History of Tamil Short Stories WebSeries 7 by Writer S.Tamilselvan எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடர் 7

தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடர் 7 – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்



#ShortStories #Tamil #Bharathitv #Bookday #History #TamilSelvan #WebSeries #NaPichamoorthi

தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடர் 7 – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

இத்தொடரில் புதுக்கவிதையின் முன்னோடி என்று அழைக்கப்படுகின்ற ந. பிச்சமூர்த்தி பற்றி பார்ப்போம்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – கமலாலயன்

முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – கமலாலயன்




முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி – புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுப்பு – 31-12-2021  காலை 09.30 முதல் ஜனவரி 1, 2022 இரவு 09.30 வரை … ஒரு நேரடிப் பதிவு கமலாலயன்
The Thirty-Six Hour Book Fair is a new venture to welcome the New Year Article By Kamalalayan முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி - கமலாலயன்

இன்றைய காலைப்பொழுதில் எழுந்தபோது வெளியே நிலவிய கடும் குளிர் பயமுறுத்துவதாக இருந்தது. ஓசூரின் சிறப்பு என்று இங்கே தொடர்ந்து பொழியும் மழையையும், இதமான குளிர்ந்த தட்பவெப்ப நிலையையும் தயக்கமில்லாமல் சொல்லலாம். இந்த ஆண்டில், தொடர்ந்து பெய்த பெரு மழையைத் தாங்கிக்கொண்டதுபோல், குளிரைத் தாங்க முடியவில்லை. அவ்வளவு சில்லிட்டுப் போகவைக்கும் குளிர் காற்று ! இன்று காலை ஒன்பது முப்பது மணியிலிருந்து நாளை – ஜனவரி முதல் நாளன்று இரவு ஒன்பதரை மணிவரை தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேர மாரத்தான் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் நண்பர் சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார். ஓசூரின் செயலூக்க மிக்க மாநகராட்சி ஆணையர் திரு பாலசுப்பிரமணியம் கண்காட்சியைத் திறந்து வைக்க இசைவு தெரிவித்திருப்பதாக அழைப்பிதழ் கூறியது. 

இந்த 36 மணிநேரம் என்ற அம்சம் எனக்கு ஆவலைத் தூண்டியது. சரி, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட்டு வருவோமே என முடிவு செய்து காலையில் குளிருக்குத் தகுந்த ஆடைகளுடன் புறப்பட்டுப் போனேன். நடந்து போவது- அதிலும் இந்தக்காலைநேரக்குளிரில், ராமநாயக்கன் ஏரிக்கரை யோரம் சில்லிடும் காற்றில் உடலசிலிர்க்க நடப்பது ஓர் அரிய அனுபவம். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதை நான் தவறவிடுவதில்லை. காலை ஒன்பது மணிக்கெல்லாம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது, அங்கு கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. சிவகுமார், சந்துரு, சத்தியமூர்த்தி, அரிசசந்திரன் உள்பட அறிவியல் இயக்கத்தின் முன்னணி ஊழியர்கள், செஞ்சோலை பதிப்பக நண்பர்கள்,’வசந்தம் வெளியீட்டகம்’ அருணன் புத்தகங்களின் விற்பனையாளர்கள் என ஒரு பெரும் தொண்டர் குழாம் பரபரவென்று கண்காட்சித் தொடக்க நிகழ்வுக்கான வேளைகளில் மூழ்கி யிருந்தனர்.’

வீரம் விளைந்தது ‘என்ற புகழ்பெற்ற சோவியத் நாவலை இளையோருக்கான சுருக்கப் புத்தகமாகப் பத்திரிகையாளர் ஆதிவள்ளியப்பன் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியீட்டிருக்கிறது. அந்த நூல் கண்களில் பட்டது. ப. கு. ராஜனின் அணுவின் ஆற்றல், இரா. நடராசனின் அறிவியல் தேசம் நாவல்,உதயசங்கரின் ‘ பொம்மைகளின் நகரம் ‘ சிறார் நாவல்,ஒரே ஒரு ஊரிலே என்ற விழியனின் நாவல், துளிர் அறிவியல் சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு மலர், துளிர் இதழ்,சிறகு இதழ் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அத்தனை வெளியீடுகளும் வரிசை வரிசையாகக் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
The Thirty-Six Hour Book Fair is a new venture to welcome the New Year Article By Kamalalayan முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி - கமலாலயன்

செஞ்சோலைப் பதிப்பகம் என்ற பெயர் இங்கு ஓசூர் வந்த பிறகு சமீபகால மாகக் கண்களில் பதிந்துவரும் பெயர். இடதுசாரித் தத்துவ நூல்களையும், வியட்நாம் தொடர்பான புதிய நூல்களையும், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தாங்கிய சிறு நூல்களையும் இவர்கள் வெளியீட்டுள்ளனர். பொதுவாக ரஷ்ய, சீனப் புரட்சி இலக்கிய நூல்கள்தாம் தமிழ் வாசகர்களுக்குப் பெரும்பாலும் அறிமுகமாகியுள்ளன. வியட்நாம் புரட்சி, அந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இலக்கியங்கள் மிக மிக அரிதாகவே தமிழில் கிடைக்கின்றன. இதைப்பற்றிய மணக்குறையை தோழர் சு. பொ. அகத்தி யலிங்கமும், நானும் பலமுறை பேசிப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது, செஞ்சோலை வெளியீடுகளில் மூன்று நான்கு நூல்களைப் பார்த்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது. ஹோசிமின் எழுதிய வியட்நாம் புரட்சி என்ற சிறிய நூலை முதலில் வாங்கினேன். அடுத்துப் போகும்போது மற்ற நூல்களை வாங்க எண்ணம்.

செம்மலர், தீக்கதிர் ஏடுகளில் தொடர்ந்து பல்லாண்டு காலம் அயராமல் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், இடதுசாரித் தத்துவங்களையும் எளிய இனிய தமிழில் கட்டுரைகளாகத் தந்தவர் பேராசிரியர் அருணன் அவர்கள். இப்போது பணி ஓய்வுக்குப் பின், தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியக் கொள்கைகளைப் பெரு முழக்கமிடும் குரலில் ஓங்கி ஒலித்து வரும் சொற்பொழிவாளர்.இவருடைய வசந்தம் வெளியீட்டகம் பதிப்பக நூல்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிராமணியம்- அன்று முதல் இன்று வரை என்ற பெருந்தொகுப்பு நூல்கள், கடவுள் பற்றிய நூல்வரிசை, கோட்சேயின் குருமார்கள், ஆர். எஸ். எஸ். எனும் மர்மதேசம் போன்று அருணன் எழுதிய புகழ்பெற்ற நூல்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தன.
The Thirty-Six Hour Book Fair is a new venture to welcome the New Year Article By Kamalalayan முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி - கமலாலயன்

குளிர் சில்லென்று நெஞ்சை நிறைத்தாற்போல் உணர்ந்தேன். அது பனியின் விளைவால் மட்டுமன்றி, இத்தனை புத்தகங்களையும் ஒருசேரப் பார்த்ததால் கிடைத்த மனநிறைவினாலும் கூடத்தான்.இப்படியாக இன்று காலைப்பொழுது புத்தகங்களுடன் விடிந்தது; மனம் புத்துணர்வில் எழுந்தது.

ஓசூரில் புத்தக்கண்காட்சிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய சிறப்பம்சம் எதுவெனில், கடந்த 2020 , 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் கொரானா தீநுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டின் வேறெந்த நகரத்திலும் புத்தக்கண்காட்சிகள் நடத்தப்படாதிருந்த போதிலும், ஓசூரில் மட்டும் தகுந்த பாதுகாப்பு முன்னேற் பாடுகளுடன் தலா மூன்று நாள்கள் கண்காட்சிகளை நடத்தினார்கள். இந்த முன்னெடுப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஓசுர் அனைத்துப்பகுதி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்ட தாகும்.

இந்த ஆண்டு, மூன்று நாள் கண்காட்சியில், ஓசூர் படைப்பாளிகளின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓவிய-புகைப்படப் பதிவுகள் என அனைத்து வகைப் படைப்புகளையும் உள்ளடக்கிய ‘ வாசல் ‘ என்ற இலக்கியத்தொகுப்பு நூலை 10-ஆம் ஆண்டுப் புத்தகக் கண்காட்சி சார்பில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டை, இப்படி 36 மணி நேரப் புத்தகக் கண்காட்சியுடன் வரவேற்கத் தயாராகி விட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களுக்கு நாம் நல்வாழ்த்துக் கூறுவோம். தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு புத்தாண்டைப்  புத்தகங்களுடன் வரவேற்க பாரதி புத்தகாலயமும்,புத்தகம் பேசுது இதழும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. நல்ல முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் ! வாழ்த்து  கள் .. !

Laws And Law Giving poem By Kahlil Gibran in tamil translated by Thanges. கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் - தமிழில்: தங்கேஸ்

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்




சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING)
முன்னொரு காலத்தில்
ஒரு அரசன் இருந்தான்
அவன் அறிவுக் கூர்மை
கொண்டவன்

ஒரு நாள் அவன் தன் குடிமக்களுக்காகப்
புதிதாகச் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று நினைத்தான்
ஓராயிரம் இனக்குழுக்களிலிருந்து
ஓராயிரம் அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்துத்
தன் தலை நகரத்துக்கு அழைத்தான்
அவர்களிடம் “நீங்கள் புதிதாகச் சட்டங்களை எழுதுங்கள் ” என்றான்

அதன் படி
ஆயிரம் சட்டங்களும் செம்மறி ஆட்டுத் தோலின் மீது எழுதப்பட்டு
அவன் முன்னே வைக்கப்பட்ட போது
அதை வாசித்து விட்டு அவன்
ஆத்மார்த்தமாய் அழுதான்

கண்ணீர் நிற்கவில்லை
காரணம் கேட்ட போது
” தன் நாட்டில் இப்படி ஓராயிரம் குற்றவாளிகள்
உலவிக் கொண்டிருக்கிறார்களே
அதை தான் முன்பே அறிய முடியவில்லையே” என்றான்

பிறகு தன் எழுத்தரை அழைத்து
உதட்டில் ஒரு புன்னகையுடன்
எழுதிக் கொள்
இனி இந்த நாட்டின் சட்டங்களை
என்று ஒவ்வொன்றாக உரைக்க
ஆரம்பித்தான்
அவன் இயற்றிய சட்டங்கள் மொத்தமே ஏழுதான்

அழைக்கப்பட்டிருந்த அத்தனை அறிவாளிகளும்
ஆறாத கோபத்துடன்
தங்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்
தாங்கள் எழுதிய சட்டங்களை
தங்கள் இனக்குழுக்களின் மீது பிரயோகித்தனர்

அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும்
தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை
பின்பற்ற ஆரம்பித்தான்
அதனால் தான் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம்
சட்டங்கள்

இது ஒரு பெரிய தேசம்
இங்கு ஓராயிரம் சிறைகள்
ஓராயிரம் சிறைகளிலும்
ஆண்கள் பெண்கள்
அத்தனை பேரும் சட்டத்தை மீறியவர்கள்

இது ஒரு பெரிய தேசம் தான்
மக்கள் அனைவரும்
ஓராயிரம் சட்டங்களை இயற்றியவர்களின்
வம்சா வழியில் தோன்றியவர்கள்
ஆனால் அரசன் மட்டும் ஒரே அரசன்

மூலம்: கலில் ஜிப்ரான்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்

Thapputhalam ShortStory By Sa Lingarasu. தப்புத் தாளம் சிறுகதை - ச.லிங்கராசு

தப்புத் தாளம் சிறுகதை – ச.லிங்கராசு




இரவு மணி ஏழு முப்பது இருக்கலாம்.தபேலா வாசிப்பின ஒலி அந்த அறையை வியாபித்துக் கொண்டிருந்தது.”தகிட தகமி தகட தகமி தந்தானா” பாடலை முணு முத்துக் கொண்டே ராஜன் தபேலாவொடு ஒன்று கலந்திருந்தார். விரல்கள் தபேலாவில் நர்த்தனமாடின. ராஜனின் கண்கள் கிறங்கி இருந்தன். இசையின் சுகானுபவத்தில் அவர் மிதந்து கொண்டிருந்தார்.பாடிக்கொண்டே தபேலாவை வாசிக்க எல்லோராலும் முடிகிற விசயமில்லை.சிலருக்கு தாளம் எகிறும்.தாளம் சரியானால் வாசிப்பில் தடுமாற்றம் வரும். ராஜனுக்கு இரண்டுமே கைவந்த கலையாக அமைந்திருந்தது.

தாளத்தோடும் லயத்தோடும் சென்று கொண்டிருந்த இசை, திடீர் தப்புத்தாளத்தால் தடம் புரண்டது. அறையின் கதவு தட தட வென்று தட்டப்படும் இரைச்சல் சூழ் நிலையையே மாற்றியது. சினம் தலைக்கேறியவராய் ஆனாலும் தணித்துக் கொண்டு, கதவை திறந்தார்.

“இப்போ சாப்பிட வறீங்களா இல்லையா? பத்திரங்களை எல்லாம் அலம்பி வைக்க வேணாமா? தெனம் ஒங்களோட ஒரே ரோதனையா போச்சி டிராமா கம்பெனியாட்டமா…..” அவரின் தர்ம பத்தினி சங்கீத ராணியின் குரலில் இருந்த உச்ச ஸ்தாயியும் குத்தலும் நெஞ்சை குத்தினாலும் ராஜனுக்கு அது பழகிப்போன ஒனறாகி விட்டது.’ ஞான சூன்ய’த்திற்குப் போய் சங்கீத ராணி என்று பெயர்வைத்த தன் மாமனாரை நொந்துகொண்டார். மனைவியைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டார். அதில் அவருக்கு பரம திருப்தி.
மனம் லேசாகியது.

மத்திய அரசு ஊழியராய் இருந்து, ஓய்வுப் பெற்று அவர் சொந்த ஊர் வந்து சேர்ந்ததும், சொந்த ஊரானாலும, தான் தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தார். நல்ல விசயங்கள், நல்ல இசை, அரசியல் விழிப்புணர்ச்சி, புத்தகவாசிப்பு இதில் எதிலும் நாட்டமில்லாத மனிதர்கள் நிரம்பிய ஊராய் தம் ஊர் இருப்பதை உணர்ந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இசையில் ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். கேள்வி ஞானத்தால் தபேலா வாசிக்க கற்று கொண்டதை மிகப்பெரும் சாதனையாக நினைத்துக் கொண்டார்.

தாம் பணியிலிருந்த காலத்தில்,இசையில் ஆர்வமுள்ள இதர மத்திய அரசு அலுவலக நண்பர்களுடன் இணைந்து ஓர் இசைக்குழுவை ஏற்படுத்தி, எல்லா இடங்களுக்கும் சென்று இசைநிகழ்ச்சி நடத்தி வந்ததை ஓய்வுக்கு பின் அதை எண்ணி மருகிக்கொண்டிருந்தார். இசையில் விழுந்தவர்கள் எழுவது கடினம் என்பதை உணர்ந்தவர் தினம் தபேலாவோடு உறவாடியபடி இருக்கிறார்.

இவரின் இந்த இசை ஆர்வத்தை உணர்ந்து கொள்ளாத அவரின் மனைவிக்கு இது வேப்பங்காயாய் கசந்தது. அக்கம் பக்கம் என்ன நினைப்பார்கள்? உறவினர்கள் மத்தியில் எந்த மாதிரியான பேச்சு எழும்? ஒரு முறை தன் தம்பி,

“மாமா என்ன கூத்து கட்டப்போறாராக்கும் இது நம்ம சாதிக்கு ஒத்து வருமா?” என்று கேட்டதை மனதில் வைத்துக் கொண்டு, அவள் அவரை தனி அறையில் சிறை வைக்காத குறையாய் தள்ளி, “அறையிலே என்னவேண்ணா பண்ணுங்க மோள சத்த மட்டும் வெளியே வரக்கூடாது…” என்று பல்லைக் கடித்தாள். ‘தபேலாவை போய் மேளம் என்று சொல்கிறாளே என்றவருத்தம்தான் அவருக்கு.

அடுத்த ஊர் நகர கலப்போடு இருந்தது, ராஜனை உற்சாகப் படுத்தியது.அடிக்கடி அங்கு சென்று வர ஆரம்பித்தார் எப்படியோ அங்கு ஓர் இசை குழு இருப்பதை கண்டு பிடித்து விட்டார். தன்னுடைய இசை ஞானத்தை வெளிப் படுத்தி குழுவில் தபேலா கலைஞராகி விட்டார். இவ்வளவு காலம் தன் இதயத்தில் பூட்டி வைத்திருந்த இசைக் கனலை வெளிப்படுத்த தகுந்த இடம் கிடைத்தில் அவருக்கு ஆனந்தம் பொங்கியது.

இதை எப்படி சங்கீதா ராணியிடம் சொல்லி அனுமதி வாங்குவது? யோசித்தார். பணியிலிருக்கும் போது இசை நிகழ்ச்சிக்கு சென்று வருவதை அவள் கண்டு கொள்வதில்லை.கிடைக்கும் பணத்தை அவர் அவளிடமே கொடுத்து விடுவார்.அவளின் முகமலர்ச்சியில் பணமீது அவளுக்கிருந்த ஆசையை கண்டு ராஜன் சற்று சங்கடமானார்.

ஒரு நாள் சங்கீத ராணி நல்ல மூடில் இருக்கும் போது ராஜன் விபரம் சொன்னார்.சங்கீத ராணிமுகத்தை இறுக்கமாக வைத்துக் “பாட்டு கச்சேரி எப்பவாச்சும்தானே நடக்கும்? ……..” என்றாள்.

ராஜன் புரிந்து கொண்டார்.வேறுவேலை பார்த்தாலாவது மாதா மாதம் பணம் கிடைக்கும் இதில் எப்படி என்கிறாள். ஓய்வூதியம் இருவருக்கும் போதுமானதாக இருக்கிறது. இரண்டு பிள்ளைகளுக்கும் எப்போதோ மணமுடித்தாகி விட்டது…

ராஜன் மனம் நொந்து போனார். இவளிடம் வாக்குவாதம் பண்ணி இனி இசைக்குழுவுக்கு போய் வருவது நன்றாக இருக்காது. இந்த மனநிலையோடு இசையை எதிர்கொள்வதும் இயலாது.
ஒரு வாரம் முடிந்துபோனது காலிங் பெல் ஓசை கேட்டு கதவைத் திறந்த சங்கீத ராணி அதிர்ச்சியும் பெரும் ஆனந்தமும் கொண்டாள். ராஜன் ‘செக்ருட்டி’ சீருடையில் உள்ளே நுழைந்தார்.
“காப்பி போடனுங்களா இல்லே….. டீங்களா” முகம் முழுக்க பல்லோடு சங்கீத ராணி ராஜனை வரவேற்றாள்.

New Year begins with good signs Article in tamil Translated by Sa Veeramani. நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு - ச.வீரமணி

நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு – தமிழில்: ச.வீரமணி




[2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்களே நிறைந்திருந்தாலும், வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் விதத்தில் முடிவுற்றுள்ளது.]

விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தபோதிலும், மக்களுக்கு வெற்றிக்களிப்பை அளிக்கும் விதத்தில் முடிவுக்கு வந்தது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மார்ச் – மே மாதங்களுக்கிடையே மக்களை நாசப்படுத்தியது. மோடியும் அவருடைய அரசாங்கமும் கொரோனா வைரஸ் தொற்றை வென்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்தபோதிலும், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியபோது அதனை எதிர்கொள்ள நாடு தயாராக இல்லை. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். இவற்றில் பல பதிவு செய்யப்படவேயில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணறி இறந்த கொடுமையையும், ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்து சென்றதையும் உலகம் முழுதும் ஊடகங்களால் எடுத்துச்செல்லப்பட்டு நம் நாட்டின் அவலநிலையை உலகுக்குப் பறைசாற்றின. இவ்வளவு மோசமாக நாட்டு மக்களை நாசப்படுத்தியிருந்தபோதிலும்கூட இதற்காகப் பிரதமர் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேபோன்றுதான் தடுப்பூசிகள் சம்பந்தமாக, அவற்றைப் போதுமான அளவிற்குக் காலத்தில் கொள்முதல் செய்ததிலோ, நாட்டிற்குள்ளேயே உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவோ மற்றும் விரைவாக அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதிலோ ஏராளமான அளவில் குளறுபடிகள் செய்ததையும் பார்த்தோம். நாட்டில் முதன்முதலாக அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்கும் விலை வைத்து விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில், டிசம்பர் 31க்குள் (18 வயதுக்கு மேற்பட்ட) வயது வந்த அனைவருக்கும் இரு முறை தடுப்பூசிகள் (two doses of vaccines) முழுமையாகச் செலுத்தப்படும் என்று கூறியது. இது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிவோம். டிசம்பர் இறுதிக்குள், நாட்டிலுள்ள வயது வந்தவர்களில் 65 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 35 சதவீதத்தினர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்படாது விடப்பட்டுள்ளனர். நாட்டை விழுங்கப் போவதாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் இத்தகைய அவலநிலை நீடிக்கிறது.

மோடி அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து, மக்களுக்குச் செலுத்துவதற்கான, திட்டமிடுதலிலும், தயாரிப்பு வேலைகளிலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்விதத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதிலும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மோசமாக இருக்கும் காலத்தை, தன்னுடைய பிளவுவாத மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளவும் பயன்படுத்திக்கொண்டது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தனியாருக்குத் தாரை வார்க்க இலக்கு அறிவிக்கப்பட்டதையும் பார்த்தோம். இதனைத்தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டமும் (monetization of the public sector assets) அறிவிக்கப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு சொத்துக்களை விற்று சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்போகிறார்கள். இது, நாட்டின் துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில்வே பாதைகள், நிலம் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயலே தவிர வேறல்ல.

பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. நிதித்துறையில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டு தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கிறது. ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

மோடி அரசாங்கம் அம்பானிக்கும், அதானிக்கும் அப்பட்டமான முறையில் சலுகைகள் அளித்ததன் மூலம், அவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில்கூட மக்களிடம் மிகவும் அசிங்கமானமுறையில் கொள்ளை லாபம் அடித்ததைக் காட்டின. அம்பானியின் நிகர சொத்தின் மதிப்பு 2021இல் 92.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டன. மிகவும் அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்திய கோவிட் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில், அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களுக்குச் சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருந்ததன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்கள் வாங்கிவந்த சொற்ப வருமானங்களும் சரிந்து, பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளியது. மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளிய மற்றொரு காரணி, வேலைவாய்ப்பு சுருங்கியதால் வருமானங்கள் இழப்பு ஏற்பட்டதுமாகும். 2020-21 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதலாக வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 7 முதல் 8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தபின், அதன் அடையாளத்தையே சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் அதன் சட்டமன்ற இடங்களும் சட்டமன்ற இடங்களுக்கான மறுசீரமைப்பில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற இடங்கள் இவ்வாறு மறுசீரமைக்கப்பட்டு குறைக்கப்படுவது, அதன் பின்னர் தேர்தல்கள் நடத்துவது, அதன்பின்புதான் மாநில அந்தஸ்து என்னும் வரிசைக்கிரமம் அமித் ஷாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அங்கே மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைவிடுவதற்கான எண்ணமோ, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்திருப்பதை மீளவும் அளிப்பதற்கான எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.

பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் ஆட்சி செய்வதைப்போலவே, இப்போது வட கிழக்கு மாநிலங்களிலும் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தினரால் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கே ராணுவத்தின் ஆட்சி தொடர்வதற்காகவே வந்திருக்கிறது என்பதற்கான கடுமையான நினைவூட்டலாகும்.

இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு, ஒரு வலுவான ராணுவ அரசை நிறுவுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களால் அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளுடன் (external and internal enemies) போராட முடியும். உள்நாட்டில் அவர்கள் எதிரிகள் என்று கருதுவது முஸ்லீம்களைத்தான் என்பது தெளிவு. முஸ்லீம்களுக்கு எதிராக, வெறுப்பை உமிழ்ந்திடும் உரைகள், சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், சிறுபான்மையினரைக் குறி வைத்து பாஜக தலைவர்கள் குரைத்தல் திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின்காரணமாக பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்த பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் சமீபத்தில் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)எனக் குற்றஞ்சாட்டி, மதக் கலப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில், கிறிஸ்தவர்கள் மீது கவனம் திருப்பப்பட்டிருக்கிறது.

மதவெறியர்களால் முஸ்லீம்கள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரங்கள்மீது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இந்த ஆண்டில் கிறித்தவர்கள் மீதும் அவர்களுடைய தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் கூர்மையானமுறையில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிந்தது. இத்தகைய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் அன்றும் நடந்திருக்கிறது. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் அனுமதி வாங்கி நிதி வசூல் செய்துவந்த அன்னை தெரசா கருணை இல்லங்களுக்குக்கூட அவ்வாறு அளிக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

மொத்தத்தில், இந்த ஆண்டு, ஒன்றிய அரசாங்கத்தால் கோவிட் பெருந்தொற்று மிக மோசமானமுறையில் கையாளப்பட்டதையும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள்மீதான சுமைகள் ஏற்றப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதையும் பார்த்தது.

இவ்வாறு அடிமேல் அடிவாங்கிய மக்கள் இப்போது அவற்றை எதிர்த்துநின்று, திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக, ஏப்ரலில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டது. அஸ்ஸாமில் மட்டும்தான் அது மிகவும் குறைவான பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்படும் சண்டிகார் மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு நடந்த சமீபத்திய தேர்தலில், பாஜக தன்னுடைய பணபலத்தையும் அதிகாரபலத்தையும் இறக்கிவிட்டிருந்தபோதிலும், இந்துத்துவா அடிப்படையிலான மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதிலும், படுதோல்வி அடைந்தது. அங்கே, தனிப்பெரும் கட்சியாக மேலெழுந்துவந்துள்ள ஆம் ஆத்மி கட்சியிடம் மாநகராட்சியை இழந்தது.

மக்கள் மத்தியில் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அதிகரித்துவரும் பின்னணியில் பாஜக இத்தகைய தேர்தல் தோல்விகளைச் சந்தித்தள்ளது. 2021ஆம் ஆண்டு முழுவதுமே விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் ஆதிக்கம் செலுத்தியது. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி இருக்கிறது. தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓராண்டு காலத்திற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் எவ்விதத்தொய்வுமின்றிக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வந்த பின்னர், மோடி அரசாங்கம் இறங்கிவந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளின் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தின்முன்னே ஒன்றிய அரசாங்கத்தை சரணாகதி அடைய வைத்துள்ளது. இந்த வெற்றியானது உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் ஒன்றுபட்டுப் போராடினால், வெற்றி பெறுவது திண்ணம் என்பதேயாகும்.

விவசாய இயக்கம், கூட்டு நடவடிக்கைகளின்போது, தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமை வளர்ந்துகொண்டிருப்பதையும் பார்த்தது. இது எதிர்காலப் போராட்டங்களுக்கும், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்திற்கும் அடிப்படையாக அமைந்திடும். புத்தாண்டு இத்தகைய நல்லதொரு அறிகுறியுடன் துவங்குகிறது.

(டிசம்பர் 29, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Kadaisi Bench Book by N Periyasami Bookreview by Vijayarani Meenakshi. நூல் அறிமுகம்: ந. பெரியசாமியின் "கடைசி பெஞ்ச்" (கவிதைத் தொகுப்பு) - விஜயராணி மீனாட்சி

நூல் அறிமுகம்: ந. பெரியசாமியின் “கடைசி பெஞ்ச்” (கவிதைத் தொகுப்பு) – விஜயராணி மீனாட்சி




கவிதைத் தொகுப்பின் தலைப்பே வசீகரம். ஏன் வசீகரமெனில் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு படிப்பு தவிர்த்து அத்தனை சாமர்த்தியங்கள் கைவரப்பெறுவதில்லை. ஆனால் கடைசி பெஞ்ச் மாணவர்கள்தான் பெரும்பாலும் வாழ்வியல் எதார்த்தங்களை எளிதாக உள்வாங்கி எதிர்நீச்சல் போடும் திறமையாளர்களாயும் மனித அறத்தோடும் இருப்பதாக, உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

இந்தக் கவிதைத் தொகுப்பில் பதின்பருவத்து குழந்தைகளுக்கான அவர்களின் மனநிலையை அழகாக எளியமொழியில் பதிவேற்றி இருக்கிறார் தோழர் பெரியசாமி. நாடடங்கின் போதான இந்த இரண்டாண்டு எல்லோரையும் ஆட்டிப்படைத்து அச்சமூட்டிய தீநுண்மி குழந்தைகளின், பதின்பருவத்துப் பிள்ளைகளின் கல்வியை பாதித்ததோடு மட்டுமின்றி உளவியலாகவும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியதை மறுப்பதற்கில்லை.

பதின்பருவத்து பால்யத்தை நினைவூட்டும் வகைமைக் கவிதைத் தொகுப்பு முதன்முதலாக அநேகமாக இருவாகத்தான் இருக்கும். அதற்காகவே கவிஞருக்கு வாழ்த்துகள்.ஆசிரியரின் தாய்மை மலர்ச்சியைத் தரும் அதேவேளை பருவமடைதலின் கூடடங்கும் மனநிலையையும் சொல்கிறது இருவேறு கவிதைகள், அந்த இரண்டு கவிதைகள் :
1.
‘வகுப்பறை விலக்கு’
கன்றெனத்துள்ளி
கடுகெனப் பொரிந்து
கலகலப்பாக வகுப்பில் இருப்பவள்
கண்சோர்வுற்று
அசதியாக அமர்ந்து
தவிப்போடு இருப்பவளைக் கண்ட
ஆசிரியை அருகில் சென்று
ரகசிய உரையாடலில்
கொண்டு வராததை அறிந்து
தன் கைப்பையை
தாய்மையோடு கொடுத்தனுப்பினார்
நாப்கின் மலர்ச்சியைத் தந்தது.
– * – * – * –

2.
‘ரகசிய பொய்’
என்றைக்கும் இல்லாது இன்றைக்கு
அம்ம்மா அம்ம்ம்மாவென
அழைத்த மகளைப் பார்த்து
எதற்கிந்த கொஞ்சல் என்றாள்

பிரவினுக்குப் பிறந்தநாள் இன்று
எல்லோரையும் வீட்டிற்கு கூப்பிட்டு இருக்கான்
மாலை வர லேட்டாகும்

சரிசரி
மறக்காம அப்பாகிட்ட
பொண்ணுங்க வீட்டுக்கு
போய்வந்ததா சொல்லிடு
– * – * –

மேற்கண்ட இந்தக் கவிதை போன்ற ‘தலைமுறை’ என்னும் தலைப்பிலான கவிதையில் வேறொரு அம்மா ஆண்பிள்ளைகளுடனான நட்பை அவர்கள் பற்றிய பேச்சை விரும்பாத. வேறொரு அம்மாவாக இருப்பதையும் அவதானித்ததை அறியமுடிகிறது.

கடிதம் எழுதும் கலை அருகிப்போய்விட்ட இந்தக் காலத்தில் கடிதத்தின் வாயிலாக சொல்லத்தெரியாத ஏதோவொரு உணர்வை உடலின்மொழியில் கடத்தும் வல்லமையை இழந்ததை உணரமுடிகிறது.

தினப்படி ஏ.சி. காரில் பயணிக்கும் சிறுவனொருவனின் பயணத்தின் ஊடான காற்றின் மொழியறிதல் ஒரு திரைப்படத்தில் தம்பி ராமையா, நம்மள மாதிரி காத்த காசுகுடுத்தாம்மா வாங்கப் போறாங்க?” என்று சொல்வது நினைவில் வந்துபோனது.

ஆக இந்த நாடடங்கு காலம் எல்லோரையும் ஏதோ ஒருவிதத்தில் இயங்க வைத்தது என்ற நம்பிக்கையையே இளையோருக்குச் சொல்ல வேண்டும் என்ற எதார்த்தத்தை எளிய மொழியில் பதின்பருவ உளவியலை கவிதைத் தொகுப்பாக கொண்டுவந்திருக்கிறார் தோழர் பெரியசாமி இந்த “கடைசி பெஞ்ச்”ல்.

John Donne Death be not proud Holy Sonnet10 in tamil Translated by Thanges. ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை - தமிழில்: தங்கேஸ்

ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை – தமிழில்: தங்கேஸ்




கவிதைச் சூழல்
(ஷேக்ஸ்பியரின் சமகால கவிஞரான ஜான் டன் எழுதிய பத்து சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக. (Death be not proud (Holy Sonnet 10) ) விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. காதல் கவிதைகளும் பெண் ஈர்ப்புக் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த ஜான் டன் தன் பிற்கால வாழ்க்கையில் ஒரு உண்மையான மத போதகராக மாறிய பின்பு முற்றிலும் கிறிஸ்த்துவ மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல் (Sonnet ) இது . மரணமென்பது வாழ்வின் முடிவல்ல இறைவனின் சொர்க்கத்தில் எல்லையின்மையில் வெளியில் தூய ஆன்மாவின் ஆனந்தம் தொடரும் என்கிற ரீதியில் எழுதப்பட்ட பதினான்கு வரிகளை கொண்ட பாடல் இது)

John Donne
Death be not proud (Holy Sonnet 10)

கர்வம் வேண்டாம் மரணமே I
ஆனாலும் அத்தனை கர்வம்
உனக்கு வேண்டாம் மரணமே |

அறியாதவர்களோ உன்னைப் பார்த்து
அகில உலகச் சக்கரவர்த்தி
அதி பயங்கர கு௹பி என்று அடைமொழியிட் டு
நடு நடுங்குகிறார்கள்
ஆனால் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் நீ
அத்தனை ஆனந்தப்படத் தேவையில்லை

ஓர் இரகசியம் தெரியுமா உனக்கு?
மெய்யாகவே நீ கொல்லும் மனிதர்கள்
யாரும் சாவதில்லை

ஓய்வையும் உறக்கத்தையும்
ஓவியம் தீட்டுகிறேன்
அட ஆச்சரியம் உன் முகம் தோன்றுகிறது ஓவியத்தில்
அம்முகத்திலிருந்து பீறிட்டு பிரவாகமெடுக்கிறது ஆனந்தம்

ஆகச் சிறந்த மனிதர்கள் உன்னோடு பயணிக்கும் போது
அவர்களின் எலும்புகளோ
பூமிக்குள் போகின்றன
அவர்களின் ஆன்மாவோ எல்லையின்மைக்குள் பறக்கின்றது

பெருமிதத்தால் பெருத்து விடாதே மரணமே

நீ சுதந்திரமானவனா சொல் ?
அடிமை தானே நீ ?
விதிக்கும் அகாலத்திற்கும்
இரத்த வெறி கொண்ட அரசர்களுக்கும்
தற்கொலை என்ணம் கொண்ட வீணர்களுக்கும்
நீ அடிமை தானே மரணமே..?

உன் சகவாசம் என்ன?
விஷத்துடனும் போர்க்களத்துடனும் போக்கிடமற்ற நோய்களுடனும் தானே

ஓ… அதிகர்வி மரணமே !
விரல்களின் வருடல்களிலேயே
உயிர்களுக்கு தூக்கத்தைத் தருபவன் என
ஆணவத்தில் ஆர்ப்பரிக்க வேண்டாம்

பாப்பி மரங்களின் போதை நெடியும்
மந்திரவாதியின் உச்சாடனங்களும் கூட
எங்களுக்குத் தூக்கம் தருபவை தானே.

இறுதி என்பது என்ன?
இங்கே சிறு துயிலில் விழுகிறோம்
அங்கே எல்லையின்மையில் எழுகிறோம்
பிறகு எங்களுக்கேது இறப்பு?
உண்மையில் அது உனக்குத்தானே?

மூலம்: ஜான் டன்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா.சந்திரகுரு



There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

இந்தியக் குடியரசு இப்போது சரிவைக் காணத் தொடங்கியிருக்கும் போதிலும், நாகரீகமான மற்றும் அவ்வளவாக நாகரீகமற்ற வட்டாரங்களின் உரையாடல்களில் இருந்து வெளிவருகின்ற ஒரேயொரு பல்லவி நலிந்து போயிருக்கின்ற ஜனநாயகத்திற்கான உறுதியான அறிகுறியாகவே இருக்கின்றது. அந்தப் பல்லவி பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடியின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் வரும் போதெல்லாம் அவர்களுக்கான ‘மாற்று எதுவுமில்லை’ என்பதாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. மோடியின் கவசத்தில் ஓட்டைகள் விழுந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்ற சிலர் மாநில அளவிலே ஒரு சில தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக நிச்சயம் போராடவே செய்யும் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனாலும் அதைப் பின்தொடர்ந்து ‘ஆனாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று என்று எதுவுமில்லை’ என்ற பல்லவி உடனடியாக வந்து விடுகிறது.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா

பிளவிற்கான விதைகளை விதைத்து, விஷம் தோய்ந்த வெறுப்பு பேச்சுகளுக்குப் பாதுகாப்பு அளித்து, குடிமைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தி, வெறுப்பின் ஆவேசத்தை பிரதமர் கட்டவிழ்த்து விடுகிறார்’ என்பதாக அந்த உரையாடல் இருக்கின்றது. அதுவே அவரைத் தகுதி நீக்கம் செய்யப் போதுமானது. ஆனாலும் உடனடியாக அந்த உரையாடலை ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

பாராளுமன்றத்தின் தரையை முத்தமிட்ட பிரதமர் நம்மிடம் இருந்தார். அந்த முத்தம் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான மரண முத்தமாக மாறியது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

வலுவான தேசப் பாதுகாப்பிற்கான உறுதியை நமக்கு வழங்கிய பிரதமர் இருந்தார். ஆனால் அவரால் எல்லைப் பகுதியில் இழப்பு, நமது நில எல்லைக்குள்ளாகப் பிணைக்கப்பட்டது, இருமுனைப் போருக்கான வாய்ப்புகள் போன்றவையே விளைந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் சீனா குறித்து ஒரு கேள்வி கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று தேசம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

பலமான உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு உறுதியளித்த பிரதமர் இருந்தார். அந்த இலக்கு உண்மையில் எட்டப்பட்டுள்ளது. தொண்டு மிஷனரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இப்போது வேட்டையாடப்பட்டு வருவதால் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிந்திருப்பவர்கள் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்லக் கூடாதா?

எல்லை மாநிலங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த பிரதமர் இருந்தார். பத்தாண்டுகளுக்கு அப்புறம் முதன்முறையாக பஞ்சாபில் வன்முறை தலைகாட்டியிருப்பதை அரசாங்கமே ஒப்புதல் அளித்துச் சொல்கிறது. வடகிழக்கில் அமைதிக்கான ஆதாயங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. காஷ்மீரில் அதிகரித்து வரும் அந்நியமும், அடக்குமுறையும் தொடர்கின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

பங்குச்சந்தைகளை உயரச் செய்த பிரதமர் இருந்தார். கடந்த இருபதாண்டுகளில் இருந்துள்ள மற்ற அரசாங்கங்களைப் போல அவரது அரசாங்கமும் ஓரிரு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. உண்மையாகச் சொல்வதென்றால் மக்கள்தொகையில் முதல் பத்து சதவிகிதம் பேர் இந்த ஆட்சியால் ஒருவேளை செழித்திருக்கலாம். ஆனால் நம்மிடம் 2003-2009 காலகட்டத்தில் இருந்த எட்டு சதவீத வளர்ச்சி விகிதம் இப்போது இல்லை. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வறுமை நிலைகளில் இருந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவமின்மை, பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. சுமாரான அளவிலேயே ஏற்றுமதிகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த பணவீக்கம் 1991க்குப் பிறகு மிக அதிகபட்சமாக – இந்த நவம்பரில் 14.3 சதவிகிதம் என்று அதிகரித்துள்ளது. ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகும், அவையெல்லாம் முந்தைய அரசாங்கத்தின் அல்லது அமெரிக்க மத்திய வங்கியின் தவறுகள் என்றே சொல்லப்பட்டு வருகின்றன. ‘உண்மையில் மாற்று எதுவுமில்லைதானே!’

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

ஊழலைக் குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் இருந்தார். மூலதனச் செறிவு அதிகரித்திருந்தாலும், கட்சிகளின் தேர்தல் நிதியை நிர்வகிக்கும் விதிமுறைகள் பின்னடைவைக் கண்டுள்ள போதிலும், சரியான சித்தாந்தத்திற்கு முன்பாகத் தலை வணங்கி நிற்கும் வரை மற்றவர்களின் மூலதனத்தைக் காட்டிலும் ஒரு சில மூலதனம் மட்டுமே பெரிது என்ற சமிக்ஞையைத் தெரிவிக்க அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே ஊழல் குறைந்திருக்கலாம் என்றாலும், அதைக் காண்பதற்கோ அல்லது அதைப் பற்றி பேசுவதற்கோ நம்மை அனுமதிக்காத அளவிற்கு மிகத் திறமையாக அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான், ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

அந்தப் பல்லவி இவ்வாறாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற கருத்து தொடர்கிறது. தார்மீக, ஆன்மீக மறுமலர்ச்சிக்குப் பதிலாக இருண்ட, மோசமான வகுப்புவாத தூண்டுதல்களே ஹிந்து மதத்தின் பெயரால் வெளியேற்றப்படுகின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’.

அதிகாரப்பூர்வ வட்டங்களை மறந்து விட்டுப் பாருங்கள். இந்திய ஜனநாயகத்தின் மிகப்பரந்த கௌரவம், அதன் கலாச்சாரம், அதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டன. ஆனால் நிறுவனம் சார்ந்து இருக்கின்ற ரிப்பன்ட்ராப்களால் இந்த உலகை வேறுவிதமாக நம்ப வைக்க முடிகின்றது. உங்களுடைய மக்களை எந்த அளவிற்கு அதிகமாகத் தாக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உலகளாவிய உங்கள் பங்கு அதிகமாக உயரும் என்று நமது தலைவரை அவர்கள் நம்ப வைத்திருக்கிறார்கள். உண்மையாகவே ‘மாற்று எதுவுமில்லை’.

அனைவரைப் பற்றியும் துப்பறிந்து, அனைவரையும் அச்சுறுத்தி, தகவல் ஒழுங்கைக் கட்டுப்படுத்தி மிகவும் பாதுகாப்பாக நாம் இருப்பதாக நம் அனைவரையும் அரசு உணர வைத்திருக்கிறது. ஆனால்… ஆனால்… ஆனால் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

மற்ற பல்லவிகளைப் போலவே ‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவியும் கட்டுடைக்கப்பட வேண்டும். குடிமக்களில் சிலர் பலன்களைப் பெற்றிருக்கலாம் அல்லது திட்டங்களின் பயனாளிகளாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் இந்த அரசாங்கம் செயல்திறன் கொண்டது என்று கூறுவதை நம்புவதற்கு அதன் உண்மையான சாதனைகள் போதாமையுடனே இருக்கின்றன. சில பகுதிகளில் வெற்றிகளை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்தியக் குடியரசு எதிர்கொண்டிருக்கும் அடிப்படை நெருக்கடிகளுக்கு முன்பாக அந்த வெற்றி மங்கிப் போகிறது.

‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவிக்கு எதிர்க்கட்சிகளின் நடத்தையே உதவி வருகிறது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை உதறி விட்டு காங்கிரஸால் வெளியே வர முடியவில்லை. எதிர்கட்சிகள் வசமிருக்கின்ற பல மாநில அரசுகளால் நிறுவன நன்னடத்தைக்கான மாதிரிகளாக அல்லது தாராளவாத, ஜனநாயக விழுமியங்களின் கொள்கைரீதியான பாதுகாவலர்களாக இருக்க முடியவில்லை. ஒருபுறம், இந்திய குடியரசு இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று சொல்ல விருப்பமுடையவையாக இருக்கின்ற எதிர்க்கட்சிகள் மறுபுறத்தில் குடியரசிற்கு இருத்தலியல் நெருக்கடி இருப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்பவையாக இருக்கவில்லை. அந்த இருமைதான் எதிர்கட்சிகளை அதிகம் காயப்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் குடியரசைப் பாதுகாக்கின்ற நோக்கத்திற்காக ஒன்றுபடவில்லை. அவற்றின் உணர்வுகள் அனைத்தும் அவர்களுக்குள்ளான சண்டைகளிலேயே செலவிடப்பட்டு விடுகின்றன. நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருபவர்கள் புதுமுகங்கள் வெளிவர அனுமதிப்பதில்லை.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

இவையனைத்தையும் ஒப்புக் கொண்டாலும், ‘மாற்று எதுவுமில்லை’ என்கின்ற எண்ணம் உண்மையில் மிகவும் அபத்தமாகவே இருக்கிறது. கூட்டணி அரசியலுக்கான சாத்தியம், சீர்திருத்தங்களின் சிக்கல்கள், இந்த நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் நுட்பமான பின்னல் இழைகள் என்று சமீபகால வரலாறு குறித்து இருந்து வருகின்ற மகத்தான மறதியாலேயே இதுபோன்ற ‘மாற்று எதுவுமில்லை’ என்ற சிந்தனை முன்வருகிறது. மாற்றாக வேறொன்றுமில்லை என்றால் ஆழ்ந்த வகுப்புவாதம், அடக்குமுறை இரண்டையும் எதிர்கொண்டிருக்கிற ஒரு ஜனநாயகத்தில், அரசியல் போட்டியும், அதிகாரத்தைக் குறைப்பதும் தானே மாற்றாக இருக்க முடியும். குறைவான அதிகாரம், அதிக போட்டி போன்றவற்றின் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு எதிர்க்கட்சியும் முழுமையாக நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை.

ஆக ‘மாற்று எதுவுமில்லை’ என்று பரவலாக இருந்து வருகின்ற பல்லவியின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். அந்தப் பல்லவி மூன்று விஷயங்களின் அறிகுறியாக இருக்கலாம்: இந்திய மேல்தட்டினரை போலியான களத்திற்குள் சிக்க வைத்திருக்கின்ற அரசியல் அழகியலானது இருக்கின்ற ஆபத்துகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நாயக வழிபாட்டின் அடிப்படையில் சிந்தனைகளை இடைநிறுத்தி எதையும் எளிமைப்படுத்துவதற்கான விருப்பம் இருந்து வருகிறது. அல்லது ஒருவேளை இவ்வாறு ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது ‘வகுப்புவாத விஷம், எதேச்சாதிகார அடக்குமுறை குறித்து எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை’ என்று கூறுவதற்கான வித்தியாசமான வழியிலான உரையாடலாகக்கூட இருக்கலாம்.

There is no such thing as an alternative to Modi Article Bhanu Pratap Mehta in tamil Translated by Chandraguru. உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? - பிரதாப் பானு மேத்தா தமிழில்: தா.சந்திரகுரு

தற்போதைய போக்கு பேரழிவை நோக்கிச் செல்வதாக இருந்து வருகின்ற நிலையிலே, ‘மாற்று எதுவுமில்லை’ என்று கூறுபவர்கள் அதன் மூலமாக இப்போது இருக்கின்ற யதார்த்தத்தை விவரிப்பவர்களாக இருக்கவில்லை. ஜனநாயகத்தில் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது அந்த ஜனநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதையே குறிக்கும் என்பதால், ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்பவர்கள் ‘ஜனநாயகத்தை நாங்கள் வெறுக்கிறோம்’ என்றே நேரடியாகச் சொல்லிக் கொள்ளலாம்.

https://indianexpress.com/article/opinion/columns/narendra-modi-alternative-bjp-opposition-7695387/
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

Parameshwari Poems 7 து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள் 7

து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்




காதலின் தோன்றல்
*************************
கணமொன்றில் தோன்றும்
தீப்பொறியே காதல்..
நின்று சுற்றுமுற்றும் பார்த்து
பல நாள் சிந்தித்து
சரி வருமா வராதா
என்று யோசித்துப்பின்
இருவிரலில் ஒன்றைத் தொட்டு..
பல விளக்கங்களுக்கு ஆட்பட்டு
பல்வேறு பிரயத்தனங்களுக்கு உட்பட்டு
பற்பல சான்றுகள் சுட்டப்பட்டு
பல்கிப் பெருகிய காரணங்கள் தூண்டப்பட்டு
அதற்குப் பின்பான
தீர்க்கமான யோசிப்பில் கூறுபோடும் காதலின் வெளிப்பாடு
நிலையற்றது.
சஞ்சலத்திலேயே வாழும்..
எப்போது வேண்டுமானாலும்
தம்மை விடுவித்துக் கொள்ளும்…

வாழ்க்கையின் போக்கு
******************************
கைகட்டி
எட்டநின்று
குறுக்கிடாமல்
கவனியுங்கள்
வாழ்க்கையின்
போக்கை..
அதிசயங்கள் பல நிகழ்த்த வல்ல
வல்லமை கொண்டது வாழ்க்கை..
அதை நீங்கள் கையிலெடுத்தால்
கைவிட்டுவிடும்..
அது உங்கள் கரம்பிடித்தால்
கைதூக்கி விடும்.

நினைவலைகள்
*******************
நினைவுகளின் அலைகள்..
முத்தமிட்டன‌ நனவில்
நிழல்களின் மீப்பெரு பிம்பங்கள்
மோதுகின்றன நிஜத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
உருப்பெறுகின்றன உருவாரங்கள்
மனதின் ஆதிக்கம்
சில்லறைத்தனமான என் அசைவுகள்
காண்போர் யாவரையும் கேளிக்கிரையாக்குகிறது..
ஏதும் பொருட்படுத்தா மனம்
மௌன இரையாகிறது..
பெரும் கைகலப்பு இடுக்குகளில்
எழுதுகோல் கதறுகிறது..
விரல்கள் கசிய கவிதையாகிறது ஏதோ ஒன்று

பெண் எனும் சுமைதாங்கி
*******************************
தந்தையைக் கண்ணுக்குள் சுமந்தவள்
சகோதரனை இடுப்பில் சுமந்தாள்
காதலனை நெஞ்சில் சுமந்தவள்
அவனையே கணவனாக மடியில் சுமந்தாள்
பிள்ளையை கருவில் சுமந்தவள்
பேரப்பிள்ளைகளை இருகரங்களில் சுமந்தாள்.
சுமைகளை‌க் கூடச் சுகிக்கும்
பெண்மையின்‌ மென்மையை
பூவிதழ் போன்று இதயக் கமலத்தில் கொள்ளும்
மணாளனைக் கொண்ட மங்கையின் மனம்
தடம் மாறிய வெளிச்சமாய்
பிரகாசிக்கும் என்றும்..

மொட்டுகளின் கண்ணீர்க் கதறல்
***************************************
மனிதரை மிருகத்துடன் ஒப்பிட்டுக்
கொச்சைப்படுத்த வேண்டாம்
மிருக இனத்தை.
மனிதனின்றி மிருகம் என்றும்
பச்சிளங் தளிர்கள் மீது
காட்டாது வன்புணர்வை
ஒருபோதும்..
மனிதன் மட்டுமே
துளிரானாலும்
கொடியானாலும்
பூச்செடியானாலும்
மலர்மொட்டானாலும்
காண்பன அனைத்தையும்
வன்மநாசம் செய்கிறான்..
ஆதலால்…
மலரை கசக்கி நாசப்படுத்தும்
இப்படியான மனிதரை
இனி மிருகமென்றழைக்க வேண்டாம்..
மிருகங்கள் வெட்கப்படுகின்றன.

படைப்பின் பால் இயல்பு
*****************************
எதிர்பாலின் மீதான பற்றென்பது மனித இயல்பே…
அம்மாவிற்கு ஆண்பிள்ளையின் மீது கூடதல் பாசம்
அப்பாவிற்கு பெண்பிள்ளை மீது.
அண்ணனுக்கு தங்கை மீதும்
அக்காவிற்கு தம்பி மீது
என தனதொத்தப் பாலைக் காட்டிலும்
தமக்கெதிரான பால் மீதான ஈர்ப்பென்பது உடலின் கூறு
சுரப்பிகளின்செயல்பாடு
இயற்கையின் படைப்பு..

நம்பிக்கை வேர்
********************
துளிர் விடும் போதே
கிள்ளியெறிய முயன்றாய்…..
கிஞ்சித்தும் கலங்கவில்லை…
மௌனமாய் தனக்கான வேரை மட்டுமே
உறுதியாய்ப் பற்றி நின்றது
நம்பிக்கையாய்..
இன்றோ..
பெருமரயாய் விரவிக் கிடக்கிறது…
பூத்துக் குலுங்கும் மலர்களையும்..
கனிந்து கிடக்கும் பழங்களையும்…
வாரி வழங்கக் கரம் நீட்டுகிறது இன்முகமாய்….