்டு உணர்வுகளை அழித்து, மனித இனத்தை இந்த கிரகத்தின் ஹிட்லராக மாற்றுகின்ற, பேராசை என்ற எரிவாயு அறைகளுக்குள் வைத்து நம்மைக் கொல்கின்ற குருட்டு பொருள்முதல்வாத இலக்குகளின் வழிபாட்டு மரபை, அரியணையிலிருந்து அகற்றி, முடியிழக்கச் செய்து, அதன் உயர்பீடத்திலிருந்து வெளியேற்றிட வேண்டும். அதுவே நமக்கான இறுதி தீர்வாக இருக்கும்.
நன்றி : தி டெலிகிராப் இணைய இதழ், 2020 ஏப்ரல் 19
https://www.telegraphindia.com/opinion/gandhi-at-the-time-of-the-spanish-flu/cid/1766054
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு