Election2024- Modi- Agricultural workers | மோடி அரசு -விவசாயமும் விவசாயிகளும்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “விவசாயமும் விவசாயிகளும்”

எண் : 7

மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள்

விவசாயமும் விவசாயிகளும்

சொன்னது

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (எம்.எஸ்.பி) சமீபத்திய ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மோடி அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது.

பயிர் காப்பீட்டுத் துறையில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு உதவியுள்ளது.

மோடி அரசு விவசாயிகளுக்காக பல கடன் தள்ளுபடி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

பிரதமரின் கிசான் சம்மான் யோஜனா மூலம் பலரும் பயனடைந்துள்ளனர்.

கிராமப்புறங்களில் நிலம் கையகப்படுத்தும் கொள்கை மக்களுக்கு சாதகமானது. ரெக்லார் சட்டம் அனைவருக்கும் பயனளிக்கும்.
உண்மை நடப்பு

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பேச்சு சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்க ஆவணங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து மறைந்துபோய்விட்டது. அரசின் 2011-12 மற்றும் 2018-19 ஆம் ஆண்டு நிலவர மதிப்பீட்டு ஆய்வுகள், விவசாயக் குடும்பங்களின் சாகுபடி மூலம் கிடைக்கும் மாத வருமானம் ரூ.2,855 லிருந்து ரூ.2,816 ஆக (அதாவது 1.4 சதவீதம்) வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது மோடி அரசாங்கத்தின் கீழ் எம்.எஸ்.பி.க்கள் மிக மெதுவான விகிதத்தில் உயர்ந்து வருகின்றன.2003-04 மற்றும் 2012-13 க்கு இடையில், முக்கிய உணவு தானிய பயிர்களின் எம்.எஸ்.பி ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தது, ஆனால் 2013-14 மற்றும் 2023-24 க்கு இடையில், முக்கிய உணவு தானிய பயிர்களின் எம்.எஸ்.பி ஆண்டுக்கு சுமார் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. உள்ளீட்டு விலைகள் மிக வேகமாக உயர்ந்து வரும் நேரத்தில் இது நடந்துள்ளது.

மோடி தனது 2014 பிரச்சாரத்தில் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக உறுதியளித்தார், அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்தி செலவை (C2) விட 50 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் (அதாவது பயிருக்காக செய்யப்பட்ட செலவுகளின் கூட்டுத்தொகை, குடும்ப உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பு, சொந்தமான மூலதன சொத்துக்களின் மதிப்பின் மீதான வட்டி, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்காக செலுத்தப்பட்ட வாடகை மற்றும் சொந்தமான நிலம் எனில் அதன் வாடகை மதிப்பு). உண்மையில், சொந்தமான மூலதன சொத்துக்களின் மதிப்புக்கு வட்டி, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு செலுத்தப்பட்ட வாடகை மற்றும் சொந்தமான நிலத்தின் வாடகை மதிப்பு ஆகியவை விலக்கப்பட்ட ஏ2 + எஃப்எல் என்ற வகையில் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகமாக எம்.எஸ்.பி.யை நிர்ணயிப்பதன் மூலம் மோடி அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றியது.

இதுபோன்ற தவறான முறையால், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்ட பயிர்களில் குவிண்டாலுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தற்கொலை

1997க்கும் 2022க்கும் இடையில் (அதன் பிறகு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திலிருந்து எந்த தரவுகளும் கிடைக்கவில்லை) விவசாயத் துறையில் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது விவசாயத் துறையில் நிலவி வரும் துயரத்தின் ஒரு முக்கியமான அறிகுறியாகும். இவற்றில் சுமார் 1,00,474 தற்கொலைகள் 2014க்கும் 2022க்கும் இடையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கையில் பெரும் பங்காகும்.

மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலம் குறிப்பாக விவசாயிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் 10,281 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2020இல் 10,677 ஆகவும், 2021இல் 10,881 ஆகவும், 2022 இல் 11,290 ஆகவும் அதிகரித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்குவதில் மோடி அரசு அலட்சியப் போக்கை மேற்கொண்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் பல விவசாயிகள் குத்தகைதாரர்களாக இருப்பதால் இழப்பீடு பெறத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். தற்கொலை செய்து கொள்ளும் பெண் விவசாயிகள், விவசாயிகளாகக் கூட கருதப்படுவதில்லை. ஏனெனில், நிலம் பொதுவாக குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் பெயர்களிலேயே உள்ளது.

பயிர் காப்பீடு

முழுமையான பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது ஒருபோதும் இருந்ததில்லை. 2016 ஆம் ஆண்டில், அரசாங்கம் PMFBY ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் அதன் அமலாக்கம் தோல்வியடைந்துள்ளது. அதனால் பயன்பெறும் பகுதியும் பல ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. பீகார், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலகி, தங்கள் சொந்த பயிர் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன.

PMFBY ஒரு விரிவான பயிர் மற்றும் வருமான காப்பீட்டுத் திட்டம் அல்ல. மேலும் சிறு, குறு விவசாயிகளில் பெரும் பகுதியினர் பிரீமியத்தை செலுத்த முடியாததால் இந்த திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட பகுதி 2016-17ஆம் ஆண்டில் 570.8 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2022-23ஆம் ஆண்டில் 487.4 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

PMFBYஇன் கீழ் செலுத்தப்பட்ட உரிமைகோரல்களும் 2018இல் ரூ. 29,337 கோடியிலிருந்து 2022இல் ரூ. 18,043 கோடியாக குறைந்துள்ளது. PMFBYஇன் கீழ் நிலுவையில் உள்ள உரிமைகோரல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

PMFBY பயிர் காப்பீட்டுத் துறையை தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கார்ப்பரேட் லாபவெறிக்கு திறந்து விட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 2016-17 முதல் 2020-21 வரை லாபமாக சுமார் ரூ. 24,350 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளன.

கடன் தள்ளுபடிகள்

விவசாயிகளுக்கான கடைசி தேசிய அளவிலான கடன் தள்ளுபடி திட்டம் 2008இல் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஜூலை 2022இல் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வில், 2014க்குப் பிறகு அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டங்களின் சாத்தியமான பயனாளிகளில் 50சதவீதம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற்றுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் விவசாயிகள் சிறந்து விளங்குகின்றனர். விவசாய வளர்ச்சி விகிதங்கள் மந்தமாக இருந்தாலும், விவசாய துயரம் பரவலாக இருந்தாலும், விவசாயத்தில் வாராக்கடன் தொழில்துறையை விட கணிசமாக குறைவாக உள்ளது (மொத்தத்தில் 17.4 சதவீதம் மட்டுமே).

கடந்த 10 ஆண்டுகளில், வங்கிகள் 15 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. அதே நேரத்தில் விவசாயிகளிடமிருந்து வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை, 18 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல்

2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை (RFCTLARR) சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்.

கார்ப்பரேட் லாபியை சமாதானப்படுத்த, மோடி அரசாங்கம் 2014 டிசம்பர் 29அன்று RFCTLARR சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது.

2015ஆம் ஆண்டில், மோடி அரசு மக்களவையில் RFCTLARR திருத்த மசோதாவாக நிறைவேற்றியது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அதை நிறைவேற்றுவதைத் தடுத்தன. நிலம் கையகப்படுத்துதலுக்கு ஒப்புதல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டுத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், பல மாநிலங்கள் RFCTLARR சட்டம், 2013இல் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. இதன் விளைவாக, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாநிலங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலம் கொள்ளையடிப்பதை அனுமதிக்க வேண்டும் என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.

சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சி செய்த அரசுகளிலேயே மோடி அரசு விவசாயிகளுக்கு மிகவும் எதிரான, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கமாகவே இருந்து வருகிறது. அதனால்தான் அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள் இவ்வளவு வீச்சாகவும் தீவிரமாகவும் உள்ளன. 2020-21 ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) தலைமையிலான தனித்துவமான போராட்டம் டெல்லி எல்லைகளிலும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை அணிதிரட்டியது, மேலும் அனைவராலும் வெறுக்கப்பட்ட மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி ஆட்சியை கட்டாயப்படுத்தியபோது, அது வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு வெற்றியைப் பெற்றது. எவ்வாறாயினும், மோடி ஆட்சி நிலத்தையும் விளைபொருட்களையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது; விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தொடர்ந்து வறுமையில் ஆழ்த்துவது என்ற அதன் நிகழ்ச்சி நிரலில் உறுதியாக உள்ளது. இதனால், போராட்டம் மீண்டும் தொடரும்.

விவசாயிகளை காப்பாற்றுவோம்! விவசாயத்தைக் காப்பாற்றுவோம்!

பாஜகவை தோற்கடிப்போம்!

 

Communist Party of India (Marxist)

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *