ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 15
கிராமத்து நிலவின் தாழ்வாரத்தில் ஓர் உரையாடல்..
இளங்காலை வெயிலை உறிஞ்சியபடி உடலை முறித்துக் கொண்டிருந்தது ஜன்னல், நிலைக்கதவுகள். நான் நிலைவாசல் கடந்து சோம்பலை முறித்துக் கொள்கிற போதே தன்னியல்பில் உடலின் ஒவ்வோர் அசைவும் அதற்கேயுரிய நடன பாவணைகளை வெளிப்படுத்திய வண்ணமாயிருந்தது. மெலிசாக வீசுகிற இளங் காற்றுக்கு உடலை ஒப்புக் கொடுத்தபடியே சாலையோரம் அசடாய் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்தை நான் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். பச்சைக் கொடியசைத்து வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக பூக்கள் ததும்ப நிறைவாயிருந்தது அம்மரம். அவையெல்லாம் இரவு வானில் பூத்துவிட்டு மரத்தில் இளைப்பாற வந்து அமர்ந்துவிட்ட நட்சத்திரங்கள் தானோ என்று இருளுக்கும் பகலுக்குமான அகாலத்தில் மனமோ இரசனையால் நிரம்பிக் கொண்டது.
முற்றத்தில் கைகள் சிவக்க மண்பானையில் செம்மண் குளைத்து நட்டு வைத்த காட்டு ரோஜா செடிகள் யாவும் இதழ் முழுக்க வர்ணங்களைப் பூசிக் கொண்டு விதவிதமாய் முகத்தைக் காட்டி குழந்தைமையாய் சிரித்துக் கொண்டிருந்தன. பூவிதழ் விளிம்பில் திரண்டு ததும்பி நிற்கிற ஒற்றைப் பனித்துளி, எப்படியாவது உதட்டு மேலிருந்து விழக் காத்திருக்கும் மழலையின் வாநீரை எனக்கு நினைவுபடுத்திவிடும். இப்படி நேற்றிரவு பூத்த நட்சத்திரங்களையும், கிளையில் துளிர்த்த பூக்களையும் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று குழந்தைகளின் ஞாபகங்கள் நறுமணம் போல மனதிற்குள் வந்து நிறைந்து கொள்கிறது. எல்லாவற்றிலும் தென்படுகிற ஒரு குழந்தைமையை மனம் எப்படியோ கண்டெடுத்துவிடுகிறது போல. மரத்தடி நிழலில் திறந்த புத்தகத்தினுள் எதார்த்தமாய் வந்து விழுகிற பன்னீர் பூவைப் போல மழலைக் குரலில் பூத்துச் சிரிக்கிற காளீஸ்வரி, பிரியாவின் முகங்கள் மெல்ல என் ஞாபகக் கேணியிலிருந்து மேலெழும்பி வருவதை நன்றாகவே உணர முடிகிறது.
சாலைத் திருப்பத்தில் தலை நிறையப் பூச்சூடி நிற்கிற வேப்பம் மரத்தில் சூல் தரிக்காது வாடிப் போகிற தனித்த மலட்டுப் பூக்களைப் பற்றி இதுவரை எவராவது அக்கறை கொண்டிருப்பார்களா என்று ஒருகணம் நிதானமாய் யோசித்துப் பார்க்கிறேன். அத்தனைக் கோடி நட்சத்திரத் திரள் கூட்டத்திலிருந்தும் அன்றாடம் தொலைந்து போகிற ஏதோவொரு விண்மீனை நினைத்து மனிதன் எப்போதாவது கவலை கொண்டிருப்பானா என்றும் சிந்தித்துப் பார்க்கிறேன். இப்படி மனிதப் பார்வைகளுக்கு அப்பால் தொலைந்து போன நட்சத்திரங்களையும், மலர்ந்தும் மலராத பூக்களையும் போல, இத்தனைக் கோடி குழந்தைகளில் எவரது பார்வைக் கோணத்திற்குள்ளும் வந்துவிடாத இந்த காது கேளாத குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில் சுருக்கென்று அடிவயிற்றில் ஏதோவொன்று பிரவச வலியாய் தைப்பது போலிருக்கிறது.
பெத்த புள்ளைங்க பத்தோட பதினொன்னா, இதுவும் இருந்துட்டுப் போவட்டுமே! என்றபடி அறியாமையின் பாதாளத்தில் தங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாக்கிவிடுகிற எத்தனையோ பெற்றோர்களுக்கு மத்தியில், தாமாக சிகிச்சைக்கு ஒப்புக் கொண்ட காளீஸ்வரி, பிரியாவின் குடும்பங்களை ஏனோ இக்கணத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. சென்னை வந்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தின் நம்பிக்கையை கண்கள் முழுக்க நிறைத்துக் கொண்டு மிளிர்ந்த அந்தக் கண்களைக் கண்ட நொடியில், இனி எல்லாமே சாத்தியமாகிவிடும் என்கிற சுடர் என்னுள்ளும் பற்றிக் கொண்டு கமழத் துவங்கிவிட்டது. ஆனாலும் எதிர்க்காற்றுக்கு அசட்டுத் தைரியத்தோடும், சிணுங்களோடும் முகிழ்த்தபடி எரிகிற அந்த அகல் விளக்கின் ஒளியை அணைத்துவிடுவதற்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் சிறிய தும்மலொன்றே போதுமானது என்கிற பயம் எனக்குள் இன்னமும் பதட்டத்தை விதைத்தபடியே தான் இருக்கிறது.
“கொழந்தைக்கு காது கேக்கலைன்னு சென்னைக்கு அழைச்சுட்டு போய், மூளைக்குள்ள ஆபரேசன் பண்ணப் போறதா சொல்லுறீங்களே, கேக்கவே பயமால்ல இருக்கு?” என்றபடி வழமையான ஆழிச் சங்கொன்றை எடுத்து பெற்றோரின் காதிலே ஊதிவிட்டால், அதுவொன்றே போதாதா? இந்நாள் வரையிலும் பெற்றோரிடம் அக்கறையாய் அடைகாத்து வந்த நம்பிக்கையின் வெளிச்சத்தை அது கருமேகம் சூரியனை மறைப்பது போல் செய்துவிடாதா? இவையெல்லாம் நினைத்து நினைத்து அது விரல் தொடுகிற ஒரு தொட்டாச்சிணுங்கியின் பேரதிர்ச்சியைப் போல ஒரு நடுக்கத்தை எனக்குள் நேற்றிரவிலிருந்து ஏற்படுத்திய வண்ணமாகவே இருக்கிறது.
சென்னைக்கு வந்து பரிசோதனையின் மூலமாக, சிகிச்சையின் வழியாக, பயிற்சியின் தொடர்ச்சியாக நன்றாகக் கேட்டுப் பேசுகிற குழந்தைகளைப் பார்த்தவுடன் வருகிற பரவச உணர்வினால், பெற்றோர்களின் ஆழ்மனதிற்குள் கிளர்ந்த நம்பிக்கையை நான் அப்படியே புடம் போட்டு ஆபரேசன் செய்து கொள்கிற நாள் வரையிலும் தக்க வைத்திருக்க வேண்டும். பசியைப் போக்குவதற்குப் பற்ற வைத்த வள்ளலாரின் நெருப்பைப் போல அணையாது அவர்களுக்குள் கிளர்ந்த பரவசத்தின் தீயைப் பேணிக் காக்க, அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்தபடியே தொடர்ச்சியாக அவர்களோடு இயங்கவும் வேண்டும்.
இங்கு, நான் இல்லாத சிறு இடைவெளியையும் நிரப்பிக் கொள்ள அக்கம் பக்கத்து அறியாமை நிறைந்த மனிதர்கள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள் என்பதே எனக்குள் ஒருவித பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. எனக்குள் துளிர்க்கிற அதீத கவலையெல்லாம் ஏதோதொரு அசந்தர்பத்தில் அறியாமையின் இருளுக்குள் தங்களது வெளிச்சத்தைத் தொலைத்தபடி, தங்கள் குறைபட்ட பிள்ளைகளை அந்த இருட்டுக்குள்ளே வாழ்வதற்கு பணித்துவிட்டால் இதுவரை முயற்சித்த எல்லாமும் பாழாகிவிடும் என்பதே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், பெற்றோர்களைக் காட்டிலும் நான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் அசட்டுத்தனத்தை எண்ணித் தான் அதிகமாக அச்சப்பட வேண்டியதாக இருக்கிறது.
இளவெயில் பட்டு உடல் விறுவிறுத்துக் கொள்கிற போதே நிதானம் பிறந்து மனம் தெளிவடையத் துவங்கிவிட்டது. இன்று இரண்டு குடும்பங்களையும் எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்கிற உறுதிப்பாட்டில் மெல்ல வாகனத்தில் கிளம்புகிற போதே சிலுசிலுவென்று அடிக்கிற காற்றில் உடலும் மனமும் இதமாய் நனையத் துவங்கிவிட்டது. நெடுநாளைக்கு அப்புறமாக குழந்தைகளின் வீடுகளைத் தேடிப் பயணப்படுகிற புத்துணர்வில் தன்னியல்பில் வந்து உதட்டில் ஒட்டிக் கொள்கிற சிரிப்பில் அசடாய் நான் கனிந்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர்களின் வீடுகளை நெருங்க நெருங்க மழலையின் பிஞ்சுக் கரங்களிலிருந்து வண்ண வண்ணக் கோடுகளின் கிறுக்கல்கள் வழியாக காகிதத்தில் ஓவியமாய் உருக்கொள்கிற கிராமத்தின் சாயலைப் போலொரு அற்புதமான ஊருக்குள் நுழைந்துவிட்டதான பரவசம் எனக்குள் கூடிவரத் துவங்கிவிட்டது.
மண்பாதையின் விளிம்பில் மனிதச்சங்கிலியாய் கைகோர்த்து நிற்கிற பள்ளிச்சீருடைக் குழந்தைகளைப் போல, நீர்மருது மரங்கள் யாவும் காற்றுக்குத் தலை உலுப்பியபடியே மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. சாலையிலிருந்து விலகி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரையிலும் கண்ணுக்குள் நிறைந்து கொள்கிற நீண்ட பச்சை வயல்களின் காற்றுக்கு இசைந்த அசைவுகள் யாவும் எனக்குள் ஒருவித ஆனந்தப் பரவச நிலையை நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பால் மாடுகளின் கணங்.. கணங்.. கென ஒலிக்கிற காண்டா மணியின் சப்தங்கள் உள்ளுக்குள் ஏதேதோ செய்துவிடுகிறது.
தார்ச்சாலை, செம்மண் புழுதிபடிந்த சாலையாய் உருக்கொள்கையில் ஊரின் உதட்டிற்கு சிவப்புச் சாயம் பூசியதைப் போலொரு அழகு கிடைத்துவிடுகிறது. கிடத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பிலிருந்து நேற்றைய சாரலில் நனைந்த பிசுபிசுத்த ஈரமான நெடியொன்று வெட்டவெளியெங்கும் கமழ்ந்தபடியே இருந்தன. வண்ண வண்ண ஓவியங்களாய் விரிகின்ற இயற்கையின் பேரழை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டும், பால்மடி கட்டிய நெல்மணிகளின் வாசத்தையும், வகிடெடுத்து சீவியதைப்போல நிலத்தில் உழப்பட்ட மண்கட்டியின் வாசத்தையும் நெஞ்சுக்குழிக்குள் சுமந்து கொண்டு குழந்தைகளின் வீடுகளை நோக்கி நான் மழைக்கால தையிலான் குருவிகளைப் போன்ற உற்சாகத்தோடு பயணித்துக் கொண்டிருந்தேன்.

குழந்தைகளைத் தேடி கிராமம் கிராமமாக கூட்டைத் தொலைத்த குருவியைப் போலத் திரிந்த போது மனதிற்குள் முளைத்த கேள்விகளின் திகைப்பில் அப்போதெல்லாம் கண்ணில் படாத கிராமத்தின் அழகிய காட்சிகள், இப்போது வலிய வந்து பார்வைக்குள் நிறைகின்றன. ‘என் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்’ என்று வார்த்தைகளால் துரத்திய அதே வீடுகளிலிருந்து மீண்டும் வந்த அழைப்பின் கரங்களைப் பற்றியபடியே இப்போது திரும்பவும் நான் சென்று கொண்டிருக்கிறேன். தோல்வியின் முகத்தை சுமந்தபடி வீடு திரும்பிய அந்த நாளிற்கும், நம்பிக்கையினால் வெற்றியின் விளிம்பை தொட்டுவிட்ட இந்த நாளிற்குமான இடைவெளியை எண்ணி எனக்குள் கிளர்ந்த மட்டற்ற மகிழ்ச்சியை நான் எப்படி விளக்குவது?
கட்டாயம் இம்முறை அக்குடும்பத்தோடு மட்டுமே பேசிக் கொள்கிற முன்முடிவோடு நான் செல்லவில்லை. அக்குழந்தையின் மேல் அபிப்பிராயம் கொண்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும், உறவினர்களையும் ஒருசேர அமர்த்தி வைத்துப் பேசி அறுவைச் சிகிச்சையைப் பற்றிய அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்கான உந்துதலை அவர்களிடமிருந்தே துவங்குவதற்கான முயற்சியைத் தான் நான் இப்போது முன்னெடுத்திருக்கிறேன். இப்பெற்றோர்களை சமாளித்துவிடுவதற்கான எல்லா விதமான சாத்தியப்பாடுகளையும் கைப்பற்றி வைத்திருக்கும் நான், வெறும் கையோடுதான் உற்றார் உறவினர்களைச் சந்திக்கிற தீர்மானத்தோடு போய்க் கொண்டிருக்கிறேன். அவர்களைச் சமாளிப்பது சிரத்தையான காரியமென்றாலும்கூட, இப்போது கிடைத்த சிறு வெற்றியின் தீப்பந்தத்தைப் பற்றிக் கொண்டதன் நம்பிக்கையில் தான் இப்போது இங்கு வந்து நான் சேர்ந்திருக்கிறேன்.
குழந்தைக்குத் தலையில் ஆபரேசன் செய்துவிடப் போகிறார்கள் என்கிற பதட்டமும், அந்தச் சிகிச்சையால் பேசாதக் குழந்தை பேசிவிடப் போகிறதாம் என்கிற ஆச்சரியமும் கலந்த தண்டோரா செய்திகள் கிராம மக்களிடையே சமீப நாட்களாய் பலவிதங்களில் பரவியிருந்தது. மருத்துவர் வருகிறார் என்கிற எதிர்பார்ப்புகளோடு, அப்படி அவர் என்ன சொல்லிவிடப் போகிறார் என்கிற ஆர்வமும் கூடிய கண்களை அக்குழந்தையின் வீட்டுமுன் சாணம் மொழுகிய வாசல் முற்றத்தில் கூடியிருக்கிற அத்தனை பேர் முகத்திலும் ஒருசேர என்னால் காண முடிந்தது. உண்மையில் அத்தனை பேரையும் முன்னிரவில் நிலாச்சோறாக கூடி அமர வைத்துப் பேசுகிற வாய்ப்பை எண்ணி உள்ளார எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அத்தனையும் தாண்டி கிராமத்தின் எகத்தாளப் பேச்சுக்கும், நறுக்கென்று கடிபடும்படியாக கேட்கப்படுகிற கேள்விகளுக்கும், அப்பாவியாய் கேட்கிற சந்தேகங்களுக்கும் நிதானமாய் பதில் சொல்கிற அளவிற்கு எனக்குப் பக்குவம் இருக்கிறதா என்கிற தடுமாற்றமும் எனக்குள் மெல்ல உருவாகி வருவதை உணர முடிகிறது.
தெருவிளக்கைச் சுற்றியலையும் ஈசல்களைப் போல பத்திற்கும் மேற்பட்ட கூட்டத்தில் ஒருவனாக நாங்கள் அங்குமிங்கும் முளைத்திருக்கிற கூரை வேயப்பட்ட சின்னஞ்சிறு வீடுகளடங்கிய தெருவின் மண்சாலைக்கு நடுவே வட்டமாக அமர்ந்திருந்தோம். பிறைநிலா வானிற்குக் கீழே சோடியம் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அந்த முன்னிரவில் எல்லோர் முகங்களிலும் அது ஆரஞ்சு வண்ணமாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எல்லோரது தூசி படித்த கண்களும் எனை நோக்கியே அம்பெய்வதைப் போலக் காத்திருந்தன. எனக்கோ எதிலிருந்து துவங்குவது, எங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்வது என்கிற குழப்பத்தில் விழித்தபடியே இருக்க, வெற்றிலைக் காம்பை நுனிவிரலில் கிள்ளிப் போட்டு வாயில் ஒதுக்கியபடியே பக்கத்தில் நின்ற தாத்தா தன் பேச்சால் முதல் சுழியைப் போட்டு வைத்தார்.
ஐயா, நீங்க சொல்லுத எல்லாத்தையும் கேட்டுக்கிடுதோம். ஆனா இது பச்சப் புள்ளைங்க பாத்துக்கிடுங்க. ஆபரேசன்னு இல்லாம ஊசி, மருந்துல சரி பண்ணிடலாமான்னு நீங்க தான் கொஞ்சம் பாத்துச் சொல்லணும்?
தாத்தா, நாம என்ன, இந்தக் கொழந்தைக்கு ஆசைப்பட்டா ஆபரேசன் பண்ணுதோம் சொல்லுங்க. சென்னைக்கு, நாங்க எல்லாரும் போயி செக்கப் பண்ணி பாத்தப் பெறவு தான ஆபரேசன் செய்யனுங்குற முடிவுக்கே வந்துருக்கோம். காதுல சீலு கட்டி, அழுக்கு கூடிப் போய், அதனால காது கேக்காம போச்சுன்னாகூட மருந்து ஊத்தியே புள்ளைய சரிகட்டிப்புடலாம். ஆனா, இது நரம்பு பிரச்சனையாப் போச்சே. அதனால மிஷின வச்சே வயித்தியம் பாக்க வேண்டியதாயிடுச்சு. அதையும் கொஞ்சம் நீங்க புரிஞ்சுக்கிடனும்.
அந்தத் தாத்தா புரிந்தும் புரியாமலும் ஒரு கோணத்தில் தலையாட்டி வைத்தார். எனக்கு இத்தகைய தலையசைப்பின் மீது தான் அச்சமே இருக்கிறது. வெளியே கேட்கப்படுகிற கேள்விகளுக்கு அவர்களுக்குத் தக்க பதிலொன்று கிடைக்காத பட்சத்தில், கிடைத்த பதிலிலிருந்து அவர்களுக்குச் சாதகமான விளக்கத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இப்படியான யோசனைக்கெல்லாம் மனதை ஒப்புக் கொடுத்துவிட்டால் யாரையும் கறையேற்ற முடியாது என்கிற அவசரத்தில் நான் நிதானத்திற்கு வருவதற்குள், அடுத்த கேள்வியை அருகிலிருந்த பாட்டியொருவர் இயல்பாய் கேட்டு வைத்தார். கைகளை பின்புறமாக சாய்த்து ஊன்றியபடி இருகால்களையும் நீட்டி கூனல் விழுந்த முதுகை வளைத்து அவர் பேசிய விதம் ஒரு குழந்தையின் செய்கையை எனக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தது.
ஏஞ் சாமி, நரம்பு பெலமில்லாம இருக்குன்னு சொல்லுதீகளே, சத்து டானிக் கொடுத்தே தேத்திப்புட மாட்டீகளா?
பாட்டிம்மா, இது சத்து மாத்திரை, டானிக்கால சரிபண்ணுத இலேசுபட்ட காரியமில்ல. அப்படி, ஒரு நரம்பு விசயத்தை சரி பண்ணிடவும் முடியாது. ஒருதடவை நரம்பு பாதிச்சுடுச்சுன்னா மறுக்கா மருந்து கொடுத்து தேத்திடவும் முடியாது, பாத்துக்கிடுங்க. நாம மாசக்கணக்கா மருந்த கொடுத்துப் பாக்குறோம்னு காத்துக் கெடந்தோம்னா கொழந்தையைக் குணப்படுத்த நாமளே தாமதப்படுத்துற மாதிரியா ஆகிடும். இப்படி நரம்பு பிரச்சனையா இருக்குற புள்ளைங்களுக்கு மிஷினால மட்டுந்தான் வயித்தியமே பண்ண முடியும். அதுக்கு இந்த சத்து டானிக், சத்து ஊசில்லாம் பிரயோசனப்படாது, கேட்டுக்கிட்டியா பாட்டி!
ஆரம்பத்திலிருந்தே எதையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த அந்த தாத்தா வெற்றிலை போட்டுச் சிவந்த உதட்டைச் சுழித்து வாய்க்குள் காற்றையும் நீரையும் ஒருசேரக் கொப்பளித்து காற்றுக்குமிழ்களாக தூர அவற்றை உமிழ்ந்தார். அதுவரை நிதானத்தோடு மண்ணைக் கிளறிக் கொடுத்து குஞ்சுகளை தன்னியல்பில் மேய்த்துக் கொண்டிருந்த கோழிகள் விருட்டென்று சப்தம் கேட்டு பறந்து போய் வேறொரு குப்பையில் அமர்ந்து எக்கிப் பார்த்தது. மடமடவென எழுந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டவர் தொண்டையைச் செருமிக் கொண்டே மறுபடியும் பேச ஆரம்பித்தார்.
இந்த நாட்டு மருந்துலயே எல்லாத்தையும் சரி பண்ணுறதா பேசிக்குறாங்களே, அதோட சமாச்சாரம் எப்படி இருக்கும்னு பாத்துக்க முடியாதுங்களா?
ஐயா, இப்போ, கொழந்தைக்கு பிரச்சனை என்னான்னு பாத்தாச்சு. அதுல நூறு சதவீதம் காது கேக்க வாய்ப்பில்லைன்னு ரிப்போட்டும் வந்துருச்சு. இப்ப போயி நாம அவங்க சொல்லுதாங்க, இவங்க சொல்லுதாங்கன்னு போய் அலைஞ்சுப் பாத்தோம்னா பிரச்சனை ஒன்னும் மாறப் போறதில்லை. ஆனா, நம்ம புள்ளைக்கு வைத்தியம் செய்யுறதை ரொம்ப காலம் தள்ளிப் போடுத மாதிரியா ஆகிடும். சாமிக்கு நேந்துக்கிட்டா நாளைத் தள்ளிப் போட முடியுங்களா? அது மாதிரித் தான் இதுவும். காலா காலத்துல வயித்தியம் செஞ்சிடனும். இல்லைன்னா புள்ளைக்கு தான் கேடு, பாத்துக்குங்க. அதனால நம்ம புள்ளைக்கு அடுத்ததா என்ன வைத்தியம் பாக்கனுங்குறப் பத்தி யோசிக்குறது தான் நம்ம புள்ளைக்குமே நல்லது.
அருகே வயக்காட்டிலிருந்த மேய்த்த பசுவையும் கன்றையும் ஒருசேரக் கயிற்றில் பிடித்தபடி ஒருவர் கூட்டத்தையே எட்டிப் எட்டிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். கன்றுக்குட்டி தன் முகத்தை பசுவின் பக்கம் சாய்த்தவாறு உரசிக் கொள்ள தனது சொரசொரப்பான வாழைப்பூ நிறத்திலான நாக்கை சுழற்றி மடித்து அது தனது கன்றை நக்கிக் கொடுத்தது. அதனது லயிப்பில் தன் உருண்டையான கண்களை தளர்த்திக் கொண்டு கிறங்குகையில் அவரது கணப்புச் சத்தத்தைக் கேட்டு விழித்தபடி இன்னும் நெருக்கமாக பசுவிடம் அணைந்து ஒட்டிக் கொண்டது. அவர் மாடுகளின் கயிற்றை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தன் போக்கில் கேள்வியை கூட்டத்திற்கு நடுவே சுருக்குக் கயிற்றை வீசுவதைப் போல சுண்டி தூக்கிப் போட்டார்.
ஐயா, நீங்க பேசுறது எல்லாஞ் சரித்தேன். ஆனா ஆபரேசன் பண்ணிக்க கிராமத்தான் எங்களுக்குத் தான் பயமா இருக்குது பாத்துக்கிடுங்க. ஆபரேசன்னு இல்லாம வெளிய மிஷின மாட்டிக்கிடுற மாதரி இந்தப் புள்ளைங்களுக்கு ஏதும் செஞ்சுற முடியாதுங்களா?
ஐயா, புள்ளைக்கு நரம்பு பிரச்சனைங்குறதால மிஷின மாட்டித்தான் வைத்தியமே பாத்தாகனும். அதை காக்ளியார் இம்பிளாண்ட் கணக்கா ஆபரேசனப் பண்ணிச் சரி செய்யனுமா இல்ல, சும்மா வெளியவே மாட்டி ஹியரிங் எய்டு கருவி வச்சே குணப்படுத்திடலாமான்னு மட்டும் தான் அடுத்ததா யோசிச்சு முடிவு பண்ண வேண்டியிருந்துச்சு. ஆனா, சென்னைக்குப் போயி அங்கின ஹியரிங் எய்டு மிசினையும் புள்ளைக்கு சூதானமா மாட்டிப் பாத்தாச்சு. நூறு சதவீதம் நரம்பு பாதிச்சதுனால இந்தக் கொழந்தைக்கு அதனால பிரயோசனம் இருக்காதுன்னு தெளிவா சொல்லிப்புட்டாங்க. அதுக்கு அப்புறமா தான நம்ம புள்ளைக்கு ஆபரேசன்னு முடிவு பண்ணி, நமக்கு சொல்லி அனுப்பிருக்காங்க!
நான் பேசுவதைக் காதில் போட்டுக் கொண்டே பசுவையும் கன்றையும் தலை திரும்பிப் பார்த்தார். திகைத்து நின்ற கன்றையும், தாய்மையில் கனிந்து நிற்கிற பசுவையும் ஒருமுறை நிறைவாக பார்த்துச் சிரித்துவிட்டு கழுத்துப் பட்டையில் பட்டுபோல் மின்னுகிற தோலைத் தடவிக் கொடுத்தபடி ஹோய்.. ஹோய் என்று சப்தமிட அவை தலை உலுப்பியபடி ம்ம்மே.. என்றபடி முன்னே நகரத் துவங்கியது. அவரும் தன்னியல்பில் கடந்து போகிற பாதசாரியைப் போல கூட்டத்திலிருந்து விலகிச் செல்ல, கூட்டம் சுறுசுறுப்படையத் துவங்கிவிட்டது.
இதுதான் கிராமத்தின் இயல்பா? யாரோ ஒருவருக்கு துயரமென்றதும் ஓடி வந்து ஆறுதல் சொல்வதும், சொல்லாலே அவர்களைச் சமாதானப்படுத்தித் தேற்றிவிடுவதும், அப்புறம் தன் போக்கில் எல்லாமே இங்கு இயற்கை தான் என்பது போல கலைந்து செல்வதுமான இம்மக்களின் இயல்பை புரிந்து கொள்ள இன்னும் எனக்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ, தெரியவில்லை. இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஓரமாய் அமர்ந்து கொட்டைப் பாக்கை இடித்துக் கொண்டிருந்த பாட்டி கூடவே ஒரு கேள்வியையும் போட்டு இடித்து வைத்தார்.
ஏய்யா சாமி, புள்ளைங்களுக்கு ஆபரேசன், மிஷின்னு எதுவுமே இல்லாம அதுக்குன்னு இருக்க பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டோம்னா, அவங்களே பதனமாச் சொல்லி பேச வச்சுப்புடுவாங்களாமே, அப்படியா?
ஆச்சி, இங்க பாத்துக்கிடுங்க. நம்ம புள்ளைக்கு காது கேக்கல. இப்போ, நீங்க பேசுறத நான் கேக்கேன். அதனால உங்ககிட்ட நான் பேசிட்டு இருக்கேன். அதே மாதிரி, அந்தக் கொழந்தைக்கும் பேசுறத கேட்டா தான, என்னான்னு புரிஞ்சுக்கிட்டு அதுவும் பேசும். இந்தக் கொழந்தைங்களுக்கு காது கேக்குறதுல தான் பிரச்சனையே தவிர, பேசாம இருக்குறது இல்ல. அத மொதல்ல விளங்கிக்கிடனும். இந்தப் புள்ளைங்கல்லாம் காது கேக்காததுனால தான் பேசாம இருக்குதுங்க. அதனால மொதல்ல அவங்களுக்கு காது கேக்குறதுக்குத் தான் வயித்தியம் பண்ணியாகனும். புரிஞ்சுக்கிட்டீங்களா!
ஆனா, பேச்சுப் பள்ளிக்கூடத்துல அந்தக் கொழந்தைங்களுக்கு காது கேக்க வைக்குறதுக்கான பக்குவத்த பண்ணுறதில்ல. நம்ம மொகத்தப் பாத்து, உதட்டப் பாத்துப் பேசுறதுக்கும், அப்புறமா கை சாடை போட்டுப் பேசுறதுக்கும் தான் புள்ளைங்களுக்கு அங்கின சொல்லித் தர்றாங்க. அப்போ, அவங்களுக்கு காது கேக்கலைங்குற பிரச்சனை அப்படியே தான இருக்கப் போவுது. அதனால, நாம மொதல்ல காது கேக்காம இருக்குறதுக்கு வயித்தியம் பாத்துக்கிடது தான் நல்லது. அப்படி மிஷினை மாட்டுனதுக்கு அப்புறமா, இந்த மாதிரி பேச்சுப் பயிற்சி கொடுத்தோம்னா, நாம பேசுறதக் கேட்டு அவங்களும் சுத்தபத்தமா பேச ஆரம்பிச்சுடுவாங்க. என்ன, கேட்டுக்கிட்டியா பாட்டி!
ம்ம்ம்… என்றபடி இடித்த கொட்டாம் பாக்கை இரும்புக் குவளையிலிருந்து விரலிடுக்கில் இணுக்காக எடுத்து வாயில் ஓரமாய் ஒதுக்கிவிட்டுக் கொண்டார். விரல்களைக் கடிக்க முயலுகிற பால் பற்கள்கூட முளைத்திடாத பச்சைக் குழந்தை போல வாயில் வாநீர் வழிய அவர் மெல்லுகிற அழகை நான் நிதானமாக இரசித்தபடியே இருந்தேன். அவர் மீண்டும் தன் சுருக்குப் பையிலிருந்து வெற்றிலையை உருவியெடுத்து அதன் கூர்முனையை தன் பழுத்த விரல்களால் ஒரு சுண்டு சுண்டிவிட்டு சுண்ணைம்பை பச்சைக் குழந்தையை தழுவுவது போல தடவிக் கொடுத்தபடி வாயிலிட்டுக் கடித்துக் கொண்டார். கிராமங்களில் பார்க்கப் பார்க்க சலித்திடாத காட்சிகளுள் வயதானவர்களின் குழந்தைமைகள் ஏராளம் இருக்கின்றன போலும். உண்மையில் அதைக் காணக் கிடைத்தவர்களோ பாக்கியவான்கள் தான்.
ஆனா, இந்தச் சின்ன வயசுலயே ஆபரேசன் பண்ணனுமா? கொஞ்சம் பொறுத்துப் பண்ணக் கூடாதுங்களா?
குடத்தை இடுப்பில் தூக்கிக் கொள்வது போல வளர்ந்துவிட்ட தன் பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு தண்ணீர் ஊற்றிப் பிசைந்த சோற்றை பிள்ளைக்கு ஊட்டியபடியே பெண்ணொருவள் வாசல் வெளியே நின்று கொண்டு தனது சந்தேகத்தை சபைக்கு முன் கேட்டு வைத்தாள். அந்தக் குழந்தைக்கு இந்தக் கூட்டம் திருவிழாவைக் கொண்டாட்டத்தை நினைவுபடுத்தியிருக்கும் போல. அந்தப் பக்கமே கைகாட்டி அம்மாவின் சட்டையைப் பிடித்திழுக்க அந்த பிஞ்சுக் கரங்களின் இழுபறிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தபடியே கூட்டத்தின் முகப்பிற்கு வந்து கேட்பதற்கு லாகுவாக நின்று கொண்டாள்.
அம்மா, இங்க பாருங்க, வெளிநாட்டுல பொறக்குற புள்ளைங்களுக்கு ஆறு மாசத்துலயே வெளியில மிசின மாட்டி பேச வச்சிடுதாங்க. ஆனா பாருங்க, நம்ம கொழந்தைங்களுக்கு அஞ்சு வயசு ஆவப்போது, இன்னும் வைத்தியம் பண்ணுறதப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கோம். இப்போ கொழந்தைங்க தவக்குறதுக்கு ஒரு பருவம், எழுந்து, உக்காந்து, நடக்க ஒரு பருவம்னு இருக்குத மாதிரி புள்ளைங்க கேட்டுப் பேசுறதுக்கும் ஒரு பருவம் இருக்கு. அததை அந்தந்தக் கால கட்டத்துல சொல்லிக் கொடுக்கலைனா புள்ளைங்களுக்கு சுத்தமா பேச முடியாம போயிடுது. உலகம் முழுக்க ஆராய்ச்சிலாம் பண்ணிப் பாத்துட்டு என்ன சொல்லுதாங்கன்னா, ஒரு வயசுக்குள்ளயே கொழந்தைங்களோட கொறையக் கண்டுபிடிச்சு குணப்படுத்திட்டோம்னா பேச்சுச் சுத்தம் அப்படித் தெளிவா, நம்மளக் கணக்கா இருக்குமாம். அப்படியெல்லாம் புள்ளைங்க நம்மளாட்டம் பேச வேணாமா? அதுக்கு சின்ன வயசுப் புள்ளைலயே வயித்தியம் பண்ணா தான் சரியாவும்..
தான் பிசைந்து ஊட்டுகிற சோற்றைக் குதப்பியபடியே உதட்டைப் பிதுக்கி வெளியே தள்ளுகிற பிள்ளையின் வாயைத் துடைத்தபடியிருந்த அந்த அம்மா அதட்டலோடு மீண்டும் மீண்டும் சாப்பிட வைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தையோ புருவத்தை சுளித்து அழுதுவிடுகிற தோரணையில் அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்க்க, சுச்சுச்சுச்..சோ.. என்றபடி உச்சி முகர்ந்து கண்ணத்தைக் கிள்ளி ஒரு முத்தமிட்டார். அந்தக் குழந்தை மறுபடி நெற்றியை அகலமாக்கி கண்ணங்கள் நிறைய தெத்துப் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டது. அந்தச் சிரிப்பிற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல சட்டென்று சோற்றை வாயிற்குள் திணிக்க உதப்ப முடியாமலே குழந்தை மென்று விழுங்கிக் கொண்டது. அவளும் ஒரு குழந்தையாகி வெவ்வவ்வே.. என்பதைப் போல விரலை ஒடித்து வக்கனம் காட்டி சிரித்துக் கொண்டாள். அம்மாவும் குழந்தையும் பேசிச் சிரித்துக் கொள்ளுகிற காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று கண்கள் விலகி இந்தப் பெற்றோர்களின் பக்கமாய் திரும்பியது. அவர்களும் என்னைப் போல அவற்றையெல்லாம் பார்த்துத் தாழ்த்திக் கொண்ட முகத்தோடு தன் மகளின் வியர்க்காத முகத்தை வலிய தனது சோலை முகப்பால் துடைத்துவிட்டுக் கொண்டார்.
நான் எதையுமே பார்க்காதது போல கூட்டத்தின் மீது கண்களை அலையவிட்டேன். எல்லோருக்குமே ஒருவித சங்கடம் இருக்கும் போல. அவரவர் தங்களது ஆற்றாமையைப் போக்கிக் கொள்ள ஏதோவொரு கேள்வியைக் கேட்டுவிட்ட பின்னால் தங்களின் மனக்குறை தீர்ந்துவிடும் என்பது போல எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர். அடுத்தடுத்து விடாமல் வருகிற மழைத்துளி போல கேட்கப்படுகிற கேள்விகளுக்கு நிதானமாய் நான் பதிலளித்தபடியே அவ்வப்போது ஓரக் கண்ணால் அவர்களைத் தயக்கத்தோடே பார்த்துக் கொண்டேன்.
சார், பேச்சுவாக்குல நீங்களே சொல்லுதீங்க, ஆறு வயசு வரைக்கும் பண்ணலாம்னு. அப்புறம் எதுங்குங்கய்யா இப்பவே அவசரப்படனும்?
யண்ணே, இங்க பாருங்க. ஆறு வயசுங்குறது ஆறு லட்சம் பெருமான ஆபரேசனை இலவசமா பண்ணிக்கிட அரசு நமக்குத் தர்ற சலுகை தான். அந்த வயசுக்குள்ள பண்ணிக்கிட்டாத்தான் அரசு காப்பீட்டுத் திட்டம் வழியா இந்த ஆபரேசனை இலவசமா செஞ்சுக்கவே முடியும். ஆனா அதுக்காக ஆறு வயசு வரைக்கும் காத்துக் கெடக்கனும்னு கிடையாது, பாத்துக்கிடுங்க. கொழந்தை கேக்குறதப் புரிஞ்சுக்கிட்டு பேசுற பக்குவம் மூணு வயசுக்குள்ளயே நல்லா வளந்துடுது. அப்போ இருந்து நாம சிகிச்சையை தள்ளிப் போடப் போட அந்த வைத்தியத்தோடு பெலனும் கொறைச்சலாத்தான் போவும். அதுவே ஆறு வயசுக்கு மேல ஆகுறப்போ அதோட முழு பெலனும் கிடைக்காமப் போயிடுது. அதனால, எந்த வயசுல புள்ளைங்களோட கொறைய நாம கண்டுபிடிக்குறமோ அப்பவே போயி சிகிச்சை எடுத்துக்கிடது தான் அவங்களுக்கு நல்லது, கேட்டுக்கிட்டீங்களா?
மேற்கொண்டு கூட்டத்திலிருந்து எழுகிற ஒவ்வொரு கேள்வியின் தருவாயிலும் நான் குதூகலத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். நிஜத்தில் நான் இப்படியொரு தருணத்திற்காகத் தான் அவசர அவசரமாக இங்கே வந்திருந்தேன். அவர்களுக்கோ குழப்பம் தீர நிறைய பதில் தேவை, எனக்கோ குழப்பம் தீர நிறைய கேள்விகள் தேவை. அதனால் அவர்களிடமிருந்து கேள்விகள் வர வர எனக்குள்ளிருந்த மருத்துவன் ஏனைய தகவலோடு துள்ளிக் குதித்தபடி மெல்ல மெல்ல கயிற்றைப் பிடித்து அடிமனதின் ஆழத்திலிருந்து மேலேறி வந்து கொண்டிருந்தான். நான் கொஞ்சம் அக்கறையோடு தலையில் குட்டு வைத்து உள்ளுக்குள் இருந்த மருத்துவனை சிரமப்பட்டே அமைதியாக உட்கார வைக்க வேண்டியிருந்தது.
இது மூளைக்குள்ள மிஷின வச்சி பண்ணுத ஆபரேசன்னு பேசிக்கிடுதாங்களே, அது உண்மைதானுங்களா?
யக்கோவ், அதுல ஒரு பாதி உண்மையும் இருக்குது, பொய்யும் இருக்குதுங்க. இப்போ, நம்ம கொழந்தைக்கு உள்காதுல இருக்குற நரம்புல தான் பிரச்சனை. ஆனா மத்தபடி உள்காதோட எலும்பு, உறுப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்குது. இந்த மாதரி பிரச்சனைல்லாம் பொறக்குற ஆயிரம் புள்ளைங்கள்ல ஆறு கொழந்தைக்கு இருக்குது, பாத்துக்கிடுங்க. அதனால இந்த மாதரியா பிரச்சனை இருக்குறவங்களுக்கு வெறுமனே தோலுக்கு கீழ சின்னதா சிப் கணக்கா வச்சு பண்ணி ஆபரேசன்ல சரி பண்ணிடுதாங்க. அதாவது காதுக்குப் பின்னாடி துருத்திட்டு இருக்கே ஒரு எலும்பு, அதுக்கும் தோலுக்கும் இடையில தான் சிப் கணக்கா ஒரு மிஷின வைப்பாங்க.
ஆனா நீங்க சொல்லுதீங்களே மூளையில வச்சு ஆபரேசன் பண்ணிடுவாங்கன்னு. அந்த ஆபரேசன யாருக்குப் பண்ணுவாங்கன்னா, உள்காதே வளர்ச்சி இல்லாம, மூளைக்குப் போற நரம்பு மட்டுமே சரியா இருக்குங்குற புள்ளைங்களுக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவாங்க. இந்த மாதரிக் கொறையுள்ள புள்ளைங்கல்லாம் ரொம்பவும் அபூர்வமாத் தான் பொறக்குதாங்க. ஆனா அந்தப் புள்ளைங்களுக்கும்கூட மூளையில பண்ணுத ஆபரேசன எந்த பிரச்சனையும் இல்லாம கெட்டிக்காரத்தனமா டாக்டருங்க பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. அப்படி ஆபரேசன் பண்ணிக்கிட்ட கொழந்தைங்களுமே இப்பவும் சொகமாத் தான் இருக்காங்க, அதையும் கேட்டுக்கிடுங்க.
எனது குழந்தையின் பெற்றோர்கள் கூட்டத்தினுள் கேட்கப்படுகிற எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னாலும்கூட சிறிய தூசி போன்ற உறுத்தல் உள்ளுக்குள் இருந்திருக்கும் போல. அவர் தனது குழப்பத்தின் கேள்வியை அவருக்கேயுரிய பயத்தின் சாயலில் தயங்கித் தயங்கியே என்னிடம் கேட்கத் துவங்கினார். எவ்வளவு தான் சுற்றியுள்ள உலகமே சமாதானம் சொன்னாலும் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற காலம் வரையிலும் மனிதர்களுக்கு ஆறுதல் கிடைப்பதேயில்லை போலும். இதையெல்லாம் விளங்கிக் கொண்டவனாக நானும்கூட அத்தகைய புரிதலின் நிதானத்தோடு தான் அவரிடம் பேசத் துவங்கினேன்.
ஆனாலும் புள்ளைக்கு எதாச்சும் ஆயிடுமோன்னு பயமாத்தான் இருக்குதுங்க சார்!
அம்மா, பிரசவ வலியை தாக்குப் புடிச்சுக்கிட்டு தான் நாம புள்ளைய பெத்துக்கிடுதோம். அதுக்காக வலியை நெனைச்சுக்கிட்டு புள்ளை வேணாம்னு இருந்திட முடியுமா, சொல்லுங்க. இப்போ, நம்ம புள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு பாத்தாச்சு. அதுக்கு வைத்தியம் இதுதான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். இதுக்கு மேலயும் நாம பயந்துக்கிட்டு புள்ளைக்கு வயித்தியத்தை தள்ளிப் போடுறது, சரியில்லை பாத்துக்கிடுங்க.
அவ்வளவு துயரத்திலும் தூங்கிவிட்ட தன் பிள்ளையை மடியில் கிடத்தி நெஞ்சுக்கூட்டில் தட்டிக் கொடுத்தபடியே மெலிதாக அவர் வலிந்து சிரித்துக் கொண்டதை தெருவிளக்கின் ஆரஞ்சு விளக்கொளியில் நான் இரகசியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் கூட்டம் ஏதோ சலசலப்போடே இருந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஈரக்காற்று கொஞ்சம் நிதானத்தோடு அங்கே வீசத் துவங்கியிருந்தது. காற்றின் ஈரப்பசையை குடித்துவிடுகிற தாகத்தோடு தட்டான்கள் தலையை உருட்டியபடி இலாவகமாய் பறந்தலைந்தபடி இருந்தன. நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். அதன் ஏக்கம் காற்றின் வேகத்தினுள் நுழைந்து சுளித்தபடி எங்கோ கரைந்து போனது. அப்போது கல்லூரிப் பெண்ணொருவள் முன்வந்து பொருத்தமான கேள்வியை பொதுவாய் கேட்டு வைத்தார்.
ஏதோ ஹியரிங் எய்டுன்னு சொல்லுறீங்ளே, அப்படின்னா என்னாதுங்க சார்?
எல்லாருமே கேளுங்க, ரொம்ப முக்கியமான கேள்வியத் தான் இந்தப் பொண்ணு கேக்குது. மொதல்ல, இந்தப் பேரப் பாத்த ஒடனே பயந்துட வேணாம். ஒங்க எல்லோருக்குமே ஈசியா புரியுத மாதரியே சொல்லுதேன், சரிங்களா.
ஹம்ம்.. இப்போ மேடைல ஒருத்தர் மைக்க புடிச்சு பேச்சிட்டு இருக்காருன்னு வச்சுக்குவோம். நீங்கல்லாம் பின்னாடி வரிசைல உக்காந்துருக்கீங்க. உங்க பக்கத்துல ஸ்பீக்கர் இருக்குறதுனால அவரு பேச்சுறது அத்தனையும் சுத்த பத்தமா கேக்குது, கேக்கும் தான?
சரி, அதையே மைக் இல்லாம அவரு பேசிருந்தா உங்களுக்குக் கேக்குமா, கேட்டுருக்காது. அதாவது அவரு பேசுற சத்தம் அந்த மைக்கு வழியா உள்ளாரப் போயி, அவரு பேசுறதவிட இன்னும் சத்தமா சுருதியக் கூட்டி அது ஸ்பீக்கர் வழியா வந்து தான் உங்களுக்குக் கேக்குது, புரிஞ்சுதா? இதை வெளங்கிக்கிட்டா ஹியரிங் எய்டு மிசினை பத்தியும் நாம புரிஞ்சுக்கிடலாம்.
ஹியரிங் எய்டுங்குறதும் ஒரு காது கேக்குற மிசினுதான். அதாவது கொஞ்சம் சத்தமா பேசுனாத் தான் கேக்குங்குறவங்களுக்கு இந்த மிசினை மாட்டி காது கேக்க வச்சுப்புடலாம். இந்த மிசின்லயும் நம்ம அண்ணாச்சி மைக்க புடிச்சு பேசுற மாதரியே குட்டியா மைக்கு இருக்கும். ஏன்னா, இந்தக் கொறைபாடு இருக்குறவங்களுக்கு பக்கத்துல இருக்குறவங்க பேசுறதே குசுகுசுன்னு கேக்க மாட்டுதே!
இந்த மைக்குல இருந்து வர்ற சத்தத்தை வாங்கிட்டு, அந்த மிசினுக்குள்ள இருக்குற சிப்பு என்னா பண்ணுதுன்னா, சொளவுல குருணை பொறுக்குற மாதரி நுட்பமா கேக்குத சத்தங்களை பிரிச்சுப் போட்டு அதை இன்னும் சத்தமா ஸ்பீக்கர் வழியா காதுக்குள்ளார அதிகமாக்கிக் கொடுக்குது.
இதுல முக்கியமா வெளங்கிக்கிட வேண்டிய விசயம் என்னான்னா, இப்போ அண்ணாச்சி மேடையில பேசுறதை ஒரே சத்தத்துல தான் இந்த ஸ்பீக்கர் எல்லாமே கூட்டிக் குடுக்கும். ஆனா ஹியரிங் எய்டு மிசினைப் பொருத்தவரைக்கும் அது அப்படியில்ல. அந்தந்த கொழந்தைக்குன்னு ஏத்த எறக்கமா இருக்குற காது கேக்குற கொறைபாட்டப் பொறுத்து அதுக்கேத்த மாதரி தான் மிசினை செட்டப் பண்ணி கொழந்தைங்களுக்கு மாட்டிவிட்ருப்பாங்க. அப்போ அந்த கொழந்தைக்கு எவ்ளோ சத்தம் தேவையோ அதுக்கேத்த மாதரியே பக்குவமா சத்தத்தை அதிகரிச்சுக் கொடுத்து காது கேக்க வைக்கிற வேலையத்தான் இந்த ஹியரிங் எய்டு மிசினு செய்யுது பாத்துக்கிடுங்க. ஆனா, இந்த ஹியரிங் எய்டு மாட்டுறதுக்கு ஆபரேசன்லாம் தேவையில்ல, சும்மா காதுல மாட்டிக்கிட்டாலே போதும்.
அதே மாதிரி ஏதோ காக்ளியார் இம்பிளாண்ட்னு ஆபரேசன் பண்றதா சொல்றீங்களே, அது வழியா எப்படிங்கய்யா காது கேக்கும்?
தான் கேட்டுக் கொண்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்ட உற்சாகத்தோடு அடுத்த கேள்வியையும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டார். உண்மையில் இந்தக் கேள்வியை கேக்கத் தெரியாமல் விளித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு இந்தப் பெண்ணின் சந்தேகம் எல்லோருக்குமானதாக ஆகிவிட்டிருந்தது. நான் அவரது கேள்விகளை அங்கீகரிக்கும் விதத்தில் ‘வெரிகுட்’ என்பதான உடல் பாவணைகளை வெளிப்படுத்தியபடியே விசயத்திற்குள் நுழைந்து கொண்டேன்.
இந்தப் பொண்ணு கேக்குத ஒவ்வொரு கேள்வியும் உங்க எல்லோத்துக்குமே தேவையான ஒண்ணு தான் பாத்துக்கிடுங்க. நாஞ் சொல்லுறத சரியா கேட்டுக்கிடுங்க. இப்போ, நான் ஏற்கனவே ஹியரிங் எய்டு மிசினைப் பத்தி சொன்னேன்ல. அதைப் புரிஞ்சுக்கிட்ட பின்னாடி இதுவுமே சுலபம் தான். இப்போ நாம ரேடியோவுல பாட்டு கேக்குதோம். சரியா கேக்கல, காதைத் திருகுற மாதரி இன்னும் பட்டனைத் திருகித் திருகி சத்தத்தை கூட்டிக்கிட்டே போறோம். ஒருகட்டத்துக்கு மேல அந்த ஸ்பீக்கரோட பவர் அவ்ளோ தான்னு முடிஞ்சிடும் இல்லியா, அதே மாதரித்தான் ஹியரிங் எய்டுக்கும் ஒரு எல்லை இருக்கு.
அறுபது, எழுவது பவர் பட்டன் வரைக்கும் காது கேக்கலைன்னாகூட ஹியரிங் எய்டு மிசினை போட்டு சத்தத்தை கூட்டி வச்சு கொழந்தைக்கு காது கேக்க வச்சுப்புடலாம். அதாவது இப்போ, காது கேக்காத புள்ளைங்க வெடி சத்தம் கேட்டா, இடி இடிச்சா மட்டும் தான் திரும்புதுன்னு பெத்தவங்க சொல்லுவாங்க, இல்லியா! அப்படின்னா என்னா அர்த்தம்? அந்த அளவு சத்தத்துல தான் புள்ளைங்களுக்கு காது கேக்கவே செய்யுது, புரியுதுங்களா? அந்த அளவு வரைக்கும் ஹியரிங் எய்டு மிசினால சத்தத்தை கூட்டிக் குடுக்க முடியுமான்னு மொதல்ல நாம செக்கப் பண்ணி பாக்கனும்.
ஆனா எம்பது பவர் வரைக்குமே கொடுத்தாலும் புள்ளைங்களுக்கு காது கேக்காதுங்குற எல்லைக்கு அந்தக் கொறைபாடு போயிடுச்சுன்னா இந்த மிசினால கொழந்தைங்களுக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது. அப்படியே மிசினை மாட்டிப் பாத்தாலும் ஏதோ மிக்சி ஓடுற மாதரித் தான் அந்தக் கொழந்தைக்கு கொகொரன்னு கேக்குமே தவிர தெளிவான பேச்சுச் சத்தமே இருக்காது. இப்படிக் கேக்குற சக்தி எம்பது பவருக்கும் மேல போகுறப்போ, ஹியரிங் எய்டு மிசினை மாட்டியும் கேக்காதுங்குறப்போ தான் காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசனையே ஆசுபத்திரில பண்ணச் சொல்லுதாங்க, சரியா கேட்டுக்கிட்டீங்களா..
காக்ளியாங்குறது உள்காதுக்குள்ள இருக்குற முக்கியமான உறுப்பு. அந்த உறுப்பு சரியா வேலை செய்ய மாட்டேங்குங்குறதால, அதுக்கு பதிலா ஒரு மிசினை நாம பொருத்துறதால தான் அதனை இம்பிளாண்ட்னு இங்கிலீஸ்ல சொல்லுதோம். அதை காக்ளியாலயே போய் பொருத்துறதால தான் காக்ளியார் இம்பிளாண்ட்னு கூடுதலா வெளக்கம் சொல்லுதாங்க.
இப்போ காக்ளியார் இம்பிளாண்ட்ல ரெண்டு மிசின் இருக்கு பாத்துக்கிடுங்க. அதுல ஒன்னை தான் ஆபரேசன் பண்ணி உள்ள வைக்குதாங்க. இன்னொன்னு வெளியில சும்மா காதுல மாட்டிக்கிடுத மாதரி தான். இதைப் பத்திப் புரிஞ்சுக்க நான் ஒரு உதாரணம் சொல்லுதேன், கேக்குறீங்களா?
நாம போஸ்ட் ஆபிஸ் போறோம். அவங்க என்ன பண்ணுதாங்க, ஒரு குறிப்பிட்ட ஏரியாவச் சுத்தி இருக்குத தபாலை எல்லாம் வாங்கிட்டு வந்து அதையெல்லாம் பின்கோடு வாரியா பிரிச்சு வரிசைப்படுத்தி வைக்கிறாங்களா. அப்புறமா அதை பார்சல் பண்ணி ரயில்லயோ, பஸ்ஸுலயோ அனுப்பி வைக்குறாங்க. அதெல்லாம் அந்தந்த ஏரியாக்குப் போனதும் அங்க இருக்குற போஸ்ட் மேன் என்ன பண்ணுதாரு, அந்த பின்கோடப் படிச்சுப் பாத்துட்டு அதுல இருக்குத வீட்டு நம்பருக்குத் தக்க வண்டியில போய் டோர் டெலிவரி பண்றாரு, சரிதான? இதுல ஒன்னும் கொழப்பம் இல்லியே!
இப்போ காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசனுக்கு வந்துடுங்க, வந்துட்டீங்களா? இதுல ஆபரேசனப் பண்ணி உள்ள வைக்குற பகுதி ஒன்னும், காதுக்கு வெளியில மாட்டிக்கிற பகுதி இன்னொன்னும் இருக்குன்னு சொன்னேன்ல, இந்த வெளியில மாட்டிருக்க தொரட்டிக் கம்பு மாதரி பகுதியோட மொனையில தான் குட்டியா மைக் இருக்கு. இந்த மைக்கு தான் நம்ம தபால் பெட்டி. சுத்தி இருக்குற ஏரியாவுல இருக்கிற தபால வாங்கி போடுற மாதரி கொழந்தையச் சுத்தி இருக்குற சத்தத்தை எல்லாம் இந்த மைக் வாங்கிகிட்டு மிசினுக்குள்ளார அனுப்புது.
போஸ்ட் ஆபிஸ்ல பின்கோடுக்கு ஏத்த மாதரி பிரிச்சு வைக்கிற வேலை நடக்குத மாதரி, இந்த மிசினுக்குள்ளயும் சுதி அதிகமா இருக்குறது, கொறைச்சலா இருக்குறதுன்னு கேக்குத சத்தத்தை வச்சு அந்தந்த அதிர்வு நம்பருக்கு ஏத்த மாதரியா பிரிச்சுப் போட்டு அதை பின்கோடு கணக்கா குறிச்சு பார்சல் பண்ணி வெளியே அனுப்புது. இப்படி பார்சல் பண்ண சத்தம்லாம் மிசினுல இருந்து போற வயரு வழியா போயி வட்டமா தலையில ஒட்டி வச்சுருக்குற காந்தத்துக்கு வந்து சேருது. இங்கின வட்டமா இருக்குது பாத்துக்கிட்டீங்களா, இது தான் டெலிவரி பாய்ண்ட். இங்கின இருந்து தான் வெளிய இருந்து பார்சல் பண்ண சத்தங்களை உள்ளார இருக்குத மிசினுக்கு பாதிப்பில்லாம பக்குவா அனுப்புது. நம்ம போஸ்ட் ஆபிஸ்ல ரயில்ல பஸ்ஸூ வழியா அனுப்புத மாதரி.
அடுத்ததா பார்சல் பண்ணுன சத்தமெல்லாம் உள்ளாரப் போனதும் அங்குன இருக்குற மிசின் என்ன பண்ணுதுன்னா, அந்த பார்சலைப் பிரிச்சுப் பாத்து பின்கோடு வரிசைப்படி அடுக்கி வச்சுக்கிடுது. பின்ன, அதுல இருந்து கொரங்கு வாலு மாதரியா நீண்டுகிட்டு போகுதுல்ல, அதுக்கு இதெல்லாத்தையும் அனுப்பிடும். அந்த வாலுல தான் பன்னென்டு வகையான மின் தகடுங்க இருக்கும். அந்த தகடுங்க எல்லாம் பியானோ மியூசிக் போடுத பட்டன் மாதிரி சுருதிக்கு ஏத்த கணக்கா வரிசையா இருக்கும். நாம வீட்டு நம்பரைப் பாத்து டோர் டெலிவரி பண்ணுத மாதிரி சுருதி வாரியா சத்தங்களைக் கொண்டு போய் ஒவ்வொரு தகட்டுலயும் பந்துஸ்தா மிசினு சேக்குது.
அதாவது சாதாரணமா வெளிய கேக்குத சத்தத்தை எல்லாம் உள்காது வாங்கி மின்சாரமா மாத்தி நரம்புக்கு அனுப்புத வேலைக்குப் பதிலா, இந்த மிசினு இந்த சத்தங்களை சுருதி வாரியா பிரிச்சுப் போட்டு உள்காதுல இருக்குற நரம்புக்கு அனுப்பி வைக்குது. நம்ம கொழந்தைக்கு மூளைக்கு போற நரம்பு நல்லா இருக்குறதால அது வழியா சத்தமும் பக்குவமா மூளைக்குப் போய் சேந்துடுது. அங்க மூளையுமே நம்மளோட ஞாபகம் எல்லாத்தையும் புரட்டிப் பாத்து, யார் பேசுதா, என்ன பேசுதாங்க அப்படின்னு புரிஞ்சுக்கிட்டு, நம்ம என்ன செய்யனும், என்ன பதிலைச் சொல்லனும்னு நமக்குக் கட்டளையிடுது. இப்படித்தான் நம்மளச் சுத்தி என்னலாம் கேக்குதுன்னு மிசினும், மூளையும் நமக்குப் புரிய வைக்குது. அதைக் கேட்டுட்டு நாமலும் பதிலுக்குப் பதிலு வாயாடிட்டு இருக்கோம். உங்களுக்கு இதெல்லாம் புரிஞ்சதா?
அவர்கள் எதுவும் பேசவில்லை. பார்சல், டோர் டெலிவரி, போஸ்ட் ஆபிஸ் என்று எளிமையாக புரிந்து கொள்கிற வகையில் பேசிய போதும், இந்த ஒரு விளக்கம் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெரியும்தான். மருத்துவராகிய எனக்கே இதைப் படித்து புரிந்து கொள்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்ட போது, இவர்களுக்கு ஒரே சமயத்தில் புரிந்துவிட வேண்டுமென்பது எதிர்பார்ப்பது அபத்தமான விசயம்தான். ஆனால் எப்படியோ ஒரு எளிய உதாரணத்தோடு விளக்கிவிட்ட திருப்தியோடு சுற்றும் முற்றும் பார்க்க, ஓரளவு எல்லோரும் சமாதானமாகிவிட்ட பாவனையில் சில கேள்விகள் கேட்கிற குரல் மட்டுமே அங்குமிங்குமாக கேட்டுக் கொண்டிருந்தது.
ஐயா, நீங்க சொல்லுத மாதிரி வாய் பேசாதே கேக்காத புள்ளைங்கள நானும் பாத்துருக்கேனுங்க. இந்த மாதரி ஆபரேசன் பண்ண கொழந்தைங்கலாம் இன்னும் சரியா பேசாமத்தான் இருக்குது. அதுக்குப் பெசாம ஆபரேசன் பண்ணாமலே இருக்கலாமுங்களே?
ஐயா, நீங்க சொல்லுறதும் ஒருவிதத்துல நெசந்தேன். கொழந்தைக்குப் பேச்சு வரல, காது கேக்கலன்னு ஆசுபத்திரிக்கு போயி இது இலவசமா பண்ணுதாங்கன்னு ஒடனே பெத்தவங்களும் துணிஞ்சு ஆபரேசனப் பண்ணிப்புடுவாங்க. ஆனா அதுல ஒன்னப் புரிஞ்சுக்கிடனும். இந்த வைத்தியங்குறது ஆபரேசன வச்சு மட்டும் இல்லிங்க. அதுக்கப்புறமா பேசுறதுக்கு பயிற்சி கொடுக்குறதுல தான் முழு பெலனும் இருக்கு. பெத்தவங்க சிலரு ஆபரேசன் பண்ணதும் அவங்க கடமை முடிஞ்சதா நெனைச்சுக்கிட்டு அத்தோட பயிற்சிக்கு கூப்பிட்டு போறதயே மறந்துடுதாங்க. அப்படி பயிற்சி எடுத்துக்கிட்டா தானே பேச்சு வரும்?
இந்தப் புள்ளைங்க மிசினு வழியாத் தான் கேட்டுப் பேசப் பழகனுங்குறதால முறையா போய் பயிற்சி எடுத்துக்கிட்டா தான் பேச்சுச் சுத்தமா வரும். அதைப் பலரும் புரிஞ்சுக்கிடது கெடையாது, பாத்துக்கிடுங்க. நீங்க பாத்த புள்ளைங்களும் அப்படிப் பயிற்சிக்கு சரியா போகாத புள்ளையாத் தான் இருக்கும், இல்ல தாமதமா சிகிச்சை பண்ணிக்கிட்ட புள்ளையா இருக்கும். அதனால ஆபரேசன் பண்ணிக்கும் போதே அடுத்ததா பயிற்சி கொடுக்கனுங்குறதயும் பெத்தவங்க புரிஞ்சுக்கிடனும்.
ஆமாங்கய்யா, கொழந்தை ஆபரேசன் பண்ணதும் நம்மள மாதரியே பேசிப்புடுங்களா?
கொழந்தைங்களுக்கு ரெண்டு பிரச்சனை, அதுல ஒன்னுதான் காது கேக்கலைங்குறது, சரியா? இப்போ நாம மிசின் மூலமா ஆபரேசன் பண்ணி காது கேக்க வச்சுடுதோம். ஆனா பேசனுமே! கொழந்தை பொறந்ததுமே பேசிடுதா, இல்லையே! சுத்திக் கேக்குற சத்தத்தை கவனிச்சுப் பாத்துட்டு மொதல்ல புள்ளைங்க அழுதுகிட்டு தான் இருப்பாங்க. அவங்களுக்கு அது சத்தம்னு கூட தெரியாது. காதுக்குள்ள என்னமோ பண்ணுது, ஏதோ போயிடுச்சுங்குற மாதரி தான் கத்திக் கூப்பாடு போட்டு மிசின புடிங்குப் போட பாப்பாங்க.
நாம தான் சுத்தி கேக்குறதுலாம் சத்தம் தான். அதுல குயில் க்கூ.. க்கூ.. ன்னு கத்தும், நாய் இப்படி லொள்.. லொள்..ன்னு கொலைக்கும், வண்டிச் சத்தமா பாம்.. பாம்..னு கேக்கும்னு படிப்படியா சத்தத்த பத்தி சொல்லிக் கொடுக்கனும். அதுக்கப்புறமா அந்த சத்தத்துல இருந்து ஒவ்வொரு வார்த்தையா சொல்லிக் கொடுத்து, அதைப் புரிய வச்சு பேசக் கத்துக் கொடுக்கனும். அஞ்சு வயசுல ஆபரேசன் பண்ணாலும் அவங்கள பொருத்தவரைக்கும் சத்தத்தை கேக்குறதுல அன்னிக்கு பொறந்தவங்களா தான் அர்த்தம். நாம தான் கொஞ்சம் கொஞ்சமா பதனமா சொல்லிக் கொடுத்து பேசக் கத்துக் கொடுக்கனும். அதையெல்லாம் நாம ஆபரேசன் பண்ண ஆஸ்பத்திரிலயே காப்பீட்டு திட்டம் மூலமா இலவசமா ஒரு வருசத்துக்கு சொல்லிக் கொடுத்துடுவாங்க. அப்படி நம்மள மாதரி ஓரளவு பேசக் கத்துகிறதுக்கே ஒரு வருசம் வரைக்கும் ஆகும். அதையுமே நாம புரிஞ்சுக்கிடனும்.
ஐயா, இந்த மிஷினை மாட்டுனா மூளைக்குள்ள துரு புடிச்சுப் போயிடும், பைத்தியம் புடிச்சு புத்தி பேதளிச்சிடும்னு சொல்லுறாங்களே, நெசந்தானுங்களா?
இந்த ஆபரேசன நம்மூர்ல மட்டுமில்ல, ஒலகம் முழுக்க பண்ணிட்டு தான் இருக்காங்க. அப்படிப் பண்ணிட்டு புள்ளைங்களும் நல்லபடியா பேசி, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு சொகமா வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. அதனால இப்படி மூளைக்குள்ள பண்ணுதாங்க, துரு பிடிச்சுடும், பையித்தியம் பிடிச்சிடும்னு சொல்லுறதெல்லாம் ஆபரேசன் பத்தின பயத்துலதான் சொல்லுதாங்களே தவிர, அப்படியெல்லாம் இதுவரைக்கும் ஆனதில்ல. அதே போல இந்த ஆபரேசன் ஏற்கனவே சொன்ன மாதரி தோலுக்கும் எலும்புக்கும் நடுவுல தான் பண்ணுதாங்களே தவிர மண்டையோட்டை தாண்டி மூளைக்குள்ள எல்லாம் பண்ணலைங்குற நாமலும் சூதானமா புரிஞ்சுக்கிடனும்.
ஆனா, இதுங்க வெளாட்டுத் தனமா இருக்குதுங்களே, புள்ளைங்க கீழ விழுந்து அடிபட்டு, மிஷினை புடுங்கி எறிஞ்சுட்டா என்னா பண்ணுறது?
அம்மா, நாம சின்னதா காயம் பட்டாலே தண்ணி படாம, தூசி படாம சுத்த பத்தமாக தொடைச்சி மருந்து போட்டுப் பாத்துக்கிடனும். இது மிசினை வச்சு பேசாத புள்ளைய பேச வைக்குற பக்குவமான வைத்தியம். இதுக்கு கொஞ்சம் பந்துஸ்தா பாத்துக்கிட தான் செய்யனும்குறத நாம மொதல்ல புரிஞ்சுக்கிடனும். அதே சமயம் புள்ளைங்களுக்கு ஆரம்பத்துல மிசின் வழியா சத்தம் கேக்கவுமே அது என்னமோ ஏதோன்னு அலறுவாங்க, கத்துவாங்க, மிசின புடிங்கிப் போடத்தான் பாப்பாங்க. ஆனா இது வழியா தான் நம்ம அம்மா சொல்லுறது கேக்குது, சுத்தி எல்லோரும் சொல்லுறத இதை மாட்டிக்கிட்டா தான் புரிஞ்சுக்க முடியும்னு தெரிஞ்சிக்கிட்டான்னா, நீங்களே கழட்டச் சொன்னாக்கூட புள்ளைங்க எடுக்க விட மாட்டாங்க. அதுக்கப்புறமா அவங்களே அந்த மிசின பதனமாப் பாத்துக்குவாங்க. ஆனா அதுவரைக்கும் நாம தான் கொஞ்சம் கவனமா பாத்துக்கிடனும், புரிஞ்சுதாம்மா?
ஐயா, நெசமாவே இது இலவசம் தானுங்களா இல்ல, கூப்பிட்டு போயிட்டு கூடுதலா ஏதும் துட்ட-கிட்ட புடுங்கிப்புடுவாங்களா?
சத்தியமா முழுக்க இலவசந்தானுங்க. புள்ளைங்கள மொதல்ல கூப்பிட்டு போயி செக்கப் பண்ணிட்டு, ஆபரேசன் செஞ்சு, அடுத்ததாத பேச்சுப் பயிற்சி கொடுத்து புள்ளைங்க பேசிப் பழகுற ஒரு வருசம் வரைக்கும் அத்தனைக்குமே ஒத்த பொட்டு காசு கெடையாது, கேட்டுக்கிட்டீங்களா. என்ன, சந்தோசம் தான?
காப்பீடு திட்ட அட்டை எங்களுக்கெல்லாம் இல்லீங்களே, ஒரு அவசர ஆத்தரத்துக்கு ஒத்தசையா இருக்கனும்னா, எங்க போயி எப்படி வாங்குறதுன்னு கொஞ்சம் எங்களுக்கும் உதவி பண்ணுங்கய்யா?
அது ஒன்னும் கஷ்டமான காரியமில்ல கேட்டுக்குங்க. உங்களோட ரேசன் கார்டையோ, ஸ்மார்ட் கார்டையோ கொண்டு போயி வி.ஏ.ஓ ஆபிஸ்ல கொடுத்தா போதும், உங்களோட சம்பாத்தியம் வருசத்துக்கு எழுபத்தி ரெண்டாயிருத்துக்குள்ள இருந்துச்சுன்னா அங்குனயே பாரத்துல கையெழுத்துப் போட்டு வி.ஏ.ஓ கொடுத்துருவாரு. அதுக்கெல்லாம் ஒத்த செலவு கெடையாது, பாத்துக்கிடுங்க. அதை அப்படியே கொண்டு போயி கலெக்டர் ஆபீஸ்ல இருக்குற காப்பீட்டு ஆபிசுல கொடுத்தோம்னா அவுங்க கம்யூட்டர்லயே போட்டோ எடுத்து பத்து நிமிசத்துல கார்டு போட்டுக் குடுத்துடுவாங்க. அத வச்சுக்கிட்டு எங்கனாலும் இலவசமா வயித்தியம் பாத்துக்கிடலாம். மொதல்ல போயி, அத வாங்கி வையுங்க அப்பத்தா, போங்க..
எல்லாம் பேசி முடிந்த பின்னால் மனநிறைவாய் இருந்தது. பிறைநிலாவிலிருந்து பௌணர்மிக்கு உருக்கொள்கிற பரிபூரணத்தைப் போலொரு இடத்தை என் மனம் அடைந்திருந்தது. மெல்ல மெல்ல தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிற கூட்டம் ஆங்காங்கே கலையத் துவங்க நான் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி எல்லாம் நல்ல படியா முடியும் என்பதாக ஆறுதல் கூறிவிட்டு கிளம்பத் துவங்கினேன். சாப்பிடாமலே உறங்கிவிட்ட அவரது பிள்ளைகளை எழுப்பி அரைத் தூக்க மயக்கத்தில் உணவை ஊட்டிவிட அவர்கள் ஆயத்தமாகவே, எழுந்து வெளியே வந்து நான் வானத்தைப் பார்த்தேன். இன்னும் பௌணர்மி நாளுக்கு கொஞ்ச நாட்களே மீதமிருந்தன. இனி அந்த ஆபரேசன் செய்து கொள்கிற நாளுக்காக இனி காத்திருப்பது மட்டுமே நான் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது.
அடுத்ததாக, சென்னை மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்து குழந்தைகள் இருவரும் ஒருசேர அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதையும், அவர்களுக்குக் கருவிகளைப் பொறுத்தி வாழ்வின் முதன் முதலாக சப்தங்களைக் கேட்டுக் கொண்டு குழந்தைகள் அடைந்த நெகிழ்வான தருணங்களையும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14 – டாக்டர் இடங்கர் பாவலன்
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14
சென்னையில் நானும் குழந்தைகளும்..
மின்னுகிற ஒளிச்சிறகுகளை ஆயாசமாக வானிலே விரித்து, அந்தி சாய்கின்ற கணங்களின் உற்சவ நடனத்தை ஆடிக்களித்தபடியே மலை முகடுகளின் மீதேறி மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது சூரியன். கிரகணங்கள் சூழ்வதைப் போல வாய் பிளந்து கொண்ட மலை இடுக்குகளின் பற்களுக்குள் சூரியன் பொத்தென்று விழுந்து பூமியின் தொண்டைக்குழி ஆழத்திற்குள் நழுவியபடியே போய்க் கொண்டிருந்தது. கதிரவன் கலைந்துவிட்ட சோகத்தையெல்லாம் காணச் சகியாதவாறு ஜனத்திரள் கூட்டமொன்று மேற்கிலிருந்து சூரியன் மீண்டும் உதித்திடாதா என்கிற பாவனையோடு தண்டவாளங்களின் ஓரங்களில் நின்று இருண்ட ஆகாசத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தது. மேற்கின் அடிவானத்திலிருந்து சூரியப் புள்ளி போலக் கிளம்பி கொஞ்சம் கொஞ்சமாக சிவந்து தகித்தபடி இரயில் தனது முகப்பு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி குபுகுபுவென இரயில் நிலையத்தை நோக்கி ஓடோடி வந்து கொண்டிருந்தது.
இரயில்நிலையப் பிளாட்பாரங்களில் அம்மாக்களின் கைகளைப் பிடித்துக் கொண்டும், அப்பாக்களின் தோள்கள் மீதேறியும் குழந்தைகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். புள்ளியிலிருந்து கோலம் உருத்திரண்டு வருவதைப் போல இரயில் தனது பருத்த உடலைக் காட்டி உரக்க சப்தமிட்டபடியே நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதுவரை துடிப்போடிருந்த குழந்தைகளெல்லாம் பற்றியிருந்த கைகளின் பிடிகளைத் தளர்த்தியபடி தரையிலமர்ந்து தங்கள் காதுகளின் இரைச்சல்களை இருகைகளாலும் பொத்திக் கொண்டனர். ஒருசில வளர்ந்துவிட்ட குழந்தைகள் விரல்களால் வணையப்பட்ட மகுடியால் உதடுகளின் மாடத்திலிருந்து குக்கூகூவென குரலெழுப்பியபடியே துள்ளிக் குதித்து சர்ப்பத்தைப் போலொரு நடனமாடிக் கொண்டிருந்தனர். எனதருகே காளீஸ்வரியும் ப்ரியாவும் எந்தவொரு சலனமுமின்றி ஊர்ந்து வருகிற பூதாகரமான இரயிலைப் பார்த்தபடி கற்சிலைகளில் ததும்புகிற பேரமைதியின் பூரணத்தோடு நிதானமாக நின்று கொண்டிருந்தனர்.
பிளாட்பாரத் தாழ்வாரங்களின் குடைகளுக்குக் கீழே காளீஸ்வரி, ப்ரியாவினுடைய குடும்பத்தோடு ஒருவனாக நின்றபடி இரயிலின் நகர்தலுக்கேற்ப, எங்களது இருக்கைகளடங்கிய இரயில் பெட்டியை நோக்கி முன்னும் பின்னுமாக அவதியோடு ஓடிக் கொண்டிருந்தோம். அத்தனை மனித இடிபாடுகளுக்கு மத்தியிலும் அவசரகதியிலே பெற்றோர்கள் கடக்கிற இரும்புப் பெட்டிகளை குழந்தைகள் விரல்விட்டு எண்ணியபடி இருந்தனர். நான் அவர்கள் இருவரையும் ஒரு கணம் திகைத்துத் திரும்பிப் பார்த்தேன்.
இதுவரை இப்படியொரு வெளிச் சுவாசத்தை நுகர்ந்துவிடாத புது அனுபவத்தையும், கூட்டத்தின் ஒவ்வாமையால் கண்களுக்குள் நிறைகிற அதிர்ச்சியின் விசும்பலுமாக ஒருவித கலவரத்தின் சாயலோடு அம்மாக்களின் கைகளை இறுகப் பற்றியபடி அவர்களிருவரும் நடுக்கத்தோடு வந்து கொண்டிருந்தனர். ஒருவித அச்சத்தின் பிடியில் பதுங்குகிற தன்மையோடு, பாவம் போல மரக்கிளையைப் பற்றியிருக்கிற தேவாங்கின் சாயலோடு அவர்கள் என்னைப் பார்த்தபடி விழிப்பதும், பின் அதிர்ச்சியில் உறைந்து கண்களில் ஒருவித ஏக்கம் கொள்வதையும் நான் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இரயில் நிலைய அறிவிப்புகள், நடமாடும் விற்பனையர்களின் கூவி விற்கும் காரசாரமான பேச்சொலிகள், எரிச்சலும் பதட்டமுமாக சதா நகர்ந்து கொண்டேயிருக்கிற மனிதர்களென ஒட்டுமொத்த இரைச்சலின் உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட அவர்களிருவரைப் போலவே நானும் இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தோடு ஒருமுறை கற்பனையால் என்னை முழுவதுமாக நிறைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல அவிழ்ந்து காற்றுக்கேற்ப இசைந்தபடி, பட்டும் படாமலுமாக இலையொன்று ஆற்றில் விழுகிற நித்தியத்தைப் போலொரு பேரானந்தத்தை ஒருவேளை இவர்களிடமிருந்துதான் நான் கற்றுத் தேர முடியுமோ என்னவோ?
தொலைவிலிருந்து கிளிப்பச்சை வண்ணத்தில் ஊழியரின் கைகள் சிறகினை அசைக்க இரயில் தனது ஏக்கப் பெருமூச்சை விட்டபடி நிலையத்திலிருந்து மெல்லக் குழுங்கி நகர்வதற்குள் எங்களது இருக்கைகளைக் கண்டுபிடித்து நாங்கள் ஒருசேர அமர்ந்திருந்தோம். இரயிலின் இருக்கைகள் கடைவாய்ப் பற்களைப் போல எதிரெதிர் துருவமாய் இசைந்து அமைந்திருப்பதும்கூட பயணாளிகளுக்கு ஏக சௌந்தர்யமான விசயம்தான். பயணம் முழுக்க ஏகாந்தமாய் பேசிச் சிரித்துக் கொள்ளவும், கூடி அரசியல் பேசி விவாதித்துக் கொள்வதுமாக யாரேனும் சக பயணியொருவர் கிடைத்துவிட்டாலே போதும், அந்தப் பயணமே பெரும் நித்தியத்தின் கொண்டாட்டமாகிவிடும்.
ஆனாலும் இப்போது நான் களிப்பூட்டும் சுற்றுலாவிற்காகச் செல்லவில்லை என்கிற பிரக்ஜையோடு தான் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்பச் சுற்றுலா செல்கிற எத்தனையோ இரயில் பயணிகளுக்கு மத்தியில், தங்களது பிள்ளை ஒரு வார்த்தை அம்மா, அப்பாவென்று பேசிடாதா! என்கிற கனவுகளோடுப் பயணிக்கிற இரண்டு குடும்பங்களும், அவர்களோடு மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டு உடன் செல்கிற பைத்தியக்கார மருத்துவரும் இருப்பதைப் பற்றிய கவலை யாருக்காவது இருக்குமா என்ன?
என்னோடு சேர்ந்து எதிரிருக்கையில் அமர்ந்தவரும் பிரியாவிற்காகவும் காளீஸ்வரிக்காகவும் ஜன்னல் இருக்கைகளை மனமுவந்து தியாகம் செய்ய வேண்டியதிருந்தது. இருளுக்குள் மண்ணுளிப் பாம்பைப் போல பதுங்கி தண்டவாளங்களில் நகர்ந்து கொண்டிருக்கிற இரயிலின் ஜன்னலுக்கருகே அமர்ந்து, தங்கள் முகத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கிற மூக்கை வெளியே நீட்டியபடி, வீசுகிற காற்றின் குளிர்ச்சியை நாசித்துவாரங்களுள் நிறைத்து விளையாடியபடியே கனிந்து சிரித்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியே செவ்வகமாய் விழுகிற வெளிச்சப் பாதையில் அவசரத்தோடு கிளைகளசைத்து வழியனுப்பி வைக்கிற மரங்களுக்காக அவர்களும் காற்றிலே விரல்களின் ஜாடையால் கைகளசைத்து விடை கொடுத்தபடி எதனோடோ அரூபமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
![]()
நிஜத்தில், வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த இந்தக் குழந்தைகளையும், எல்லாம் தங்கள் விதியென நொந்த கொண்ட பெற்றோர்களையும் கரம் படித்து வீட்டிலிருந்து நகர்த்தி இரயில்நிலையம் வரையிலும் அழைத்து வந்த கால இடைவெளியில் எனக்குள்ளே நான் நிகழ்த்திய மனப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கையில் எனது நெஞ்சுக்குழியிலிருந்து கசப்பான நொடியொன்று மேலேறி நாசித்துளையை நெறிக்கிறது. ஆனாலும் ஆற்றை நோக்கிய படித்துறை கல்படிக்கட்டுகளின் ஈரம்படிந்த தடங்களில் கால் வைத்து, பாதங்கள் குளிர உடல் இன்புற்றுச் சிலிர்த்துக் கொள்வதைப் போல, இந்தக் கணத்தில் எனது முதல் முன்னேற்றத்தை நினைத்து உள்ளார எனக்கு முழுதிருப்திதான். ஆனாலும் இனி எல்லாவற்றிற்குமாக என்னை ஒப்புக் கொடுத்து மூழ்கி நான் சமுத்திரத்தினுள் எழுவதற்காக முன்னேறி மேலும் மேலுமாக நகர்ந்து கொண்டே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தே இருக்கின்றேன். இந்தப் பெற்றோர்களை சென்னைக்கு வரவழைப்பதற்கான துருப்புச்சீட்டைக் கண்டுபிடித்து அத்தனைக்கும் அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பதென்பது எனக்கு அதிசிரத்தையுடையதாகவே இருந்தாலும்கூட அத்தகைய போராட்டத்தை இப்போதெல்லாம் நான் மனமுவந்து விரும்பியே தான் செய்கிறேன்.
காளீஸ்வரி, ப்ரியா இரண்டு குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து உரையாடுகையில் எனது வார்த்தைகளின் மீது எத்தகைய கவனத்தை வைத்திருக்க வேண்டுமென்பதைப் பற்றி முன்னமே நான் மனதில் சூட்சமமாக குறித்து வைத்துக் கொண்டேன். என்னையறியமால் அவர்களுக்குச் சாதகமாக நான் உதிர்க்கிற சிறு வார்த்தைகளும் எனக்கெதிரான ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தக்கூடும் என்பதைப் பற்றியும் நான் புரிந்தே தான் வைத்திருக்கிறேன். அவர்களிடம் உரையாடிப் பகிர்ந்து கொள்கிற விசயங்களில் மருத்துவம் சார்ந்த அறிவுரைகளை மிகுந்த நம்பகத் தன்மையோடும், அதனது எளிய பாவனையோடும் தெள்ளத் தெளிவாக நான் விளக்கிப் பேச வேண்டியிருந்தது.
எப்போதும் என் வாழ்வில் என்னோடு அணுசரணையாகத் தொடருகிற, எவரிடமும் நெருங்கம் கொள்ளாதத் தனிமையும், விரக்தியுடன் கூடிய வெறுமையும், எனக்குள் நானே என்னைப் பூட்டிக் கொள்கிற தாழ்வுணர்வும், மருத்துவன் என்கிற அழகிய தங்கக் கூண்டுமாக நான் சக மனிதர்களோடு கலந்திருக்கா வண்ணம் எனக்கிருந்த அத்தனை வேலிப்படல்களையும் மனமுவந்து தாண்ட வேண்டியிருந்தது. அத்தோடு பெற்றோர்களிடம் நான் தோழமையோடு கலந்துப் பேசி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பகிரவும் வேண்டியிருந்தது. உண்மையில், இவைதான் எனக்கு அத்தனையும்விட பெரும் சவாலான விசயமாக இருந்தது.
எனக்குள் உருவான ஆழமான நம்பிக்கை என்னவென்றால் ஒருவேளை இவர்கள் சென்னைக்கு வந்து, அங்கிருக்கிற பிரத்தியேகமான மருத்துவமனைகளில் இந்தக் குழந்தைகளுக்கென செய்யப்படுகிற பரிசோதனைகளையும், அப்படிப் பரிசோதனையின் வழியே சிகிச்சை செய்து கொண்டு நம்மைப் போலவே பேசுகிற பிள்ளைகளையும், அக்குழந்தைகளின் பெற்றோர்களையும் நேரிலே சென்று சந்தித்து உரையாடுகிற போது கட்டாயம் இவர்களும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான தீர்வை நோக்கிய நிச்சயிக்கப்பட்ட பாதையில் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள் என்பதுதான். இப்படியாக எனது நம்பிக்கையின் விரல்களைப் பற்றியபடி அவர்கள் என்னோடு மருத்துவமனை வருவதற்கான காலடிகளை நான் மிகவும் கவனமாக எட்டு வைத்து நடக்கத் துவக்கியிருந்தேன்.
இவை எல்லாவற்றிற்கும் துவக்கமாக பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதொரு எளிமையான நம்பிக்கையை அவர்களது கையிலே நான் பூப்போல அளிக்க வேண்டியிருந்தது. அதற்கு முதலில் என்னை நானே ஒப்புக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருந்தேன். சென்னைக்கு பரிசோதனைக்குச் செல்வதானால் உங்களோடு துணைக்கு நானும் கட்டாயம் வருகிறேன் என்கிற உத்திரவாதத்தை நான் அளித்த போது முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. அதோடு மட்டுமல்லாமல் உங்களோடு சேர்ந்து இன்னொரு குழந்தையும், குடும்பமும் வருகிறார்கள் என்பதான கூடுதல் நம்பிக்கையையும் நான் அந்த இரண்டு குடும்பங்களுக்குமே அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த இரண்டு விசயங்கள் மட்டுமே அவர்களைச் சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை.
ஆதலால் மேலும் சில விளக்கங்களை நான் கூடுதலாக அளிக்க வேண்டியிருந்தது. அதாவது இப்போது நாம் சென்னைக்குச் செல்கிறோமென்றால் குழந்தைகளைப் பரிசோதித்து உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்தப் போவதில்லை. அதற்குப் படிப்படியாக பல கட்டங்கள் இருக்கின்றன. இப்போது நாம் செல்வது என்னவோ நம் குழந்தைகளின் முழுஉடல் பரிசோதனைக்காக மட்டும் தான். சென்னை போன்ற பெருநகரங்களின் மருத்துவமனைக்குச் செல்கிற போதுதான் நம் குழந்தைகளுக்கான அனைத்து பரிசோதனை வசதிகளையும் ஒரே இடத்திலே எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் நம் குழந்தைகளுக்குக் கேட்கவில்லை, பேசவில்லை என்கிற ஒற்றைக் காரணத்திற்குப் பின்னால் இருக்கக்கூடிய பலதரப்பட்ட நோய்க்கூறுகளையெல்லாம் இருதயம், மூளை மற்றும் மனநல சிறப்பு மருத்துவர்களிடம் சென்று காப்பீட்டுத் திட்டத்தின் வழியே இலவசமாகப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளவும் முடியும்.
ஒருவேளை எல்லா பரிசோதனையும் செய்த பின்னால் அவர்களுக்கு ஆபரேசன் ஒன்று தான் தீர்வென்கிற பட்சத்தில் மருத்துவர்களே நினைத்தால்கூட உடனடியாக சிகிச்சையைச் துவக்கிவிட முடியாது. முதலமைச்சரின் விரிவான அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக காது கேட்கும் சிகிச்சையை இலவசமாகச் செய்ய வேண்டுமானால் முதலில் குழந்தையின் ஒட்டுமொத்த பரிசோதனை முடிவுகளையும் சென்னையின் முதன்மைக் காப்பீட்டு அலுவலகத்திற்கு இணையத்தின் வழியே அனுப்ப வேண்டும். அங்கே அவர்கள் அத்தனை ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு, ஒரு குறிப்பிட்ட நாளிலே குழந்தைகளை நேரிலே அழைத்து வரச்சொல்லி பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்புகிறார்கள்.
மேலே அவர்கள் குறிப்பிட்ட நாளில் குழந்தையை சென்னை காப்பீட்டு அலுவலகத்தில் வைத்து இறுதியாக ஒருமுறை பரிசோதித்துப் பார்த்து குறைபாட்டை உறுதி செய்த பின்னர் தான் ஏழரை இலட்சம் மதிப்பிலான அச்சிகிச்சைக்கான ஒப்புதலையே அவர்கள் வழங்குகிறார்கள். ஆகையால் நாம் பரிசோதனை செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்த பின்னால், நம் குழந்தைக்கு சிகிச்சைக்கான ஒப்புதல் கடிதம் வருகிற வரையிலும் இருக்கிற கால இடைவெளியில், ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான நேரமும் நம் கையிலே இருக்கும். ஆகவே, சிகிச்சையைப் பற்றி இப்போது யோசித்துக் குழப்பிக் கொள்ளவோ, அச்சப்படவோ வேண்டாம் என்று நான் அவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்.
நானொன்றும் இப்பெற்றோர்களிடம் தந்திரமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை என்பதை முதலில் எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூரிலேயே அங்குமிங்கும் சம்பந்தமில்லாத மருத்துவர்களிடமும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்துச் சொல்லப்படுகிற கட்டுக் கதைகளைக் கேட்டுக் கொண்டு தவறான முடிவுகளை எடுப்பதைக் காட்டிலும், காது கேளாத குழந்தைகளுக்கென்றே இருக்கிற சென்னை பெருநகர மருத்துவமனைகளுக்குச் சென்று, அங்கே நேரடியாக எல்லாவற்றையும் பார்த்துத் தெளிந்து கொள்வதன் மூலம் அவர்களாகவே ஒரு இறுதிகட்ட முடிவிற்கு வரக்கூடும் என்கிற அர்த்தத்தில் தான் நான் இவ்வாறு நடந்து கொள்கிறேன் என்கிற தெளிவிற்கு நானே சிரத்தையோடு வர வேண்டியிருந்தது.
அதாவது நாம் செய்து கொள்ளப் போகிற பரிசோதனைகளில் இருந்து, காது கேட்கும் கருவி பொருத்துகிற அறுவைச் சிகிச்சை வரையிலான அனைத்துமே முதலமைச்சரின் விரிவானக் காப்பீடு திட்டத்தின் வழியே இலவசமாகவே மேற்கொள்கிறார்கள். ஆகையால் நாம் மருத்துவமனை சென்று நம் குழந்தைகளுக்கென்று பரிசோதிக்கிற ஐந்து வகையான காது கேட்டல் பரிசோதனைகள், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சுருள் படம், எக்ஸ்-ரே, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்கான செலவு என்பது ஒன்றுமே இல்லை என்பதைப் பற்றியெல்லாம் பொறுமையாகப் பேசி நான் அவர்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் மேலாக பிறவிக் குறைபாடுகளின் பரிசோதனைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பி சென்னை வருகிற வறிய குடும்பங்களுக்குமான பல சலுகைகளையும்கூட இந்த மருத்துவமனை நிர்வாகமானது ஏற்படுத்தி வைத்திருப்பதை நான் ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டிருந்தேன்.

பெற்றோர்கள் இருவர் உட்பட குழந்தைக்கும் சேர்த்து மருத்துவமனைக்கு வந்து போகிற பயணச் செலவுகளை அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக் கொள்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பரிசோதனைக்காக வெளியூரிலிருந்து வந்து அங்கு தங்கியிருக்க வேண்டிய அந்த ஒரு வாரத்திற்கான விடுதிச் செலவுகளையும், அந்த நாட்களுக்கான மூன்று வேளை உணவுச் செலவுகளையும்கூட அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் நம் கைகளிலிருந்து எந்தக் காசையும் கரைக்கத் தேவையில்லாமல் வெறுமனே போய் தமிழகத்தின் அதிநவீன மருத்துவமனையில் நமது குழந்தைகளுக்கான அத்தனை பரிசோதனைகளையும் இலவசமாகச் செய்துவிட்டு அப்படியே வீடு வந்து சேரப் போகிறோம் என்பதைச் சொல்லி நான் வியந்த போது, அதையெல்லாம் ஆமோதிப்பதைப் போல தன்னியல்பாகத் தலையாட்டிபடியே பெற்றோர்கள் ஆர்வத்தோடு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இவ்வளவு வாய்ப்புகளிருந்தும் இவ்வூரிலேயே கிடந்து நம் பிள்ளையை மௌனியாக வைத்திருப்பதென்பது தேர்ந்த சிற்பியொருவன் தெரிந்தே சிற்பத்தின் கண்களை மூளியாக்கிவிட்டதைப் போலதொரு பாவமாகிவிடும் என்பதான யோசனையில் பெற்றோர்கள் ஆழ்ந்திருப்பதை அவர்களின் முகபாவனைகளின் வழியே நான் கண்டடைந்து கொண்டிருந்தேன். அவர்களின் ஆச்சரியம் கலந்த உருண்ட கருவிழிகளின் மேல் தொக்கி நிற்கிற இமைகளும்கூட அடுத்து என்ன? என்பதான ஆர்வத்தோடு கேட்பதைப் போலவும் எனக்குள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது.
மேலும் பெற்றோர்களின் நெஞ்சினில் முறிந்த முள்ளைப் போல உறுத்திக் கொண்டிருக்கிற அறுவைச் சிகிச்சை பற்றிய பயங்களை, அதனைப் பற்றிய சந்தேகங்களை தெளிந்து கொள்வதற்காக இத்தகைய சென்னைப் பயணத்தைக்கூட ஒருவகையில் சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது அங்கே ஆயிரக்கணக்கான சிகிச்சைகள் செய்து பேரனுபவம் வாய்ந்த சிறப்புச் சிகிச்சை நிபுணர்களும், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான நுட்பங்கள் தெரிந்த அதிசிறப்பான பயிற்று வல்லுநர்களும் இருக்கையில், நமக்குள்ளிருக்கிற சந்தேகங்களை அவர்களிடமே விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் நம் குழந்தைக்கு ஒவ்வொன்றாக அவர்கள் பரிசோதித்துப் பார்க்கின்ற போது நாமும் அருகிலிருந்து அத்தகைய சப்தங்களுக்கான பரிசோதனைக்கு ஏற்ப மற்ற பிள்ளைகள் எப்படித் துணுக்குறுகிறார்கள், நம் பிள்ளைகள் எப்படி அணுவளவு சிணுங்களுமின்றி அமைதியாய் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தும்கூட பிரச்சனையின் தீவிரத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.
அதேசமயம் ஏற்கனவே காது கேட்பதற்கான சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பேச்சுப் பயிற்சிக்காக அங்கே வந்த வண்ணமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று அத்தகைய குழந்தைகள் பற்றிய குறைகளைக் கவனமாக விசாரித்தும், அவர்கள் சிகிச்சை செய்து கொண்டதைப் பற்றிய விவரங்களை நெகிழ்ச்சியோடு கலந்துரையாடியும் தங்களது குழப்பங்களை பெற்றோர்கள் அங்கேயே தணித்துக் கொள்ள முடியும். அதேபோல நம் பிள்ளைகள் போலவே பேசாமல் இருந்து, சிகிச்சைக்குப் பின்னர் நம்மைப் போலவே பேசுகிற குழந்தைகளோடு நாமும்கூட அமர்ந்து அவர்களிடம் செல்லமாகப் பேசி, அக்குழந்தைகளின் குரலில் இருக்கிற குழைவை இரசித்து, நம் பிள்ளையும்கூட இப்படி சிகிச்சைக்குப் பிறகு நன்றாகப் பேசிவிடுவார்கள் தானே என்கிற இறுதி முடிவிற்கு வருவதற்கு நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும். இப்படி வாழைநாரிழையில் பூக்கோர்ப்பது போல ஒவ்வொரு விசயமாகச் சேகரித்து அவர்களது வீட்டின் முற்றத்திலமர்ந்து விலாவாரியாகப் பேசிய பின்னர் தான் அவர்கள் சென்னை வருவதற்கான முன்னேற்பாட்டையே அரை மனதோடு ஏற்கத் துவக்கியிருந்தார்கள்.
அவர்கள் ஒப்புக் கொண்ட மனம் சட்டென்று மாறுவதற்குள் சென்னை செல்வதற்கான முன்பதிவுகளை உடனே செய்துவிட வேண்டுமென்று அப்போதிருந்தே நான் சிந்திக்கத் துவங்கியிருந்தேன். குறுகிய கால இடைவெளியில் சென்னைக்குப் புறப்படுவதற்கான இருக்கைகள் கிடைக்காமல் போகவே, அப்போது கிடைத்த அமரும் வகையிலான இருக்கைகளைப் பதிவு செய்து ஒருவழியாக நாங்கள் சென்னை கிளம்புவதற்கு ஆயத்தமானோம்.
சென்னைக்குப் பயணப்படுவதானால், எங்களிடம் டிக்கெட் பதிவு செய்யப் பையில் பணமில்லை, அங்கே சென்று தங்குவதற்கு ஒரு வாரமென்றால் செலவுக்குக் கையில் காசில்லை, ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு வரவேண்டுமென்றால் அலுவலகத்தில் அனுமதி கிடைக்காது, சென்னைக்கு முன்பின் நாங்கள் சென்றதேயில்லை என்கிற போது மருத்துவமனையை நாங்கள் எங்கே சென்று எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது, படிப்பறிவற்ற எங்களுக்கு அங்கே ஆங்கில மருத்துவர்கள் சொல்கிற விவரங்களெல்லாம் புரியாத பட்சத்தில் நாங்கள் எப்படி ஒரு முடிவிற்கு வருவது என்பது உள்ளிட்ட பல காரணங்களால், இயல்பாகவே அவர்களுக்குள் வருகிற மனத்தடைகளால் இப்பயணம் தடைபடாமலிருக்க, நானே அவர்களின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை அவசரகதியில் செய்ய வேண்டியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இறுதியில் இரயில் நிலையத்தின் ஓரிடத்திலே கூடி இப்போது எங்களுக்கான இருக்கையிலே நாங்கள் வந்து அமர்ந்திருக்கிறோம்.
நான் இருக்கையில் அமர்ந்தபடியே பயணிப்பதொன்றும் பெரிய விசயமல்ல. அதேசமயம் ஒரு மருத்துவனாக ஆயிரக்கணக்கில் செலவு செய்து முதல் வகுப்பிலே பயணம் செய்வதும்கூட எனக்குப் பெரிய விசயமுமல்ல. ஆனால் அவர்களை தனியே விட்டுவிட்டு நான் மட்டும் சௌகரியமாகப் பயணம் செய்வதற்கு மனம் விரும்பவில்லை. அதேசமயம் நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் தான் என்கிற உணர்வை ஏற்படுத்த அவர்களோடு சேர்ந்து பயணிப்பது மட்டும்தான் எனக்கிருக்கிற ஒரே வழி என்பதையும் நான் அறிந்திருந்தேன். அவர்களின் அருகாமையில் அமர்ந்து கொண்டு அன்றாடக் குடும்பக் கதைகளைப் பேசிப் பயணிப்பதும்கூட ஒருவகையில் அவர்களை சிகிச்சை நோக்கி நகர்த்துவதற்கான அனுகூலமாகக்கூட அமையலாம், யாருக்குத் தெரியும்?
எங்களுக்கு அருகே சென்னை செல்ல வேண்டிப் பயணிக்கிற இன்னொரு குடும்பமொன்று நேரம் செல்வதற்குள் சாப்பிட்டுத் துயில் கொள்வதற்கான ஆயத்தமான வேலையில் இறங்கியிருந்தது. அவர்களின் கையிலே வைத்திருந்த இனிப்புப் பண்டங்களை அருகே விளையாடிக் கொண்டிருந்த காளீஸ்வரியையும் பிரியாவையும் ஜாடையாலே அழைத்து கையிலே வலிந்து திணித்துக் கொண்டிருந்தனர். அவர்களது முகத்தையும் அம்மாக்களின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடியே இனிப்புகளைச் சுவைப்பதைப் பற்றிய கனவுகளின் ஏக்கத்தோடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ அல்லது அம்மாவின் எத்தகைய முகபாவனைகளை தங்களுக்கான சமிக்கையென அவர்கள் உணர்ந்து கொண்டார்களோ பவ்வியமாக பிஞ்சுக் கரங்களை நீட்டி அவற்றை வாங்கிக் கொண்டார்கள்.
அத்தோடு மட்டும் நின்றிருந்தால் பரவாயில்லை தான். ஆனால் குழந்தைகளை அருகே அழைத்து வயதேறிய தங்கள் குளிர்ந்த கைகளுக்குள் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பொதிந்தபடி உம் பேரென்ன, உம் அம்மா பேரு என்ன, உனக்கு என்ன பிடிக்கும் என்று வரிசையாக குழந்தைகளுக்கென அவர்கள் மனதிலே அடுக்கி வைத்திருந்த கேள்விகளையெல்லாம் அடுத்தடுத்து வரிசையாக கேட்டபடியே இருந்தனர். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் யாரோ யாரிடமோ பேசிக் கொள்வது போலான பாவனையில் குழந்தைகள் அவர்களது முகத்தையே ஆச்சரியத்தோடு பார்த்து இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் என்னுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்க நான் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தேன். இந்தப் பயணத்தில் இப்படியொரு மன அவஸ்தை நேருமென்பது நான் துளியும் எதிர்ப்பார்க்காத ஒன்று.
அருகிலுள்ளவரிடம் இக்குழந்தைகளைப் பற்றி சொல்லிவிடலாமா? இல்லையில்லை, அந்தப் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம் ஒருபுறம், ஒருவேளை இந்த இரவு முழுவதும் இப்படியே குழந்தைகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தால் எவ்வளவு நேரம் தான் இந்த வலியைத் தாங்கிக் கொள்வது, அப்படியே சொல்லிவிட்டாலும்கூட அவர்கள் இந்தக் குழந்தைகளை எப்போதும் போலான பார்வையிலே தான் பார்ப்பார்களா அல்லது பாவப்பட்ட வாயில்லா ஜீவன்களிடம் காட்டுகிற கருணையின் வடிவான பாவனையைத்தான் வெளிப்படுத்துவார்களா, உன் பேரென்ன, அம்மா பேரென்ன என்று பிள்ளைகளிடம் கேட்கிற போதெல்லாம் பெற்ற மனங்களிரண்டும் என்னபாடு பட்டிருக்கும், எப்படியெல்லாம் மனம் அகதியாய் தவித்திருக்கும், என் பிள்ளை செவிடு, ஊமை.. போதுமா! என்று அடிவயிற்றிலிருந்து உரக்கக் கத்திவிட்டு தங்களது பிள்ளைகளை இறுக அணைத்துக் கொண்டு அரற்றிக் கொள்வதற்கான காத்திருப்பு தான் அவர்களது இந்த நெடிய மௌனமா அல்லது சுற்றியுள்ளவர்களின் காருண்யத்தை வேண்டி என் பிள்ளைக்கு இப்படியாகிவிட்டதே என்று நெக்குறுகி புலம்பி அழத்தான் நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்களா? இப்படி ஒவ்வொன்றாக நினைத்தபடி அந்தவொரு கணத்த நொடியில் எனது மனம் பலவிதமானதொரு பித்துநிலையில் உள்ளாரப் பிதற்றிக் கொண்டிருந்தது.
இந்தவொரு பயணத்தில் அதிலும் ஒரே ஒரு நிகழ்வை எதிர்கொண்ட எனக்கே இப்படியொரு அவஸ்தையும் வேதனையும் என்றால், இவ்வளவு காலமும் இப்படியொரு வாதையை வைத்துக் கொண்டு எப்படி இந்தப் பெற்றோர்களெல்லாம் காலத்தை எண்ணிக் கடத்துகிறார்கள் என்று அவர்களை நினைத்துக் கண்களைக் கலங்களாகக் கசக்கிக் கொண்டேன். தங்கள் வாழ்நாளில் எத்தனை மனப்போராட்டங்களை அவர்கள் நிகழ்த்தியிருக்கக்கூடும்? அப்போதெல்லாம் அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? தங்கள் பிள்ளை மற்ற பிள்ளையைப் போலில்லையே என்று என்னவெல்லாம் கசந்து யோசித்திருப்பார்கள்? ஏதோவொரு மனநெருக்கடியாகிவிட்ட பொழுதில் இப்படியொரு வாழ்க்கையை நாமும் நம் பிள்ளையும் வாழ்ந்து தான் தீரணுமா என்று எந்தக் கணத்திலாவது அவர்கள் யோசித்திருப்பார்களா?
இதையெல்லாம் யோசிக்க யோசிக்க இரயில் வண்டியின் தாலாட்டுகிற ததும்பல்களையும் கடந்து உடலும் மனமும் கணத்து அதிர்ந்தது. கொஞ்ச நேரத்தில் குழந்தைகளும் அம்மாக்களின் மடியில் சென்று முகங்களைப் புதைத்தப்படி தூக்கத்தில் சிணுங்கத் துவங்கிவிட்டனர். அருகிலிருந்தவர்கள், பிள்ளைங்க கூச்சப்படுதுங்க போல! என்றபடி அவர்களுக்குள்ளாகவே பேசிச் சிரித்துக் கொண்டனர். அவர்களிடம் நானும் சிரிக்காமல் சிரித்து வைத்தேன். நேரம் செல்லச் செல்ல அந்த இடமே புத்த மடாலயத்தின் பேரமைதிக்குள்ளாகி சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டதைப் போல நான் உணர்கையில் அத்தனை தூக்கி வழிகிற மனிதக் குவியலுக்குள்ளிருந்து மெல்லிசான ஒரு விசும்பல் சப்தமொன்று கேட்கத் துவங்கியிருந்தது. அதையெல்லாம் வலிந்து கவனிக்காமல் தடக் தடக்கென்ற சப்தங்களை மட்டுமே காதுகளில் நிறைத்துக் கொள்ள முயன்று முயன்று அயர்ச்சியில் நான் தூங்கி எழுந்த போது நாங்கள் இறங்க வேண்டிய சென்னை இரயில் நிலையத்தை அதிகாலையிலே அடைந்திருந்தோம்.
பிரம்மாண்டமாக சாலையின் விளிம்பையடைத்தபடி நிற்கிற காது மூக்கு தொண்டை மருத்துவத்திற்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட அந்தப் பிரபலபான மருத்துவமனையின் வாசலில் நின்ற போது நான் தங்கச் சுரங்கத்தின் வாசலில் நிற்கிற பெருமிதத்தோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரசுக் கல்லூரி மருத்துவமனைகளில் இன்னும் பரவலாக காக்ளியார் சிகிச்சை துவங்கப்படாமலிருப்பதும், அதேசமயம் ஆயிரக்கணக்கிலான நோயாளிகளுக்கு மத்தியில் இக்குழந்தைகளைப் பரிசோதித்து சிகிச்சையைத் துவங்குவதற்காக மாதக் கணக்கிலே பெற்றோர்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் நான் தனியார் மருத்துவமனையையே தேர்வு செய்திருந்தேன்.
அதிகாலை வெளிச்சம் உருக்கொள்வதற்குள் மருத்துவமனை நுழைந்துவிட்ட எங்களுக்கான வருகையைப் பதிவு செய்வதற்குரிய ஊழியர், பத்து மணிக்கு மேலே வருவதாகச் சொல்லி அங்கேயே காத்திருக்கப் பணிந்தனர், வரவேற்பரையிலிருந்த செவிலியர்கள். நான் எவரிடமும் என்னுடைய அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அது அவசியப்படுகிற இடங்களில் பயன்படுத்துவதைக் காட்டிலும் அநாவசியமாக எல்லாரிடமும் என்னை மருத்துவனென்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிற உள்ளுணர்வின்படியே நான் இயங்கிக் கொண்டிருந்தேன். கடிகாரத்தின் விரல்கள் பத்து மணிப்பொழுதைக் கடக்கும் முன்பே உணவருந்திவிட்டு தயாராக இருந்த எங்களை ஒருவழியாக கீழ்த் தளத்திலிருக்கிற காப்பீட்டு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்கு ஒரு காது கேளாமல் குறைபட்ட குழந்தையைப் பரிந்துரைக்கையில் என்னென்ன ஆவணங்களோடு அவர்களை அனுப்ப வேண்டுமென்று முன்பே மருத்துவமனையில் விசாரித்துக் கொண்டு வந்திருந்ததால் எல்லாமும் சுமூகமாகவே துவங்கியது. பெற்றோர்களின் ஸ்மார்ட் கார்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, பெற்றோர் மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அம்மாவின் மகப்பேறுக்கால பச்சை நிற அட்டை மற்றும் தடுப்பூசி அட்டை. அத்தோடு கூடவே அதுவரையிலும் குழந்தைக்குப் பரிசோதித்த பழைய ஆவணங்களையும் கொண்டு வரச் சொல்லி அறிவுறுத்தியமையால் அதைக் கேட்டவுடனே அவர்கள் கையிலே எல்லாவற்றையும் கொடுத்துவிட்டோம். எல்லா அசல் ஆவணங்களோடு கூடுதலாக அதன் ஒரு நகல்களையும் கொடுத்த பின்பாக கணினியின் உதவியோடு முதலில் அதைச் சரிபார்க்கத் துவங்குகிறார்கள்.
ஸ்மார்ட் கார்டு மூலமாக பெற்றோர்களின் பெயர்கள், முக்கியமாக சிகிச்சை செய்து கொள்ளப் போகிற குழந்தையின் பெயர் இருப்பதை உறுதி செய்கிறார்கள். காப்பீட்டு அட்டையில் குழந்தையின் பெயர் இல்லாவிட்டாலும்கூட ஸ்மார்ட் கார்டில் பெயர் இருந்தாலே போதுமானது. அப்படி இல்லாவிட்டாலும்கூட குழந்தையின் பெயரை தாசிஸ்தார் அலுவலகம் சென்று பெயரைச் சேர்த்தோ அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வைத்தே இன்னாரின் குழந்தை தான் என்று காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவோ முடியும். அடுத்ததாக காக்ளியார் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சையென்றால் ஆறு வயதிற்குள்ளாகத்தான் காப்பீடு திட்டத்தின் வழியே செய்ய முடியுமென்பதால் பிறப்புச் சான்றிதழை வைத்து வயதைக் கணக்கிடுகிறார்கள். பின்பு காப்பீட்டு எண்ணை அதன் இணையத்திற்குச் சென்று சரிபார்த்து, இந்தக் காப்பீட்டு அட்டையானது சிகிச்சை செய்து கொள்வதற்குத் தகுதியுடையது தானா என்பதனையும் உறுதி செய்கிறார்கள்.
அதேசமயம் இந்தக் குழந்தைகளுக்கான என்னுடைய தேடலில் இதுபோன்ற பலவிசயங்களை நானே எனது தேவைக்கேற்ப தெரிந்து வைத்திருப்பதால் மேற்கண்ட எல்லா விவரங்களையும் கணினியில் தனிப்பட்ட முறையில் நானே சரிபார்த்த பின்னர் தான் இப்பெற்றோர்களை சென்னைக்கு அழைத்தே வருகிறேன். ஏனென்றால் இந்தப் பெற்றோர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தாங்கள் வீணாக அலைகிறோம் என்று உணர்வதை நான் ஒருபோதும் விரும்பவில்லை என்பதே அதற்குக் காரணம்.
எல்லாவற்றையும் சரிபார்த்த பின்பாக குழந்தைகளுக்கென்று தனியே பைல் ஒன்றை தயார் செய்து அவற்றோடு காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரைச் சந்திப்பதற்காக பெற்றோர்களை தரைத்தளத்திற்கு அனுப்புகின்றனர். நானும் பெற்றோர்களுள் ஒருவராக குழந்தைகளோடு அமைதியாக முன்னே நகர்ந்து கொண்டிருந்தேன். குளிருட்டப்பட்டு தாழிடப்பட்ட அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அந்தச் சிறப்பு மருத்துவரும் எங்களைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துவிட்டு குழந்தைக்கு என்ன பிரச்சனை, காது கேளாமலும் வாய் பேசாமலும் எவ்வளவு காலமாக இருக்கிறது, இப்பிரச்சனை பிறவியிலிருந்தே இருக்கிறதா அல்லது இடையிலே வந்த பிரச்சனையா என்று நோயிற்குரிய கேள்விகளைக் கேட்டு அதன் மூலக் காரணத்தைத் தேடிய பயணத்தை மெல்ல அடியெடுத்து துவங்கியிருந்தார்.
மகப்பேறு காலத்தில் இப்பிரச்சனை வருவதற்கான அறிகுறி ஏதும் தென்பட்டதா என்பதை அறிவதற்காக மகப்பேறு மற்றும் பிரசவ கால விவரங்களைக் கனிவோடு கேட்டபடியும், பச்சை வண்ண மகப்பேறு அட்டையிலிருக்கிற தகவல்களைப் படித்துப் பார்த்தும், கையிலிருந்த படிவங்கள் ஒவ்வொன்றாக நிரப்பிக் கொண்டிருந்தார். மிக முக்கியமாக, பெற்றோர்கள் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டவர்களா, குடும்பத்தில் எவருக்கேனும் மரபார்ந்த நோய்கள் ஏதும் தொடர்ந்து வருகிறதா என்பதைப் பற்றிய விவரணைகளை விலாவாரியாகக் கேட்டபடி இந்தக் குழந்தையின் பிரச்சனைக்கான மூலக்காரணத்தை பல தலைமுறைகளுக்கும் முன்னே சென்று தீவிரமாகத் தேடியலைந்தபடி இருந்தார். நான் அவரது கண்ணாடிச் சட்டத்திற்குப் பின்னாலிருக்கிற தேடுதல் நிறைந்த கண்களை எதிர்பார்ப்புகள் கலந்த பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா கேள்விகளும் முடிந்த பின்பாக காதுகளை நுண்ணோக்கிக் கருவியின் வழியே பரிசோதித்தபடி வெளிக்காது, மற்றும் சவ்வின் தன்மையை அவர் உறுதி செய்கிறார். வெளிக்காதில் அழுக்கு மற்றும் காது ஜவ்வில் ஓட்டை போன்ற காரணங்களால் ஏற்படுகிற காது கேட்டல் பாதிப்பு இருப்பின் அதையும் கண்டறிய வேண்டித்தான் இத்தகைய பரிசோதனைகளை அவர் மேற்கொள்கிறார். ஒருவேளை காதுகளில் இறுகிப்போன அழுக்குகள் இருந்துவிட்டால் அவர்களை தொடர்ந்து சொட்டு மருந்து போடச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி ஒரு வாரம் கழித்தே மீண்டும் வரச் சொல்லுகிற நிகழ்வுகள் நடப்பதாக மருத்துவர் போகிற போக்கில் சொல்லிய போது அதை கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டேன். இனிமேல் என்னால் பரிந்துரைக்கப்பட்டு சென்னை செல்கிற குழந்தைகளுக்கு நானே காதில் அழுக்கையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சென்னை வரை வந்துவிட்டு மீண்டும் இதற்காகவென்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் இதையே சாக்காய் வைத்துக் கொண்டு அவர்கள் திரும்பவும் சிகிச்சைக்கு வர மறுத்துவிடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
குழந்தைகளுக்கு சில எளியமுறையிலான ஆரம்பகட்ட கேட்டல் பரிசோதனைகளைச் செய்த பின்பாக, மருத்துவர் அவரளவிலே பிறவிக் குறைபாடுகள் இருப்பதை ஒரளவு முடிவு செய்துவிடுகிறார். அதன் பின்னர் குறைபாட்டை உறுதி செய்வதற்கான கேட்டல் தொடர்பான ஏனைய பரிசோதனைகளையெல்லாம் செய்து வரச் சொல்லி ஆய்வகத்திற்குப் பரிந்துரைந்துவிட்டு அடுத்த குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவர் கிளம்பிக் கொண்டிருந்தார். நாங்கள் அவரின் பரிந்துரைப் படிவங்களை வாங்கிக் கொண்டு அருகிலிருக்கிற பரிசோதனைக் கூடத்திற்குள் அவசரகதியோடு உள்ளே நுழைந்தோம். அங்கே நாங்கள் இதற்கு முன்னால் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திடாத விசித்திரமான சூழலைக் கண்ட நிமிடத்தில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் பனிச்சிற்பங்களாய் நின்று கொண்டிருந்தோம்.
எங்களைப் போலவே தமிழகமெங்கிலும் இருந்து வந்திருக்கிற பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளால் நிரம்பியிருந்தது அந்த நுழைவரங்கம். குழந்தைகளை மடியில் கிடத்திக் கொண்டும், தோள்களில் தட்டிக் கொடுத்த படியும் இருக்கிற வாஞ்சையுடன் கூடிய தாய்மார்களையும், புத்தம் புதிய இடத்தில் பரிட்சயமற்று வீரிட்டு அழுகிற குழந்தைகளை அரற்றி அமைதியாக்கப் போராடிக் கொண்டிருக்கிற பதட்டத்துடன் கூடிய அம்மாக்களையும், தன் சப்தத்தின் அளவறியாது உரக்கச் சிரித்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி மருத்துவமனை வெளியிலும், நெருக்கடியான சாலையிலும் கண்மூடித்தனமாக அசட்டையோடு ஓடித்திரிகிற குழந்தைகளையும், தரையில் தவளையாகக் கிடந்து முரண்டு கொள்கிற குழந்தைகளையும், அங்கே ஒருசேர கண்ட நொடியில் எனக்குத் திக்கென்றிருந்தது. நாங்கள் உள் நுழைந்த அந்த நேரத்திலும்கூட சுமார் நாற்பதிற்கும் மேலான குழந்தைகள் இதே பரிசோதனைக்காக வந்து காத்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் வரவேற்பறையை அணுகி குழந்தைகளுடைய பைலைக் கொடுத்து நிமிருகையில் எதிரே நீண்ட பட்டுத்துணியிலான வண்ணப் பலகையில் புகைப்படமாய் சிரிப்போடும் அழுகையோடும் உறைந்திருக்கிற குழந்தைகளின் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட் படங்களைப் பார்த்தோம். அதைப் பற்றி விசாரிக்கையில், அவர்களெல்லாம் சிகிச்சை செய்து கொண்டு பேசிய குழந்தைகளின் ஞாபகப் புகைப்படங்கள் என்று சொல்லிச் சிரித்த போது என்னால் பதிலுக்கு எந்தச் சிரிப்பையும் உதிக்க முடியவில்லை. பூக்களில் மொய்த்துக் கொண்டிருக்கிற வண்ணத்துப்பூச்சிகளைப் போலத் தெரிகிற அந்த வண்ணப் பலகையில் எட்டிப் பார்க்கிற குழந்தை முகங்களை நான் நீண்ட நேரமாகவே உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதுவரையிலும் சொற்பமான அளவிலேதான் இக்குழந்தைகள் இருக்கக்கூடும் என்ற சமாதானத்தில் இயங்கிக் கொண்டிருந்த எனக்கு சற்றும் எதிர்பார்த்திடாத வகையில் இத்தனைக் குழந்தைகளை புகைப்படங்களாகவும், நிஜத்திலும் கண்ட அதிர்ச்சியில் எனக்குள்ளே நான் நொருங்கிப் போனேன். ஆனாலும் இப்படங்களெல்லாம் வெற்றிகரமாகப் பேசிக் குணமாகிய குழந்தைகளின் பொக்கிஷங்கள் என்கிற சிறு நெகிழ்வு எனக்குள் ஆசுவசத்தை நிகழ்த்தியது. ஆனால் இவ்வளவு குறைபாடுடையக் குழந்தைகளைக் கண்ட பின்னாலும்கூட அந்த வரவேற்பறைப் பெண்ணின் முகத்தில் இயல்பானதொரு சிரிப்பை வெளிப்படுத்த முடிகிறதென்றால் அத்தகைய மகோன்னத நிலையை அடைவதற்கும்கூட ஒரு தனித்த பயிற்சி வேண்டும் தான் போல என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னால் அந்தப் புன்னகையின் தரிசன எல்லையைக் காலத்தில் அடைந்துவிட முடியுமா என்கிற ஆவல் தொற்றிக் கொள்ள அங்கிருந்தவர்களின் முகங்களையே மாறி மாறி பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருந்தேன்.
எங்களுக்கான அழைப்பு வரும் வரையிலும் நாங்கள் அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தச் சிறியதொரு தருணத்தில் நிதானமாக குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்ட எல்லா அறைகளையும், விதவிதமான தோரணையில் வந்திருக்கிற பெற்றோர்களையும், அவர்கள் தம் குழந்தைகளையும் நான் நுட்பமாக கவனிக்கத் துவங்கியிருந்தேன். ஆறு மாதக் குழந்தை முதல் ஆறு வயதுக் குழந்தைகள் வரையிலான எல்லா பருவத்தினரும் அங்கே நிறைந்திருந்தார்கள். பச்சைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த ஒருவர் அழுகிற குழந்தையை மார்பிலிட்டு அணைத்தபடியே விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். அவரது பார்வையில் வெறுமை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து அமர்ந்து கொள்வதைப் போல நீண்ட நேரமாக அவரது நிலைத்த பார்வையை அங்கிருந்து அகற்றவேயில்லை.
ஊரிலிருந்து கிளம்பி அப்படியே அரக்கப் பறக்க ஓடி வந்த களைப்போடும், பசியின்றி அழுக்குப் படிந்த கண்களில் கலங்கிய கண்ணீரோடும் கலந்த பெற்றோர்களின் நடுவே ஒருவனாக நான் அமர்ந்திருந்தேன். அங்கிருந்த குழந்தைகள் சிலர் புத்தனின் பேரமைதியோடும், ஒருசிலர் ஆழ்துளைக் கிணறு துளைக்கிற இரைச்சல் பெருவெளியைப் உருவாக்குகிற குறும்புத்தனத்தோடும் மருத்துவமனையை பரபரப்பான சந்தை போலவே உருமாற்றி வைத்திருந்தனர். எல்லா மருத்துவமனையிலும் பார்க்கிற பேரமைதியின் உறைவிடத்தை இங்கே என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாவற்றிலிருந்தும் தனித்த ஆன்மாவொன்று இங்கே சுற்றிக் கொண்டிருப்பதைப் போலொரு உணர்வு எனக்குள் கிளர்ந்தபடியே இருந்தது. அதேபோல துயரத்தின் சாயல் படிந்த அத்தனை முகங்களையும் கலைந்துவிட்டு அத்தனை குழந்தைகளையும் ஒருபோலப் பாவித்து பெற்றோர்களையும்கூட அத்தகைய குழந்தைமைக்குள் அடைத்துக் கொண்டு வாஞ்சையோடு அரவணைத்துச் செல்கிற பயிற்றுநர்களை நான் ஆரம்பத்திலிருந்து பார்த்தபடியே இருக்கிறேன். எங்களது முறையின் போது தாய்மையின் ஒட்டுமொத்த அன்பும் ததும்புகிற இளவயது பெண்ணொருவள் வந்து குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைத்த போது நாங்கள் நிதானித்துக் கொண்டு உள்ளே கிளம்பினோம்.
அங்கே காது கேட்டலைப் பரிசோதித்து அறிவதற்கான ஐந்து விதமான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் குழந்தைகளை அவர்களது போக்கிலேயே பொம்மைகளிடம் விளையாட விட்டு குழந்தைகளின் இயல்பை, கூர்ந்து நோக்குகிற பண்பை, பொம்மைகளைக் கையாளுகிற நுண்ணறிவுத் திறனை ஆராய்கிறார்கள். இதன் வழியே அக்குழந்தைக்குக் காது கேட்டல் தொடர்பான பிரச்சனையைத் தவிர்த்து வேறு ஏதேனும் மூளை வளர்ச்சிக் குறைபோடோ, ஆட்டிசக் குறைபாடோ இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கண்டறிகிறார்கள். பின்பு பிரத்தியேகமான காது கேட்டல் கருவிகள் மூலமாக அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கின்ற வேலையில் துரிதமாக இறங்கிவிடுகிறார்கள்.
ஏற்கனவே சொல்லியபடி வெளிக்காது, நடுக்காது, உள்காது என்றிருக்கிற காதுக்கான பகுதியில் எந்த இடத்தில் காது கேட்டலுக்கான பிரச்சனையிருக்கிறது என்பதைத் தனித்தனியே கருவிகள் வழியே பரிசோதித்துப் பார்க்கத் துவங்குகிறார்கள். முதலில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளின் வழியே கவனத்தை ஏற்படுத்தி சப்தங்களின் அளவுகளுக்கு ஏற்ப அவர்கள் எப்படி தங்கள் கவனத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை ஆடியோகிராம் கருவியின் வழியே வெளிக்காதின் செயல்பாட்டை பதிவு செய்கிறார்கள். இரண்டாவதாக நடுக்காதிற்கான ஆடியோகிராம் பரிசோதனையில் சவ்வுக்குப் பின்னேயிருக்கிற பெட்டி போன்ற பகுதியில் ஏதேனும் நீர் கோர்த்திருக்கிறதா, நுண்ணிய எலும்புகளில் பிரச்சனை ஏதுமிருக்கிறதா என்பதையும் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.
இதைப் பற்றிய அறிக்கையை சரிபார்க்கிற போதே மாலைப் பொழுதாகிவிட்டதால் ஏனைய பரிசோதனைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களது அறைகளுக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்கள். அதேசமயம் அடுத்ததாக உள்காதுகளைப் பரிசோதிக்கின்ற மிக மிக்கியமான பரிசோதனைகளைச் செய்யவிருப்பதால் அதற்கான ஆயத்த வேலையாக குழந்தைகள் நன்றாகத் தூங்க வைக்க வேண்டியிருக்கும் என்பதையும் எங்களிடம் அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளைத் தூங்க வைத்த பின்னால் எடுக்க வேண்டிய பரிசோதனைகளுக்காக அவர்களை இரவிலே அதிகமாகத் தூங்கவிடாமல் செய்து அதிகாலையில் சீக்கிரமாகவே எழுப்பிவிட்டு மறுநாள் அரைத் தூக்கத்தோடு குழந்தைகளை அழைத்து வாருங்கள் என்பதை ஒரு முக்கிய அறிவிப்பைப் போலச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்கள்.

விடிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து உறங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளை எழுப்பி பெற்றோர்கள் அவர்களை அழ வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை தான். ஏற்கனவே காளீஸ்வரியின் பெற்றோர்கள் இப்படியான பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அவள் தூங்காத காரணத்தினால் தானே பரிசோதனையும் செய்யாமல், இவ்வளவு காலம் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். ஆதலால் தூங்காமல் இருப்பதன் காரணமாக பரிசோதிக்கத் தாமதமாவதையோ, அதனால் பரிசோதிக்க முடியாமல் சிகிச்சை தள்ளிப் போவதையோ அவர்களுமே விரும்பவில்லை.
நீண்ட தூரம் பயணித்த களைப்பிலும், நேற்று மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்த பின்பாக அடைந்த எரிச்சலிலும் குழந்தைகளின் பிடிவாதம் அதிகாலையில் உக்கிரமடையத் துவங்கி உரத்த அழுகையாக அது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பேய் பிடித்த வீட்டில் இரவில் கோடாங்கி அருள் வந்து ஆடி பேயோட்டுவதைப் போல இரண்டு குழந்தைகளையும் நடு ஜாமத்திலே எழுப்பி விட்டு அவர்களோடு பெற்றோர்களும் அர்த்த ராத்திரியில் ஏதேதோ விளையாட்டுக் காட்டி தூக்கத்தை விரட்டியடித்தபடி இருந்தனர். அடிவயிற்றில் கிச்சுக்கிச்சு மூட்டியபடி குழந்தைகளை வாய்விட்டுச் சிரிக்க வைத்து அவர்களோடு சரிக்குச் சமமாக பெற்றோர்களும் விளையாடி குழந்தையாகவே மாறியிருந்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாய் தலையில் கொம்பு முளைத்து முட்டி விளையாடுகிற அவர்களைப் பார்த்த நிமிடத்தில் என்னோடு ஆங்காரமாகப் பேசிச் சண்டையிட்டுக் கொண்ட பெற்றோர்கள் தான் இவர்களா என்று ஒரு கணம் சிரிப்பு வந்து அது கண்ணக்குழியில் போய் விழுந்தது. அவர்களின் செய்கைகளை இரசித்துச் சிரித்து உள்ளார மகிழ்ந்தபடியே சுவரோரமாய் படுத்து அப்படியே நான் மறுபடியும் தூங்கிப் போனேன்.
விடியக்காலை எழுந்து விளையாடிய அசதியில் குழந்தைகள் கண்ணசரத் தூங்கவும் பயிற்றுநர்கள் அடுத்தடுத்த பரிசோதனைகளை வரிசையாக எடுத்தபடி இருந்தனர். எங்கே பாதியில் விழித்துவிடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமிருக்க, வயர்கள் பொருத்தப்பட்டு சாந்தமாக துயல் கொள்கிற குழந்தைகளின் முகத்தையும், பரிசோதிக்கிற கருவிகள் இயங்குகிற நுட்பமான அசைவுகளையும், அதற்கேற்ப படிவத்தில் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிற பயிற்றுநர்களின் இசைவையும் மாறி மாறி பெற்றோர்களோடு நானும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். உள்காதினைப் பரிசோதிக்கிற ஓ.ஏ.இ மற்றும் பெரா பரிசோதனையை எடுத்த பின்னர் இறுதியாக ஹியரிங் எய்டு கருவியை பொருத்திப் பார்க்கும் பரிசோதனையைத் துவக்கினார்கள்.
அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உலகத்தரத்திலான ஹியரிங் எய்டு கருவியை காதுகள் இரண்டிலும் ஒவ்வொன்றாகப் பொருத்திப் பார்த்து இக்குழந்தைகளுக்கு வெளிப்புற ஹியரிங் எய்டு கருவியின் வழியாகவே எளிதாகக் குணப்படுத்திவிட முடியுமா அல்லது காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசன் (Cochlear implant) வழியாகத்தான் தீர்வு காண முடியுமா என்பதைப் பரிசோதித்துக் கண்டறிகிறார்கள். இந்தப் பரிசோதனையில் தோல்வியுறுகிற குழந்தைகளுக்கு காக்ளியார் இம்பிளாண்ட் செய்வதைத் தவர வேறு வழியேயில்லை என்பதைப் பெற்றோர்களுக்கு ஒருவழியாக அவர்கள் தெளிவுபடுத்தியும் விடுகிறார்கள். பின்பு ஆரம்பத்திலிருந்து செய்த குழந்தைகளின் ஒட்டு மொத்த கேட்டல் பரிசோதனைக்கான முடிவுகளையும் ஒருங்கே வைத்துக் கொண்டு ஒரு நீண்ட முழுஅறிக்கையை தயார் செய்து பெற்றோர்களின் கைகளில் தருகிறார்கள்.

அதன் முடிவுகளுக்காக நாங்கள் வரவேற்பறையில் காத்திருக்கிற தருணத்தில் அங்கே பரிசோதனைக்காக தூங்க வைக்க முடியாமல் திணறியபடி இருக்கிற பெற்றோர்களின் செய்கைகள் ஒவ்வொன்றும் எனக்குள் ஒருவித நெகிழ்ச்சியான உணர்வைக் கிளர்த்தியிருந்தது. ஒருவர் ஐந்து வயது நிரம்பிவிட்ட தன் குழந்தையைத் தூங்க வைக்க கடையிலிருந்து பால் டப்பாவில் பாலை நிறைத்துக் கொண்டு வந்து பச்சிளம் குழந்தையைப் போல மடியில் கிடத்தி புகட்டிக் கொண்டிருந்தார். வயிறு நிரம்பிவிட்டால் விரைவில் தூங்கிவிடுவான் என்கிற நினைப்பில் அவர் பால் இறங்குகிற தொண்டைக்குழியையும் குழைந்து கிறங்குகிற கண்பாவைகளையும் பரிதவிப்போடு பார்த்தபடி இருந்தார்.
புட்டிப் பால் குடித்து நிரம்பிய வயிற்றோடு அவனைத் தூக்கி தோள் மீது போட்டு தூங்க வைக்க முயலுகையில் அவன் தெத்துப் பல்லைக் காட்டி உதட்டைப் பிதுக்கியபடி பின்வாக்கில் என்னைப் பார்த்து கண்ணக்குழி நிறைய சிரித்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவனைப் பார்த்து அடக்க முடியாதவாறு சிரிப்பு கொப்பளித்துக் கொண்டிருக்க, சிரிப்பை அடக்கியும் அடக்க முடியாதவாறும் அவனது செய்கைகளை நான் வெட்கத்தோடு முகத்தை மூடி இரசித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி அவன் தூங்கிவிட்டானா என்று தலையைத் திருப்பித் திரும்பப் பார்த்து உள்ளார கொதிப்படைந்து கொண்டிருந்தார் அவனது அம்மா.
அங்குதான் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக அம்மாக்கள் செய்கிற குழந்தைமை கூடிய செய்கைகளை பரவசத்தோடு பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். பச்சைக் குழந்தையொன்றை தோளிலே போட்டு மெல்லிய துண்டையோ அல்லது சேலை முந்தாணையோ முதுகில் போர்த்தியபடி மருத்துமனையின் குறுக்காக நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தார் ஒரு அம்மா.
இன்னொருவர் அவரது மகனை மடியிலே கிடத்தி தலையை இடது தொடையில் தாங்கியபடி காது கேளாத குழந்தைக்குத் தாலாட்டுப் பாடி சோர்வுற்ற அவரது உதடுகளில் இருந்து முணுமுணுக்குகிற சொற்களுக்கு ஏற்ப தொடைகளைத் தாளகதியிலே ஆட்டி இசைத்துக் கொண்டிருந்தார். அவரது முக அசைவும் முக பாவணைகளும் தொடையசைவோடு ஒத்திசைவாக கலந்து இசையை மீட்டெடுத்தன. குழந்தையின் கால்கள் வலது தொடையை மீறி தரையில் தளர்ந்து கிடக்க, வலது கைகளை இடுப்பைச் சுற்றி வளைத்துப் போட்டபடி கைகளை ஒருவாக்கில் மடித்து குழந்தையின் முதுகிலே அணில் கோடுகளாய் வருடித் தடவியபடியே நீண்ட நேரமாக அவனைத் தட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தார். இடது கைகள் வயலினின் உலோகக் கயிறுகளை அநாயசமாக சுண்டி மீட்பது போல மகனது தலைமுடியைக் கோதியபடியே இருந்தது.
அவரது எண்ணெய் பிசுபிசுப்பற்ற தலையும், குறுகிய தடித்த கழுத்தும், பருத்த அவரது உடலுமாக இயங்குகிற இசைவை பார்க்கப் பார்க்க அவர் ஒட்டு மொத்தக் கச்சேரியின் அத்தனை இசைவடிவங்களையும் தனது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் பொதிந்து வைத்திருப்பதைப் போலவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. தனது வாய் தாலாட்டை கேட்க முடியாத மகனின் உடலிற்குள் தனது உடலசைவின் வழியாக இணைத்துணுக்குகளின் சங்கேதக் குறியீடுகளைக் கடத்தியபடியே ஆழ்ந்து தூங்க வைத்துக் கொண்டிருந்தார். இதுகூட தாலாட்டின் ஒரு வடிவம் தானென உள்ளிற்குள்ளேயே நெகிழ்ந்து உருகிக் கொண்டிருந்தேன் நான். சற்று நிமிடத்திலே கண்கள் கிறங்கிச் சுழல, புல்வெளியில் பனித்திரள் பந்துகள் திரண்டு கொள்ள, காலர நான் எங்கோ நடக்கையில் பாதங்கள் பனித்துளியில் கூசியபடியும், வீசுகிற குளுமையின் ஈரத்தில் நனைந்து போய் அதன் உருகி வழியும் இயற்கையின் ஸ்பரிசத்தில் தணிந்து கிளர்ச்சியுற்று மெல்ல மெல்ல மயங்கி நான் வீழ்வதைப் போல உணருகையில் அந்தக் குழந்தையோடு நானும் என்னை மறந்து ஆழ்ந்து தூங்கத் துவங்கியிருந்தேன்.
ஒருகணம் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவளது தாளகதியினுடைய துடிப்பின் மயக்கம் எனக்குள்ளே பரவசமாய் இறங்கி கிறங்கிச் சொக்கி தூக்கநிலைக்குச் சென்று மீண்டதை நினைத்து வெட்கப்பட்டு நான் பெண்மையாய் சிரித்துக் கொண்டேன். அவளின் அங்கங்கள் ஒவ்வொன்றின் இசைமையினுடைய அசாதாரண உற்சவத்தைப் பார்த்து கொஞ்சம் நானும் மருண்டு தான் போயிருந்தேன். சற்று நேரத்தில் துயில் கொண்டுவிட்ட அந்தக் குழந்தையை அழைத்துச் சென்ற பின்பாக இன்னொரு அம்மா தன் தூங்காத மகளை அள்ளியெடுத்தபடி ஒரு மூலைக்குத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார். எப்போதும் அம்மாவின் மேல் கால்போட்டுத் தூங்குவதற்காக அடம்பிடிக்கும் குழந்தையின் செய்கையை உணர்ந்த தாயாய், அவள் தானிருக்கிற இடத்தின் பிரக்ஜையற்று ஒரு ஓரமாய் துண்டை விரித்து மகளை தன்னருகிலே கிடத்தியவுடன் குழந்தை தன்னியல்பாக தனது காலைத் தூக்கி அவள் மேல் போட்டுக் கொடியைப் போல சுற்றியபடி அப்படியே தூங்கியும்விட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் அடிக்கடி தூக்கத்திற்குச் சென்று மறுபடி மறுபடி ஏதேனுமொரு குழந்தையின் வீரிட்டலில் எழும் மற்றுமொரு பிள்ளையைப் போல நானும் அங்கே தூக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்கையில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. இத்தனை இரைச்சலிலும் கண்ணயர்ந்து கொஞ்ச நிமிடம் நான் தூங்கியது அதிசயமான விசயம்தான். ஆனாலும் இக்குழந்தைகளெல்லாம் காது கேளாமல் இருப்பதன் காரணமாக இந்த இரைச்சல்களின் தொந்தரவுகள் ஏதுமற்று தூங்கியெழுந்து பரிசோதித்த பின்னால் அனைவரும் திவ்வியமாக வீடு போய் சேருகிறார்கள். இந்தக் குழந்தைகளெல்லாம் எத்தகைய பாவப்பட்ட ஜீவன்கள் என்று உள்ளார உடைந்து பொறுமிக் கொண்டிருந்த நிமிடத்தில், எங்களது குழந்தைகளின் பெயர்கள் வாசிக்கப்பட்ட போதுதான் துணுக்குற்று அத்தகைய பரிசோதனை முடிவுகளை வாங்கிபடி மீண்டும் மருத்துவரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து நகர்ந்து கடைசியாக வெளியேறினோம்.
அதுவரை பெற்றோர்களுடன் துணையாக வந்திருந்த மனிதரைப் போலான உளவியலில் இயங்கிக் கொண்டிருந்த எனக்குள்ளே, மருத்துவன் என்கிற இன்னொரு ஜீவன் அப்போதுதான் பூதக்கண்ணாடியோடு மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தது. அந்தக் குழந்தைகளின் பரிசோதனை முடிவில் என்ன எழுதியிருக்கிறென்று பார், அவர்களுக்கு என்ன பிரச்சனை, காது கேட்டலில் எத்தனை சதவீதம் கேட்கிறது, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி ஏதேனும் குறிப்பிடிருக்கிறார்களா என்று பார்.. பார்.. என வெள்ளைக் கோட்டணிந்த மருத்துவன் ஒருவன் உள்ளிருந்து கூக்குரலிட்டபடியே தவித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் நிதானித்து அவர்களிடமிருந்து பரிசோதனை முடிவுகளை வாங்கிப் பார்த்த பின்னர், மனம் இன்னதெனப் புரியாத உணர்ச்சிக்குள் மூழ்கித் திளைக்கத் துவங்கிவிட்டது.
தொண்ணூறு சதவீத்திற்கும் மேலாக கேட்கும் திறனை இழந்த இரண்டு குழந்தைகளையும் காக்ளியார் இம்ப்ளாண்ட் செய்யப் பரிந்துரை செய்திருந்தது அந்த அறிக்கை. சட்டென்று மனம் மகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியிருந்தது. ஒருவழியாக இப்பெற்றோர்களை அழைத்து வந்து குழந்தைகளுக்கான காலம் கனிந்து கரைவதற்குள் அவர்களை சிகிச்சைக்குத் தயார்படுத்திவிட்டோம் என்கிற நிம்மதியான பெருமூச்சு நெஞ்சுக்குழியிலிருந்து இதமாக வெளியேறி காற்றில் கலந்தது. அடுத்த கணமே, அடச் சே! ஒரு குழந்தை பிறவிக் குறைபாடாய் இருக்கிறென்கிற அறிக்கையை அவர்கள் அளித்திருக்கிறார்கள், அதற்காக வருத்தப்பட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வதை விட்டுவிட்டு, மனம் ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தோடு துள்ளிக் குதிக்கிறது என்று என்னை நினைத்து நானே நொந்து கொண்டேன்.
இந்தக் குழந்தைக்கு எல்லாமும் சரியாய் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருமுறைகூட என் மனம் சிந்திக்கத் தவறியதை எண்ணி என்னை நானே எரிச்சலோடு திட்டிக் கொண்டேன். என் கையிலிருக்கிற அறிக்கைகளையும், அதை வாசித்தபடி வரிகளின் மேல் அலைவுறுகிற உருளைக் கண்களையும், நம் பிள்ளைக்கு அப்படி ஏதும் தீர்க்கமுடியாத குறையில்லை என்று சொல்லப் போகிற நடுங்கித் துடிக்கிற அந்த உதடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களிடம் என்னால் எதையுமே பேச முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு குறைபாடு உறுதியாகிவிட்டது, ஆபரேசன் தான் ஒரே தீர்வும், அதுவே இறுதியான முடிவென்றும் சொல்லிவிட்டு முன்னே போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரின் அறையின் வாசல் வந்துவிட, எங்களது முகத்தில் நிசப்தத்தை பூசியபடியே உள்ளே நுழைந்தோம்.

மருத்துவர் நிதானமாக அறிக்கையைப் படித்துவிட்டு அதைப் பற்றி விளக்கமாக அந்தப் பெற்றோர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் திரும்பித் திரும்பி என் முகத்தையே தவிப்போடு பார்த்தபடி இருந்ததைத் தவிர்க்க நான் அங்குமிங்கும் கண்களை அலைபாயவிட்டுக் கொண்டிருந்தேன். அவர்களது முகத்தில் நமது குழந்தையைச் சரியான இடத்தில், சரியான நேரத்தில் கொண்டு வந்து நல்லபடியாகப் பரிசோதித்துக் குறைபாட்டைக் கண்டுபிடித்துவிட்டோம் என்கிற திருப்தியேதும் தெரிகிறதா அல்லது எங்கு சென்றாலும் என் பிள்ளைக்கு எல்லாம் சரியாகிவிடும் என்ற வார்த்தைகளை உதிர்க்கிற எந்த மருத்துவர்களையும் காணவில்லையே என்கிற பரிதவிப்பு இருக்கிறதா என்று எதனையும் என்னால் உறுதிபட ஊகித்தறிய முடியவில்லை.
ஒருவழியாக காது வரை பரிசோதித்துவிட்ட பின்பாக காதிலிருந்து மூளை வரையிலும் நீளுகிற காது நரம்புகளையும், நரம்பு சென்று முடிகிற காது கேட்கிற மூளைப் பகுதியையும் பற்றி அறிந்து கொள்வதற்காக சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகளை எடுப்பதற்குப் பின்னர் அறிவுறுத்துகிறார்கள். அதன் வழியே காது நரம்பிலும், அது மூளைக்குள் பயணிக்கிற பாதையிலும், கேட்பதற்கும் பேசுவதற்குமான மூளைப் பகுதியிலும், வேறு எந்த குறைபாடும் இல்லையென்பதை உறுதி செய்கின்றனர். இப்பரிசோதனை முடிவுகளை மனக் கணக்காக முடிச்சுப் போட்டு இக்குழந்தைக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு, அதுவே நிரந்தரமான தீர்வு என்பதை மருத்துவரும் தெளிவுபட இறுதியில் அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சில் எவ்வித குழைவையோ தயக்கத்தையோ காண முடியாமல் நேரடியாக குழந்தையின் பிரச்சனையும், அதன் தீவிரத்தையும், அதற்கான சிகிச்சையும் மட்டுமே அறிவுறுத்திய பாவனையைக் கண்ட தருணத்தில் நான் மருத்துவன் என்கிற இடத்திலிருந்து எவ்வளவோ தொலைவு விலகி வந்துவிட்டேன் என்ற பிரம்மை என்னை அச்சுறுத்தியது.
இவையெல்லாம் முடிந்த பின்பாக அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்வதற்கான இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்ஸ் ரே மற்றும் இ.சி.ஜி போன்றவற்றை எடுக்க பரிந்துரைக்கின்றனர். அத்தனை பரிசோதனை முடிவுகளையும் பார்த்த பின்னர் முடிவாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சைக்கான அனுமதி பெற்று வருவதற்காக பரிந்துரைக்கின்றனர். காது கேளாத குறைபாடானது பிறவிக் குறைபாடாக இருக்கிற போது குழந்தைகளுக்கு வேறு எந்த உறுப்பிலாவது ஏதாவது பிரச்சனை இருக்குமா என்பதை அறிய வேண்டித்தான் இத்தகைய சிறப்பு மருத்துவர்களிடம் பரிந்துரை செய்கிறார்கள். ஆக, காது கேட்பதற்கான பரிசோதனைக்கு வந்து எல்லா சிறப்பு மருத்துவர்களையும் பார்த்த திருப்தி பெற்றோர்களுக்குக் கிடைத்துவிடும் என்று ஒருபுறம் நிம்மதியாகவும் இருந்தது.
அதாவது காது கேட்டல் குறைபாடுடன் இருதயம் தொடர்பான வேறு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க இருதய சிறப்பு நிபுநரிடம் சென்று இருதய ஸ்கேன் பரிசோதனைகளை எடுத்துப் பார்க்கிறார்கள். மூளை தொடர்பான பிரச்சனைகளையும் ஆட்டிசம் குறைபாடுகளையும் கண்டறிவதற்கு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையைப் பெற்றுவர அறிவுறுத்துகிறார்கள். குழந்தைகள் சிறப்பு மருத்துவரிடம் சென்று வயதிற்கேற்ப குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி இருக்கிறதா என்ற அறிக்கையை பெற்றுவரச் சொல்லுகிறார்கள்.
அதேபோல தொழிற்முறை சிகிச்சை நிபுணரிடம் ஒப்புதலையும், கண்களுக்கான சிறப்பு மருத்துவரைச் சந்தித்து பார்வைக் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து அறிக்கையை பெறுகிறார்கள். இறுதியாக எல்லா பரிந்துரைகளையும் பெற்ற பின்னால் அறுவைச் சிகிச்சைக்கான ஒப்புதலுக்காக மயக்க மருந்து நிபுணரைச் சந்தித்த பின்னால் இக்குழந்தைகளுக்கு காது கேளாமல் இருப்பதைத் தவிரித்த வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும், காக்ளியார் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான எந்தவித தடையுமில்லை என்பதையும் அறிக்கையாகப் பெற்றுக் கொண்டு ஆரம்பத்தில் சந்தித்த மருத்துவரைப் பார்க்கச் சென்றோம். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதான சிறு புன்னகையுடன் வரவேற்றுவிட்டு மேற்கொண்டு அறிக்கைகளை காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சிகிச்சைக்கான ஒப்புதல் வரும்வரையிலும் காத்திருக்கச் சொல்லி அறிவுறுத்திவிட்டு எங்களை அவர் வழியணுப்பி வைத்தார்.
நாங்கள் அத்தனை அறிக்கைகளையும் நகலெடுத்து எங்களுக்கும் காப்பீட்டு அலுவலகத்தில் ஒன்றுமாக கொடுத்துவிட்டு கிளம்புகையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் தளர்ந்து போயிருந்தோம். நாங்கள் இனி வீடு சென்று சென்னை முதன்மைக் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து சிகிச்சைக்கான ஒப்புதல் அழைப்பு வருகிற வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான். எல்லாம் நினைப்பதபடியே சிறப்பாக முடிந்துவிட்டது. இரண்டு குழந்தைகளுக்கும் உண்டான எதிர்காலத்திற்கு நல்லதொரு வழியை ஏற்படுத்தியிருக்கிற திருப்தியோடு நான் எனது பணிக்குத் திரும்பியாக வேண்டும். வாரம் முழுவதுமாக பரிசோதனைகள் செய்ய, பலதரப்பட சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்கவென்று ஓயாது ஓடிக் கொண்டு தளர்ந்து போயிருந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் சோர்வோடு திரும்பிப் பார்த்தேன். எல்லோருடைய கண்களிலும் ஒளியிழந்து போய் உடலெங்கும் தளர்ந்து எலும்புகளற்ற மனிதர்களைப் போலதொரு சதைப் பிண்டங்களாய் சக்தியற்று நின்று கொண்டிருந்தனர்.
எனதருகே மெல்ல நகர்ந்து வந்த பெற்றோர்கள் எல்லோரும் ஒருவித கசப்பான புன்னகையை உதிர்த்துவிட்டு கிணற்றுக்குள்ளிருந்து எழுகிற வற்றிய குரலோடு, நாங்க ஆபரேசன் செஞ்சுகுறோம் சார் என்றபடி பேசத் துவங்கினர். நாங்க எங்க கொழந்தைக்கு செக்கப் பண்ணும் போதே பாத்தோம், அவங்க எந்த சத்தத்துக்கும் இம்மியும் அசையவே இல்ல. அங்க வந்த மத்த கொழந்தைகளோட அம்மாங்க கிட்டயும் விசாரிச்சுப் பாத்தோம். இது பண்ணிக்குறது நல்லது தான்னு சொன்னாங்க. அப்படியும்கூட கடைசி வரைக்கும் நாங்க நம்பிக்கையில்லாமத் தான் இருந்தோம். ஆனா ஆபரேசன் பண்ண கொழந்தைங்களைப் பாத்த பின்னாடி எல்லாம் மனசு மாறிடுச்சு. அவங்க அம்மாகிட்ட பேசுனப்போ கட்டாயம் பண்ணுங்க, இந்த வாய்ப்பைத் தவற விட்டுடாதீங்கன்னு எடுத்துச் சொன்னாங்க. அந்தக் கொழந்தைங்க கிட்டயுமே போய் பேசிப் பாத்தோம். அவங்க சட்டுன்னு எங்களையும் அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, மாறி மாறி உம் பேரென்ன, என்ன பிடிக்கும், யாரைப் பிடிக்கும்னு கேள்வியா கேட்டு நாங்களே தவிச்சுப் போயிட்டோம். ஆனா அவங்க எல்லாத்துக்கும் ஒண்ணு விடாம பதில சொல்லி எங்கள அழ வச்சுட்டாங்க.
அவர் பேசி நிறுத்திய இடத்தில் அவரது முகம் கலங்கிய குளத்தின் மங்கலான ஒளியை நிறைத்துக் கொண்டு கண்ணீரைத் தாரை வார்த்தது. நானும் அங்கே விழவிருந்த இரண்டு சொட்டுக் கண்ணீரைக் காப்பாற்றிக் கொண்டு நிறைந்த மனதோடு வீடு வந்து சேர்ந்தேன். ஒருவழியாக எனது நம்பிக்கை என்னைக் கைவிடாமல் காப்பாற்றிவிட்டது.
ஆனாலும் அடுத்ததாக காளீஸ்வரிக்கும் பிரியாவிற்குமான அழைப்பு வந்து சிகிச்சைக்குச் செல்லும் முன்னர் அவர்களைத் தேற்றும் வகையில் ஆபரேசன் பற்றிய விவரங்களைப் பேசி அந்த நம்பிக்கையிலேயே தக்க வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்ந்து கொண்டேன். அப்படி நான் அவர்களுக்குச் சிகிச்சை பற்றி விளக்கிய விசயங்களையும், அதன் பின்பு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளையும் பற்றி நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 13 – டாக்டர் இடங்கர் பாவலன்
நிரந்தரமான தீர்வுக்கான தரிசனங்கள்
எப்போதும் எனக்கான நாட்கள் வெகு சீக்கிரமாகவே இருண்டுவிடுகிறது. அதிகாலைப் புறப்பாட்டிலிருந்து, துயில் கொள்ளச் செல்கிற சாமம் வரையிலும் எனது தேடலின் விளைவாகக் கண்டு கொள்கிற நிகழ்வுகளின் அத்தனை ஞாபகங்களையும் மெல்ல மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்கும் போதே மூளை அயர்ந்து விரைவில் தூக்க நிலைக்குச் சென்றுவிடுகிறது. கடந்த காலத்தின் நினைவுகளோடு, அன்றைய பகல் பொழுதுகளின் அவஸ்தைகளையும் ஒரு தேர்ந்த தறியோட்டுகிறவனின் நூற்பாவுதலைப் போல அழகழகாக வெவ்வேறு நிகழ்வுகளைப் பிண்ணிப் பிண்ணி விதவிதமான கனவுகளை இரவில் நான் நெய்தபடியே இருக்கிறேன். இதனாலே என் மனம் எப்போதும் கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடையிலான ஒருவித மயக்கத் தோற்றத்திலேயே இருக்கிறது.
நேற்றைய தினத்தின் முடிவில் மரபணு மருத்துவத்தைப் பற்றி மனம் முடிச்சுப் போட்டுப் பார்த்துக் கொண்ட விசயங்களையெல்லாம் இன்றைய இரவின் கனவுகள் யாவும் ஒவ்வொன்றாக ஞாபகக் கிடங்குகளில் இருந்து எடுத்து ஆர்வமாக புரட்டிப் பார்த்துக் கொள்கிறது. இந்த சமயத்திலே நான் கனவில் இருக்கிறேனா அல்லது நேற்றைய தினத்தில் இருக்கிறேனா அல்லது இரவோடு இருளாக எழுந்து எதையோ என் நாட்குறிப்பில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்கே குழப்பமாகிவிடுகிறது. இதைப் பற்றி யோசிக்கும் போதே இந்த சிந்தனையும்கூட எனது நனவிலியில் தான் எழுகிறதா அல்லது இப்படி சிந்திப்பதும்கூட கனவில் தான் நிகழுகிறதா என்று கொஞ்சம் பதட்டமாகிவிடுகிறது. ஒருவேளை இது பைத்தியக்காரத்தனத்தின் ஆரம்ப கட்ட மனநிலை தானோ என்னவோ?
மெல்ல மெல்ல தலை கனத்து, அறையெங்கும் புழுக்கமாகி, உடல் உஷ்ணமேறுவதைப் போல உணருகையில், பருத்த உடலை அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு, கண்களைக் கொஞ்சம் அயர்ச்சியோடு விழித்துப் பார்க்கையில் அறை இன்னமும் இருளைப் போர்த்தியபடி அப்படியே தான் இருக்கிறது. இந்த இருள், பன்னிரெண்டு மணிக்கு முந்தைய நேற்றைய இரவா அல்லது அதற்குப் பின்பான அடுத்த நாளைய இரவா என்று ஒரு கணம் அதிர்ந்து கண்களைச் சுருக்கி கடிகாரம் தாங்கிய சுவர்களை உற்றுப் பார்க்கிறேன். என் துயரம் படிந்த பாவத்தின் கண்களுக்கு எதுவுமே புலப்படுவதில்லை. இந்த இருளில் நான் விழித்திருக்கிறேனா அல்லது கண்கள் மூடிய நிலையிலேயே இந்த இருட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறேனா என்று இந்த காரிய இருள் கூட ஒருவித தோற்ற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த நிமிடம் எழுந்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இருள் முழுக்கச் சூழ்ந்திருக்க தன்னந்தனியனாக வெறுமனே படுக்கையில் படுத்தபடி மேற்கூரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலொரு வேதனை எதுவுமே இருக்காது. ஆனால் இந்தச் சமயத்தில் தான் தெளிந்த நீரைப் போல மனம் தெளிவாகச் சிந்திக்கத் துவங்குகிறது. எப்போதும் எனக்குள்ளே எழுகின்ற கேள்விகளுக்குப் பதிலான கேள்விகளை இந்த இரவிலே தான் நான் கண்டிருக்கிறேன். நான் யார், என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் சரியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா, சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேனா என்பது போன்ற கேள்விக்கு மேல் கேள்விகளை இந்த இருளோடு பரிமாறிக் கொள்வது என்னவோ கண்ணாடி முன்னின்று என்னை நானே பார்த்துக் கேட்டுக் கொள்வதைப் போலவே இருக்கும்.
அடிப்படையில் எப்போதும் ஒரு புத்தனின் சீடனாக என்னை நானே வருத்திக் கொள்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் அவரது ஞானம் பெற்ற தரிசனங்களை விடவும் அத்தகைய தருணங்களைக் கண்டடைவதற்காக அவரது பயணப்பட்ட பாதைகளும், அடைந்த பயணங்களுமே அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய மகத்துவமான புத்தனிடமிருந்து தான் பயணம் என்பது வெளியே தேடியலைவதும், அதன் வழியே நமக்குள் ஆழ்ந்து பயணிப்பதற்கான சாளரத்தின் சாவிகளைக் கண்டுபிடித்தபடி அகத்தினுள் நுழைந்து தீர்க்கதரிசனங்களைக் கண்டு கொள்வதுமான அற்புதங்கள் நிறைந்த ஒன்று என்பதைக் கண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தினால் தான் ஒருவேளை இப்படியான சிந்தனைக்குள் சிக்குண்டு உழல்கிறேனா என்றும்கூட எனக்கு விளங்கவில்லை.

பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளைத் தேடியலைகிற என்னுடைய பயணத்திற்கு உண்மையிலே எது காரணமாக இருக்க முடியும்? நான் ஒரு மருத்துவராக இருப்பது மட்டுமே இக்கேள்விக்கான விடையாகிவிட முடியுமா? ஆனாலும் எல்லா மருத்துவர்களும் இப்படிப் பயணப்படவில்லையே! நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? ஒருவேளை இக்குழந்தைகளின் மீதான பரிதாபகரமான மனநிலை தான் என்னை இயக்குகிறதா! அப்படியென்றால் இக்குழந்தைகளைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் பெற்றோர்களால் நான் அவமானகரமாக நடத்தப்படும் போது அது ஏன் என்னுடைய சுயத்தைத் தட்டியெழுப்பி இப்பயணத்திற்கான முடிவை நோக்கி என்னை நகர்த்தவில்லை?
எனது பயணத்தின் இதயத்தை நோக்கிய தேடலின் அர்த்தங்களை ஆழ்மனதினுள் எழுகின்ற கேள்விகளாலே இந்தக் காரிய இருளின் பார்வைக்குப் புலப்படாத கண்களால் துலாவிப் பார்க்கிறேன். உண்மையில் எதற்காக இந்த பயணம், யாருக்காக இந்த பயணம், இந்தக் குழந்தைகளுக்காகவா அல்லது எனக்காகவா? எனக்கான வாழ்வின் அர்த்தங்களை இக்குழந்தைகளுக்கான தேடலின் வழியே கண்டு கொள்வதற்காகத் தான் ஒருவகையில் நான் முயலுகிறேனா? ஒருவேளை இக்குழந்தைகளுக்காக நிச்சயிக்கப்பட்ட வாழ்வை உறுதி செய்வதற்கான பாதையில் தான் என்னை நானே தேடி கண்டுகொள்ளப் போகிறேனோ? இக்கேள்விகள் ஒவ்வொன்றும் கல்தூண்களிலிருந்து கணீரென்று வருகிற சப்தங்களைப் போல எனக்குள்ளிருந்து விம்மியபடி எழவே செய்கிறது. இத்தகைய முடிவுறா கேள்விகளின் ஓடுகளை முதுகிலே சுமந்தபடியே தான் இன்னும் விடியாத இன்றைய தினத்தின் விடியலை நான் துவங்கியிருக்கிறேன்.
விடிந்தும் விடியாததுமான உன்மத்தப் பொழுதில் பறவைகள் தங்கள் கூடுகளிலிருந்து வானில் பறக்கத் துவங்கியிருக்கிற அந்த நிச்சலனத்தில் என்னுடைய மனமும் கூட்டை விட்டு பறக்கத் துவங்கியிருந்தது. ஒவ்வொரு விடியலும் எனக்கான போதி மரத்தை என் படுக்கையருகே கொண்டு வந்து விட்டுச் செல்கிறது. எனது காலையின் விழிப்பு ஏதோவொரு வாழ்க்கை மீதான திறப்பை உணர்த்தியபடியே இருக்கிறது. பிரக்ஜையுடன் எழுந்து அமர்ந்தவுடனே சட்டென்று மனம் வெறுமை கொள்ளத் துவங்கிவிடுகிறது. என்ன செய்யலாம், என்று யோசிக்கத் துவங்கையிலேயே நிகழ்காலத்தின் அழைப்பைத் தவிர்த்தபடி மனமோ மீண்டும் நேற்றைய அவஸ்தைக்குள்ளாக வலிய வலம் வரத் துவங்கிவிடுகிறது.
இத்தனை மாதங்களாக அலைந்து திருந்து கொண்டிருந்தும்கூட என்னால் இன்னும் இக்குழந்தைகளுக்கான ஆத்மார்த்தமான தீர்வைக் கண்டடைய முடியவில்லையே என்கிற ஏக்கம் என்னுள்ளிருந்து பெருமூச்சாய் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மலைப் பயணத்தின் பாதைகளற்ற வனாந்திர வெளியில் நெடுந் தொலைவு வந்துவிட்டு நட்ட நடுக்காட்டில் வந்த வழியெது, போகும் பாதையெது என்று ஒருகணம் திகைத்து நிற்பதைப் போல அடிக்கடி மனமும் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. ஆனாலும் இந்த வாழ்வில் நான் கற்றுக் கொண்டதெல்லாம், நாம் எதைத் தேடுகிறோம் என்கிற தெளிவு இருக்கிற வரையிலும் நாம் எதிலும் தோல்வியடையப் போவதில்லை என்பதைத் தான். ஆம், தெளிவான ஆற்று நீரில் தானே அடியாழம் காண முடியும்.
இந்த கணம் நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன், எதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஜையோடு தான் இருளின் போர்வைக்குள்ளாக அமர்ந்திருக்கிறேன். பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கான நிரந்தரமான தீர்வை உறுதிபடுத்தக் கூடிய மரபணு மருத்துவத்தைப் பற்றிய நிஜம் ஒருவகையில் எனக்குப் புரிந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் இதைச் செயல்படுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வார்களோ என்கிற எதார்த்தமும் என்னைச் சோர்வடையத் தான் செய்கிறது. ஆனாலும் ஆர்.பி.எஸ்.கே, எஸ்.எஸ்.ஏ போன்ற அத்தனை மருத்துவ வசதிகளிருந்தும் இன்னும்கூட கண்டறியப்படாத இக்குழந்தைகளைத் தேடி, ஊர் ஊராக சுற்றித் திரிந்து கொண்டு, இரவெல்லாம் தூக்கத்தைத் தொலைத்து, கெட்டக் கெட்ட கனவுகளில் உழன்று, ஊருறங்கும் நடுநிசி நேரத்தில் விழிப்புற்றுக் கிடப்பதற்கான காரணத்தை நான் எப்படியேனும் கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டும்.
ஒருவேளை தூக்கத்திற்குச் சென்ற என்னுடைய உடல் இந்த அதிகாலைப் பொழுதில் விழிக்கத் தவறி மரணித்துவிட்டால்கூட இந்த உலகம் எப்போதும் போல இயங்கத்தான் போகிறது. என் இறப்பு இங்கே ஒன்றையும் அசைத்துவிடப் போவதில்லை தான். எனது இறப்பிற்குப் பின்னாலும்கூட பிறவிக் குறைபாட்டோடு பிறக்கக்கூடிய குழந்தைகள் இன்னும்கூட ஆயிரக்கணக்கில் பிறந்து கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். அவர்களில் பாதிக்கும் மேல் நம்முடைய குறைபட்ட மருத்துவக் கட்டமைப்பின் வழியே கண்டறியப்படாமல் ஆறு வயதைக் கடந்து அன்றாடம் மாற்றுத் திறனாளிகளாக உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள்.

அப்படியானால் எனது தேடலின் பயணாக கேளாதிருக்கிற, வாய் பேசாதிருக்கிற குழந்தைகளைப் பேசவும், கேட்கவும் வைக்க முடியுமென்று கண்டறிந்த முயற்சிகளெல்லாம் என்னுடைய இறப்போடே முடிந்து போய்விடக் கூடிய ஒன்றாய் இருந்துவிடுமோ என்கிற நடுக்கம் வேறு என்னை நிலைகுலையச் செய்கிறது. இவ்வளவு காலமாய் நான் அலைந்து திரிந்து அடைந்த வேதனைகளும் துயரங்களும் இறுதியில் வீணாய் தான் போகப் போகிறதா என்றும் மனம் அச்சம் கொள்ளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை நான் இன்னும்கூட ஒரு பூஜ்ஜியத்தின் சூன்யத்தில் தான் நின்று கொண்டிருக்கிறேனா என்று சட்டென்று வெறுமை வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளவும் செய்கிறது.
மருத்துவனாக வாழப் பணிக்கப்பட்ட என் வாழ்வு முடிவிற்கு வரும் காலத்திற்கு முன்னேயே இக்குழந்தைகளுக்கான தீர்க்கமானதொரு நிரந்தர தீர்வைக் கண்டுபிடித்துவிட வேண்டும். அதை தமிழகமெங்கிலும் நடைமுறைப்படுத்திய பின்பான அடுத்த நாளே நான் இறந்து போனால்கூட ஒருவகையில் என் வாழ்வு அர்த்தமானது தான். ஆனால் அதுவரையிலும் எக்காரணம் கொண்டும் துவங்கிய இப்பயணத்தை நான் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதை தீர்மானித்தோடு தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவகையில் தூக்கத்தைத் தொலைத்த இந்த இரவும்கூட அந்தப் பயணத்தின் ஒரு பகுதிதானோ என்னவோ!
இருளின் குளத்திற்குள் நீந்தியபடியே நான் பழக்கப்பட்டுப் போன திசையில் நகர்ந்து ஒரு பார்வையற்றவனின் செய்கையைப் போல சுவற்றில் கைகளை மேடு பள்ளங்களாக நகர்த்தி மின் விளக்குகளுக்கான பட்டனை அழுத்திய நொடியில் கிள்ளிவிட்டு வீரிட்டு அழும் குழந்தையைப் போல பளிச்சென்று அறையில் விளக்கு இரைந்து ஒளிர்ந்தது. அதுவரையில் துயில் கொண்டிருந்த அறையும்கூட சோம்பலை முறித்துக் கொண்டு கொஞ்சம் புரண்டுப்படுத்தது. ஜன்னலோரத்தில் கிடத்தப்பட்ட எனது பழுப்பு நிறத்திலான நாற்காலி மேசையைப் பார்த்தேன். அது இன்னமும் சாளரத்தின் வெளியே எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. அதன் மடியில் நேற்றிரவு அணைக்கப்படாமலே மூடி வைக்கப்பட்ட மடிக்கணினியிலிருந்து புள்ளி போல பச்சை விளக்கொன்று கண்சிமிட்டி ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்தது.
மடிக்கணினியின் நாடியைப் பிடித்து நிமிர்த்தி முகத்திரையைத் திறக்கையில் நீலத்திரை ஒளிர்ந்து மெல்ல மெல்ல அதிலே எந்த தேசத்திலோ காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டு அழகாய் சிரிக்கும் குழந்தையின் படம் முன்னே தெளிவாகத் துவங்குகிறது. இப்போதெல்லாம் என்னுடைய அறைகளை இக்குழந்தைகளுக்கான பிரத்தியேகமானப் பகுதியாகவே மாற்றி வைத்திருக்கிறேன். மடிக்கணினியின் முகப்பிலும், அலைபேசியின் திரைகளிலுமென எல்லாவற்றிலும் எனது கவனம் எதன் திசையிலும் திரும்பிடாத வகையில் இக்குழந்தைகளின் புகைப்படத்தையே எதிர்படும் நோக்கில் வைத்திருக்கிறேன்.
சுவரெங்கிலும் இக்குழந்தைகளின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அறைகளை அலங்கரித்தபடியே இருக்கின்றன. சோகம் ததும்புகிற அக்குழந்தைகளின் புகைப்படங்கள் யாவும் மேலிருந்து மின்விசிறிகள் உமிழுகிற காற்றிற்குப் படபடத்துச் சப்தமிடுமிற போது எழுகிற அரவங்கள் யாவும் அவர்களின் அழுகுரல் போலவே எனக்குள்ளே ஏதோ செய்யத் துவங்கிவிடும். என்னை நானே மனதளவில் வதைத்துக் கொள்வதற்காக வலிந்து நானே ஏற்படுத்திக் கொண்ட யுக்தி இது. அப்படி ஒவ்வொரு முறையும் புகைப்படத்தைக் காணுகையில் எனது பயணத்தைப் பற்றிய ஞாபகங்களில் மூழ்கி அதனது பாதையை நோக்கி நான் மீண்டும் நகரத் துவங்கிவிடுவேன்.
இப்போதெல்லாம் தேடலின் பாதைகள் அமர்ந்த இடத்திலேயே எல்லாம் சாத்தியமாகிவிட்டது. அலாவுதீன் பூதத்திடமிருந்து தனக்கு வேண்டியதை இருந்த இடத்திலிருந்தபடியே கேட்டு வாங்கிக் கொள்வதைப் போல, இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அலைபேசியின் தொலை தொடர்பு வசதிகளின் வழியே உட்கார்ந்த இடத்திலேயே கேட்கிற எல்லாவற்றையும் எளிதாகவே பெற்றுவிட முடிகிறது. ஜன்னல் வழியாக உலகைப் பார்த்துக் கவியெழுதிக் கொண்டிருந்த காலங்கள் போய் கணினித் திறப்புகளின் வழியே ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் பார்த்து அத்தனையும் கணித்துவிடக்கூடிய காலத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். இந்தக் கணினியின் வழியே வீட்டிற்குள்ளிருந்தபடியே இவ்வுலகைக் காணவும், இவ்வுலகின் எந்த மூலைகளிலிருந்தும் நம் அனுமதியின்றி யாரோ ஒருவர் நம்மை உளவு பார்க்கவுமான ஆபத்தான இடத்திற்கு வந்ததை எண்ணி அச்சப்படுவதா அல்லது ஆச்சரியப்படுவதா என்பதைப் பற்றி என்னால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

ஆரம்பத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் இக்குழந்தைகளைக் கண்டுபிடித்துக் குணப்படுத்த முடியாமல் போனதற்கு, “குழந்தைகள் வளர வளர பேசிவிடுவார்கள், அவனது அப்பா தாமதமாகப் பேசியதைப் போல பையனும் தாமதமாகத் தான் பேசுவானோ என்னவோ, அம்மா அப்பாவென்று ஒருசில வார்த்தைகளைப் பேசுகிற போது இன்னும் கொஞ்சம் காலம் போனால் அவனாகவே பேசிவிடுவான் தானே, இது பரம்பரை நோயாக இருக்கையில் எப்படி இதைச் சரி செய்துவிட முடியும், அறுவை சிகிச்சையின்றி மருந்து மாத்திரைகள் மூலமாகவே இதைச் சரி செய்திட முடியுமா, நாட்டு மருந்துகளின் வழியே இந்நோயிற்கு எதுவும் சாத்தியப்படாதா, இதற்கான சிகிச்சையை தலையில் செய்வதானால் அது அவர்களின் மூளையைப் பாதித்துவிடாதா” போன்ற படிக்காத பாமர மக்களாகிய பெற்றோர்களின் தவறான புரிதல்களே காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியென்றால் இப்பெற்றோர்களுக்கான சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அக்குழந்தைகளை சிகிச்சைக்கு தயார்படுத்துவது தான் ஆகச்சிறந்த வழியாக இருக்குமென்கிற புரிதல் தான் எனக்கு ஆரம்பத்திலே இருந்தது.
ஆனால் குழந்தைகள் எந்த வயதில் பேசத் துவங்குவார்கள், எந்த வயதில் என்னென்ன வார்த்தைகள் பேசுவார்கள், குழந்தைகள் நாம் செல்வதைக் கேட்டு எப்படிப் பேசக் கற்றுக் கொள்கிறார்கள், குழந்தைகளுக்குக் காது கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும், அவர்களுக்கு காது கேளாமல் போனால் ஏன் வாய் பேசாமலும் இருந்துவிடுகிறார்கள், இதற்கான காரணங்கள் என்னென்ன, இக்குறைபாடுகளை எப்படி நம் வீட்டுக் குழந்தைகளிடம் கண்டுபிடிப்பது, ஒருவேளை பிரச்சனை இருப்பதைச் சந்தேகிக்கும் பட்சத்தில் அதை எப்படி, யாரிடம் சென்று, எந்த பரிசோதனைகளின் வழியே உறுதி செய்யலாம், அவர்களுக்கான உரிய சிகிச்சை முறைகள் என்னென்ன இருக்கிறது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை அளிப்பதின் வழியே தான் இக்குழந்தைகளுக்கான தீர்வை நோக்கிய பாதையில் இப்பெற்றோர்களை நகர்த்த முடியும் என்பதை நான் ஒரு தீர்மானமாகவே வைத்திருந்தேன். ஆனால் இக்குழந்தைகளுக்காகத் தேடியலைந்து ஓரிடத்தில் வந்து இப்போது நிற்கிற போது எனது முடிவைப் பற்றி மீண்டும் ஒருமுறை பரிசீலித்துப் பார்த்தால் அது மலையை நகர்த்துவது போன்ற அசாத்தியமானதும் அபத்தமானதுமாக இருப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் தமிழகத்தின் எங்கோ ஒரு குக்கிராமத்தின் மூலையில் அமர்ந்து கொண்டு எனக்குத் தெரிகிற அல்லது தெரிந்தவர்களின் வழியே காது கேளாதவர்கள் என்று அறியப்படுகிற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மட்டுமே நான் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு இருந்தால், என்னால் கண்டறிய முடியாமல் போகிற தமிழகம் முழுக்க இருக்கிற ஏனைய குழந்தைகளின் கதி என்னவாகும் என்கிற கவலைகள் தான் இப்போது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன. இரவு படுக்கைக்கு செல்கிற ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் என்னால் கண்டறியப்படாத ஒரு குழந்தை, ஆறு வயதைக் கடந்து மாற்றுத்திறனாளி என்கிற வாழ்நாள் அடையாளத்தோடு தான் வாழப் போகிறது என்கிற குற்றவுணர்ச்சியால் நான் தினந்தினம் தூக்கம் வராமல் தவித்தபடியே இருக்கிறேன்.
இந்தக் குழந்தைகளையெல்லாம் தேடியலைகிற போது ஆறு வயதை நெருங்குகிற நெருக்கடியில் எத்தனையோ பேரை நான் சந்தித்திருக்கிறேன். எனது இருப்பிடத்திலேயே இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போன எத்தனையோ குழந்தைகள் இருக்க, தமிழகமெங்கும் இருக்கிற குழந்தைகளுக்காக ஒரு மருத்துவனாக நான் என்ன தான் செய்யப் போகிறேனோ என்கிற வேதனையில் உழன்ற நாட்களெல்லாம் மாதவிடாய் வந்த பெண்ணின் நாட்களைப் போலவே அடிவயிற்றில் ஏதோ செய்யத் துவங்கிவிடும். இப்போது எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமே இல்லையா, இதற்கான நிரந்தரமான தீர்வே கிடையாதா, நான் இறந்துவிட்டால் என்னோடே இக்கதையெல்லாம் முடிந்து போய்விடுமா என்கிற பதைபதைப்புகள் தான் எனது இதயத்தை வந்து முழுவதுமாய் நிறைக்கின்றன.
ஆகாசத்திலிருந்து ஒளியை வாளியில் அள்ளி எல்லோர் வீட்டு முற்றத்திலும் தெளித்துவிட்டு அதிகாலைப் புறப்பாட்டை துவங்கியிருக்கிற இந்தக் கிழக்குச் சிவந்த வானத்தைப் பார்க்கிற போதெல்லாம், ஒவ்வொரு நாளும் உதிக்கிற இந்த அற்புதமான விடியல்களைப் போலவே இக்குழந்தைகளின் வாழ்விலும் என்றாவது ஒரு நாள் நிரந்தரமான விடியலை என்னால் ஏற்படுத்திடவே முடியாதா என்கிற ஏக்கங்கள் தான் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய மனநிலையில் தான் ஜன்னலைப் பார்த்தவாறு இப்போது மடிக்கணினியின் முன்னால் வந்து அமர்ந்திருக்கிறேன்.
என்னைப் பொருத்தவரையில் நான் இங்கே இருந்தாலும் இல்லாவிட்டாலும் இக்குழந்தைகளுக்கான நிரந்தரமான தீர்வென்பது சாத்தியப்பட வேண்டும். குழந்தைகள் எவரும் காது கேளாத குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய் மாற்றுத்திறனாளியாக மாறுகிற அவலம் இனிமேல் ஒருபோதும் நடக்கக் கூடாது. எனது தேடலின் வழியே தமிழகத்தின் எந்தவொரு மூலையிலும் இருக்கிற குழந்தைகளுக்கு நிரந்தரமான தீர்வென்பது கிடைக்கப் பெறாத பட்சத்தில் என்னுடைய இவ்வளவு நாளைய பயணத்திற்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை என்றாவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆக, இக்குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கிற இடத்திலேயே, அங்கிருக்கிற வசதி வாய்ப்புகள் மூலமே இத்தகைய நிரந்தர தீர்வானது நிச்சயமாக்கப்பட வேண்டும். அவர்கள் குழந்தையாய் பிறக்கின்ற இடத்திலேயே அவர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா இல்லையா, என்ன பிரச்சனை, எதனால் பிரச்சனை போன்ற விசயங்களெல்லாம் பெற்றோர்களுக்குக் கிடைத்துவிட வேண்டும். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு என்ன பிரச்சனையென்று தெரியாமல் ஆறு வயது வரையிலும் காத்திருக்கத் தேவையிருக்காது அல்லவா! ஆனால் இதுவெல்லாம் நிஜத்தில் சாத்தியம் தானா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத் தான் கணினியின் வலைப்பக்கத்தைப் புரட்டியபடி பக்கம் பக்கமாக இந்த அதிகாலையிலே தேடிக் கொண்டிருக்கிறேன்.
எனது மருத்துவ நண்பர்களிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு இடைச்செருகலைப் போல அவர்கள் பகிரிந்து கொண்ட சில விசயங்களைத் தான் இப்போது நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது குழந்தைகள் பிறக்கின்ற போதே, அவர்களுக்கு அந்தந்த மருத்துவமனையில் வைத்தே காது கேட்பதைப் பரிசோதிப்பதற்கான திட்டமொன்று நடைமுறையில் இருப்பதாகவும், அத்தகைய விவரங்களை ஏற்கனவே இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கலைக்கூடமானது (IAP-Indian Academy of Pediatrics) தங்களது இணையத்தில் வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறிய விசயங்களை வைத்துக் கொண்டுதான் இப்போது ஆவலோடு கணினியின் முன்னால் அமர்ந்திருக்கிறன்.

உண்மையில் எனக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பிறக்கிற அத்தனை குழந்தைக்கும் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலகளாவிய அளவிலே அறிவுறுத்தி சட்டங்களும் திட்டங்களும் இயற்றியிருப்பதைப் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதைப்போலவே இவ்வுலகில் பிறக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் காது கேட்கிற பரிசோதனையைச் செய்து காது கேட்டல் திறனை உறுதி செய்த பின்னர் தான் அவர்களை மருத்துவமனையிலிருந்தே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கிற ‘பச்சிளம் குழந்தைகளுக்கான கேட்கும் திறன் பரிசோதனைத் திட்டம்’ ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் நான் உறைந்து போனேன்.
பிறந்தவுடனேயே குழந்தைகளுக்குக் காது கேட்பதைக் கண்டறிய முடியுமா, அதை காது கேட்கும் பரிசோதனைகளின் வழியே உறுதிப்படுத்திட முடியுமா, அப்படியான திட்டங்கள் நிச்சயமாகவே இருக்கிறதா, தமிழகத்தில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன என்பது போன்ற கேள்விகள் அடுத்தடுத்து மழைச் சாரலைப் போல எனக்குள் விழுந்து கொண்டே இருக்கின்றன. நான் மருத்துவக் கல்லூரி மாணவனாய் இருந்த ஐந்தரை ஆண்டு காலம் வரையிலும் இப்படியொரு திட்டம் இருப்பதாகப் படித்ததோ, அப்படியாக குழந்தைகளைப் பரிசோதித்தை நான் பார்த்ததோ எனது நினைவிலேயே இல்லை. அப்படியிருக்க என்ன தான் இத்திட்டத்தில் சொல்ல வருகிறார்கள் என்பதைப் பற்றிய அதிர்ச்சியோடும், நாம் தேடுகிற விசயத்திற்கு ஒருவேளை இதுவே தீர்வாக இருக்குமோ என்கிற அலாதியோடும் கணினியின் பக்கங்களை அவசர அவசரமாக புரட்டிக் கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் இத்திட்டம் பற்றிய நிஜம் எனக்குப் புலப்பட வேண்டுமானால் முதலில் இதனது வரலாற்றுப் பாதைக்குள் நான் பயணித்தாக வேண்டும். பொதுவாக இணையத்திற்குள் நுழைந்துவிட்டாலே ஏதோவொரு மாயாஜால உலகத்தினுள் பிரவகித்துவிட்ட பரவசத்தைப் போலொரு உணர்வு தொற்றிக் கொள்கிறது. அங்கே சாமந்திப் பூக்களை அள்ளியெடுத்து நூலில் வரிசைபடுத்திக் கோர்ப்பதைப் போல பிரபஞ்சம் முழுமைக்கும் நடக்கிற விசயங்களையெல்லாம் ஒரே கோர்வையாக்கி நம் கண்முன்னே எளிதாக விளக்கிக் காட்டிவிடுகிறது. ஆனாலும் பிறக்கையிலேயே காது கேட்பதைப் பரிசோதிப்பது பற்றிய திட்டத்தை வெவ்வேறு இணையங்களின் வழியாக தீவிரமாக தேடிப் பார்த்து தான் எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
இத்திட்டத்தின் துவக்க காலம் என்ன, இத்திட்டம் துவக்குவதற்கான உந்துதலாக இருந்த நிகழ்வு எது, இத்திட்டத்தை முதலில் யார் முன் வைத்தது, இதற்கான திட்ட வரையறையை யார், எப்போது கொண்டு வந்தார்கள், இத்திட்டத்தை அமல்படுத்திய நாடுகள் என்னென்ன, அதைச் செயல்படுத்துவதற்காக அந்நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன, இத்திட்டம் இந்தியாவிலும் தமிழகத்திலும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு நான் வெவ்வேறு வார்த்தைகளின் வழியே இணையத்தின் பக்கங்களில் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளுக்குப் பின்பான காலத்திலிருந்தே குழந்தைகளிடம் காது கேளாத குறைபாடிருப்பதை மருத்துவமனை அளவிலேயே கண்டறிவதற்கான முன்னேற்பாட்டை மருத்துவ ஆய்வாளர்கள் எடுத்திருப்பதைப் பற்றிய ஆச்சரியமான தகவல்களை இணையத்தின் பக்கங்கள் யாவும் எனக்குள் கடத்தியபடியே இருக்கின்றன. இதைப் பற்றி நான் வாசித்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் தீர்க்க தரிசனமான ஒளியொன்று மின்னிட்டு மறைவதை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.
அதாவது இதுவரையிலும் நான் தெருக்களிலும், வீடுகளிலும் சென்றுதான் இக்குழந்தைகளைத் தேடியிருக்கிறேன். ஒவ்வொரு ஊர்களிலும், சமுதாயக் கூடங்களிலும், மருத்துவமனைகளிலும் இக்குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களை நிகழ்த்துகையில் நான் பேசுவதன் வழியாக உந்தப்பட்டு யாரேனும், எங்கள் ஊரிலே நீங்கள் சொன்னது போலவே குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிற போது, அவர்களின் அலைபேசி எண்ணையும், அக்குழந்தையின் முகவரியையும் வாங்கிக் கொண்டு அந்த ஊர்களையும் வீடுகளையும் தேடியலைந்து பெற்றோர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இதே மடிக்கணினியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் காணொளிகளை கையிலே எடுத்துக் கொண்டு, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் பேசிப் புரிய வைத்து, அக்குழந்தைகளை சிகிச்சை எடுத்துக் கொள்வதை நோக்கி வழிநடத்துவதையே இதுவரையிலும் நான் தீர்க்கமுறச் செய்திருக்கிறேன்.
தொலைபேசி வழியேகூட பேசி அவர்களிடம் என்னால் இதைப் பற்றி விளக்கிவிட முடியும். ஆனால் நேரிலே சென்று பெற்றோர்களிடம் பேசி அவர்களை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ள வைப்பதைப் போலதொரு சௌகரியம் எனக்கு அதிலே கிடைப்பதில்லை. அப்படி வீடுகள் தோறும் நான் செல்கின்ற போதுதான் அக்குழந்தைகளுக்கு உண்மையிலே என்ன பிரச்சனையென்று என்னால் நேரிலேயே கண்டு கொள்ள முடிகிறது. அதேசமயம் அப்பெற்றோர்களின் வறுமை, நிச்சயமற்ற வாழ்க்கை, போதாத சம்பாத்தியம் என்பதான குடும்பச் சூழல்களையும் என்னால் அறிந்து கொள்ள முடியும். ஒரு சில சமயங்களில் பெற்றோர்களை இழந்து பாட்டியின் ஆதரவில் வாழ்கிற பாவப்பட்ட குழந்தைகளையும்கூட நான் சந்தித்திருக்கிறேன். இப்படி விதவிதமான குடும்பச்சூழலில் வாழ்கிற பெற்றோர்களைச் சந்திக்கிற போதுதான் இந்தக் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை மட்டுமல்ல, இவர்கள் சிகிச்சைக்குச் செல்லாமலிருப்பதற்கான குடும்பச் சூழலையும் நாம் மாற்றியாக வேண்டும் என்கிற உள்ளுணர்வு எனக்குள் அசரீரியாக எதிரொலிக்க ஆரம்பிக்கும். ஒருவகையில் நான் சமூகத்திய மருத்துவனாக உருவாகியதற்கான காரணமும் இதுவாகத்தான் இருக்கும் என்றே நம்புகிறேன்.
ஆனால் இதையெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தால் நான் செய்த விசயங்கள் யாவும் தற்காலிக செயல்பாடாகவே இருந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் வழியாக மட்டுமே தெரிய வருகிற குழந்தைகளைத்தான் நான் சிகிச்சைக்குத் தயார் படுத்துகிறேன். அப்படியென்றால் என்னுடைய நிலப்பரப்பையும் தாண்டி என் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்தாத பெற்றோர்களும் அதன் வழியே என்னுடைய பார்வைக்கு வராத காது கேளாத குழந்தைகளும் இன்னும் நிறையவே இருக்கத் தானே செய்வார்கள்!
இதிலிருந்து எல்லா குழந்தைகளுக்குமே என்னால் உதவி செய்ய இயலாது என்கிற எதார்த்தத்தை இயல்பாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டால் இக்குழந்தைகளுக்கான தீர்வை நோக்கி என் மனம் தேடாமல் எல்லாமே இங்கு எதார்த்தம் தான் என்ற நிலையில் அமைதியாக இருந்துவிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எங்கோ ஒருவர் எங்கள் ஊரில் இப்படி ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லுகிற தகவலின் வழியேதான் நான் சமூகத்தினுள் பயணப்பட்டு ஒரு குழந்தைகளைக் கண்டறிந்தும் சிகிச்சையளித்தும் கொண்டிருக்கிறேன் என்றால் அது உண்மையில் சல்லடையில் தண்ணீரை அள்ளுவது போன்ற குறைபாடுடையது தான் என்பதை ஒருவகையில் நானும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கான பிறவியிலேயே காது கேட்டல் பரிசோதனைத் திட்டத்தைப் பற்றி யோசிக்கையில், உண்மையிலே இதுவரையிலும் நான் சமூகத்திற்குள் சென்று தான் உங்கள் ஊரிலே காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா இல்லையா என்று பேசிப் பேசி இதனை சமூகத்தினுள் செயல்படுத்த வேண்டிய ஒரு திட்டமாகவே நான் செய்து வந்திருப்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய குழந்தைகளைப் பிறக்கின்ற போதே பரிசோதித்துக் கண்டுபிடிக்கையில் அது மருத்துவமனை அளவிலேயே செயல்படுத்தக்கூடிய எளியதான திட்டமாகிவிடுகிறது அல்லவா!
அதாவது இதுவரை நான் பொத்தாம் பொதுவாக சமூகத்திற்குள்ளே சென்று இக்குழந்தைகளைத் தேடுவதைப் போலல்லாமல் இத்திட்டமானது பிரவசமாகிற இடத்திலேயே எல்லா குறைபாடுடைய குழந்தைகளையும் கண்டுபிடிக்கிற துல்லியமானதொரு வேலையைச் செய்கிறது. மேலும் அக்குழந்தைகளுக்கான சிகிச்சையும்கூட பிரவசவிக்கிற மருத்துவமனையிலிருந்தே அதற்கான சிறப்பு மருத்துவர்கள் மூலம் அப்போதே துவங்கப்பட்டுவிடும். இந்த விசயத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க இப்போதுதான் ஞானோதயம் வந்த புதிய புத்தனைப் போல அகத்தின் மகிழ்ச்சியில் ஜன்னல் வழியே அசைந்தாடுகிற அரச மரத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறேன்.
இத்திட்டத்தைப் பற்றி இணையத்தில் பரவலாகத் தேடிக் கொண்டிருக்கையில் இதன் துவக்கப்பட்ட வரலாறு அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் மருத்துவமனையில் வைத்தே பரிசோதிக்கலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வருகையில் பிறக்கிற எல்லா குழந்தைகளுக்கும் பரிசோதிப்பதா அல்லது அவசியமென்று கருதப்படுகிற குறைபாடுடைய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும் பரிசோதிப்பதா என்கிற குழப்பம் தான் முதலிலே வந்திருக்கிறது.
ஆனால் இக்குறைபாடு வருவதற்கு குறைபிரசவம், குறைந்த எடையில் பிறப்பது, மஞ்சள்காமாலை, மூளைக்காய்ச்சல் போன்ற காரணங்களும் அல்லது பல சந்தர்ப்பங்களில் காரணமே இல்லாமலும் இக்குழந்தைகள் காது கேளாமல் பிறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பிறக்கிற அத்தனைக் குழந்தைகளுக்கும் பாகுபாடின்றி காது கேட்பதைப் பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்கிற முடிவிற்கு இறுதியில் வந்திருக்கிறார்கள். அதேபோல பரிசோதிப்பதென்றால் எப்படி குழந்தைகளுக்கென்று செய்வது, கைதட்டி சத்தம் எழுப்பியா அல்லது முறையான காது கேட்கிற பரிசோதனைக் கருவிகளை வைத்தா என்கிற விவாதங்களும் நடைபெற்று இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் வழியாகத்தான் பரிசோதிக்க வேண்டுமென்கிற இடத்திற்கும் அவர்கள் நகர்ந்து வந்திருக்கிறார்கள்.
இறுதியில் ஒருவழியாக அவர்கள் நடைமுறைப்படுத்திய திட்டங்களும் வரைமுறைகளும் என்னவென்று தெரியுமா?

உலகெங்கிலும் இருக்கிற மகப்பேறு தொடர்பான அத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டமானது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு அங்கே பிறக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் ஓ.ஏ.இ (OAE- OtoAcoustic Emissions) என்கிற காது கேட்டல் பரிசோதனை வழியே கேட்கும் திறன் ஆரோக்கியமாக இருப்பதைப் பரிசோதித்து உறுதி செய்தாக வேண்டும். அப்பரிசோதனையில் தோல்வியுறுகிற குழந்தைகளையெல்லாம் மறுபடியும் ஆறாவது வாரத்தில் முதல் தவணை தடுப்பூசியின் போது வரச் சொல்லி மீண்டும் ஓ.ஏ.இ பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டும். இப்படி இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியுறுகிற குழந்தைகளை காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் பரிந்துரைத்து அவர்களுக்குப் பெரா (Brainstem Evoked Response Audiometry) என்கிற காது கேட்டல் குறைபாட்டை உறுதிபடுத்துகிற பரிசோதனை செய்து அதன் வழியே குறைபாடு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஒருவேளை வீட்டிலேயே பிரசவித்து மருத்துவமனையின் பரிசோதனை வட்டத்திற்குள்ளே வராத குழந்தைகளும் இருக்கிற பட்சத்தில் அவர்களுக்கான சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த மருத்துவமனை வருகையில் அவர்களைத் தவறாது ஓ.ஏ.இ வழியே காது கேட்பதை பரிசோதித்துக் கெள்ள அறிவுறுத்துகிறார்கள். கடைசியாக, இதன் வழியே இவ்வுலகில் பிரசவமாகிற அத்தனை குழந்தைகளுமே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் போதே தனக்குக் காது கேட்டல் குறைபாடு இருக்கிறதா இல்லையா என்கிற உறுதிப்பாட்டோடு செல்ல முடிகிறது.
இதிலே நான் சமூகத்தினுள் சென்று தேடுவதைப் போல பொத்தாம் பொதுவாக குழந்தைகளைத் தேடி, சிலரைக் கண்டுபிடிக்காமல் போகிற விசயங்களெல்லாம் நடப்பதற்கு வாய்பே இருக்காது அல்லவா. அதாவது இப்பிரச்சனைக்கு இதுவரை நான் தேடிக் கொண்டிருந்த நிரந்தரமான தீர்வு என்பது இது போன்றதொரு துல்லியத்தைத் தான். எங்கும் எதிலும் எந்தக் குழந்தையும் இக்குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் மாற்றுத்திறனாளியாகிவிடக் கூடாது என்கிற எனது கேள்விக்கான பதிலே இந்த திட்டத்தினது கச்சிதமான துல்லியம்தான்.
இன்னும்கூட தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு நாளில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தோராயமாக பத்தாயிரம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் இத்திட்டம் எல்லா மருத்துவமனையிலும் செயல்படுத்தப்பட்டிருக்கிற பட்சத்தில் அந்த பத்தாயிரம் குழந்தைகளுக்குமே தவறாமல் ஓ.ஏ.இ பரிசோதனை செய்யப்பட்டுவிடும் தானே. அவ்வாறு பரிசோதித்த குழந்தைகளில் பத்து குழந்தைகளுக்கு மட்டும் பரிசோதனை முடிவு தோல்வியடைந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால், ஒருநாளில் தமிழகத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளில் காது கேளாத குழந்தைகளென கண்டறியப்பட்டவர்கள் பத்து பேர் என்கிற துல்லியமான முடிவுகள் ஒரு அரசுக்கு எளிதாகவே தெரிய வந்துவிடும் அல்லவா.
இதன் வழியே அந்தப் பத்து குழந்தைகளையும் முதல் தவணை தடுப்பூசியின் போது மறுபடியும் வரச் சொல்லி பரிசோதிக்கப்பட்டதா, அதிலே எத்தனைக் குழந்தைகள் மறுபடியும் தோல்வியுற்றார்கள், அதில் எத்தனை குழந்தைகளுக்கு பெரா பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டது, அந்த குழந்தைகளுக்கெல்லாம் தாமதமின்றி சிகிச்சை துவங்கப்பட்டுவிட்டதா என்கிற துல்லியத்திலும் துல்லியத் தன்மையில் வந்து நாம் அப்போது நின்றிருப்போம்.
இப்போது யோசித்துப் பார்த்தால் நான் விரும்பியது, நான் தேடியது எல்லாமே இதைப் பற்றிய ஒன்றைத் தான். இத்திட்டம் மட்டும் தமிழகத்தின் எல்லா மகப்பேறு மருத்துவமனையிலும் நிறுவப்பட்டுவிட்டால் நான் வீதிவீதியாக அலைந்து குறைபட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கத் தேவையே இல்லாமல் ஆகிவிடுகிறது. மேலும் இக்குழந்தைகள் பிறக்கின்ற இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை நோக்கி ஏற்கனவே இருக்கிற மருத்துவ வசதிகளின் மூலமாக நகரத் துவங்கிவிடுவார்கள். அப்படியானால் தமிழகத்தில் இத்திட்டம் பற்றிய நிலவரம் என்ன, இத்திட்டம் பற்றி மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தேடிப் பார்த்தால் போதும், என்னுடைய இந்தப் பயணம் முடிவிற்கு வந்துவிடும் என்றுத் தோன்றுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதாக முடியப் போவதில்லை என்பதைத்தான் இணையத்தின் பக்கங்கள் அடுத்தடுத்து எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டே இருக்கின்றன.
அமெரிக்கன் குழந்தைகள் நல மருத்துவக் கலைக் கூடமானது (AAP) குழந்தைகள் பிறக்கும் போது அவர்களுக்கு மருத்துவமனை அளவிலேயே கேட்கும் திறனைப் பரிசோதித்துக் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான பரிந்துரைகளை 1999ம் ஆண்டிலே பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவிலே முதன் முதலாக அண்டை மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சின் பகுதியில் வைத்து இத்திட்டத்தை முன்னோடித் திட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் அவர்கள் செயல்படுத்தியிருக்கிறார்கள். இத்திட்டத்தைப் பற்றி இன்று வரையிலும் தமிழகத்திலிருக்கிற பல்வேறு மருத்துவர்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோகூட பரிட்சயமே இல்லாத பட்சத்தில் 2003 லேயே இத்திட்டத்தை அங்கிருக்கிற எல்லா மகப்பேறு மருத்துவமனையிலும் ஓ.ஏ.இ பரிசோதனைகளின் வழியே நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் கேரளாவின் கட்டமைப்பைப் பற்றி நாம் மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.
அதன் வழியே அவர்கள் ஜனவரி 2003லிருந்து ஜனவரி 2015 காலகட்டம் வரையிலும் சுமார் 1,01,688 குழந்தைகளை ஓ.ஏ.இ மற்றும் பெரா பரிசோதனைகளின் வழியே பரிசோதித்து அதிலே 162 குழந்தைகளுக்கு இத்தகைய நிரந்தர கேட்டல் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் ஆறு மாத காலத்திற்குள்ளாகவே அதற்கான சிகிச்சைகளையும் தாமதமின்றி துவங்கியிருக்கிறார்கள். அடடா, இதெல்லாம் எப்பேர்ப்பட்ட சாதனையென்று கேரளாவை நினைத்து ஒருபுறம் மனமோ தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. மறுபக்கம் ஏனைய மாநிலங்களை நினைத்து கைகள் அனிச்சையாகத் தலையில் அடித்துக் கொள்கிறது.
இத்திட்டத்தின் பரிந்துரையே, ஒவ்வொரு மகப்பேறு மருத்துவமனையிலும் பிறக்கின்ற குழந்தைகளை ஒரு மாத காலத்திற்குள்ளாகவே ஓ.ஏ.இ வழியே பரிசோதித்துப் பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பரிசோதனையில் தோல்வியுற்ற குழந்தைகளை மூன்று மாத காலத்திற்குள்ளாகவே பெரா பரிசோதனையின் மூலம் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் குறைபாடு உறுதியாகிய குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள்ளே காது கேட்கிற கருவியை வெளியே பொருத்தி அதன் சப்தங்களின் வழியே காது கேட்டல் நரம்புகளைத் தூண்டி சிகிச்சைகளைத் துவங்கியிருக்க வேண்டும். அக்குழந்தைகளுக்கு ஒரு வயதாகிற போது கேட்டல் தொடர்பான ஒட்டு மொத்த பரிசோதனைகளையும் செய்து, அதன் வழியே குறைபாட்டின் அளவைக் கண்டறிந்து, தேவைப்படுகிற பட்சத்தில் காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று கச்சியமான வரைவுரைகளை வகுத்திருக்கிறார்கள். ஆஹா, இத்திட்டத்தைப் பற்றிக் கேட்கும் போதே எவ்வளவு அற்புதமாத திட்டமாக இருக்கிறதென்று மனதிற்குள் சாரலடிக்கத் துவங்குகிறது. உண்மையிலே இத்திட்டம் மட்டும் சரியாக செயல்படுத்தப்பட்டுவிட்டால்?
ஆனால் எர்ணாகுளத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கலைக் கூட்ட அரங்கம் 2015ம் ஆண்டு டிசம்பர் 18, 19லே ஒன்றுகூடித்தான் இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கவே செய்திருக்கிறார்கள். இத்திட்டங்களெல்லாம் பல்வேறு நாடுகளில் சட்ட வரையறையாக எப்போதோ கொண்டு வந்துவிட்டார்கள் என்பது வேறு விசயம். ஆனால் இவையெல்லாவற்றையும் தாண்டி என்னைப் பொருத்தவரையில் தமிழகத்திலே இத்திட்டத்தின் நிலையென்ன என்பது பற்றி எனக்கு இப்போதுத் தெரிந்தாக வேண்டும். அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் கட்டாயம் அருகிலுள்ள அரசு ஆரம்ப நிலையங்களுக்கும், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக சென்று விசாரித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கணினித்திரையின் வெளிச்சத்தோடு ஜன்னலிலிருந்து அறைக்குள் நுழைகிற சூரிய வெளிச்சமும் ஒன்றாகக் கலக்கிற விடிகாலைப் பொழுது வரையிலும் தொடர்ந்த என்னுடைய இணைய வழித் தேடலை ஒருவழியாக நான் அப்போதுதான் நிறைவு செய்திருந்தேன். இப்போது என்னுடைய இரட்டிப்பு மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒன்று இக்குழந்தைகளுக்கான நிரந்தர தீர்வென்பதைக் கண்டு கொண்டதான பெருமகிழ்ச்சி. மற்றொன்று இனி ஒவ்வொரு மருத்துவமனைகளாகச் சென்று தேடியலைகிற எதிர்பார்ப்புகள் நிறைந்த பயணத்தின் மகிழ்ச்சியென நான் இரட்டிப்பில் திகைத்துப் போயிருந்தேன். இருள் களைந்து போன அறைக்குள் உதித்த சூரிய வெளிச்சத்திலே மூழ்கியபடி நிலைக் கண்ணாடியில் என் முகத்தை நான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மௌனமாக சிரிக்கும் புத்தனின் முகம் கண்ணாடியில் நிறைந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஆனால் எல்லாமே நாம் நினைப்பது போலவே நடந்துவிட்டால் நமக்கு இங்கே என்ன வேலை என்பது போலத் தான் மருத்துவமனையின் அவலம் இருந்ததை அங்கே நேரில் சென்றபோது தான் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. மகப்பேறு நடக்கிற அரசு ஆரம்ப நிலையங்களில் இந்தத் திட்டமே நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு திட்டம் இருக்கிறதா என்று கேட்கிற அளவில் தான் அங்கேயிருக்கிற மருத்துவர்களும் இருந்தார்கள். என்ன செய்வது, நானும் அங்கிருந்து வந்தவன் தானே! அரசு மருத்துவனைகளில் இருக்கிற குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு இத்திட்டம் பற்றிய பரிட்சயம் இருந்தாலும் எந்த தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளிலும் இப்படியொரு திட்டத்தின் வழியே யாருமே பிறக்கிற குழந்தைகளுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை என்பதை அவர்களும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்கள். அங்கு ஓ.ஏ.இ கருவியே இல்லாத பட்சத்தில் எங்கிருந்து அவர்கள் பரிசோதனை செய்வார்கள்!
மாவட்ட மருத்துவமனைகளில் ஆர்.பி.எஸ்.கே திட்டத்தின் அங்கமான ஒருங்கிணைந்த மாவட்ட மருத்துவ வளாகத்திற்குச் சென்று விசாரித்த போது அங்கே ஓ.ஏ.இ பரிசோதனை செய்வதாகவும் ஆனால் மருத்துவர்களால் கேட்டல் திறனை பரிசோதிக்க வேண்டி பரிந்துரைக்கிற குழந்தைகளுக்கு மட்டுமே பரிசோதிப்பதாகவும், அங்கே பிறக்கிற அனைத்து குழந்தைகளுக்குமே பரிசோதிப்பதில்லை என்றும் கையை விரித்துவிட்டார்கள். அதெல்லாம் சரிதான், ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலாவது இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் மாவட்ட மருத்துவமனைகளைப் போலவே முக்கியமென்று கருதுகிற குழந்தைகளுக்கு மட்டுமே ஓ.ஏ.இ கருவி மூலம் பரிசோதிக்கிறார்களே தவிர எல்லோருக்குமே பார்ப்பதில்லை என்கிற உண்மையை நேரடியாகவே பார்க்க முடிந்தது.
ஒரு பக்கம் இக்குழந்தைகளுக்கான நிரந்தர தீர்வென்பது குழந்தைகள் பிறக்கும் போது மருத்துவமனை அளவிலேயே பரிசோதிப்பது மட்டும் தான் என்பதைக் கண்டுகொண்ட சந்தோசம். இன்னொரு பக்கம் இந்த எளிய திட்டத்தை எத்தனையோ நாடுகளில் ஆயிரத்தி தொள்ளாயிரம் ஆண்டுகளிலே அமல்படுத்திவிட்ட பின்னரும், பக்கத்து மாநிலமான கேரளாவில் 2003ம் ஆண்டிலயே இதனைக் கொண்டு வந்துவிட்ட பின்னரும், இந்திய குழந்தைகள் மருத்துவக் கலைக்கூடம் 2015லேயே இதனை அமல்படுத்துதற்கான கோரிக்கையை விடுத்த போதும், நான் தேடிச் சென்ற இன்றைய நாள் வரையிலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மகப்பேறு மருத்துவக் கட்டமைப்பிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக இருந்தது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் எனது உடலைச் சாய்த்துக் கொள்வதற்கும் என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குமாக ஏதாவது சிறியதொரு இடம் கிடைத்திடாதா என்று அரசு மருத்துவமனையின் வளாகத்திலேயே நின்றபடி பரிதவித்துக் கொண்டிருந்தேன். அப்படியென்றால் இத்திட்டம் நிறைவேற்றப்படாத காரணத்தினால் தானே இங்குள்ள குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள் எதுவும் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமல் போகிறது. அதனால் தானே காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை நம் சமூகத்தில் இன்னமும் அதிகரித்தபடியே இருக்கிறது என்று நம் மருத்துவக் கட்டமைப்பின் மீதே கோபம் கோபமாக வருகிறது. இன்று தமிழகமெங்கும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பள்ளிக்கூடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றால் அதற்கும் இந்த குறைபட்ட மருத்துவச் சமூகம் தானே காரணமாக இருக்கிறது. இப்படி நம் மருத்துவக் கட்டமைப்பின் மீதே பல்வேறு குறைபாடுகளை வைத்துக் கொண்டு படிப்பறிவற்ற பெற்றோர்களையே இன்னும் எத்தனைக் காலம் தான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கப் போகிறோமோ தெரியவில்லை.
இரண்டு இலட்சம் மதிப்புள்ள ஓ.ஏ.இ கருவிகளை தமிழகமெங்கிலும் இருக்கிற மகப்பேறு நடக்கிற மருத்துவமனைகளில் வாங்கி வைப்பதொன்றும் அரசுக்கு சிரமமான காரியமல்ல. வெளியே தனியார் மருத்துவமனைகளில் இப்பரிசோதனைக்கு எழுநூறு முதல் தொள்ளாயிரம் வரையிலும் செலவழித்து தான் இன்றளவிலும் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைக்கூட செலவளித்துச் செய்ய முடியாத நிலையில் தான் காளீஸ்வரி, பிரியா போன்ற குழந்தைகளின் குடும்பங்கள் இருக்கின்றன. இந்தப் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாகவும், அதனை எல்லா குழந்தைகளுக்கும் பரிசோதிக்கிற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியதும் நம் மருத்துவக் கட்டமைப்பினுடைய தலையாக கடமை அல்லவா!
அதேபோல எட்டு முதல் பன்னிரெண்டு இலட்சம் மதிப்புள்ள பெரா என்கிற காது கேட்கும் குறைபாட்டை உறுதி செய்யக் கூடிய கருவியை மாவட்ட அளவிலே வைத்து ஓ.ஏ.இ மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வருகிற குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையிலேயே வைத்து இலவசமாக பரிசோதனை செய்யலாம். அதற்கும்கூட வெளியே ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலும் பெற்றோர்கள் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதின் வழியே நாம் செய்கிற விசயங்கள் ஒவ்வொன்றும் இக்குழந்தைகளுக்கான நிரந்தர தீர்வுக்கான விசயம் என்பதை முதலில் நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இதற்காகச் செலவு செய்து இத்திட்டத்தை அமல்படுத்திவிட்டால் தலைமுறைக்கும் இப்பிரச்சனைக்குரிய குழந்தைகள் மருத்துவமனையிலேயே தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு காலமுள்ள வரைக்கும் தொடர்ந்து குணமாக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பது பெரிய விசயம்தானே!
ஆனால் எல்லாமும் கனவைப் போலவே இருக்கிறது. மரபணு மருத்துவ ஆலோசனைக் கூடங்களும், பிறக்கும் போதே காது கேட்டலைப் பரிசோதிக்கக்கூடிய திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே போதும், இக்குழந்தைகளுக்கான எதிர்கால வாழ்க்கைக்கு ஏதோ உறுப்படியாகச் செய்த திருப்தி இங்கே கிடைத்துவிடும். ஆனால் இதையெல்லாம் யார், எப்போது செய்யப் போகிறார்களோ என்று நினைக்க நினைக்க விடிந்த பிறகும்கூட எல்லாம் எனக்கு இப்போது கனவாய் தான் இருக்கிறது.
ஆனால் இந்தப் புலம்பல்களையெல்லாம் கொஞ்ச காலம் தள்ளி வைத்துவிட்டு ஆறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற காளீஸ்வரியையும் பிரியாவையும் கூடிய விரைவில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான வழியை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இறுதியாக அதற்கான வழியை நான் கண்டுபிடித்ததையும், அவர்களிருவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று மருத்துவனையில் பரிசோதித்துக் கொண்டதையும், கடைசியாக அவர்களே சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டதைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 12 – டாக்டர் இடங்கர் பாவலன்
மரபணு மருத்துவத்தைத் தேடியலைந்த நாட்கள்
மாலை வேளையில் லேசாக சாரலைத் தூறிவிட்டு ஓய்ந்திருந்தது வானம். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே இலைகளின் விளிம்பில் துளிர்த்திருக்கிற நீர்த்திவளைகளைப் போல ஜன்னல் கம்பிகளில் குமிழ் குமிழாய் பருத்து விழக் காத்திருந்த நீர்த்துளிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாக கைவிரல் நுனி தொட்டு வாங்கிக் கொண்டேன். கைநீட்டி குழந்தையை வாங்கிக் கொள்வதற்கு முன்பாகவே இருகைகளையும் நீட்டியபடி தாவிக் குதித்து நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிற குழந்தையைப் போல இந்த மழைத்துளிகள் யாவும் விரல் வழியே நழுவிச் சென்று நீர்ப் போர்வையால் கைகளை நனைத்தபடியே இருந்தன.
அதன் குளிர்ச்சி உடல் முழுக்கப் பரவப் பரவ அதுவரை இறுக்கமாகிப் போன மனம் மெல்லக் கரையத் துவங்கியது. அதிகாலையில் மரபணு மருத்துவரை எப்படியோ சந்தித்துவிட்ட மகிழ்ச்சியையும் தாண்டி அந்த சந்திப்பினூடே நடந்த உரையாடல்கள் யாவும் என்னை அதுவரையிலும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தன. ஜன்னலுக்குள்ளே எட்டிப் பார்த்தபடி முணுமுணுக்கிற சாரல் துளிகளின் வருகையால் வேதனையில் உழன்ற உடலின் கணப்பு மெல்ல அவிழத் துவங்கியது. அதேசமயம் மனதிற்குள்ளே நெருப்பு போன்று கனன்று கொண்டிருக்கிற வலியும், வேதனையும், ஆற்றாமையையும் இருப்பு கொள்ளாமல் தவித்தபடியே தான் இருந்தன. இந்த மழைக்கு மட்டும் மனதிற்குள்ளான காயங்களையும் ஆற்றிவிடுகிற வல்லமை இருந்திருந்தால் இப்போது எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கும் என்று மனமோ ஏக்கம் கொள்ளத் துவங்கியிருந்தது.
பல வாரங்களுக்குப் பின்பாக மாநிலத்தின் கடைகோடியில் அரிதினும் அரிதாக ஒரு மரபணு மருத்துவர் இருப்பதை அறிந்து அவரைச் சந்திக்கச் சென்ற பின்பாக என்னால் அந்தச் சந்திப்பின் முழு மகிழ்ச்சியையும் அடைய முடியவில்லை. அப்படியொரு அதிசயக்கத்தக்க மருத்துவரை சந்தித்துவிட்டேன் என்று சந்தோசப்படுவதா அல்லது ஒரு மருத்துவராகிய நானே இப்படி மரபணு மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக இத்தனைக் காலமும், இவ்வளவு தொலைவும் அலைய வேண்டியிருக்கிறதென்றால், பாவம் படிப்பறிவற்ற இந்த அப்பாவி ஏழை மக்களெல்லாம் என்ன தான் செய்வார்களோ என்று நொந்து கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆரம்பத்தில் அவரைச் சந்திப்பதற்கு முன்பாக எனக்குள்ளிருந்த மரபணு மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அலாதியெல்லாம் மெல்ல மெல்லக் கரைந்து போய் பின் அவரிடமிருந்து மரபணு மருத்துவத்தைப் பற்றிய போதாமையின் நிதர்சனமான உண்மையைக் கண்டு கொண்ட நொடியில் எனக்குள்ளேயே நான் உடைந்து போனேன். அந்த அவஸ்தையின் புலுக்கம் அடுப்படிக்குள்ளிருந்து வீட்டிற்குள்ளேயே முண்டுகிற புகைமூட்டம் போல மூளைக்குள்ளே அது வலிய வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவருடன் கலந்துரையாடிய நிமிடத்தின் நிஜங்கள் யாவும் நம் மருத்துவத்துறையின் மீதான போதாமையை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே இருந்தது.
ஒரு வலசைப் பறவையின் பரவசத்தோடு பயணப்பட்டு அவரைச் சந்தித்த பின்பாக மீண்டும் கூடு திரும்பிக் கொண்டிருக்கிற இந்த தருணத்திலும்கூட ஒரு சிறகொடிந்த பறவையின் மனநிலையில் தான் நான் இருக்கிறேன். மரபணு மருத்துவரைப் பற்றித் தெரிந்த மருத்துவ நண்பர்களிடமெல்லாம் விசாரித்து, அதன் விலாசங்களைத் தேடி, கூடுதலாக இணையத்தின் வழியே தமிழகத்தின் எதேனும் கடைக்கோடியில் எவரேனும் இருந்துவிட மாட்டார்களா என்று பித்து பிடித்தாற் போல் அலைகிற எளிய மருத்துவனான நானும்கூட வலசை செல்கிற பறவை தானோ என்றே சில சமயங்களில் எனக்குத் தோன்றும்.
ஒரு வலசைப் பறவைக்குக்கூட மூளையின் வலைப் பின்னலுக்குள் தான் எங்கே செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும், இடைத் தங்கல் எவ்வளவு சாத்தியம் என்பது உள்ளிட்ட நுட்பங்களெல்லாம் தெரியும். ஆனால் இவ்வளவு காலம் படித்தும், எட்டாண்டு கால அனுபவமிக்க மருத்துவனாகியும், ஏனைய மருத்துவர்களின் தோழமை வட்டத்திற்குள் இருந்தும்கூட ஒரேயொரு மரபணு மருத்துவரைச் சந்தித்து பிறவிக் குறைபாடுடைய இந்தக் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்துவிடக்கூடிய அவசியமான உரையாடலை நிகழ்த்துவதற்கே இத்தனைக் காலங்கள் ஓடிக் கடந்துவிட்டன.
சுற்றிலும் ஊர்ந்து செல்கிற பேருந்துகளின் இரைச்சல், சாலையெங்கும் நிறைந்து வழிகிற மக்கள் கூட்டங்கள், எரிச்சலும் கோபமுமான மனிதர்களின் சதா பேச்சரவங்களென அசூயையான உலகம் புகைமண்டலம் போல என்னைச் சூழந்திருக்க, எதனாலும் என்னுடைய பதட்டமான மனநிலையிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை. ஒரு சிறிய கோட்டை மறைப்பதற்குப் பக்கத்திலேயே பெரிய கோட்டை வரைவது போல அதற்கெல்லாம் மீறிய துயரத்தில் என்னை நானே வதைத்துக் கொண்டிருந்தேன்.
நெடுநாளைய இந்தப் பயணத்தின் போது நான் கண்டுகொண்ட பிரதான உண்மையென்பது நாமெல்லாம் எப்போதுமே நிலையில்லாததையும், நிரந்தரமற்ற ஒன்றையும் தான் தேடியலைகிறோம் என்பது தான். ஆதிகாலம் தொட்டு இன்று வரையிலும் எத்தனையோ பிறவிக் குறைபாடுடைய குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, பேசுவதற்கான குரல்களை இழந்து, கேட்பதற்கான புலனுணர்வுகளையெல்லாம் தொலைத்து ஏதோ கடந்த கால மௌனப் படங்களைப் போல நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் இதுவரையிலும் நாம் இக்குழந்தைகளுக்காக செய்தவையெல்லாம் நிலையில்லாததும் நிரந்தரமற்ற ஒன்றாகவும் தானே இருந்திருக்கிறது!
உலகிலே கண்டறியப்படுகிற அத்தனை நோயிற்குமான குணமாக்கலையும்கூட இதே உலகம் தான் கண்டுபிடித்தும் வைத்திருக்கிறது என்று என்னுடைய மருத்துவப் படிப்புக் காலத்தில் நினைத்து அத்தனையும் வியந்திருக்கிறேன். ஆனாலும் மாற்றுத்திறனாளி முகாம்களில், செவித்திறன் குறைபாடுடைய பள்ளிகளில் இன்றும்கூட குறைபாடுகளோடு எண்ணிக்கையில்லா குழந்தைகள் இருப்பதை எண்ணி நம் மருத்துவமும் விஞ்ஞானமும் இன்னும் போதாமையின் பாதையில்தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறதென்கிற நிஜம் உறைக்கத் துவங்கியது.

ஆதி மனிதன் தோன்றிய காலத்திலிருந்து எந்த யுகத்தில் இந்தப் பிறவிக் குறைபாடுடைய சாபங்களெல்லாம் மனித குலத்தை கொடிய சர்ப்பத்தைப் போல தீண்டியிருக்கும்? எத்தனையோ தலைமுறைத் தலைமுறைகளாக இத்தகைய பாவங்கள் மனதகுலத்தை விடாமல் இன்றுவரையிலும் துரத்தியடித்துக் கொண்டு தானே இருக்கிறது. இவ்வளவு விஞ்ஞான மருத்துவத் தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட பின்னாலும்கூட அடுத்த தலைமுறைக்கும் இப்பிரச்சனை கடத்தப்படாமலிருக்க, இந்தக் குழந்தைகளுக்கான நிரந்தமான தீர்வு ஒன்றை நாம் என்ன தான் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்கிற மன உளைச்சலில் இன்னமும் என் மனம் தவித்தபடியே தான் இருக்கிறது.
ஆரம்பத்தில் நான் கல்லூரிக் காலம் முடிந்து அரசு மருத்துவனாய் கிராமத்தில் பணியாற்ற வந்த காலகட்டத்திலெல்லாம் பள்ளிக் குழந்தைகளுக்கென்று வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிச் சிறார் நலத்திட்டம் என்கிற தனிப்பட்ட மருத்துவமொன்று இருந்தது. ஆனாலும் ஏதோவொரு வகையில் இப்பணி எனக்கு குறைபட்ட ஒன்றாகவே மனதில் தோன்றும். அரசு ஆரம்ப சுகாதார நிலைகளில் நிகழ்த்தப்படுகிற நூற்றிலொரு திட்டங்களுள் ஒன்றாய் அது இருப்பதாலும், ஆயிரக்கணக்கான சிறார்களைக் கொண்ட பள்ளிகளே நூற்றுக்கணக்கில் இருக்கின்ற போது அதற்கென தனியே மருத்துவர்கள் இல்லாதிருப்பதும்கூட ஏனோ மனக்குறையாகவே இருக்கும். இத்தகைய காரணங்களால் பள்ளிச் சிறார்களுக்கான அன்றைய ஆரோக்கியம் சார்ந்த மருத்துவங்கள் எதுவும் அவ்வளவாக பிரபலமாகியிருக்கவில்லை.
அதற்குப் பின்பான காலகட்டத்தில் தான் பள்ளிக் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக ஆர்.பி.எஸ்.கே (Rashtriya bal swathya karyakram) என்கிற நடமாடும் மருத்துவத் திட்டத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொண்டு வந்தார்கள். இத்திட்டத்தின் வழியே கடைக்கோடிக் கிராமங்கள் தோறும் சென்று பிறந்த குழந்தை முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் பிறவிக் குறைபாடுகளுக்கான அறிகுறிகளை பரிசோதிக்கத் துவங்கினார்கள். அவர்களுக்குப் பால்ய பிராந்தியத்திலேயே நாள்பட்ட நோய்கள் இருப்பதைக் கண்டறியவும், ஆரம்ப கட்ட நிலையிலேயே அதற்கு வைத்தியம் செய்வதும், மேற்சிகிச்சை தேவைப்படுகிற பட்சத்தில் அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு சிறப்பு மருத்துவக் குழுவினரிடம் பரிந்துரைப்பதுமான நுட்பமான பணிகளை திறம்படச் செய்யத் துவங்கினார்கள். அதற்குப் பின்னர் தான் குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள் மீதான கவனத்தையே இந்தச் சமூகம் தீவிரமாக உணரத் துவங்கியது.
நிஜத்தில் பிறவிக் குறைபாடுகள் பற்றிய தெளிவு எனக்கு உருவாகிய காலகட்டமும் கூட இதுதான். இத்தகைய பள்ளிச் சிறார்களுக்கென்றே தனிப்பட்ட மருத்துவம் துவங்கப்பட்ட பின்னர் கண்டறியப்பட்ட நோய்களும் அதன் வழியே சிகிச்சையளித்து குணமடைந்து மீண்ட குழந்தைகளும் ஏராளம். என் கண் முன்னாலே நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்வு, மறுவாழ்வு பெற்று மீண்டு வந்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்ணாரக் கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் இத்தகைய மரபணு மருத்துவத்தை நோக்கிய பாதையில் காலெடி எடுத்து வைத்து பயணப்பட்டப் பின்பாக இதனுடைய போதாமையையும், இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும் என்னால் எளிதாகவே உணர முடிந்தது.
பள்ளிகளை மட்டுமே கவனம் கொள்கிற இந்தக் குழந்தைகளுக்கான திட்டமானது பள்ளி செல்லாதக் குழந்தைகளையும் எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதைப் பற்றிய குழப்பம் எனக்குள் இப்போதும்கூட எழவே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு திட்டங்களும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தும்கூட, ஏன் நான் இப்பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளைத் தேடி இப்படி மனப்பிறழ்வு வந்தவனைப் போல காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன் என்கிற கேள்வியையும் என்னை நோக்கி நானே கேட்க வேண்டியிருக்கிறது.
சில காலம் கழித்து தான் இந்த மருத்துவத் திட்டத்தைப் போலவே கல்வித் துறையிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கென்று கிராமங்கள் தோறும் இயங்குகிற எஸ்.எஸ்.ஏ (Sarva Shiksha Abhiyan) என்கிற திட்டம் இருப்பதைப் பற்றி என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. வெறுமனே குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசான வாழ்வைப் பற்றி மட்டுமே காலமெல்லாம் கனவு கொண்டிருந்தால் இத்தகைய அரிதான விசயங்களையெல்லாம் என்னால் தீர்க்கதரிசனமாக கண்டடைந்திருக்கவே முடியாது. அதேசமயம் இப்படியொரு அரியத் தேடலின் மகத்துவங்களையெல்லாம் என்னால் உணர்ந்திருக்கவும் முடியாது. இதைப் பற்றி யோசிக்கிற போது இன்னும் கூட நாம் இலட்சியப் பாதையிலிருந்து நழுவிவிடவில்லை என்கிற உள்ளுணர்வின் திருப்தி எனக்குள் ஏற்படவே செய்கிறது.

அடிப்படையில் புத்தனும் இயேசுவும்கூட தனக்குத் தானே கேள்வியைக் கேட்டுக் கொண்டவர்கள் தான். அகத்தின் கேள்வி ஏற்படுத்திய தேடலின் நெருப்பு கனன்றபடியே இருக்க, அதன் அகத் தூண்டலின் வழியே வாழ்வின் மெய்மையைத் தேடிய பயணத்தில் அவர்கள் கண்டு கொண்ட தரிசனங்கள் யாவும் மனிதகுல மேன்மைக்கான போதனைகளாக மாறின. நானொன்றும் ஆன்மீகவாதியல்ல. ஆனால் நான் ஏன் இவ்வாறு என்னுடைய சுகவாழ்க்கையெல்லாம் துறந்து இப்படி விட்டேந்திரியாய் திருந்து கொண்டிருக்கிறேன் என்பதற்குப் பின்னால் இந்த இருவருமே தான் எப்போதும் இருக்கிறார்கள். என்னுடைய பயணத்தின் பாதையில் எராளமான தடைக்கற்களின் கூர்மையைச் சந்திக்கின்ற போதும், எனக்கானத் தோல்விகளின் புறமுதுகை எதிர்கொள்கிற போதும் நான் அயர்ச்சியுறாமல் இயங்குவதற்கு இந்த புத்தனும் இயேசுவுமானவர்களே முன்னத்தி ஏராக நின்று எனக்கு வழிகாட்டியபடியே இருக்கிறார்கள். ஏனெனில் இவ்வுலகின் ஒப்பற்ற தேசாந்திரிகள் இவர்களே!
தாலூகா வரியாக இயங்குகிற இத்தகைய அரசின் எஸ்.எஸ்.ஏ திட்டத்தைப் பற்றிய தேடலில் இன்னும்கூட பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்ததும் ஒருவழியில் நல்லதுதான். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளிப் பள்ளிக் குழந்தைகளுக்கென்றே வடிவமைப்பட்ட இத்திட்டத்தைப் பற்றி அங்கிருப்பவர்கள் எல்லோருமே ஒருவித நெகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டார்கள். இத்திட்டத்தின் முக்கிய அங்கமான சிறப்புப் பல்நோக்குப் பயிற்றுநர்களெல்லாம் வீதிவீதியாக வீடுகள் தோறும் சென்று அங்கிருக்கிற குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிகிறார்கள். பின்பு நடத்தப்படுகிற சிறப்பு முகாம்களின் வழியே குறைபாடு உறுதி செய்யப்படுகிற குழந்தைகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலவாரிய அலுவகத்தின் வழியே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைப் பெறுவதற்கான உதவிகளையும் அவர்கள் உடனிருந்து செய்து கொடுக்கிறார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் இக்குழந்தைகளை அருகைமையிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கே சேர்ந்து படிக்க வைப்பதற்கான முயற்சிகள் எடுப்பதோடு, அக்குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியையும் அவர்கள் வழங்குகிறார்கள். முக்கியமாக, மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கென பராமரிப்புப் பணப் பலன்களைப் பெற்றுத் தருவது, காது கேட்கிற கருவிகள் போன்ற உதவி உபகரணங்களைப் பெற்றுத் தருவது, மூளை வளர்ச்சிக் குறைவான குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உடல் பராமரிப்புத் தொடர்பான பயிற்சியை பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுப்பதென அவர்களின் அநாயசமான பணியைப் பற்றிக் கேள்வியுறும் போது உள்ளார மகிழ்ச்சியின் மழை பெய்யத் துவங்கியது என்னவோ உண்மைதான்.
ஆனாலும் இத்திட்டத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்ட தருணத்திலும்கூட ஏதோ ஒன்று நெருடலை ஏற்படுத்துவதாகவே இருந்தது. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் இத்திட்டத்தின் அடிப்படையிலேயே குறைபாடு இருப்பதாக மனதிற்குப்படுகிறது. எல்லா ஆரோக்கியமான குழந்தைகளிலும் குறைபாடுடையவர்களையே மனம் தேடுவதைப் போல, எத்தனையோ நல்ல திட்டங்கள் இருந்தாலும் அதிலிருக்கிற குறையை நோக்கியே மனம் அலை பாயத் துவங்கிவிடுகிறது. இத்திட்டமானது முதலாம் வகுப்பிலிருந்து தான் துவங்குகிறதென்றால் இத்திட்டத்தின் பயிற்றுநர்கள் ஆறு வயதிலிருக்கிற குழந்தைகளிலிருந்து தான் தங்களது பணியையும், குறைபட்ட குழந்தைகளைக் கண்டறிகிற வேலையையும் செய்கிறார்கள் என்பதை இயல்பாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியென்றால் பிறவிக் குறைபாடுடைய காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளை ஆறு வயதிற்குள்ளாகவே கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என்கிற முதலாவது நிபந்தனையிலேயே இத்திட்டம் அடிபட்டு விடுகிறதே!
எப்படிப் பார்த்தாலும் பிறவிக் குறைபாடாய் பிறக்கிற இந்த அப்பாவிக் குழந்தைகளுக்கென இயக்கம் கொள்கிற இந்த மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த இரண்டு கட்டமைப்பின் மீதும் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி நிற்கிற மனம் பரவசம் கொள்ளவே செய்கிறது. ஆனாலும் அத்தகைய பரவசம் வடிந்து அடியாழத்தில் நிகழுகிற நிஜத்தைக் காணுகையில் இப்படியாகப் பிறந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்கிற முத்திரையைக் குத்துகிற வேலையையும், அப்படி மாற்றுத்திறனாளியாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவுமான தற்காலிக தீர்வை மட்டுமே தான் நாம் இதுவரையிலும் செய்து வந்திருக்கிறோம் என்றே மனதிற்குப் புரிகிறது.
ஏனோ இந்தப் பேருந்துப் பயணத்தில் அடைமழையாய் பெய்து ஓய்ந்துவிட்ட இந்த மழையையும் நம்முடைய பிறவிக்குறைபாடுடைய குழந்தைகளுக்கான கட்டமைப்பையும் ஒருவகையில் முடிச்சுப் போட்டுப் பார்க்கவே மனம் எத்தனிக்கிறது. இந்தப் பெருமழையின் ஒவ்வொரு துளியும் ஆதியிலிருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதியில் துளிர்த்த அதே நீர்த்துளி தான் மீண்டும் மீண்டும் மழையாகி பின் மேகமாகி சுழற்சியின் அடுக்கில் பூமியில் அடுத்தடுத்து பிரவாகமெடுத்தபடியே இருக்கின்றன. இந்த மனிதகுலம் இருக்கின்ற வரையிலும் இந்த மழையும், மலை முகடுகளும் இருக்கத் தானே செய்யும். அதே போலத்தான் இக்குறைபாடு பற்றி இன்றுவரையிலும் நாம் முன்னெடுத்திருக்கிற கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த குறைபாடுகளுடைய முன்னேற்பாடுகளுமே என்று தோன்றுகிறது.

இங்கே ஒரு மருத்துவனாக எனது நீண்ட காலப் பயணத்தினூடே கண்டு கொண்ட காளீஸ்வரி, பிரியா போன்ற இன்னும் எத்தனையோ குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களுக்குப் புரியும்படியான விழிப்புணர்வை ஏற்படுத்திய கையோடு, பலகட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் இக்குழந்தைகளை என்னால் காது கேட்கவும், பேச வைத்துவிடவும் முடியும் தான். அதன் வழியே இக்குழந்தைகளிடமிருக்கிற காது கேளாத, வாய் பேசாத குறைபாட்டையெல்லாம் ஊர்க் கோடாங்கி அருள்வாக்குச் சொல்லிப் பேயை விரட்டியடிப்பதைப் போல என்னால் துரத்திவிடவும் முடியும்.
ஆனால் இக்குழந்தைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களாகி அவர்களும் திருமணம் செய்து கொள்கிற பட்சத்தில் இவர்களுடைய குழந்தைக்கும் இக்குறைபாடு வராது என்பதற்கு இங்கே என்ன நிச்சயம் இருக்கிறது? அதை நிச்சயப்படுத்துவற்கான மருத்துவம் என்ன இருக்கிறது? நாமும் இப்போதுள்ள வசதியினால் கேட்பதற்கான கருவியை குழந்தைக்குப் பொருத்துகிறோம், அவர்களுக்குப் பயிற்சியளித்து நம்மைப் போலவே பேச வைத்தும் விடுகிறோம். ஆனால் இக்குழந்தைகளின் பிறவிக் குறைபாட்டிற்குரிய குறைபட்ட மரபணுக்கள் இன்னமும் அவர்களின் உடலிலேயே இருக்கிற பட்சத்தில் அதனைச் சரி செய்வதற்கான மரபணு மருத்துவத்தைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
ஒருவேளை இக்குழந்தைகளுக்கு குறைபட்ட மரபணுவினால் தான் இக்குறைபாடே வந்திருக்கிறதென்றால் நாம் அவர்களுக்கு காது கேட்பதற்கான சிகிச்சையளித்த பின்னரும்கூட அத்தகைய மூலப் பிரச்சனை இன்னும் அப்படியே தானே இருக்கும். ஆக, இவர்களும் பின்னாளில் திருமணம் செய்து கொள்கிற போது அவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைகளுக்கும் இதே குறைபாடு தொடருமா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கான அல்லது உத்திரவாதம் அளிக்கக்கூடிய மருத்துவக் கட்டமைப்பை நாம் இன்னுமே வளர்த்தெடுக்கவே இல்லை என்பது தானே அர்த்தமாகிறது.
ஆக, எவ்வளவு தான் இக்குழந்தைகளுக்கு வாழ்வதற்கான சலுகைகளை நாம் அளித்தாலும் அது அன்றைய தலைமுறைக்கானதாகவே இருக்கிறதே தவிர அடுத்த தலைமுறைக்கான மருத்துவமாகவும், நிரந்த மாற்றத்திற்கான வழிகாட்டியாகவும் அது இன்னமும் மாற்றமடையவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இக்குறைபாடானது அவர்களது பிள்ளைகள், அவர்களுக்கு அடுத்த பேரன் பிள்ளைகளென தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு இத்தகைய நோயானது ஒரு சங்கிலித் தொடரைப் போல காலம் முழுமைக்கும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கும். அதுபோலவே இந்த நூற்றாண்டிலும் இப்பிரச்சனை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.
அப்படியென்றால் தலைமுறைக்கும் தொடருகிற இந்த மரபணுவின் மூலப் பிரச்சனையைச் சரி செய்வதற்கான முயற்சியைச் செய்யாமல், ஏதோ உலகம் அழிந்து மடியும் வரைக்கும் மட்டும் இக்குழந்தைகளுக்காக ஏதோ நம்மால் முடிந்த ஏதேனும் சில உதவிகளைச் செய்துவிட்டு நகர்ந்துவிடுவோம் என்பதைப் போலத் தான் நாமும் நடந்து கொள்கிறோமா என்று நம் கட்டமைப்பின் மீதே பெருத்த சந்தேகம் எழுகிறது. உண்மையில், நாம் சிந்திக்க வேண்டியது என்னவோ அடுத்த தலைமுறையிலாவது எப்படி ஆரோக்கியமான உலகத்தைப் படைக்கப் போகிறோம் என்பதைப் பற்றித் தானே இருக்க வேண்டும்?
காது கேளாத பிறவிக் குறைபாடுடைய குழந்தைகள் யாவரும் வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகிய பின்னே அவர்களின் வாழ்வை நினைத்து அச்சப்படுவது முதலில் அவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைகளைப் பற்றித் தான். எங்களது காலம் தான் இப்படிக் கிடந்து நல்லது கெட்டதென எதையும் கேட்காமலும், எதையும் ஆசைதீர வாய் திறந்து பேசாமலுமாக கழிந்துவிட்டது. எங்களது பிள்ளைகளின் காலத்திலாவது இப்பிரச்சனைகள் தொடராமலிருக்க வேண்டுமென்பதே எங்கள் காலத்தின் கனவாக இருக்கிறதென கண்ணீர் மல்க கடவுளிடம் வேண்டிக் கையேந்தி நிற்பதை இன்றும்கூட மடாலயங்களில் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

முதலாவது பிறந்த குழந்தை காது கேளாத பிறவிக் குறைபாடாய் இருந்துவிட்டால் அக்குழந்தையைப் பெற்றவர்கள் மருத்துவமனைகள் தோறும் அழைத்துச் சென்று பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லையென அக்குறைபாட்டைச் சரிசெய்வதற்கான வழியில் எப்படியோ தட்டுத்தடுமாறியாவது நடக்கத் துவங்கிவிடுகிறார்கள். ஆனால் எத்தனையோ துயரங்களைத் தாண்டி அவர்கள் கடந்து வந்தாலும்கூட அவர்களுக்குள்ளேயே ரணமாய் உறுத்திக் கொண்டே இருக்கிற ஒரே விசயம், அடுத்ததாகப் பிறக்கப் போகிற பிள்ளையாவது ஏதும் குறைகளற்று ஆரோக்கியத்தோடு பிறக்குமா என்கிற ஏக்கப் பெருமூச்சாகத் தானே இருக்கிறது.
ஆனாலும் இத்தகைய ஏக்கத்திற்குப் பதிலாக மரபணு மருத்துவம் சார்ந்த ஏதாவதொரு கட்டமைப்பை இன்றைய சூழலில் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா, அவர்களின் வேதனைக்கும் ஆற்ற முடியாத துயரங்களுக்கும் நிரந்தர தீர்வாக எத்தகைய பதிலைத் தான் நாம் வைத்திருக்கிறோம் என்றால், ஒன்றுமே இல்லை என்பதே அத்தகைய மரபணு மருத்துவருடனான உரையாடலின் போது நான் கண்டு கொண்ட உண்மை. எத்தனையோ மாதக் கணக்கிலே நான் அலைந்து திரிந்து இதற்கான விடையைத் தேடிப் புறப்பட்டுப் போன இந்தப் பயணத்தில் மரபணு மருத்துவத்தைப் பற்றிய நிதர்சனமான விசயங்களைப் பற்றி ஏராளமாக அறிந்து கொள்ள முடிந்தது. அதேசமயம் நான் கண்டடைந்த எந்தவொரு விசயங்களுமே இக்குழந்தைகளுக்கான உவப்பான செய்தியாக இல்லை என்பதையும் நான் கூடவே சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
நான் பேருந்திலே பயணப்படுக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில் படபடத்து சப்தமிடுகிற ஜன்னல் திறப்புகளையும் மீறி சாரல் துளிகள் சில மெலிசாக பேருந்தினுள் எட்டிப் பார்த்தபடியே இருக்கின்றன. பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுதில் மழை பெய்வதைக் காணக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். எத்தகைய துயரங்களையும் கடந்துவிட அழைக்கின்ற அசரீரிக் குரல் போலவே மழையின் ஓசை சதா காதில் விழுந்து கொண்டே இருக்கும். அப்படியொரு துயரத்திலிருந்து மீள்வதற்கான அழைப்பை மழை எனக்கும் விடுத்தபடியே தான் இருக்கிறது.
இந்தச் செவ்வக வடிவ கண்ணாடிச் சட்டத்தின் ஜன்னலிற்கு வெளியே வீதியெங்கும் மழைகள் தூவி வீடுகளும் தெருக்களும் தெளிவற்ற நீரோவியங்களைப் போலவே கண்ணுக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இங்கு மழையும் இருக்கிறது, நீரும் இருக்கிறது. ஆதியில் உருவான தண்ணீரிலிருந்து எதுவுமே கூடவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனாலும் நாம் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் இன்னமும் பருவத்திற்கு அலைந்தபடியே தான் இருக்கிறோம். அதற்குக் காரணம் தண்ணீர் இல்லையென்பதல்ல, நம் கட்டமைப்பு சரியில்லை என்பதே எதார்த்தம். இக்குழந்தைகளுக்கும்கூட நாம் அப்படியான நிலையைத் தான் ஏற்படுத்தி வைத்திருக்கிறோமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
பிறவியிலேயே காது கேளாமல், வாய் பேசாமல் இருக்கிறவர்கள் யாரையேனும் திருமணம் செய்து கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்விற்குத் தயாராகிற போது அத்தகைய குறைபாடு தங்கள் பிள்ளையின் வாழ்வையும் சிதைத்துவிடக் கூடாதென்று அவர்கள் விரும்புகிற பட்சத்தில் அதற்கான மரபணு ஆலோசனைகளையும், பரிசோதனையும், சிகிச்சைக்கான வழிமுறையும் வழங்குவதற்கான அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு ஏற்கனவே இருக்கத்தான் செய்கிறது. மரபணு மருத்துவம் என்கிற பெயரளவில் மட்டுமே நாம் தெரிந்து வைத்திருக்கிற இதன் முக்கியத்துவத்தை ஒரு மருத்துவராக நானே இப்போது தான் கண்டறிகிற போது ஏதுமறியா இந்தப் பொது ஜனங்களைப் பற்றி நான் என்ன குற்றச்சாட்டை வைத்துவிட முடியும்?
வெறுமனே புத்தகப் புழுவாகத் திரிந்த நாட்களைத் தாண்டி நடப்பில் இக்குழந்தைகளுக்கான எதிர்காலத்தை நோக்கிய கள எதார்த்தத்தில் நகரத் துவங்கிய நாட்களிலிருந்து எல்லாமுமே வலியும் வேதனையுமான துயரங்களைத் தாண்டி என் வாழ்வில் வேறு எதுவுமே இல்லையென்றாகிவிட்டது. மரபணுக் குறைபாடு என்றால் அதற்கென மரபணு மருத்துவர்கள் இருப்பார்கள், எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்கிற கற்பனையோடே மருத்துவப் படிப்பை முடித்தாயிற்று. இப்போது அத்தகைய மருத்துவம் அப்படி எங்கே தான் இருக்கிறது என்று தேடப் போய் கண்டு கொண்ட உண்மை என்னவோ இன்னும் நான் பயணிக்க வேண்டிய பாதைகளை நீளச் செய்தபடியே தான் இருக்கிறது.
முதலில் மரபணு மருத்துவ ஆலோசனை மையங்களுக்கு இப்பெற்றோர்கள் செல்கையில் இத்தகைய மரபணு மருத்துவர்கள் அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிற பிரச்சனைகள், குறைபாடுகள் மற்றும் குடும்பத்தில் அம்மா வழியிலும் அப்பா வழியிலுமாக இருக்கிறவர்களின் நோய்க்கூறுகளை வைத்தே மரபணு வரைபடத்தை கச்சிதமாக வரைந்தெடுக்கிறார்கள். பெற்றோர்களில் எவரிடமாவது பிறவிக் குறைபாடுக்குரிய அறிகுறிகள் இருப்பின் அவருடைய இரத்த மாதிரியை மரபணு பரிசோதனைக்காகச் சேகரித்து அதிலிருந்து மரபணுக்களை வரிசையாகப் படித்து எந்தக் குறைபாடுடைய மரபணு அப்பெற்றோருக்கு இருக்கிறதென்பதைக் கண்டறிவார்கள். அதன் பின்பு சேகரித்த ஒட்டுமொத்த தகவலின் அடிப்படையில் அவர்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்கு எத்தனை சதவீதம் இக்குறைபாடுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்பதை தெய்வவாக்கு போலவே பெற்றோர்களுக்குச் சொல்லிவிடுகிறார்கள்.

மரபணு மருத்துவர்கள் முதலில் கண்டறிவது என்னவோ இப்பிரச்சனையானது மரபணுவால் விளைந்த ஒன்றா அல்லது மரபணு தவிர்த்த வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்டிருக்குமா என்கிற மர்மமான விசயத்தைத்தான். மரபணுப் பிரச்சனையென்றால் எந்த மரபணுவில் பிரச்சனை, அது எத்தனை சதவீதம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதற்குச் சாத்தியம் என்கிற அடுத்தகட்ட தேடுதல் வேட்டையை நோக்கிய பாய்ச்சலை அது துவங்கிவிடும். ஒருவேளை மரபணுப் பிரச்சனையால் அத்தகைய குறைபாடு ஏற்படவில்லையென்றால் அடுத்த குழந்தைக்கும் இது வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது அல்லவா. அதாவது இப்பிரச்சனை அந்தவொரு குழந்தையோடே முடிந்து போகிற விசயமாகிவிடும். அப்போது அடுத்த குழந்தையை நினைத்து பெற்றோர்கள் அச்சப்பட வேண்டியிருக்காது. குறிப்பாக குறைபிரசவம், குறைவான எடையில் பிறத்தல், கிருமித் தொற்றுகள் போன்றவற்றின் வழியே பிறவிக் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பின் அது அடுத்த தலைமுறைக்கும் பரவாது என்பதை வைத்தே இதனை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஒருவேளை அவர்கள் ஒரே இரத்த உறவுக்குள்ளே தலைமுறை தலைமுறைக்கும் திருமணம் செய்திருந்தாலோ, அவர்களது வீட்டில் உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இத்தகைய மரபணு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதென்கிற முடிவிற்கு மரபணு மருத்துவர்களும் வந்துவிடுவார்கள். கிட்டத்தட்ட நமது உடலிலே தோராயமாக முப்பதாயிரம் மரபணுக்கள் இருப்பதாக இதுவரையிலும் கண்டறிந்திருக்கிறார்கள். அதிலே குறிப்பட்டு இருநூறு முதல் முந்நூறு வகையிலான மரபணுக்களில் தான் இத்தகைய காது கேளாத குறைபாட்டிற்கான காரணங்கள் புதைந்து இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.
இக்குழந்தைகளுக்கென மரபணுக் குறைபாட்டில் ‘கனெக்ஸின்’ என்கிற மரபணுக் கோளாறு தான் அதிகபட்ச காரணகர்த்தாவாக இருப்பதாக அறியப்படுவதால் முதலில் காது கேளாத பிறவிப் பிரச்சனையோடு வருகிறவர்களுக்கு இந்த ‘கனெக்ஸின்’ மரபணுவைத் தான் இரத்த மாதிரியைக் கொண்டு முதற்கட்டமாக பரிசோதித்துப் பார்க்கிறார்கள். இந்த பரிசோதனையின் முடிவிலேயே குறைபாட்டிற்கான விடை நமக்கு கிடைத்துவிட்டால் அதற்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரத்திற்குள்ளாகவே செலவீனம் முடிந்துவிடும். ஆனால் இத்தகைய பரிசோதனைகளெல்லாம் அரசு மருத்துவமனைகளிலே இன்றுவரையிலும் கிடையாது என்கிற விசயங்களைக்கூட என்னால் மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒருவேளை இந்தப் பெற்றோர்களின் இரத்த மாதிரியில் ‘கனெக்ஸின்’ மரபணுவிற்குரிய குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போனால் மீதமிருக்கிற அத்தனை மரபணுக்களையும் நாம் பரிசோதித்துப் படித்துப் பார்த்துத்தான் எந்த மரபணுவில் எந்தப் பிரச்சனை என்கிற முடிவிற்கே வர முடியும். அதை வைத்துத்தான் அத்தகைய பெற்றோர்களுக்கான ஆலோசனைகளையும் பின்பாக வழங்க முடியும். ஆனால் அதற்கு ஆகிற செலவு என்னவோ இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரைக்குமானதாக அல்லவா இருக்கிறது!
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இத்தகைய ஆலோசனையின் வழியே இந்தப் பெற்றோர்களுக்குப் பிறக்கப் போகின்ற குழந்தைக்கு, குறைபாட்டோடு பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எத்தனை சதவீதம் இருக்கிறது என்கிற தோராய மதிப்பைத்தான் தர முடியுமே தவிர கட்டாயம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று உறுதிபடச் சொல்லிவிடவும் முடியாது. ஆனால் அத்தகைய இடத்தை நோக்கி நகருவதற்கு உண்டான பரிசோதனையை பெற்றோர்கள் கரு ஜனித்த பின்னால் வந்து செய்து கொண்டு குறைபாட்டை உறுதி செய்து கொள்ள முடியும்.
இந்தப் பெற்றோர்களுக்கு கர்ப்பப்பையில் கரு ஜனித்து வளர்ந்து பதினாறு வாரக் குழந்தையாகிற போது அவர்களை மீண்டும் மரபணு ஆலோசனை மையத்திற்கு வரச் சொல்லி அவர்களுக்கு பனிக்குடப் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். அதன் மூலம் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் கோளாறு இருக்கிறதா அல்லது ஏற்கனவே பெற்றோர்களிடமிருந்து மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடித்த காரணிகள் ஏதும் இந்தக் குழந்தைக்கு ஒத்துப் போகிறதா என்கிற முடிவிற்கு வருகிறார்கள். இதன் வழியேதான் உங்கள் குழந்தைக்கு எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கப் போகிறார்களா இல்லையா என்கிற நல் வாக்கை அவர்கள் உறுதிபடப் பிறப்பிக்கிறார்கள்.
அதேசமயம் பெற்றோர்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லாமல் இருந்து முதல் குழந்தை இக்குறைபாட்டோடு பிறந்திருந்தால் அடுத்த குழந்தைக்கு இப்பிரச்சனை வராமல் இருப்பதற்கான வழிமுறைகளும் மரபணு மருத்துவத்தில் இருக்கவே செய்கின்றன. அதற்கு முதலாவது பிறந்த குழந்தையின் மரபணுவைப் பரிசோதனை செய்து குறைபாட்டிற்கான காரணியைக் கண்டறிந்துவிட்டு, பின்பு அதை வைத்தே அடுத்த குழந்தைக்குப் பனிக்குடப் பரிசோதனை மூலம் இக்குறைபாட்டை உறுதி செய்யவோ அல்லது ஆரோக்கியமான குழந்தையென சான்றிதழ் அளிக்கவோ செய்கிறார்கள். இதனை வைத்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தையைத் தொடரலாமா அல்லது கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்பதனைப் பற்றிய முடிவினை செய்து கொள்ளலாம்.
ஆனால் அதெல்லாம் சரி தான், இந்த மரபணு மருத்துவம் எங்கே இருக்கிறது, யார் ஆலோசனை வழங்குகிறார்கள், அவர்களை எப்படி அணுகுவது, எவ்வளவு செலவாகும் என்கிற கேள்வியெல்லாம் இருக்கிறதே! இப்படி யாரேனும் பெற்றோர்கள் கேட்கிற பட்சத்தில் அவர்களுக்குப் பதிலளித்துவிட வேண்டிய இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்கிற தேடுதலோடு பயணித்த பாதையில் எல்லாமே சூன்யமாக இருப்பதைக் கண்டு கொண்ட பின்பு அவர்களுக்கு நான் என்ன பதிலைத் தந்துவிட முடியும்?
மழை இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. மழைக்காலத்திலே சாலையில் ஊர்ந்து செல்கிற நத்தைகளைப் போல பேருந்தும்கூட மழைக்கு மெதுவாகவே செல்கிறது. மழைக்குக் காத்திருந்து பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மழையையும் தூக்கிச் சுமந்தபடியே பேருந்திற்குள்ளே நுழைகிறார்கள். அப்படியே மழையும் பேருந்தில் கொஞ்சம் பயணித்துப் பார்க்கிறது. சற்று நிமிடத்தில் பேருந்தும் பிரத்தியேக குளியலறையைப் போல காட்சியளித்துக் துவங்கிவிட்டது. முன்சீட்டின் இருக்கையில் அமர்ந்து பிள்ளையை தோள் மேல் போட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்த தாயைக் கண்டு கொள்ளாமல், சீட்டின் கைபிடியில் துளிர்த்து நின்ற மழைத்துளிகளை தாய்ப்பாலென சுவைத்துக் கொண்டிருந்தது அக்குழந்தை. மழையால் வயிறு நிரம்பிய பின்னால் தூங்கப் போகலாமென நினைத்திருக்கும் போல.
மழைக்காலத்தில் பேருந்து மனிதர்களின் அரவங்கள் குறைவதேயில்லை. அத்தனை இரைச்சலையும் மீறி தாயின் மடியிலிருந்தும் இருக்கையிலிருந்தும் எம்பிக் குதிக்கிற, ஜன்னல் வழியே மழையை வேடிக்கைப் பார்க்கிற, மழையின் பேச்சுக் குரலைக் கேட்டுக் கூப்பாடு போடுகிற குழந்தைகளும் கணிசமான அளவில் பேருந்தினுள்ளே இருக்கத்தான் செய்தார்கள். எனக்குத் தெரிந்து அந்தக் குழந்தைகள் யாருக்குமே காது கேளாத வாய் பேசாத குறைபாடு இருக்காது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
ஆனாலும் இது என்னவொரு மனநிலையென்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எந்தக் குழந்தையை எங்கே கண்டாலும் அவர்களை ஆரோக்கியமான குழந்தையா அல்லது மாற்றுத்திறனாளிக் குழந்தையா என்று ஒவ்வொருவரையும் மனம் எடை போட்டுப் பார்க்கவே எத்தனிக்கிறது. இப்படிப்பட்ட எண்ணத்தோடு பாவத்தைச் சுமந்து திரிகிற எனக்கும் குழந்தைகள் பிறக்கின்ற போது இதே மனநிலையில் தான் அவர்களையும் அணுகுவேனா, உண்மையில் ஒரு மருத்துவராக அன்றி சாதாரண மனிதனைப் போலதொரு தந்தையாக அவர்களை என்னால் நேசிக்க முடியாதா என்று வேறு அச்சமாக இருக்கிறது. பேருந்தினுள் இரைச்சலோடு இரைச்சலாக கூப்பாடு போடுகிற இந்தக் குறைவில்லாத குழந்தைகளைப் போலவே இந்தப் பூமியெங்கிலும் இருந்துவிட்டால் எப்படியிருக்கும் என்கிற மனநிலையை நோக்கி மனமோ ஏங்கித் தவிக்கத் துவங்கிவிட்டது.
ஆனாலும் நிஜம் என்னை மழையின் குளுமையும் மீறிச் சுடவே செய்கிறது. உண்மையின் வலி உடலெங்கும் பற்றியெரிகிற தீயைப் போல தகிக்கவே செய்கிறது. என் நிலையறிந்து தான் இந்த மழையும் எனக்காகப் பெய்து கொண்டிருக்கிறதோ என்றுகூட மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாடு முழுமைக்கும் இருக்கிற அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட எங்குமே இப்படியான மரபணு மருத்துவ ஆலோசனை மையங்களே இல்லையென்கிற உண்மையை ஒரு மருத்துவரான நானே இப்போது தானே அறிந்து கொள்ள முடிகிறது. சென்னையிலிருக்கிற ஒருசில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்களால் இத்தகைய ஆலோசனை மையங்கள் நடத்தப்படுகிறதே தவிர தமிழகம் முழுமைக்கும் இந்த மையங்கள் இல்லை என்கிற நிஜத்தைக் கண்டு கொண்ட நொடியில் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
இன்னும்கூட சொல்லப் போனால் மரபணு மருத்துவம் பற்றிய மருத்துவப் படிப்பென்பதே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையிலுமே இல்லை. அப்படியொரு படிப்பே இல்லாத பட்சத்தில் எங்கிருந்து மரபணு மருத்துவர்கள் உருவாகுவார்கள்? மரபணு மருத்துவம் படித்த மருத்துவர்களே இல்லாத பட்சத்தில் இக்குழந்தைகள் எங்கே சென்று யாரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள்? டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மட்டும் செவிலியர், விலங்கியல், நுண்ணுயிரியல் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கென்று முதுகலை மரபணு ஆலோசனை மருத்துவ பட்டப் படிப்பு இருக்கிறதே தவிர இன்றைய நிலையிலும் மருத்துவம் படித்தவர்களுக்கான மரபணு மருத்துவப் படிப்பென்பதோ, பயிற்சியோ எதுவுமே இல்லையென்பது தானே இங்கே உண்மை நிலவரமாக இருக்கிறது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆராய்ச்சி மையத்தில் மட்டும் மரபணு மருத்துவம் தொடர்பான துறை சமீபத்தில் துவங்கப்பட்டு மரபணு தொடர்பான ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் செய்து வருகிறார்கள். இதைத் தவிர வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரிகளிலுமே இப்படியான துறை இல்லை என்பதை நேரிலே சென்ற போது தான் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இங்கும்கூட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் தான் ஆலோசனைகளை மேற்கொள்கிறார்களே தவிர அதற்கென்று மரபணு மருத்துப் பயிற்சி பெற்ற நிபுணர்கள் எவருமே அங்கில்லை என்பதே எதார்த்தம். அங்கிருக்கிற ஆய்வகத்தில் ‘கேரியோடைப்பிங்’ என்கிற மரபணுக்களை எண்ணிப் பார்த்துக் கண்டறிகிற நோய்க்கான பரிசோதனைகள் தான் இருக்கிறதே தவிர மேலே இப்பெற்றோர்களுக்கென்று குறிப்பிட்ட குறைப்பட்ட மரபணுவைக் கண்டறியும் பரிசோதனைகளெல்லாம் இல்லவே இல்லை.

என் பயணத்தில் நான் கண்டு கொண்ட எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிகிச்சைக்கு ஆகிற செலவை எண்ணியே அதனை வலிய தவிர்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். அப்படியிருக்க, இப்படி முப்பதாயிரம் வரையிலும் செலவளித்து பரிசோதனை செய்து கொள்வதை என்னவோ அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லப் போகிற கிளி ஜோசியம் பார்ப்பதைப் போலவே நினைத்துக் கொண்டு இதையெல்லாம் தவிர்க்கவே முயலுவார்கள். அப்படியென்றால் அரசு மருத்துவமனையிலேயே இலவச மரபணு பரிசோதனை வசதிகள் வருகிற காலம் வரையிலும் இவர்களை அத்தகைய இலக்கை நோக்கி நகர்த்துவது எவ்வளவு சிரமம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஆக, இங்கே மரபணு மருத்துவம் தொடர்பான மருத்துவர்களுக்கான படிப்பும் இல்லை, அதற்கான மருத்துவர்களும் இல்லை, அதற்கான துறையோ, ஆலோசனை மையங்களோ, பரிசோதனைக்கூடங்களோ, சிகிச்சை மையங்களோகூட எதுவுமே இல்லை. ஆனால் இப்படியான சூழல் தான் இருக்கிறது என்பதை இப்பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு எனக்கு எதுவும் தெரியாது என்பதைப் போல இங்கிருக்கிற எல்லோரையும் போல தலையைத் திருப்பிக் கொண்டு என்னால் நகர்ந்து செல்லவும் முடியாதே. ஆனால் இதற்கான தீர்வென்பது மிகமிக எளிதானதுதான். அத்தகைய தீர்வை நோக்கிச் சிந்திப்பவர்களே இங்கு குறைவு என்பதன் விளைவு தான் இன்றைய மரபணு மருத்துவம் பற்றிய எதார்த்த நிலையென்பதை யாரிடம் சொல்லி நான் புரிய வைப்பது?
பொதுவாக மாவட்டம் முழுவதிலும் இருந்தே பிறவிக் குறைபாடுடைய காது கேளாதவர்களைப் போல பார்வையற்றவர்கள், இருதயக் குறைபாடுள்ளவர்களென இன்னும் எத்தனையோ நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அத்தனை பேருக்குமே இத்தகைய மரபணு மருத்துவ ஆலோசனைகள் அவசியமனது தானே. பிறவியிலேயே குறைபாட்டோடு பிறக்கிற அத்தனை பேருக்குமே அதற்கான மூலக் காரணம் மரபணு பிரச்சனையா அல்லது மரபணு அல்லாத ஒன்றா என்கிற குழப்பத்தைப் பரிசோதித்துத் தீர்க்க வேண்டும் தானே. இதன் வழியே இக்குறைபாடுடைய குழந்தைகளின் அடுத்த தலைமுறையை நல்ல ஆரோக்கியமான சமூகமாக உருவாக்குவதற்காக மாவட்டம் தோறும் இத்தகைய மரபணு ஆலோசனை மையங்களின் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிய எண்ணம் எனக்குள்ளே தோன்றிக் கொண்டே தான் இருக்கிறது.
ஏற்கனவே மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் என்கிற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிற அதேசமயத்தில் எல்லா மருத்துவக் கல்லூரிகளிலுமே மரபணு மருத்துவத்திற்கான துறையை துவங்க வேண்டிய தேவையை நோக்கி நாம் நகர வேண்டிய காலமாகிவிட்டது. இன்னும்கூட அரசு மாவட்ட மருத்துவனைகளில் ஏற்கனவே இயங்கி வருகிற குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைந்த மையங்களில் மரபணு ஆலோசனைப் பிரிவையும் ஏற்படுத்தி நாம் இத்தகைய பெற்றோர்களுக்கு உதவ முடியும். அங்கிருக்கிற ஆர்.பி.எஸ்.கே மருத்துவர்கள், குழந்தைகள் சிறப்பு மருத்துவர்களுக்கென்று மரபணு மருத்துவம் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்பையோ அல்லது அவர்களுக்கென்றே சிறப்பு பயிற்சி முகாம்களையோ ஏற்படுத்தி மரபணு மருத்துவத்தைப் பற்றிய முன்னெடுப்பை ஏற்படுத்தலாம். உண்மையிலே ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாய் பிறந்து அவர்களுக்குக் காலம் முழுமைக்கும் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பராமரிக்கவென்று ஆகிற செலவைக் காட்டிலும் இக்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ஆகிற செலவு என்பதுகூட குறைவாகத்தான் இருக்கும்.
இன்னும் கொஞ்ச தூரத்தில் பேருந்து என் வீட்டிற்கான நிறுத்தத்தில் நின்றுவிடக் கூடும். மழையும்கூட ஓய்ந்துவிட்டது. இனி எப்போது பெய்யுமென்று தெரியவில்லை அல்லது எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம். ஆனால் இக்குழந்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிற பயணம் முடியவே போவதில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகவே புரிகிறது. நான் பயணிக்கிற இந்தப் பாதைக்கு எந்தவொரு முன் வரைபடமும் இல்லை. இதற்கு முன்னர் இந்தப் பாதையில் பயணித்த நபரோ அல்லது எப்படியெல்லாம் பயணிக்கலாம் என்கிற அனுபவ குறிப்புகளோகூட எனக்குக் கிடையாது. நான் உருவாக்கிற இந்தப் பாதை ஒரு வேளை எனக்குப் புதிய பாதையாகவே தோன்றினாலும் என்னைப் போலவே இனி பயணிக்கப் போகிற அடுத்த தலைமுறைக்கு இது ஏற்கனவே அனுபவப்பட்ட பாதையாகவும் இருக்கக்கூடும். அதற்கு நான் உழைக்க வேண்டிய காலமும் பயணிக்க வேண்டிய தூரமும் அதிகமாக இருக்கிறது என்பதையும்கூட நான் புரிந்தே தான் வைத்திருக்கிறேன்.
இங்கு ஆர்.பி.எஸ்.கே, எஸ்.எஸ்.ஏ போன்ற இன்னும் எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இன்னும் கண்டறியப்படாத, கண்டறிந்தும் ஆறு வயதைக் கடந்து சிகிச்சை செய்ய முடியாத, குணப்படுத்துவதற்கான வயதிற்குள்ளாக கண்டுபிடித்தும்கூட சிகிச்சை மற்றும் பொருளாதாரத்தை மனதில் வைத்து எல்லாவற்றையும் நிராகரிப்பவர்களை இன்னும் நான் என் நெடிய பயணத்திலே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன, இதை முற்றிலும் தவிர்க்கவே முடியாதா, இதற்கான எளிய விடையென்று ஏதாவது ஒன்று எந்த வகையிலேனும் கிடைத்திடாதா என்று சதா அலைந்து கொண்டே இருக்கிற தருணத்தில் தான் அதற்கான தரிசனத்தை நான் ஒருவழியாகக் கண்டு கொள்ள முடிந்தது.
அது என்னவென்று அறிந்து கொள்ள நீங்களும் ஆர்வமாக இருக்கிறீர்களா?
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்
11. மரபணுவும் நம் தலையெழுத்தும்..
தலை பாரமாக இருக்கிறது. இதற்கு எந்த வைத்தியமும் உதவப் போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். அப்படியும் நீண்ட நேரமாக தலையில் கை வைத்தபடியேதான் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். மனிதனை அலைக்கழிப்பது கேள்விகளும் அது தேடச் சொல்லி உந்துகிற அதற்கான விடைகளும்தானே! கேள்வி ஒன்றாக இருந்தாலும் அது பல பதில்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஒன்றைத் தேட இன்னொன்று கிடைக்கிறது. அதிலிருந்து அடுத்தடுத்த கேள்வி முளைத்துக் கொண்டே போகிறது. இந்த தொடர் தேடலில் எனது முதல் கேள்வி என்னவென்பதையே மறந்துவிடுகிறேன். நான் எந்த பதிலைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்பதுகூட பல சமயங்களில் குழப்பமாகிவிடுகிறது. பல நாட்களாக காளீஸ்வரியின் அம்மா பேசிய உக்கிரம் நிறைந்த வார்த்தைகளும் அதனூடே அவள் முன் வைத்த கேள்விகளும் தலைக்குள் வண்டு துளைத்தெடுப்பதைப் போல சதா துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.
“அவ வேணாமுன்னு பெத்த புள்ள சார். மூத்த புள்ள பிறவி ஊனமா போனதும் அடுத்த புள்ளைக்கும் இப்படி ஆகிடுமோன்னு பயந்து பதறியடிச்சுட்டுப் போய் கருவை கலைக்கிறதுக்கு டாக்டர்கிட்ட போய் நின்னா கருவைக் கலைக்கிறது பாவம் கீவம்னு தத்துவம்லாம் பேசி அப்போ மாட்டேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இப்போ பாருங்க ரெண்டு புள்ளயும் வாயும் காதும் இல்லாம ஊனமா கெடக்குதுங்க. அப்பவே பாவம்னு பாக்காம கருவுலயே கலைச்சுருந்தா இப்படி எம் புள்ளைய ஊரெல்லாம் சேந்து அய்யோ பாவம்னு சொல்லும்படியா ஆயிருக்குமா?”
உண்மையிலே குழந்தைகள் இப்படி குறைபாடுடையவர்களாய் போவதற்கு அவர்களுடைய பெற்றோர்களே காரணமாயிருக்க முடியுமா என்ற கேள்விதான் எனக்குள்ளே இப்போது தோன்றிக் கொண்டே இருக்கிறது. இந்தக் கேள்வியே என்னை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. தான் பெறப் போகிற பிள்ளை பிறவிக் குறைபாடாய் போவதற்குத் தானே காரணமாய் இருக்க முடியும் என்று ஒரு பெற்றோருக்கு முன்னமே தெரிந்தால் அந்தத் தாயின் மனம் எப்படி இயங்கும்? நெஞ்சம் பதறாதா? கணவனோடு ஒவ்வொரு கூடுதலிலும் பிள்ளை உண்டாயிருக்குமோ, அது குறையுள்ள பிள்ளையாய் போகுமோ என்று அச்சப்படமாட்டாளா?
அப்படி கரு உருவாகி வளர வளர அவளது பயம் எதைப் பற்றியதாக இருக்கும்? நம்மை இந்த உலகம் மலடி என்று இனி சொல்லாது என்றா? குறையுள்ள பிள்ளையைப் பெற்றாவது தான் மலடியில்லை என்று நிரூபித்ததை எண்ணி அவளால் நிம்மதி அடைந்திருக்க முடியுமா? தனக்கு பிள்ளை பிறந்தால் போதும் அது எப்படியிருந்தாலும் வளர்த்துவிடுவேன் என்று அவர் கங்கனம் கட்டிக் கொள்வாரா? அல்லது மற்ற எல்லா பிள்ளையும் பிறந்து சுகமாய் இருக்க இவர்கள் மட்டும் வளர்ந்து துன்பப்பட வேண்டுமா என்று நினைத்து கருவிலேயே கலைக்கச் சொல்லுவாரா? அப்படித்தானே காளீஸ்வரியின் தாயுமே யோசித்திருக்கிறாள்! இப்படி எத்தனை எத்தனையோ பிறவிக் குறைபாட்டோடு கையின்றி காலின்றி பிறந்த குழந்தையை யாருக்குமே தெரியாமல் வீட்டிலேயே பிரசவித்து கருணைக் கொலை செய்த தாய்மார்களும் யாரேனும் இருக்கக் கூடுமோ? இப்படியெல்லாம் யோசிக்க யோசிக்க எனக்கே பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது.
இப்படித்தான் ஒன்றை யோசிக்க இன்னொன்றை நோக்கி மனம் குரங்கைப் போல தாவிக் கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்தில் என்ன கேள்வி தோன்றியது என்பதே எனக்கு இப்போது மறந்துவிட்டது. ஆம், இக்குழந்தைகள் பிறவிக் குறைபாட்டாய் பிறப்பதற்கு பெற்றோர்களே காரணமாய் இருக்க முடியுமா? இதே கேள்விதான்.
ஆம், முடியும். ஒரு பிள்ளை பிறவிக் குறைபாட்டாய் பிறப்பதற்கு பெற்றோர்களும், ஏன் அதற்கு முந்தைய தலைமுறையும்கூட காரணமாக இருக்க முடியும் என்றுதான் மருத்துவப் புத்தகங்கள் சொல்லுகின்றன. இதைப் பற்றி சிந்திக்க சிந்திக்க இதற்கான விடையைத் தேடுவதற்கு, இதற்கொரு சரியான தீர்வைக் காண்பதற்கு நான் மருத்துவப் புத்தகத்தினுள் மூழ்கித் தேட வேண்டியிருந்தது. ஒரு கப்பல் மூழ்கிப் போகும்போது அது வரலாற்றோடும் தான் ஆழ்கடலிற்குள் தூங்கப் போகிறது. பலநூறு ஆண்டுகளுக்கு பின் அகழ்வாராயப்படும் அந்தக் கப்பல் எத்தனையோ வரலாற்றின் அதிசயப் பக்கங்களை நிகழ்காலத்தில் எழுதிச் செல்கிறது. அப்படியானதொரு அபூர்வமான புதையலொன்றைத் தேடித்தான் இப்போது நானும் புத்தக கடலிற்குள் மூழ்கியபடி முக்குளிப்பான்களைப் போல நீந்தத் துவங்கியிருக்கிறேன்.
குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து வந்தவர்கள் அல்லவா! அப்படியென்றால் பிள்ளைகளின் பிரச்சனையும் பெற்றோர்களிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று எளிதாக புரிந்து கொள்ள முடியும். இக்குறைபாடோ குழந்தைகள் பிறந்த பின்பாக ஒன்றும் புதிதாய் முளைத்து வருவதில்லை. அது வயிற்றுக்குள் கருவாய் ஜனித்து வளரும் போதே பிரச்சனைக்குள்ளாகி அவர்கள் பிறக்கின்ற போதே குறைபாடுள்ளவர்களாக பிறக்கிறார்கள். அப்படியென்றால் வயிற்றுக்குள்ளே தான் ஏதோ கோளாறு நடக்கிறது என்று சுலபமாக புரிதலுக்கு வந்துவிட முடியும். ஆனால் மாயாஜாலக் கதைகளில் வருகிற ஆழ்கடல் புதையலைத் தேடுகிற பயணத்தில் புதையலுக்கான வரைபடம் இரண்டாக பிரிந்து கிடப்பதைப்போல இதற்கான விடையுமே இரண்டு விதமான வரைபடத்திற்குள் ஒளிந்தே கிடக்கிறது. இந்த இரண்டு வரைபடங்களை வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கான மூலப் பிரச்சனையைத் தேடுகிற இந்த ஆழ்கடல் பயணத்தை நினைத்து நான் இப்போதும் பரவசமடைந்தவனாக இருக்கிறேன். ஏனென்றால் இந்தத் தேடிலின் முடிவிலே என்ன புதையல் எனக்கு கிடைக்கப் போகிறது என்று எனக்கே தெரியாதே!
நான் சந்தித்த குறைபாடுடைய குழந்தையின் பாட்டி ஒருவர், “இந்தப் புள்ளையோட தாத்தாவுக்கும் இப்படித்தான் காதும் கேக்காம வாயும் பேசாம இருக்கு. அவரே அப்படித்தான் இருக்காரு. இந்தப் புள்ளைய மட்டும் சரி செஞ்சுற முடியுமா? இது பரம்பரை வியாதியாச்சே!” என்று கரித்துக் கொட்டியபடியே இருந்தார். இப்போது மீண்டும் ஒரு கேள்வி. இது பரம்பரை வியாதியா இல்லியா? இது புள்ளைங்க பேரப்புள்ளைங்க என்று அடுத்தடுத்த தலைமுறைக்கும் தாவுமா? ஆக, இப்படியான குழப்பத்தையும் நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும் அல்லவா!
காளீஸ்வரியின் அம்மா அப்பா இருவருமே ஒரே இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொண்டவர்கள். அதாவது அக்கா பொண்ணு முறை அவருக்கு. அடுத்ததாக பிரியாவின் அப்பா அம்மாவுமே கிட்டத்தட்ட அதே இரத்த உறவிற்குள் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அவருக்கோ அத்தைப் பொண்ணை கட்டிக்கிட்ட முறை.
இரண்டாமாண்டு மருத்துவப் பாடமான நோயியல் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதன் பக்கங்களில் நான் எதையெதையோ தேடிக் கொண்டிருக்கிறேன். மரபணு சம்பந்தப்பட்ட பாடத்தில் இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பிறக்கிற குழந்தை இப்படி காது கேளாத பிரச்சனை மட்டுமல்ல தலையிலிருந்து கால்வரையிலான எந்த உறுப்பிலுமே குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கல்லூரிக் காலத்தில் படித்த ஞாபகம். அதைத்தான் இப்போது புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து தேடிக் கொண்டிருக்கிறேன்.
மரபணுவை பற்றித் தான் படிக்கப் போகிறோம், அதைப் பற்றித் தான் பெற்றோர்களிடம் விளக்கப் போகிறோம் என்று யோசிக்கிற போது அவர்களால் இதைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ள முடியுமா என்றுதான் இப்போது குழப்பமாக இருக்கிறது. ஆனால் நிச்சயமாக இந்த மரபணுவைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு அவசியம் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனாலும் அவர்களும் விளங்கிக் கொள்கிற வகையில் என்னால் தெளிவாக்கிச் சொல்லிவிட முடியுமா என்கிற பயமும் கூடவே தொற்றிக் கொள்ளத் தான் செய்கிறது. எதுவானாலும் சரி, என் முயற்சியை எப்போதும் விடப்போவதில்லை. கடலுக்குள் மூழ்கி முத்துக்குளிப்பவனுக்கு அதுதான் வாழ்க்கை, போராட்டம், எதிர்காலம் எல்லாம். அப்படியிருக்க ஒருமுறை புத்தகக் கடலுக்குள் மூழ்கிவிட்டான பின்பு, கையில் வரைபடம் கிடைத்தான பின்பு இனி எக்காரணம் கொண்டும் தேடலை நான் விடப்போவதில்லை.
நாம் வாழுகிற இந்த சமூகமே நோய்வாய்ப்பட்ட சமூகம்தானே! சக மனிதனிலிருந்து இன்னொரு மனிதன் எப்படியெல்லாம் தன்னை வகைபடுத்திக் கொள்ள முடியுமோ, உயரே உயரே வைத்துக் கொள்ள முடியுமோ, தன்னை எந்தெந்த வழியிலெல்லாம் மேம்பட்டவனாக காட்டிக் கொள்ள முடியுமோ அப்படி ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து தனித்தேதான் கிடக்கிறார்கள். அப்படி தனித்துக் கிடக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தனது குணநலன்களோடு ஒத்துப்போகிற மனிதர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களுக்கென்று ஒரே குலம், கோத்திரம், கோட்பாடு, பழக்கவழக்கம் என்றெல்லாம் வைத்துக் கொண்டு குழுகுழுவாக, சாதிவாரியாக, மதம்வாரியாக இந்த மனித சமூகமே ஏதாவதொரு வகையில் பிளவுபட்டுத்தானே கிடக்கிறது.
எது எப்படியும் ஆகட்டும். இந்த மனித குலத்தில் பெண்களின் நிலை மட்டும் அப்படியேதான் இருக்கிறது. குலத்தைக் காக்க, கோத்திரத்தைக் காப்பாற்ற, குடும்ப ஒழுக்கத்தைப் பேண, குடும்பச் சொத்துகளைப் பாதுகாக்க என பெண்களை இந்த ஆணாதிக்கம் நிறைந்த மனித சமூகம் கிட்டத்தட்ட ஒரு பண்டமாற்று பொருளைப் போலத்தானே வைத்திருக்கிறது. சொந்த பந்தம் விட்டுப் போயிறக் கூடாது, பொண்ணு நம்மைவிட்டு வெளியே எங்கேயும் போய்விடக்கூடாது கைக்குள்ளயேதான் இருக்கணும், சொந்த பையனுக்கே கொடுத்தால் பொண்ணு நமது கட்டுப்பாட்டிலேதான் இருக்கும் என்று பெண்களை இரத்த உறவிற்குள்ளாக திருமணம் செய்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே! அதை சமூக கண்ணோட்டமாகப் பார்க்காமல் அறிவியல் கண்களைக் கொண்டு பார்க்கத்தான் இப்போது நான் மருத்துவ பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன்.
இப்புத்தகத்தை படிக்கிற வரையிலும் அதெப்படி சொந்தபந்தத்திற்குள் திருமணம் செய்தால் பிரச்சனை வரும். அதுவே வேறு யாரோ ஒருவரோடு திருமணம் செய்து கொண்டால் வராதா? என்றுதான் குழப்பத்தோடு யோசித்திருந்தேன். ஆனால் இந்த மருத்துவ புத்தகங்கள் எனக்கு திறந்து காட்டுகிற உலகமோ ஒரு சாகசம் நிறைந்த உலகம் போலாகவே இருக்கிறது. மணலில் புதைந்து கிடக்கிற சங்கினை எடுத்து விசில் ஊதிப் பழகுகிற நாளில் இதுவும்கூட ஒரு கூழாங்கல்லைப் போலத்தானே இருக்கிறது என்றே நினைத்திருந்தேன். ஆனால் கடற்கரை மணலில் பரந்து பாய்போல விரியும் அலைகளுக்குக் கீழே மணலிற்குள் நழுவிக்கொண்டு ஓடுகிற சங்குப் பூச்சியைப் பார்த்த பின்னால் அடைந்த பரவசத்தைப் போலவே இப்புத்தகமும் மரபணுக்களைப் பற்றிய புத்தம் புதியதான உலகத்தை எனக்கு திறந்து காட்டியபடியே இருக்கிறது.
முதலில் திருமணம் செய்து கொள்கிற தம்பதியினருக்கு குழந்தை எப்படி பிறக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் இரத்த உறவுக்குள்ளாக திருமணம் பற்றி எளிதாகச் செல்லிவிட முடியும் என்றே நினைக்கிறேன்.
அதாவது கணவன், மனைவி இருவருமே எதனால் ஆக்கப்பட்டவர்கள் என்கிற கேள்வியைக் கேட்டால் உடனே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று யோசிக்க கூடாது. ஏனென்றால் அறிவியலின் படி மனிதர்களாகிய நாமெல்லாம் பல செல்களால் ஆன உயிரினம். அதாவது கைபிடி களிமண்ணை குழைத்து பிடிமண் பொம்மை சிலையை உருவாக்குறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிடிமண் பொம்மையில் எத்தனை மண் துகள்கள் இருக்கென்று தெரியுமா? தெரியாது. அந்த கணக்குத் தெரிந்தால் அத்தனை மண் துகள்கள் சேர்ந்த ஒரு சிலைதான் இந்த பிடிமண் பொம்மை என்று நாம் தெளிவாக சொல்லிவிடலாம் இல்லியா! அதேபோலத்தான் நாமும் பல செல்களை ஒன்றாக்கி கருப்பைக்குள் பிடிக் கொழுக்கட்டை போல பிடித்து வைத்து செய்யப்பட்ட பிள்ளைகள் என்றே புரிந்து கொள்ளலாம்.
வானத்திலுள்ள இரவு நட்சத்திரங்களை எண்ணி எண்ணிப் பார்த்து தோற்பது போலல்லாமல் அறிவியலோ நமது உடலிலுள்ள செல்களையெல்லாம் தோராயமாக எண்ணிப் பார்த்து ஒரு மனிதன் 37.2 இலட்சம் கோடி செல்களால் ஆனவன் என்றதொரு கணக்கைச் சொல்லுகிறது. அப்படியென்றால் அந்த திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இருவருமே 37.2 இலட்சம் கோடி செல்களால் ஆனவர்கள் என்று வைத்துக் கொள்ளலாமா? சரி, இத்தனை செல்களும் எங்கிருந்து வந்திருக்கும்? யார் இதை பிடித்து குழந்தையாக அழகாக வணைந்தார்கள்? என்றெல்லாம் தெரிய வேண்டுமல்லவா!
முன்பெல்லாம் புத்தகங்களை படிக்கையில் வெறுமனே நோய், அதற்கான அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று மட்டுமே மனதில் தோன்றும். அந்தந்த நோயிற்குரிய மனிதனைப் பற்றியோ அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ படிக்கிற காலம் வரையிலும் தோன்றியதில்லை. ஆனால் இப்போது புத்தகத்தைப் படிக்கிற போதெல்லாம் குறைபாடுடைய குழந்தைகளே புத்தகத்தினுள் வரைந்திருக்கிற ஒவ்வொரு படத்திலும் தெரிகிறார்கள். அதில் வருகிற காது படங்கள் அவர்களின் காதுகளாகவே மனதில் படுகிறது. இக்குறைபாட்டுக்கான காரணத்தைத் தேடி புத்தகத்தில் கண்கள் அலை பாய்கிற போதுகூட அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர்களும் கண்முன்னே வந்து வந்து அழுகிறார்கள், ஏதேதோ சொல்லிச் சொல்லி வேதனையுடன் சிரிக்கிறார்கள். எது எப்படியோ, இந்தக் குறைபாட்டை சரிசெய்வதற்கான தீர்வை கண்டுபிடிக்கிற வரைதான் இந்த அழுகையும், வலியும், வேதனையும் எல்லாம் என்று சொல்லி எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டுதான் இப்போதெல்லாம் நகர வேண்டியிருக்கிறது.
சரி, திருமணமாகிய பின்பு பெண்ணின் வயிற்றுக்குள்ளே கருவாக குழந்தை வளர ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் நமக்குத் தெரியும். ஆனால் அந்த பெண்ணின் கர்ப்பப்பைக்குள்ளே என்ன வேலை நுட்பமாய் நடக்கிறது என்று தெரிய வேண்டுமே! அதாவது கருத்தரித்தலின் போது ஆணிலிருந்து வருகிற விந்தணுவும் அந்த சமயம் பார்த்து பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளியாகிற சினை முட்டையும் இணைந்து ஒரே கருவாகிறது. ஆக, அவ்வளவுதான். இங்கிருந்து ஒரு வரைபட்டதை தூக்கிக் கொண்டு நாம் முதல் புதையலைத் தேடி போவோம்.
ஒரு மனிதன் 37.2 இலட்சம் கோடி செல்களால் ஆனவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் ஒரே ஒரு செல்லிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஏன், மருத்துவனாகிய நானும்கூட கண்ணுக்கே தெரியாத நுண்ணோக்கியால் கூர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய ஒரு செல்லிலிருந்து வளர்ந்தவன்தான் என்று யோசிக்கும் போது எனக்கே வியப்பாய்தான் இருக்கிறது. அதாவது மண்ணுக்குள் ஒரே ஒரு விதையைப் போட்டு அது பல கிளைகளுடைய பெரிய மரமாய் வளர்வதைப்போல. ஆனாலும் அந்த ஒரு செல்லும் எங்கேயிருந்து வந்தது, அது எப்படி உருவாயிற்று, பின் அது என்னவாக ஆயிற்று என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே!
இப்போது ஒரு வெங்காயத்தை உரிப்பது போல ஒவ்வொன்றாக உரித்துப் பார்ப்போம். பொதுவாக நம் உடல் முழுக்கவே செல்களால் ஆனதுதான். அந்த செல்களுக்குள்ளும் முட்டைக்குள் மஞ்சள் கரு இருப்பதைப் போலவே குட்டியாக கருவும் இருக்கிறது. அந்த கருவிற்குள்ளேதான் குரோமோசோம்கள் இருக்கின்றன. அதாவது பள்ளிக் குழந்தைகள் ரெட்டை சடை போட்டு ரிப்பன் கட்டியிருப்பார்களே அதுமாதிரியே குரோமோசோம்களும் இருக்கும். எப்படி ரிப்பன் நூல் பிரிந்தால் நீள.. நீள.. நீளமாக வருமோ அதே மாதிரி குரோமோசோம்களைப் பிரித்தால் நூல் போல ரொம்ப ரொம்ப நீளமாக நீண்டு போய் அந்த நூலிழையில்தான் மரபணுக்களும் வரிசைகட்டி அமர்ந்திருக்கும்.
இந்த மரபணுக்களெல்லாம் என்னவென்று தெரியுமா? ஒரு செல் எப்போது, என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அதற்குள்ளே இருக்கிற மரபணுக்கள் தான் முடிவு செய்யும். அதாவது அதற்கான தகவல்கள் எல்லாம் இந்த மரபணுக்குள்ளே சில குறியீடுகளாக பதிந்து வைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட ஒரு அஞ்சல் பெட்டியைப் போல. நம் தலையெழுத்து என்று சொல்கிறோமே, ஒருவேளை அது இந்த மரபணுக்குள் எழுதி வைக்கப்பட்ட ஒன்று தானோ என்னவோ? அதாவது வறுத்த முழு கோழியைக் கண்டவுடன் எச்சில் வாயில் ஊறுகிறதென்றால் அது அந்த உமிழ்நீரைச் சுரக்கிற செல்களின் மரபணுவினால் தான் நடக்கிறது என்பதை வைத்தே இதனை புரிந்து கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்த்தால் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் ஆணின் விதைப்பையிலிருந்து வெளியாகிற விந்தணு, பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளியாகிற சினை அணு ஆகிய இரண்டே இரண்டு வகையான செல்களைத்தவிர. இந்த இரண்டு வகையான செல்களில் மட்டும் அதிலே பாதியாக 23 குரோமோசோம்கள்தான் இருக்கும். அதாவது ஆண் பாதி பெண் பாதியாகக் காட்சியளிக்கிற அர்த்தநாரீ சிலையைப் போல இந்த 23 குரோமோசோமுடைய ஆணின் விந்தணுவும், பெண்ணின் சினையணுவும் கருத்தரித்தலின் போது ஒன்றுகூடும் போது அது 46 குரோமோசோம்களை உடையதாக, ஒரு முழு செல்லாகப் பரிணமிக்கிறது. அந்த முழு செல்லே பின்னர் குழந்தையாக உருமாறுகிறது. ஆக, முதன் முதலாக உடலின் 37.2 இலட்சம் கோடி செல்களும் ஒரே ஒரு செல்லிலிருந்து உருவானவைதான் என்று சொன்ன அந்த ஒரு செல்லானது இந்த விந்தணுவும் சினையணுவும் இணைந்து உருவான செல்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?
இப்படி பெண்ணின் கருப்பையிற்குள்ளும் தம்பதிகளாகிவிட்ட இந்த இரண்டு இனப்பெருக்க அணுக்களும் இணைந்து ஒரே செல்லாகிற பிறகு அது பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. கடற்கரையில் கொட்டிக் கிடக்கிற எண்ணவே முடியாத அத்தனை மணல்களும் ஏதோவொரு பெரிய மலையிலிருந்து வந்தவைதானே! வானிலே மின்னுகிற நட்சத்திரங்களெல்லாம் பிரளய வெடிப்பின் ஏதோ ஒன்றிலிருந்து வெடித்துச் சிதறியவை தானே! அப்படித்தான் இந்த ஒரு செல்லானது கருப்பைக்குள்ளே தன்னை மடங்குளாக பெருக்கிக் கொண்டே செல்கிறது. ஒன்றிலிருந்து இரண்டாக, இரண்டிலிருந்து நான்காக, நான்கிலிருந்து எட்டாக, எட்டிலிருந்து பதினாறாக என்று பெருகிப் பெருகி ஒரு கட்டத்தில் ‘மொருலா’ என்கிற இறுகிய களிமண் உருண்டைப் போலாகிறது. இந்தக் களிமண்ணிலிருந்துதான் கருப்பைக்குள்ளே கண், காது மூக்கு எல்லாம் வைத்து, இருதயம், மூளை, நுரையீரல் என்றெல்லாம் வணைந்து குழந்தைக்கு உயிரைக் கொடுக்கிறாள் தாய். இதன் பின்னர்தான் இந்த செல்களெல்லாம் உருவத்தில் பருத்துப் பெரியதாகி வளர்ந்து முழு உருவம் பெற்று குழந்தைகளாகப் பிறக்கிறார்கள்.
இப்படி கருவின் களிமண்ணிலிருந்து குழந்தையை வார்க்கின்ற போது அவர்கள் யாரைப்போல, எப்படி, எந்த நிறத்தில் வர வேண்டுமென்பதை அந்த அம்மா அப்பாவிடமிருந்து வந்த செல்லின் மரபணுவிற்குள்ளே பொதிந்திருக்கிற தகவலின் அடிப்படையிலே தான் உருவாகிறார்கள். பானை வணைபவனின் எண்ணத்திற்கேற்ப மண்பாண்டங்கள் விதவிதமாக உருக்கொள்வது போல மரபணுவின் தகவலுக்கேற்ப குழந்தையும் அழகாய் வணையப்படுகிறது. உதாரணமாக குழந்தைக்கு இரண்டு காதுகள் வேண்டும், அதற்குள் சவ்வு, காக்ளியா, நரம்பு செல்களெல்லாம் சரியான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்கிற தகவலைப்போல. ஒருவேளை அம்மா அப்பாவிடமிருந்து வருகிற மரபணுவு குறைபாடுடையதாக இருந்தால், அந்த மரபணுவும்கூட காதுகள் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக இருந்தால் அந்த குழந்தையானது காது கேளாத குறைபாடுடைய குழந்தையாகவே பிறக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா!
ஆனால் இப்போது திரும்பவும் அதே கேள்வி எழவே செய்யும். இதற்கும் இரத்த உறவுக்குள் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்வி நியாயமானதுதான், எளிதானதுதான். அதனை விளக்குவதுதானே இங்கு கடினமாக இருக்கிறது.
பொதுவாக செல்லிற்குள் இருக்கிற குரோமோசோம்களில் வரிசைகட்டி அமர்ந்திருக்கிற மரபணுக்கள் தங்களுக்குள்ளேயே வித்தியாசம் காட்டுபவை. தனக்கென்று தனித்துவம் இல்லையென்றால் தானே தற்கொலை செய்து கொள்ளும். எதிரெதிர் துருவமாக வந்தால் மட்டுமே காந்த சக்தி உயிர் பெறுவதைப்போல, இரண்டு எதிரெதிர் முனைகள் ஒன்று சேர்கிற போது மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்வது போல மரபணுக்களில் இருக்கிற வரிசைகள் ஒவ்வொன்றுமே வேறுவேறானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மின்சாரமே உற்பத்தி செய்ய முடியாததைப்போல அந்த மரபணுவும் செயலிழந்துபோய் அந்த மரபணுவில் சொல்லப்பட்டிருக்கிற தகவலுக்கான வேலையும் நடக்காமலே போய்விடும். அதாவது காது கேளாத குழந்தைக்கு ஸ்பெஷல் செல்களின் மரபணுக்கள் செயலிழந்து போய் அதனால் ஸ்பெஷல் செல்களும் வேலை செய்யாமல் போவதைப்போல.
இரத்த உறவு என்று நாம் சொல்கிற போது திருமணம் செய்து கொள்கிற இரண்டு பேரும் இரத்த வகையில் ஒன்றானவர்களாக இருப்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதை வைத்தே மரபணுவையும் ஒருவகையிலே இருப்பதாக புரிந்து கொள்ளலாம். இரத்த பந்தமுள்ள மரபணுக்களுடைய இருவருமே ஒன்றாகத் திருமணம் செய்து கொண்டு அவர்களின் விந்தணுவும் சினையணுவும் இணைந்து கருத்தரிக்கிற போது உருவாகிற செல்லில் ஒரே மாதிரியான மரபணு வரிசை வருவதற்கான வாய்ப்புதானே அதிகமாக இருக்கிறது. அதற்காக ஒரேயடியாக அவர்களிடமிருந்து வருகிற அத்தனை மரபணுவும் ஒரே போல வந்திருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏதாவது ஒன்றோ இரண்டோ ஒத்துப் போகிற வகையில் மரபணுக்கள் வந்து வரிசையில் அமருகிற போதுதான் அது குறைபாடுள்ள மரபணுவாய் போக வாய்ப்பிருக்கிறது.
அதேபோல இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். எத்தனையோ பேர் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்கிறார்கள். அவர்களது பிள்ளைகளெல்லாம் நன்றாகத் தானே இருக்கிறார்கள். அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்றும்கூட கேள்விகள் எழலாம்.
கிட்டத்தட்ட கருத்தரித்தலில் உருவாகிற ஒரு செல்லினுடைய மரபணுக்கள் கணவன் மனைவி இருவருடைய மரபணுக்களையும் குலுக்கிப் போட்டுத்தான் புதிதாக உருவாகியிருக்கும். அப்படி உருவாகையில் இரத்த பந்த உறவாக இருக்கிற பட்சத்தில் அந்தக் குலுக்கல் முறையில் வித்தியாசமான மரபணுக்களும் வரிசையில் விழலாம், ஒரே மாதிரியான மரபணுவும் வரிசையில் விழலாம். அப்படி வேறு வேறு மரபணு வரிசையென்றால் பிரச்சனையில்லை. ஒருவேளை ஒரே மாதிரியான மரபணு வரிசையென்றால் அதுவோ பிறவிக் குறைபாட்டை தோற்றுவிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவே இரத்த உறவில்லாத ஒருவருடம் திருமணம் செய்து கொள்கிறபோது அவர்களது மரபணு வெவ்வேறானதாக இருக்கும் அல்லவா! அப்போது எப்படிக் குலுக்கிப் போட்டாலும் அந்த ஒரு செல்லில் வித்தியாசமான மரபணு வரிசைதான் வந்து விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் மற்ற திருமணங்களைவிட இரத்த உறவு சம்பந்தப்பட்ட திருமணத்தில் பிறக்கிற குழந்தைகள் பிறவிக் குறைபாட்டோடு பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என சொல்ல வேண்டியிருக்கிறது.
அதேசமயம் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு அப்படி ஏதும் பிரச்சனையின்றி குழந்தைகள் பிறந்துவிட்டாலும்கூட அடுத்தடுத்தும் தொடர்ந்து இரத்த உறவிற்குள்ளே திருமணம் செய்கிறபோது பிறவிக் குறைபாடு வருகிற அதிகபட்ச வாய்ப்பிற்குள்ளே அவர்கள் போய்விடுவதுண்டு. அதனால்தான் தாத்தா பாட்டி, அம்மா அப்பா இப்படி யாருக்குமே இல்லியே! ஆனால் எங்கள் பிள்ளைக்கு வந்துவிட்டதே என்று பெற்றோர்களும் சந்தேகிக்கிறார்கள். அதேசமயம் தாத்தாவிற்கு காது கேளாத மரபணு இருந்திருந்தாலும் கருத்தரித்தலின் போது குறைபாடுள்ள அந்த மரபணு குலுக்களில் இருந்து தப்பித்துவிட்டால் அந்த மரபணு தூங்கும் நிலைக்குச் சென்று பிரச்சனையை உருவாக்காது. ஆனால் அடுத்த தலைமுறையிலும் இரத்த உறவுக்குள் தொடர்ந்து திருமணம் முடிக்கிற போது அந்த குறைபாடுடைய மரபணு விழித்துக் கொண்டு காது கேளாத பிரச்சனையைத் தூண்டிவிடும். அதனால்தான் தாத்தாவிற்கு காது கேளாத பிரச்சனை வந்திருக்கும், ஆனால் அதுவே பிள்ளைக்கு வராமல் பேரனுக்கு வந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இரத்த உறவுக்குள்ளாக திருமணம் பற்றி இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் அத்தகைய திருமணம் முடித்தவர்களிடம் கொஞ்சமாக ஆய்வு செய்து பார்த்தால் அவர்களில் குறிப்பிட்ட சதவிகித பெண்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கருச்சிதைவாவது ஆகியிருக்கும். அதற்கான காரணத்தையும் நாம் விளங்கிக் கொண்டால் ஒரு முடிவிற்கு எளிதாக வந்துவிட முடியும்.
ஆணும் பெண்ணும் கூடலின் போது ஆணின் விதைப்பையிலிருந்து ஒரு வெளியேற்றத்தில் மட்டும் மூன்று முதல் ஐந்து கோடி வரையிலான விந்தணுக்கள் வெளியேறி கருப்பைக்குள் நுழைகின்றன. ஆனால் அதேசமயம் பெண்ணின் சினைப்பையிலுள்ள நான்கு இலட்சம் சினை முட்டைகளிலிருந்து ஒவ்வொரு மாதத்திலும் பத்திலிருந்து பன்னிரெண்டு முட்டைகளை மிகக் கவனமாக தயார் செய்து அதிலிருந்து ஒரேயொரு முட்டையை மட்டுமே தேர்வு செய்து கருப்பைக்குள்ளே அனுப்புகிறது. இப்போது நன்றாக யோசித்துப் பாருங்கள், அந்த ஒரே ஒரு முட்டையானது கோடிக்கணக்கான விந்தணுவிலிருந்து ஒரே ஒரு விந்தணுவை மட்டுமே தேர்வு செய்து அதனுடன் மட்டுமே ஒன்றாய் கலக்கிறது. ஆக, கோடிக்கணக்கான விந்தணுவிலிருந்தும் இலட்சக் கணக்கான சிணையணுவிலிருந்தும் பலமுறை பரிசோதித்துப் பார்த்து, நன்கு தரம் பிரித்து ஒரேயொரு கருவைத்தான் கருப்பைக்குள்ளே உருவாக்குகிறது. ஒருவேளை அத்தனை கோடி விந்தணுவிலும் ஒன்றுகூட தேறவில்லையென்றால் அந்த மாதத்தில் கருத்தரிக்காது இரத்தப்போக்காய் அந்த மாதவிலக்கு கழிந்துவிடும்.
அப்படிக் கவனமாக தேர்வு செய்து உருவான கருவானது கருப்பைக்குள் பதிந்து குழந்தையாய் வளரத் துவங்குகையில் அதுவும் தேர்ச்சி பெற்ற, மிக மிகத் தரமான கருவாயிருத்தல் வேண்டும். ஒருவேளை அத்தகைய கருவானது தரமில்லாமல் அந்த கரு வளர்ந்து குழந்தையாய் பிறக்கையில் பிறவிக் குறைபாடுள்ளதாக இருக்கும் என்பதை கருப்பை முன்னமே கண்டறிந்துவிட்டால் அந்த கருவை அப்போதே கருக்கலைப்பு செய்துவிடும். ஆக, ஒருவருக்கு கருக்கலைப்பு ஆகிறதென்றால் அந்த கரு வளர்ந்து வெளியே வந்தால் ஒன்று அந்த பிள்ளை இறந்துவிடும் அல்லது குறையுள்ள பிள்ளையாய் போகும் என்றறிந்தே உடம்பு இயல்பாகவே அதனை கருக்கலைப்பு செய்கிறது. அதனால் யாரேனும் ஒருவருக்கு கருக்கலைப்பு நிகழ்ந்தால் அதற்காக அந்தத் தாயை பரிகாசம் செய்யாமல் அதற்காக உண்மையில் நிம்மதி தான் கொள்ள வேண்டும்.
எனவே இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொண்டு சராசரியாக அவர்களுக்கு ஒரு கருக்கலைப்பு நிகழ்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால்கூட அந்த கருவானது ஏதோவொரு குறைபாடுடையதன் காரணமாகவே கழிந்திருக்கிறது என்கிற முடிவிற்கு வந்துவிடலாம் அல்லவா! குழந்தைகள் பிறந்து குறைபாடுடையவர்களாய் இருப்பவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு இரத்த உறவு பிரச்சனையை ஆராயாமல் கருக்கலைப்பு நிகழ்ந்தவற்றையும் கூடவே கருத்தில் கொண்டால் இந்த பிரச்சனையின் தீவிரத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
இவை எல்லாவற்றிற்குமே ஒரே தீர்வு என்னவென்று தெரியுமா? இரத்த உறவிற்குள் திருமணம் செய்யாமலிருப்பது மட்டும் தான். இப்படியான மரபணு பிரச்சனைகள் பல்வேறு சிக்கலுடையதாக இருந்தும், கேள்விகளும்கூட பலவிதங்களில் குழப்பமுடையதாக இருந்தாலும்கூட அதற்கான பதிலோ சுலபமாகத்தானே இருக்கிறது. ஆதலால் ஒரு குழந்தை பிறவிக் குறைபாடுடையவர்களாக பிறப்பதற்கு பெற்றோர்களும் காரணமாயிருக்கிறார்களா என்ற கேள்விக்கு இதுதான் இறுதியான பதில். எனவே இனிவரும் காலங்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரத்த உறவிற்குள் திருமணம் செய்வதை தவிர்த்தால் இத்தகைய காது கேளாத பிறவிக் குறைபாடு மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ வகையான பிறவிக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.
ஆக, ஆழ்கடல் நீலம் பாரித்த கடலிற்குள் ஒரு அழகான வண்ண வரைபடத்தை எடுத்துக் கொண்டு சென்ற பயணத்தின் முதல் புதையல் கிடைத்தாயிற்று. இந்தப் புதையல் எப்பேர்ப்பட்ட பொக்கிஷம்! இரத்த உறவுக்குள் திருமணத்தை தவிர்ப்பதன் மூலம் இனி வருகிற தலைமுறைகளில் காது கேளாத குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதையே தவிர்த்துவிட முடியுமென்பது எப்பேர்ப்பட்ட ஆபூர்வமான புதையல். இந்தப் புதையல் மருத்துவப் புத்தகங்களுக்குள்ளேதான் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ எளிய மக்களுக்கு இன்று வரையிலும் இந்த புதையலின் பலன் இன்னமும் சென்று சேரவேயில்லை. கடலிலும் நிலத்திலுமாக அகழ்வாராய்ச்சி செய்து கண்டறியப்படுகிற புதையல் அரசாங்கத்திற்கும் அதன் கஜானா வழியே எல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும் தானே. ஆனால் இத்தகவல் தேவைப்படுகிற எந்தப் பெற்றோர்களுக்கும் இதுவரையிலும் போய்ச் சேரவேயில்லை.
இந்தப் புதையல் இப்புத்தகத்திற்குள்ளே தான் இவ்வளவு காலும் புதைந்திருக்கிறதென்றால் உண்மையில் இதற்கான வரைபடம் இந்த குறைபாடுடைய குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும்தானே இருந்திருக்கிறது. புதையல் ஓரிடத்திலும் அதற்கான சாவியும் வரைபடமும் வெவ்வேறு இடத்திலும் இருப்பதைப்போல, ‘எனக்குப் பிறந்த ஒரே பிள்ளையும் இப்படி காது கேளாத பிள்ளையாய் போய்விட்டதே!’ என்று அரற்றுகிற அபலைத் தாய் ஒருபுறமும், இரத்த உறவுக்குள் திருமணத்தை தவிர்த்தாலே குழந்தைகளெல்லாம் நலமுடன் பிறப்பார்கள் என்கிற தீர்வு மருத்துவப் பாடப்புத்தகத்தில் இன்னொரு புறமுமாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான் இதுவரையிலும் இக்குழந்தைகளுக்கான எந்தவொரு வழியும் கிடைக்காமல் பெற்றோர்கள் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தார்களா என்று யோசிக்கிறபோது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இப்போது கடலிற்குள் புதையலைத் தேடிச் சென்ற இரண்டு வரைபடத்தில் இன்னொரு வரைபடமும் என்னிடம் இப்போது மீதமிருக்கிறது. அது இன்னொரு புதையலுக்கான வரைபடம். அதாவது ஏன் இந்தக் குழந்தைகளெல்லாம் மரபணு பிரச்சனையால் மட்டும்தான் பிறக்க முடியுமா, வேறு காரணங்களே கிடையாதா? என்ற கேள்விக்கான விடை தேடுகிற வரைபடம் அது.
உண்மையிலே கரு வயிற்றுக்குள்ளே உருவாகி அது குழந்தையாய் பரிணமித்துக் கொண்டிருக்கையில் கர்ப்பவதியாய் இருக்கிற தாயவள் தெரிந்தோ தெரியாமலோ காது நரம்புகளை பாதிக்கக்கூடிய ஸ்டிரெப்டோமைசின் போன்ற மருந்துகளை தவறுதலாக எடுத்துக் கொண்டாலோ, காது நரம்பை பாதிக்கக்கூடிய கிருமித் தொற்றால் தாயவள் பாதிக்கப்பட்டு அது தொப்புள்கொடி வழியே சென்று குழந்தையின் காது நரம்பை பாதித்திருந்தாலோ, அந்தக் குழந்தையை குறைபிரசவமாய் தாயவள் பிரசவித்திருந்தாலோ, அவர்கள் மிகவும் குறைந்த எடையுள்ளவர்களாக பிறந்தாலோ, குழந்தை பிறந்து மஞ்சள்காமாலை, தீவிர காய்ச்சல் தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அந்தக் குழந்தைகளின் காது நரம்புகள் செயலிழந்து அவர்களுமே பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளாக பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
சரி, இப்போது நம்மிடையே இரண்டு புதையல்கள் கிடைத்திருக்கின்றன அல்லவா. அதாவது இரத்த உறவிற்குள் திருமணம் செய்தால் மரபணு தொடர்பான பிரச்சனையாகி அதனாலும் காது கேளாமல் போகலாம். அதேசமயம் கருவாய் வளருகிற போது வேறு சில பிரச்சனைகளாலும் காது நரம்பு பாதிக்கப்பட்டு காது கேளாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. சரியா?
ஆக, இப்போது இன்னொரு கேள்வி எழும். நாங்கள் இரத்த உறவிற்குள் திருமணம் செய்திருக்கிறோம் எங்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்கும் இதே பிரச்சனைகள் வருமா? எங்கள் தாத்தாவிற்கும் இதே பிறவி காது கேளாத பிரச்சனை இருக்கிறதே, அது என் பிள்ளைக்கும் வருமா? நான் காது கேளாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன், எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் இதே பிரச்சனை வராமலிருக்க நாங்கள் என்ன செய்வது? எங்கள் முதல் குழந்தைதான் இத்தகைய குறைபாட்டோடு பிறந்துவிட்டது, அடுத்த பிள்ளைக்கும் இதே பிரச்சனை வராமலிருக்க இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆகிய அத்தனை கேள்விகளுக்குமான சுருக்கமான விடை என்ன தெரியுமா?
மரபணு சிறப்பு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்! என்பதுதான்
ஏனென்றால் பிறக்கப் போகிற அல்லது பிறந்து காது கேளாத குறைபாட்டோடு இருக்கிற முதல் குழந்தைக்கு, மரபணு தொடர்பான பிரச்சனை ஏதும் இருக்கிறதா இல்லையா என்கிற விடையைக் கண்டுபிடித்துவிட்டாலே இந்த ஒட்டுமொத்த கேள்விக்கான விடையும் கிட்டத்தட்ட தெரிந்து கொண்ட மாதிரிதான். ஆனால் நாமெல்லாம் எவ்வளவு பெரிய துரதிர்ஷடாலிகளாக இருந்திருக்கிறோம், இப்போதும்கூட இருக்கிறோம் என்பதை இந்த மரபணு மருத்துவம் தொடர்பாக தேடியலைந்த போதுதான் நானே கண்டுகொள்ள முடிந்தது.
ஆம், உங்களுக்கு நம் மருத்துவத்துறை கட்டமைப்பினுடைய துயரமான கதையைத்தான் அடுத்ததாக சொல்லப்போகிறேன். சில சமயங்களில் புதையல்கள் வழியே காண்பது இப்படியான ஏமாற்றமாகவும் தானே இருக்கிறது.
தொடரும்..
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்
10. காதுகளின் மூலப் பிரச்சனைகளைத் தேடி..
மழைக்கால இரவு. தவளைகள் கோரசாக இன்னிசைத்துக் கொண்டிருக்கிற ரம்மியமான பொழுது. வெளியே பிறைநிலா தெளிந்த வானம். அதைச் சுற்றிலுமாக கோட்டை கட்டி அதிலேயே லயித்திருந்தது வெளிர் நிலா. ஆங்காங்கே விண்மீன்கள் மின்னி மின்னி மறைந்தபடி இருந்தன. நீண்ட நேரமாகவே மொட்டை மாடி இரவில் நின்று அந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த இரவின் சங்கீதம் என்னுள்ளே மிதந்து மிதந்து வந்து இதயத்தின் ஆழத்தை நோக்கிச் சென்று இதமாக வருடியபடியே இருந்தது.
கண்களை மூடிக்கொண்டு அந்த ஒட்டுமொத்த மழைக்குப் பிந்திய இரவின் கான ஸ்வரங்களை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். மேலே தாழ்வாரத்திலிருந்து நிதானித்துச் சொட்டுகிற மழைத்துளியின் துல்லியமான சப்தங்களைக்கூட என்னால் கேட்க முடிந்தது. மெல்லிசையுடன் காதுக்குள் நுழைகின்ற மென் குளிர்காற்று, கிர்ர் கிர்ர் என்று சப்தமிடுகிற வெட்டுக்கிளிகள், விட்டுவிட்டுக் குரல் எழுப்புகிற மழைக்கு ஒதுங்கிய மஞ்சள் மைனாக்கள், அவ்வப்போது தேங்கிய குட்டையில் யாரோ நடக்கிற அசைவின் சலசலப்புச் சப்தம் மற்றும் அந்த இரவிற்கே உரித்தான திவ்யமான மௌனம். இவை எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக காதுகளை விடைத்து விடைத்துக் கேட்கிற முயல்குட்டிகளைப் போல எவ்வளவு நேரம் அந்த அகால இரவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.
பட்டென்று முட்டை உடைபட்டு உள்ளிருந்து ஒரு ஜீவன் வெளிப்படுவது போல ஒரு வெளிச்சம் எனக்குள்ளிருந்து உடலெங்கும் பரவுவது போன்றதோர் உணர்வு. அந்த நிச்சலமான நிமிடத்தில் இன்னும் கண்டறியப்படாத பிறவிக் குறைபாடுடைய அத்தனை குழந்தைகளையும் தேடிப்பிடித்து அவர்களையெல்லாம் சரிசெய்த பின்பாக யாவரையும் இங்கே அழைத்து வந்து இந்த இரவினூடே கசிந்து வழிகின்ற மழைக்குப் பின்பான உற்சவம் கூடிய கான இசையைக் கேட்டு இரசிக்கச் செய்ய வேண்டுமென்கிற ஆசையில் மனமோ ஏங்கித் தவித்தது. அவர்களின் பன்னீர் பூக்களைப் போன்ற ஒடிசலான அழகிய பிஞ்சு விரல்களைப் பிடித்தபடியே நீண்ட நேரம் மொட்டைமாடி இரவில் நின்று கண்களை மூடி இரவெல்லாம் இந்த இசையைக் கேட்டு தியானித்தபடி அமர்ந்திருக்க வேண்டும் என்ற தவிப்போ என்னுள்ளே மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இந்த நிமிடத்தின் ஈரக்காற்றில் மிதந்து வருகிற காற்றின் ஓசை, மழைத்துளிபட்டு எழும்புகிற மண்ணின் ஈர வாசம், சில்லிட்டு சிலிர்த்து நிற்கிற சருமத்தின் மயிரிழைகள், கண்முன்னே காற்றின் விளக்கொளியில் நடனமாடும் ஈசல்கள், அடர் இருட்டினுள் காற்றிலிட்ட புள்ளிக்கோலம் போல மிளிருகிற மின்மினிப் பூச்சிகள் இவையாவற்றையும் இரசித்துக் குதூகலமடைய இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் நான் வாஞ்சையோடு கற்றுக் கொடுக்க வேண்டும். பின்பு கண்களை மூடியபடி முழுக்க முழுக்க காதுகளின் ஒட்டுமொத்த சப்தங்களாலே இந்த உலகின் விசித்திரங்களையெல்லாம் ஆசைதீர அனுபவித்துப் பார்க்கச் சொல்லி அதன் தரிசனங்களை அவர்களின் வார்த்தைகளினாலே சொல்லக் கேட்டு அதிலேயே நான் லயித்துக் கிடக்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது.
மொட்டைமாடியிலிருந்து கீழிறங்கி வந்தபோது அறைக்குள்ளே குளிர் கலைந்து கதகதப்பை மூட்டிக் கொண்டிருந்தது. மாலை வேளையில் வாசித்துவிட்டு வைத்த புத்தகத்தின் அதே பக்கங்கள் மேசையின் மீது ஏற்றிய மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அப்படியே உறைந்து போய் இருந்தது. மெழுகுவர்த்தியோ அதன் பேனா முனை போன்ற கூரிய மஞ்சள் கண்களால் அங்குமிங்கும் காற்றுக்கு அசைந்தபடி அந்த பக்கத்தையே நீண்ட நேரமாக சலிப்பின்றி வாசித்துக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு ஜூவாலையின் நிசப்தமும்கூட ஏனோ அந்த பேசாத குழந்தைகளின் மௌனத்தையே நினைவூட்டுவதைப் போல கண்முன்னே மேசையில் தலையாட்டியபடி என்னுடன் ஏதோ பேசுவதற்கு முற்படுவது போல அப்படியே தள்ளாடியபடியே இருந்தது.
அறைக்குள்ளே கடிகார முட்களின் நகர்வுகள் மிகவும் தெள்ளத் தெளிவாக கேட்டது. காலம்! ஆம், எல்லாம் காலம்தான். நான் பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளைத் தேடுகிற, அப்படித் தேடிக் கண்டடைந்து குணப்படுத்த முனைகிற ஒவ்வொறு முயற்சியுமே எங்கோ ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை மாற்றிவிடப் போகிற ஒரு சிறு பொறி என்பதை அந்த கடிகார முட்களின் நகர்வுச் சப்தம் எனக்கு நினைவூட்டுவதைப் போலவே இருந்தது. அதுவோ சாளரத்தின் மீதிருந்து கத்துகிற ஒரு கவுளிச் சத்தத்தைப் போல எதையெதையோ எனக்கு ஞாபகப்படுத்துவதாகவும் இருந்தது.
மருத்துவக் கல்லூரியின் மூன்றாமாண்டு பாடமான காது மூக்கு தொண்டை புத்தகத்தை எடுத்து வைத்து இப்போது இன்னும் மிக நெருக்கமாக மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். இந்தப் புத்தகத்திலிருந்து தான் இக்குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை, எதனால் இப்படியெல்லாம் ஏற்படுகிறது என்கிற விவரங்களை பெற்றோர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும். இரவிலே கண்களை உருட்டி உருட்டி எங்கள் பாட்டி சொல்லும் சாகசக் கதைகளைப் போல இப்புத்தகத்திற்குள்ளும் இத்தகைய குழந்தைகளின் எதிர்கால வாழ்வை மாற்றியமைக்கப் போகிற எத்தனையோ சாகசக் கதைகள் புதைந்திருக்கக்கூடும் என்கிற ஆர்வமும் பரசவமும் ஒருசேர என்னை தொற்றிக் கொண்டது.
காது கேளாத பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு அப்படி என்னதான் தீர்க்கவே முடியாத பிரச்சனை வந்துவிட்டது என்று புரிந்து கொள்வதற்கோ காது அடுக்குகளில் குறிப்பாக உள்காதுகளைப் பற்றிய இரகசியங்களை இன்னும் சற்றுக் கூடுதலாக பெற்றோர்களுக்கு நான் விளக்கியாக வேண்டும். உண்மையில் உள்காதுக்குள்ளே தான் கேட்டலின் பல அற்புதங்கள் நிகழுவதைப் போல அங்கேதான் எல்லா பிரச்சனைக்குமான காரணமும் இருக்கிறது. அதனால் தான் இப்பெற்றோர்களுக்கு உள்காது பற்றிய சாகசங்களை அதன் சமாச்சாரங்களை மிக நுணுக்கமாகவும் அதேசமயம் மிக எளிதாகவும் நான் இப்போது விளக்கியாக வேண்டியிருக்கிறது.
காது கேட்டலில் வெளிக் காதிலிருந்து வருகிற சப்தங்களோ உள்வாங்கப்பட்டு காது துளையின் வழியே சவ்வு வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தங்குதடையின்றி போய் சேர்ந்துவிடுகிறது. ஆக, வெளிக்காதில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றாகிவிட்டது. அடுத்து அந்த சப்தமும் சவ்வில் பட்டு அதனோடு இணைந்த குட்டி குட்டி எலும்புகளை அதிரச் செய்வதன் வழியே அது உள்காது வரைக்குமே சரியாகச் சென்றுவிடுகிறது. ஆகவே நடுக்காதிலும் எந்தப் பிரச்சனையுமில்லை என்பது தெளிவாகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு வெளிக்காதில் காது அழுக்கு, தண்ணீர் சென்று அடைத்துக் கொள்ளுதல் போன்ற பிரச்சனையும், நடுக்காதில் காது சவ்வில் ஓட்டை விழுதல், காதில் சளி பிடித்துக் கொண்டு சீல் வடிதல் போன்ற பிரச்சனைகளும் வந்து காது கேட்டலில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு. ஆனாலும் இவற்றை மருந்து மாத்திரைகளால் சுலபத்தில் சரிசெய்துவிட முடியும். ஆனால் உள்காது தொடர்பாக வருகிற விவகாரங்களோ முழுக்க முழுக்க நரம்புகள் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களாகவே இருப்பதால் அவற்றை அவ்வளவு எளிதாக குணப்படுத்த முடிவதில்லை.
காது சவ்வினால் அதிர்வுக்குள்ளாகி முன்னும் பின்னுமாக அதிருகிற நடுக்காது எலும்புகளும் உள்காதிலிருக்கிற காக்ளியா என்கிற பகுதியின் மேலே போய் முட்டுக்கிடா மாதிரி ஒவ்வொரு அதிர்வுக்கும் ஏற்ப முட்டி முட்டி வருகிறது. அந்த முட்டுதலுக்கு ஏற்ப காக்ளியாவின் கடலிற்குள் உண்டாகிற அலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிற மின்சாரத்தால் தான் இந்த கேட்டல் நிகழ்வே நடைபெறுகிறது. இந்த காக்ளியாதான் நாம் மிகவும் கவனம் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான பகுதி. மழைக்கால மண் பாதையில் மெல்ல மெல்ல ஊர்ந்து வருகிற நத்தை ஓடுகளைப் போலத்தான் இந்தக் காக்ளியா ஓடும் இருக்கிறது. ஒரு மண்ணுளிப் பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப்போல ஒன்று, இரண்டு, இரண்டரை சுற்றுகளாக சுற்றியபடி காக்ளியாவும் மண்டையொட்டிற்குள்ளே சுருண்டபடியே கிடக்கும். இந்த காக்ளியா ஓடுதான் மின்சாரத்தை தயார் செய்கிற உறுப்பு, எந்திரம், பேட்டரி எல்லாம். அது எப்படி?
ஆக்ரோஷமான கடலலைகளில் ஒரு உருளையை அலைகளுக்கேற்ப சுழல வைத்து மின்சாரம் தயாரிப்பார்களே, அதே போலத்தான் காக்ளியா ஓட்டிற்குள்ளும் கரெண்ட் எடுக்கிற சமாச்சாரமும் நடக்கிறது. அதாவது காக்ளியா ஓட்டிற்குள்ளுமே ஒரு குட்டிக் கடல் இருக்கிறது. எங்கோ மந்திர தந்திரக் கதைகளில் வருகிற மாயாஜால கடலைப் போலவே நம் காதுக்குள்ளே, மண்டையோட்டிற்குள்ளே, ஓடு போன்ற காக்ளியாவிற்குள்ளே ஒரு குட்டிக் கடலும் இருக்கிறது. அது இரவுக்கடல் போல சதா அமைதியாகவே இருக்கும். ஆனால் ஏதாவது சப்தம் கேட்டால் பொசுக்கென்று தலைதூக்கி தெருநாய் விழித்துக் கொள்வதைப்போல, பௌர்ணமி இரவு வந்தால் கடல் ஆக்ரோஷம் கொள்வதைப்போல வெளியிலிருந்து வருகிற ஒவ்வொரு சப்தத்திற்கும் ஏற்ப அதிர்ந்து வந்து முட்டுகிற எலும்புகளுக்கு ஏற்ப இந்த காக்ளியாவிற்குள் இருக்கிற குட்டி கடலிலும் அலைகளோ எழும்ப ஆரம்பிக்கின்றன. சிறுவர் தண்ணீர் பார்க்குகளில் செயற்கையாக அலைகளை உருவாக்குவது போல சப்தங்களுக்கு ஏற்ப இங்கே விதவிதமான அலைகள் உருவாக்கப்படுகின்றன.
கடலில் உருளையைச் சுழல வைத்து மின்சாரம் எடுப்பதுபோல இந்த காக்ளியாவிற்குள் இருக்கிற ஸ்பெஷல் செல்களும் அலையிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க தண்ணீரிலே மிதந்தபடியே கிடக்கும். சுருண்டுக் கிடக்கிற காக்ளியா ஓட்டின் முழு நீளத்திற்குமே இந்த செல்கள் வரிசைகட்டி நீண்டபடி குளத்தின் ஆகாயத்தாமரை செடிகள் கிடப்பதைப்போல சாந்தமாக மிதந்தபடியே இருக்கும். ஆனால் ஒருவேளை வெளியிலிருந்து சப்தம் ஏதும் கேட்டு அதற்கேற்ப அதிர்ந்து காக்ளியாவிற்குள் அலைகள் உருவானால் இந்த ஸ்பெஷல் செல்களோ தூண்டப்பட்டுவிடும். அதாவது மெல்ல வருகிற சப்தம், பலமாக கேட்கிற சப்தம் என்று ஒவ்வொன்றுக்குமாக இங்கே எக்கச்சக்கமான அலைகள் உருவாகி அந்தந்த சப்தங்களுக்கே என்றிருக்கிற ஸ்பெஷல் செல்களை அது தூண்டச் செய்து அதிலிருந்தே இந்த மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த செல்களில் உருவாகின்ற மின்சாரங்களானது ஒரு சமிக்கை, ஒரு குறியீடு, ஒரு குறுந்தகவல். அதாவது ஒவ்வொரு சப்தங்களும் மிகமிக நுணுக்கமாக அந்தந்த செல்களால் குட்டி குட்டி தகவல் துணுக்குகளாக மின்சாரம் வடிவில் மாற்றப்பட்டு அந்த செய்திகளோ மூளைக்கு காது நரம்புகளின் வழியே கடத்தப்படுகிறது.
இப்படி ஆயிரக்கணக்கான செல்கள் ஒரு மிதவையைப் போல மிதந்தபடி அதிர்வுகளை மின்சார சமிக்கைகளாக மாற்றி மாற்றி வேலை செய்து கொண்டிருக்கும் போது அவையெல்லாம் அந்தந்த செல்களிலிருந்து வால் போல நீளுகின்ற மெல்லிசான நரம்புகள் வழியே சென்று அப்படி ஆயிரக்கணக்கான செல்களிலிருந்தும் வெளியாகிற நரம்புகளும் ஒன்று சேர்ந்து ஒரே கத்தையாக ஒரு முழு நரம்பாக பரிணமித்து அந்த கேட்டல் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்கிறது. வீட்டு வயர்களில் பல செப்புக் கம்பிகள் சேர்ந்து மின்சாரத்தை கொண்டு செல்வதைப் போலத்தான் இந்த ஆயிரக்கணக்கான நரம்பு இழைகளும் ஒன்றுசேர்ந்து கேட்டல் செய்தியை தூக்கிக் கொண்டு மூளைக்கு காவடி யாத்திரை செல்கின்றன.
இந்த மின்சார செய்தி துணுக்குகளோ கேட்டலுக்கென்றே இருக்கிற பிரத்தியேக பக்கவாட்டு மூளையின் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாம் கேட்பது என்ன சப்தம்? அது வெறும் சப்தமா அல்லது பேசும் மொழியா? மொழியென்றால் என்ன மொழி, யார் என்ன பேசுகிறார்கள்? என்பதை பகுத்துப் பார்க்கிறது. அதாவது பிள்ளைப் பிராயத்திலிருந்தே நாம் கேட்டு, பார்த்து, பேசிப் புரிந்து கொண்டு மூளையில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த தகவல்களையெல்லாம் நொடிப்பொழுதில் மூளையும் புரட்டிப் பார்த்து இன்னார் தான், இதைத்தான் பேசுகிறார்கள், அதற்கு இதைச் சொல் அல்லது இதை செய் என்று அன்புக் கட்டளையிடுகிறது.
ஆனால் இப்படிக் கேட்பதை வைத்து மூளையும் பகுத்துப் பார்க்க வேண்டுமானால் மூளையின் மொழிகளுக்கான பிரத்தியேகப் பகுதியானது பிறந்த தருணத்திலிருந்தே சரியாகத் தூண்டப்பட்டிருக்க வேண்டும். அதேபோல பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளென்றால் குறைந்தபட்சம் ஆறுமாதகால வயதிற்குள்ளாவது கண்டறிந்து காது கேட்கும் கருவிகள் வழியே சப்தங்களை அனுப்பி அந்த மூளைப் பகுதியானது தூண்டப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி விரைவிலேயே தூண்டப்படாத போது நரம்பு செல்கள் யாவுமே போகப் போக செயலிழக்கத் துவங்கிவிடும். அதேசமயம் சப்தங்களைக் கேட்பதன் வழியே மூளைப்பகுதி தூண்டப்படுகிற சிகிச்சையும் அதிகபட்சமாக குழந்தைகளின் ஆறு வயதிற்குள்ளாகவாவது ஆரம்பித்திருக்க வேண்டும்.
இப்படி பிறவிக் குறைபாடுடைய ஒரு குழந்தையை ஆறுமாதகால வயது முதல் ஆறுவயது காலத்திற்குள் கண்டறிந்து கேட்கும் கருவிகள் வழியே தூண்டப்படவில்லையானால் அதற்கு பின்பாக என்ன சிகிச்சை செய்தாலும் குழந்தைகளுக்கான சிகிச்சைக்குரிய முழுபலனுமே கிடைக்காது. அதனால்தான் தாமதமாக ஒரு குழந்தை சிகிச்சை எடுத்துக் கொண்டாலுமே அவர்களுக்கு கருவிகள் வழியே சப்தங்கள் கேட்கிற போதும்கூட அதை மூளையால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் பேச்சுத்திறன் குறைபாடுடையவர்களாக ஒருசிலர் திக்கித் திக்கி பேசுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். எனவேதான் குழந்தைகளை ஆறுமாத வயதாயிருக்கிற போதே அவர்களின் குறைகளைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை துவங்கியிருக்க வேண்டுமென்றும், அதிகபட்சமாக ஆறுவயதிற்குள்ளாகவாவது சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார்கள்.
சரி, உள்காதில் அதுவும் காக்ளியாவில் தான் பிரச்சனை என்றால் அங்கே அப்படி என்ன தான் நடக்கிறது? என்று யோசித்துப் பார்த்துப் பயப்படுகிற பெற்றோர்களிடம் அதற்கான பதிலையும் கட்டாயம் நான் ஒரு மருத்துவராக சொல்லியாக வேண்டும். அதற்காகத் தானே நான் இவ்வளவு பாடத்தையும் முதலிலேயே விளக்கிச் சொல்லும்படி ஆயிற்று.
இப்போது இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால் காக்ளியாவிற்குள் இருக்கிற ஸ்பெஷல் செல்களில்தான் இக்குழந்தைகளுக்கான கேட்டலின் பிரச்சனையே இருக்கிறது. காக்ளியாவிற்குள் ஏற்படுகிற அதிர்வுகளின் வழியே குட்டிக் கடலில் அலைகளெல்லாம் சரியாக எழும்பி வந்துவிடுகிறது. ஆனால் இங்கே பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு என்ன நடக்கிறதென்றால் அந்த அலைகளிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய ஸ்பெஷல் செல்களில் பிரச்சனையாகி அவையெல்லாம் செயலிழந்துவிடுகின்றன. இத்தகைய செல்கள் இருந்தால் தானே மின்சார சிக்னலை தயாரித்து அதன் கேட்டல் அற்புதத்தை நிகழ்த்த முடியும். ஆக, பேட்டரியே இல்லாமல் டார்ச் எப்படி எரியும் என்பதைப் போலத்தான் இந்த பாதிப்பிற்குள்ளான காக்ளியாவும் இருக்கிறது. மேலும் நம்முடைய துரதிஷ்டவசமாக இந்த ஸ்பெஷல் செல்களின் செயலிழப்பு என்பதோ நிரந்தந்தரமான ஒன்றாக இருக்கிறது. இவற்றை ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தெல்லாம் இயேசுபிரானைப் போல மீண்டும் உயிர்த்தெழ வைக்க முடியாது. ஒருமுறை அவை செயலிழந்துவிட்டால் செயலிழந்ததுதான்.
பல்லாயிரக்கணக்கான ஸ்பெஷல் செல்கள் அலைகளில் மிதந்தபடி இருக்கிற போது பிறவிக் குறைபாட்டினுடைய தீவிரத் தன்மைக்கு ஏற்பவும் அதனுடைய செல்கள் செயலிழந்து போகிற எண்ணிக்கைக்கு ஏற்பவும் குழந்தைகளின் காது கேட்கும் திறனுடைய குறைபாடும் அதிகமாகிக் கொண்டே போகும். அதன் தொடர்ச்சியாக காக்ளியாவிற்குள்ளே இருக்கிற சுமார் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஸ்பெஷல் செல்களும் அடுத்தடுத்து படிப்படியாக மரணிக்கத் துவங்கி ஒருகட்டத்தில் அனைத்து செல்களுமே செயலிழந்தவர்களாக அதனால் சுத்தமாக காது கேட்கும் திறனே அற்றவர்களாக இக்குழந்தைகள் மாறிவிடுகிறார்கள்.
பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடனே பிறவிக் குறைபாட்டால் ஒட்டு மொத்த ஸ்பெஷல் செல்களுமே செயலிழந்து போய்விடுவதில்லை. அதனால் தான் ஆரம்பத்திலே எஞ்சியிருக்கிற ஆரோக்கியமான ஸ்பெஷல் செல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கேட்கிற சப்தங்களை வைத்து குழந்தைகளும் ஓரளவிற்கு தங்களது எதிர்குரலை, கைகால் அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் பெற்றோர்களோ இதை வைத்தே தங்கள் குழந்தைகளின் மீதான சில தவறான புரிதலுக்கு வந்துவிடுகிறார்கள்.
குழந்தைகளை அள்ளியெடுத்து முகத்திற்கு முகம் அருகாமையில் வைத்து அம்மா சொல்லு! அம்மா சொல்லு! என்று தாயவள் கனிந்து பேசுகிறபோது உண்மையிலேயே காது நன்றாக கேட்கிற குழந்தைகளெல்லாம் அந்த சப்தங்களை வைத்தும் அப்படி சப்தங்களை எழுப்புகிற அம்மாவின் முக பாவனைகளை வைத்தும் மழலை மொழியில் பேசுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்ப்பார்கள். ஆனால் காது கேளாத குழந்தைகளைப் பொருத்தவரையிலும் அவர்கள் முழுக்க முழுக்க பெற்றோர்களின் உதட்டசைவுகளை மட்டுமே உன்னிப்பாக கவனித்து அதைப் போலவே நகல் செய்து தங்களின் உதடுகளை அசைத்துப் பார்க்கிறார்கள். அம்மா, அப்பா, தாத்தா இவையெல்லாமே மிக எளிதாக நகல் செய்யக்கூடிய வார்த்தைகளாக இருப்பதால் இந்தக் குழந்தைகள் காது கேட்காவிட்டாலும்கூட அதை மிக எளிதாக நகல் செய்து உச்சரிக்கக்கூடும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.
எங்கள் பிள்ளைக்கு எல்லாம் காது சரியாகத் தான் கேட்கிறது, அப்படியில்லாமல் பதிலுக்குப் பதில் அவர்கள் எங்களிடம் பேசுவார்களா? அவர்கள் ‘அம்மா’ ‘அப்பா’ என்றெல்லாம் சொல்கிறார்கள், மற்ற வார்த்தைகளைத் தான் பேச முடியவில்லை, அதற்காக காது கேட்கவில்லை என்ற அர்த்தமாகிவிடுமா? பிள்ளைகள்தான் இப்போது ஒருசில வார்த்தைகளை பேசுகிறார்களே, அப்போது போகப் போக அவர்களும் சமத்தாக பேசிவிடுவார்கள் என்று தானே அர்த்தம், ஆக எதற்காக இப்போது சிகிச்சைக்காக இவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஆறு வயது வரையிலும் சிகிச்சைக்கான காலம் இருக்கிறது என்று நீங்களேதான் சொல்கிறீர்கள், அப்படியென்றால் அதுவரையிலுமே கொஞ்சம் பொறுக்கலாம் தானே!
இப்படியாக ஒவ்வொரு பெற்றோர்களும் அவரவர்களின் புரிதலுக்கு ஏற்ப ஏதோவொரு காரணத்தை வைத்துக் கொண்டு அக்குழந்தையை முறையான பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவோ அப்பிரச்சனைக்கான சரியான சிகிச்சையை மேற்கொள்ளவோ முயற்சிக்காமல் வெறுமனே இருந்துவிடுகிறார்கள். ஆனால் இக்குழந்தைகளை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்து சிகிச்சையை துவக்குகின்றோமோ அந்த அளவிற்கு அவர்களின் பேச்சுத்திறனும் அச்சு அசலாக ஏனையோரைப் போலவே தெளிவாக இருக்கும் என்பதையும் பெற்றோர்களுக்கு நான் அவசியம் புரிய வைத்தாக வேண்டும். இந்த புரிதலை பெற்றோர்களிடம் நான் ஏற்படுத்திவிட்டால் கட்டாயம் இப்பிரச்சனையின் தீவிரத்தையும் அவர்களுக்கு விரைவிலேயே மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையைப் பற்றியும் உணர்து கொண்டு கட்டாயம் நல்ல தீர்வை நோக்கி நகர்ந்துவிடுவார்கள்.
ஒருசில குழந்தைகளின் அப்பாக்களோ பிறவிக் குறைபாடின்றி வேறு சில காரணங்களால் கூட தாமதமாக பேசியிருப்பார்கள். ஆனால் அதையும் அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு குழந்தையின் அப்பாவே தாமதமாகத் தானே பேசினார். அதனால் பிள்ளையும் இன்னும் கொஞ்சம் வயது போனால் தாமதமாகப் பேசிவிடுவார்கள் என்று சிந்திக்கத் துவங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் காது நரம்புகள் பலமில்லாமல் இருக்கிற காரணத்தினால்தானே இப்பிரச்சனை வருகிறது, அதை சத்து டானிக்குகள் கொடுத்து சரி பண்ணிவிடலாம் தானே என்று யோசித்து எல்லாவற்றையும் போட்டு தவறாக குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் இப்பிறவிப் பிரச்சனை என்பதோ நிரந்தரமானது மேலும் அது போகப் போக தீவிரமடையக்கூடிய ஒன்று என்பதை இறுதியில் அவர்கள் புரிந்து கொண்டால் கட்டாயம் அவர்கள் எனக்கு ஒத்துழைக்க்க் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
அதெல்லாம் சரிதான். என் பிள்ளைக்கு ஏன் இப்பிரச்சனை வந்ததென்ற நியாயத்தை முதலில் எனக்கு விளங்குப்படியாகச் சொல்லுங்களேன். நாங்கள்தான் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லையே! அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் எங்களுக்கு ஏன் இப்படியானதொரு தண்டனையென்று முதலில் எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். இந்தக் கொடுமையெல்லாம் நாங்கள் சாகிற காலம் வரையிலும் அனுபவிக்க வேண்டுமென்பதுதான் எங்களது தலைவிதியா? இது என்ன எங்களுக்கு தலைமுறைதோறும் தொடருகிற கொடுஞ் சாபமா? இப்படியாக மனதிற்குள் போட்டு தங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து பரிதவிக்கிற பெற்றோர்களுக்கான பதிலையும் நான் சொல்லியாக வேண்டும். ஆனால் அதற்கு முதலில் மரபணுவைப் பற்றி பெற்றோர்களுக்கு நான் தெளியப்படுத்தியாக வேண்டுமே!
இதற்காக மரபணு தொடர்பான புத்தகங்களையும் அபூர்வமாகவ இருக்கிற மரபணு மருத்துவ நிபுணர்களையும் தேடியலைந்து நான் கண்டுகொண்ட அதிர்ச்சித் தகவல்களை நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
தொடரும்..
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்
9. காதுக்குள்ளே ஒரு உலா
பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளைப் பற்றிய தேடலைத் துவங்கிய அந்த நிமிடத்திலிருந்தே எனக்குள்ளே காதுகளைப் பற்றி மிக நுட்பமாக தெரிந்து கொள்கிற ஆர்வமும் ஆசையும் ஒருசேர அதிகமாகிக் கொண்டே செல்வதை நன்றாகவே உணர முடிகிறது. காவிரிக் கரையோரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு படித்துறைக் கரையில் அமர்ந்து பிரவாகமெடுத்து ஓடுகிற காவிரியின் வேகத்தைப் பார்த்துப் பரவசமடைவதும் குளித்துக் கும்மாளமிடுவதும் ஏனையோர்களைப் போல அப்படியொன்றும் ஆச்சரியமாய் இருக்கப் போவதில்லை. அதைப் போலவேதான் நாமும் இதுநாள் வரையிலும் கருவிலிருந்தே நம்மோடு ஒரு ஒட்டுறுப்பைப் போல தலைக்கு இருபுறமுமாக தொடுக்கிக் கொண்டே வருகிற காதுகளைப் பற்றிய அக்கறையோ அதீத கவனமோ செலுத்தியதேயில்லை என்றே தோன்றுகிறது.
திருவிழாக்கால தெருக்களில் ஆடியசைந்தபடி வருகிற யானையைப் பார்க்கிற போதே உள்ளுக்குள் பரவசமாகவும் குதூகலமாகவும் இருக்கும். அதன் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கிற தும்பிக்கையும் கூடவே முன்னும் பின்னுமாக காதுகளை அசைத்தபடி தனக்குத் தானே சாமரம் வீசியபடி பவனி வருகிற யானையைப் பார்க்கும் போதே நமக்கு அச்சமாகவும் அதே சமயம் பிரமிப்பாகவும் இருக்கும். இப்போதெல்லாம் காதுகளைப் பற்றிய ஞாபகம் வருகிற போதெல்லாம் ஏனோ யானையின் சொளவு போன்ற காதுகள் தான் நினைவிற்கு வருகின்றன. யானைகளுக்கெல்லாம் இவ்வளவு பெரிய காதுகள் இருக்கிறதே, அப்படியென்றால் அந்த அளவிற்கு யானைகளுக்கு சப்தமாக கேட்குமா அல்லது காதுகளின் அளவை வைத்துத்தான் கேட்கும் திறனும் இருக்குமா? நமக்கெல்லாம் இம்மியளவு காதுதானே இருக்கிறது, அப்படியென்றால் மனிதர்களுக்கு மற்ற விலங்குகளைவிட குறைவாகத்தான் கேட்குமோ? இப்படியெல்லாம் நான் பள்ளிப் பருவத்தில் யோசித்துப் பார்த்துக் குழம்பியிருக்கிறேன்.
மழைக்கால விடியலின் போது சாரல்பட்டு துளிர்த்துக் கொண்டிருந்த ஜன்னலுக்கு வெளியே பூனில் குருவிகள் நின்று தன் முகத்தைப் பார்த்து தானே கண்ணாடியில் கொத்திக் கொண்டிருந்தன. கண்களுக்குப் புலப்படும்படியாக நம்மைப் போன்ற காதுகள் ஏதுமற்ற பூனில் குருவிகளைப் பார்க்கும் போது ஒருவேளை கேட்பதற்கு காதுகள் வெளியே துருத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையோ என்ற சந்தேகமும் ஏனோ அப்போது வரவே செய்தது. ஜன்னலுக்கருகே நகர்ந்து செல்கிற காலடியோசையைக் கேட்ட அடுத்த நிமிடத்தில் பட்டென்று பறந்து போய் வாகை மரத்தின் கிளைகளுக்குள்ளாக மறைந்து அமர்ந்து கொண்டது. நம் தலைக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கிற காதுமடல் மட்டுமே நாம் நினைப்பது போல் காதுகள் அல்ல என்று புரிவதற்கே பல காலம் தேவையாயிருந்தது.
குருவிகளுக்குக்கூட கண்களுக்குப் பின்னே ஆழ்துளை கிணறு போல ஒரு துளை கேட்பதற்காக இருக்கிறது. ஆனால் ஊர்ந்தபடி நளினமாக நடனமாடிக் கொண்டே செல்கிற பாம்பிற்கு அதுவும்கூட இல்லையே! ஆனாலும் ஆள் நடமாடுகிற சப்தங்கள் கேட்டு விருட்டென்று ஓடி புதருக்குள்ளாக மறைந்து கொள்கிறது. அது எப்படி? இப்படியாக பால்ய காலத்தில் எழுகிற சந்தேகங்களையும் அது பற்றிய ஆச்சரியமூட்டுகிற அற்புதங்களையும் நான் மருத்துவக் கல்லூரியில் சென்றுதான் விரிவாகக் கற்றுக் கொள்ள முடிந்தது.
என்னவோ இப்போதெல்லாம் காதுகள் மீதே பித்துப் பிடித்தாற் போல இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் கண்ணைப் பார்க்காமல் காதைப் பார்த்துப் பேசவே கண்கள் அலைகின்றன. ஏனோ ஒவ்வொருவரின் காதுகள் மட்டுமே அறிந்த ஒருசில ரகசியம் போல ஒவ்வொரு காதிற்குமான ரகசியங்களையெல்லாம் மனம் இப்போது அறியத் துவங்கியிருக்கிறது. குழந்தைகளின் காதுகளைப் பார்த்து அவர்களுடைய நிஜத்தின் நிறம் இதுதான் என்று கணிக்கிறவர்களை இப்போது நான் மிகக் கவனமாகப் பார்க்கின்றேன். கண், மூக்கு போல காதுகளும் யாரைப் போல இருக்கிறது என்று அம்மாவையும் அப்பாவையும் நான் திரும்பித் திரும்பி பார்த்தபடி இருக்கிறேன்.
காதுகளில் தான் எத்தனை எத்தனை வகையறாக்கள்??? கம்மல் குத்தின காதுகள், கடுக்கண் போட்ட காதுகள், வைரக்கல் பதித்த அணிகலன் போலான காதுகளெங்கும் வட்டமிட்டு கற்கள் பதித்த காதுகள், தண்டட்டி அணிந்த பாட்டியின் காதுகள், ஹெட்செட் மாட்டிய ஹைடெக் காதுகள், பென்சிலை சுமக்கும் தச்சன் காதுகள், கண்ணாடியைச் சுமக்கும் பள்ளிக்கூடக் காதுகள், இப்போது காது கேட்கும் மிஷின் மாட்டிய பிஞ்சுக் காதுகள்.. இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ..!
கண்ணாடியில் முகம் பார்க்கிற போதுகூட ஏனோ கூடுதலாக காதுகளையே உற்றுப் பார்க்கத் துவங்கியிருக்கிறேன். காதுகள் நன்றாக இருக்கிறதா? மூக்கும் முழியும் போல காதுகளும் எடுப்பாக இருக்கிறதா? ஒருவரும் இப்படிக் கேட்டதாக ஞாபகமில்லை. காதுகளைத் தொட்டுத் தடவி வருடிக் கொடுத்தடியே இருப்பதற்கு ஏனோ மிகவும் பிடித்திருக்கிறது. கன்னுக்குட்டியின் கழுத்தை வருடிக் கொடுப்பதைப்போல காது மடலை நுனிவிரல்களால் தடவித் தடவிப் பார்க்கிறேன். சோறு வெந்துவிட்டதா என்று அம்மா பார்ப்பதுபோல.. பச்சரிசியை பக்குவமாக இடித்துப் புடைத்து பாட்டி பதம் பார்ப்பதுபோல..
காதுகளை எப்போதாவது மிக நெருக்கமாக பார்த்திருக்கிறோமே? நெருங்கிப் பார்த்தால் எப்படி இருக்கும்? என்ன தோன்றும்? முக அழகைக் காட்டிலும் எவர் கவனத்திலும் விழாதபடி ஓரமாய் ஒரு நாணம் கொண்ட பெண் போல ஒதுங்கியிருக்கிற காதுகளையே இப்போதெல்லாம் அளவுக்கு அதிகமாக பிடிக்கிறது. காதுகளை சுருள் முடி கோர்வையால் கோதிவிடுகிற பெண்களே கூடுதலாக கவனத்தில் வந்து விழுகிறார்கள். புத்தன் சிலையைக் காண்பவர் மௌனமாய் சிரிக்கிற புன்னகையை கவனித்துப் பார்த்தபடி இருக்கிறார்கள். நானோ தும்பிக்கை போன்று இருபுறமும் நீண்டிருக்கிற காதுகளையே உற்று உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன். புத்தரின் புன்னகைக்கு ஈடாக அவருடைய காதுகளுக்கும் அதே வசீகரம் இருக்கத் தானே செய்கிறது!
கடற்கரையோரமாய் அலையில் ஒதுங்கியபடி குப்புற விழுந்து கிடக்கிற சிப்பிகளை புரட்டிப் பார்த்தால் இருக்குமே வெள்ளி வெள்ளியாய், அழகிய ஓவியம் போல வளைவு வளைவாய், அப்படியிருக்கும் நம் காதுகள். இன்னும் அருகே சென்று பார்த்தால் 4-டி ஸ்கேன் வழியே கருப்பையில் படுத்திருக்கிற குழந்தையைப் பார்ப்பது போலவே கவர்ச்சியாய் இருக்கிறது. காதுக்குள் கருப்பை குழந்தை! காதுகளை ரசிக்க நாம் ஏன் மறந்துபோனோம்??
வில்லைப் போல விரைத்தபடி இருக்கிற காதுகளை இழுத்துப் பிடித்து விளையாடுவதுண்டு. எப்படி இழுத்துப் பிடித்து ஒடித்து மடக்கி சுருட்டினாலும் காதுகள் மீண்டும் பழைய படியே வந்துவிடுகின்றன. ஆசிரியர் நாக்கைத் துருத்தியபடி இழுத்து இழுத்து கண்டிக்கிற போது எங்கே நம் காதுகளும் நீண்டுவிடுமோ என்று பயந்த நாட்கள் இன்றும் சிரிப்பாய் நினைவில் இருக்கிறது. காதுகள் வளராதா? புத்தகத்தினுள் வைத்த மயிலிறகு போல காதுகளும் வளராதோ? ஒருவேளை நம் காதுகளும் கருவிலிருந்து இப்போதுவரை யார் யாரோ பேசியதைக் கேட்டுக் கேட்டுத்தான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறதா? அப்படியென்றால் காது கேளாத குழந்தைகளின் காதுகள்!
இப்படியாக காதுகளைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், வருகிறவர் போகிறவர்களின் காதுகளையே எப்போதும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டும் இருக்கிற ஒரு மருத்துவனை எவரேனும் கண்டால் நிச்சயமாக ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும் என்கிற முடிவிற்கு அவர்களும் வந்துவிடுவார்கள். இதையே சிந்தித்து சிந்தித்து அதுவே ஒரு நோயாக நானும்கூட ஒரு மனநோயாளியாக மாறுவதைப் போலத்தான் என்னுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது.
முதலாமாண்டு மருத்துவப் படிப்பில் உடற்கூறியல் அதாவது அனாடமி (ANATOMY) என்றொரு பிரிவு உண்டு. அனாடமி புத்தகத்தில் தான் முதன் முதலாக எனது காதுகளைப் பற்றி கட்டி வைத்திருந்த அத்தனை கோட்டைகளும் தகர்ந்து போயின. அதுநாள் வரையிலும் பிறரது முகத்திலும் கண்ணாடியிலுமாக பார்த்து இரசித்த காதுகளை இறந்த பிரேதத்திலிருந்து அறுத்துப் பார்த்துப் படிக்கத் துவங்கிய பின் ஏனோ காதுகளைப் பற்றிய அத்தனை வசீகரங்களும் காணாமல் கரைந்து போயின.
பள்ளிக் காலத்தில் காதுகளென்பது மூக்குக் கண்ணாடியை மாட்டி வைக்கப் பயன்படும் உறுப்பு அல்லது தவறு செய்துவிட்டால் ஆசிரியர் நாக்கைத் துருத்திக் கொண்டு காதைத் திருக உதவும் தண்டனைக் கருவி என்பதாகவே மனதில் பதிந்திருந்தது. ஆனால் பள்ளிப்பாடத்தில் விளக்கப்பட்ட பாடத்தை விடவும் மருத்துவக் கல்லூரியின் அனாடமி பாடப் புத்தகத்தில் விளக்கப்பட்ட காதுகள் பற்றிய விவரணைகள் யாவும் மூளைக்குள்ளே பல திறப்புகளை உண்டு பண்ணியது. காதுகள் துருத்திக் கொண்டிருக்கிற தோல் பகுதியிலிருந்து நீண்டபடி இன்னும் நீளமாக மண்டை ஓட்டிற்குள் துளை போட்டபடி செல்வதைப் போன்ற வரைபடங்கள் யாவும் காதுகளைப் பற்றிய இன்னொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்வதாய் இருந்தது.
அப்படியென்றால் வெளியே துருத்திக் கொண்டிருக்கிற காதுகள் மட்டுமே கேட்கும் உறுப்பல்ல என்கிற முதல் கொட்டு நச்சென்று அப்போது மண்டையில் விழுந்தது. அதாவது ரேசன் கடைகளில் மண்ணெண்ணையை சிந்தாமல் சிதறாமல் ஊற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிற புனல் போன்ற உறுப்பாக மட்டும்தான் காதுமடலோ நம்மிடையே செயல்படுகிறது. அதுவோ நம் தலைக்கு இருபுறங்களிலுமாக 180 டிகிரி கோணத்தில் இருந்து கொண்டு அதாவது வலது பக்கமென்றால் வலது பகுதி காதும், இடது பக்கமென்றால் இடது பக்க காதும் சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு அதை சிந்தாமல் சிதறாமல் துளையின் வழியே மண்டையோட்டிற்குள் இருக்கிற காதின் முக்கியமான உள்பகுதிக்கு அனுப்புகிற வேலையைத்தான் அது செய்கிறது. அதனால் தான் யானையும் அவ்வளவு பெரிய காதுமடலின் வழியாக சப்தத்தை காடுகளிலிருந்து உள்வாங்கிக் கேட்டுக் கொள்கிறது. அதேபோல காதுமடல் இல்லாமலேகூட குருவிகளாலும் கேட்க முடிகிறது. ஆம், புனல் இல்லாமலே கூட மண்ணெண்ணெய் ஊற்ற முடியும்தானே!
அப்படியென்றால் காது என்றால் எவ்வளவு நீளமாக இருக்கும்? இந்த காதில் அடித்தால் அந்தப் பக்க காதின் வழியே இரத்தம் வருமா? ஒருவேளை இரண்டு காதுகளும் மண்டைக்குள்ளே ஓரிடத்திலே சந்தித்துக் கொள்கின்றனவா? இப்படியான சந்தேகங்களெல்லாம் எனக்கும் பள்ளி மாணவனாக இருக்கிற காலங்களில் இருக்கவே செய்தது. ஆனால் வெளியே தெரிகிற காது துளையிலிருந்து வெறுமனே மூன்று சென்டிமீட்டர் தூரத்திற்குள்தான் காதுகளின் மொத்த பாகங்களுமே நீண்டிருக்கும். அதாவது ஆறு செ.மீ நீளமுடைய காது குடையப் பயன்படுத்துகிற குச்சியின் பாதி நீளம் வரைக்கும்தான் அதன் அளவே இருக்கும். அதற்கு மேலே உள்காதிலிருந்து புறப்படுகிற நரம்புகள்தான் தடித்த மண்டையோட்டுக்குள்ளாக பயணித்து கேட்கும் திறனை உள்ளடக்கிய பக்கவாட்டு மூளையின் முக்கிய பாகத்திற்குள் செல்கிறது. அப்படி மூளைக்குள்ளே சந்திக்கிற நரம்புகள் வழியேதான் நமது கேட்டல் நிகழ்வே நடக்கிறது. அதனால் காதுகள் இரண்டும் சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு நீளமானதாகவெல்லாம் இல்லை என்பதே அப்போது தான் புரியத் துவங்கியது.
அதே முதலாமாண்டு பாடத்தில் உடல் இயக்கவியல் (PHYSIOLOGY) அதாவது உடல் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய பாடப் புத்தகமும் இருக்கும். அந்த புத்தகத்தைப் படித்த பிறகுதான் காதுகள் இன்னும் எத்தகைய அதிசயக்கத்தக்க நுட்பமான வேலைகளையெல்லாம் செய்கிறது, அதைப்போய் நாம் காதுகளில் எதையோ ஊற்றுகிறோம், குச்சியை, கோழி இறகுகளை, ஊக்குகளை வைத்து சுத்தம் செய்கிறோம் என்று எவ்வளவு அலட்சியமாக கையாண்டு கொண்டு இருக்கிறோம் என்று கவலையாக இருந்தது. அன்றாடம் நாம் குளித்து துவட்டுகையில்கூட காதுகளுக்கென்று தனியே நாம் மெனக்கெடுவதில்லையே!
நம்மை யாராவது கண்ணத்தில் அறைந்தால் தான் காதுக்குள் இருக்கிற சவ்வு என்கிற விஷயமே நமக்கு நினைவிற்கு வருகிறது. வெளிச்சத்தைப் பாய்ச்சி காதுகளை கீழும் பக்கவாட்டிலுமாக நுட்பமாகப் பிடித்திழுத்து கண்களால் உற்று நோக்குகிற போது மட்டுமே பார்க்கக் கூடிய காது சவ்வுகளைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது என்னமோ சொற்பமானதுதான். அதாவது வெளியே இருந்து வருகிற சத்தத்தை புனல் போன்று இருக்கிற காதுமடல் உள்வாங்கிக் கொண்டு அதன் சின்னஞ்சிறிய காது குழாயின் வழியே அனுப்பி அவற்றை மிகச் சரியாக காது சவ்வின் மேலே குறிப்பிட்ட புள்ளியில் விழுமாறு செய்கிறது. அப்படி காதுக்குள்ளே கோணலாக சாய்ந்தபடி இருக்கும் அந்த சவ்வுமே வெளியே இருந்து வருகிற ஒவ்வொரு சப்தத்திற்கும் ஏற்ப நுட்பமாக அதிருகிறது. இந்த அற்புதமான வெளிர் நிறத்திலான சவ்வானது கேட்கிற சப்தங்களையெல்லாம் முதன்முதலாக அதிர்வுகளாக உருமாற்றம் செய்கிற அதாவது மொழிபெயர்ப்பு செய்கிற வேலையை மிகக் கவனமாகச் செய்கிறது
இன்னும் கச்சிதமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒலியை அதிர்வுகளாக மாற்றுவது. அதாவது நாம் தொலைபேசியின் சப்தத்தை அதிர்வு ஏற்படும்படியாக மாற்றி வைத்துக் கொள்கிறோமே அதைப்போல. ஒருவர் பேசுவதைக் கேட்கிற போது ஜன்னல் காற்று, மின்விசிறி ஓடும் சப்தம் இப்படி தேவைப்படாத சப்தங்களும் காதுக்குள்ளே வருமல்லவா. அவற்றையெல்லாம் வடிகட்டி தேவையான சப்தங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மட்டும் இன்னும் சப்தமாக மண்டைக்குள் நன்றாக உறைக்கும் படியாக அனுப்புகிற வேலையைத்தான் காதின் நடுப்பகுதி செய்கின்றன.
கடலில் ஓடம் செல்லுகிற போது காற்றுக்கு ஏற்ப பாய்மரம் புஷ்.. புஷ்.. என்று உப்பி உப்பி தளருவதைப் போலத்தான் நம்முடைய காது சவ்வும் மிகமிக மெல்லியதாக அதிர்ந்து அசைந்து ஒவ்வொரு சப்தங்களுக்கு ஏற்ப மிகக் கச்சிதமாக மொழிபெயர்க்கிற வேலையைச் செய்கிறது. அத்தோடு சவ்வுக்கு தொடர்புடைய சில குட்டி குட்டியான எலும்புகளும் அதற்கு ஒத்தாசை புரிகின்றன. இப்படியாக ஒலியை அதிர்வுகளாக மாற்றுகிற சவ்வுக்கு அடுத்ததாக இருக்கிற நேர்த்தியான பெட்டி போன்ற காதின் ஒரு பகுதியைத்தான் மருத்துவத் துறையில் இரண்டாவது அல்லது நடுப்பகுதி என்று அழைக்கிறார்கள். காதுமடலையும் காது குழாயையும் உள்ளடக்கிய பகுதியை காதின் வெளிப்பகுதியாக அதாவது முதல் பகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இப்போதிருந்து கவனமாக தவளைகளை நன்றாக உற்றுப் பார்க்கத் துவங்கினால் அதற்கு வெளிக்காது இல்லாமல் வெறுமனே சவ்விலிருந்து துவங்குகிற நடுக்காதுகள் மட்டும் இருப்பதைக் கண்டு கொள்ள முடியும். இனிமேல் எப்போதாவது தவளைகளைக் காண நேரிட்டால் அதன் காதுகளையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அதன் சவ்வுகளோ தவளைக்கு யாரோ வைத்த ஸ்டிக்கர் பொட்டு போல சிறு வட்டமாய் அழகாய் இருக்கும்
இறுதியாக இவ்வாறு வெளியே இருந்து வந்து அதிர்வாக மாற்றப்பட்ட சப்தங்களானது மேற்கொண்டு உள்ளே நகரும் போதுதான் காதின் உள்பகுதியை அதாவது மூன்றாம் பகுதியை சந்திக்கிறது. காது கேட்டலில் மிகவும் முக்கியமான பகுதியே இதுதான். உலகின் அதிசயங்களைவிடவும் மிக அற்புதமானதும் ஆச்சரியமானதும்கூட. ஒரு பேட்டரியைப் போல அதிநுட்மானது. இங்கேதான் அந்த அதிர்வுகளெல்லாம் மின்னலைகளாக அதாவது மின்சாரமாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு சப்தங்களுக்கும் ஏற்ப இங்கு தயாரிக்கப்படுகிற மின்சார சிக்னலை எடுத்துக் கொண்டுதான் அதன் நரம்பு வயர்கள் மூளைக்குச் சென்று சுற்றிலும் என்ன சப்தம் கேட்கிறது என்கிற கேட்டலின் அற்புதத்தை நிகழ்த்துகிறது. ஆனால் பாம்புகளுக்கோ இந்த வெளிக்காது நடுக்காது சமாச்சாரங்களெல்லாம் இல்லாமல் வெறுமனே உள்காது மட்டுமே தான் இருக்கிறது. அதாவது அதிர்வுகளை உணருகிற பாம்பின் தலைப்பகுதியிலிருந்து சப்தங்கள் நேரடியாக மண்டையோட்டின் எலும்புகளின் வழியே உள்காதிற்குள் நுழைந்து அதன் கேட்டல் நிகழ்வு நடந்தேறுகிறது.
காதுகள் பற்றிய பாடப் புத்தகத்தை திறந்து பார்த்துக் கொண்டு அதன் வெளிக்காது, நடுக்காது, உள்காது பற்றிய சமாச்சாரங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இதெல்லாம் இந்த படிக்காத பெற்றோர்களுக்குத் தேவைதானா? இதை அவர்கள் புரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்கிற கேள்விகளும் மனதில் எழாமல் இல்லை. ஆனால் இதையெல்லாம் விளங்கிக் கொள்ளாமல் நான் எப்படி ஒரு சிறந்த மருத்துவராக ஆகிவிட முடியாதோ, அதேபோல காதுகளைப் பற்றிய அடிப்படையான விசயங்களைப் புரிந்து கொள்ளாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை, எதனால் தன் பிள்ளைக்கு காது கேட்காமல் போனது, காது கேட்காததுதான் பிரச்சனையென்றால் அவனால் ஏன் பேச முயவில்லை, கேட்பதற்கும் பேசுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களாலும் விடைகளைக் காண முடியாதே! இந்த விடைகளை நோக்கி பெற்றோர்களை நகர்த்தாமல் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி, அந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற சிகிச்சையைப் பற்றி அவர்களுக்கு உணர வைக்கவும் முடியாது.
பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நான் எதைப் பற்றி முக்கியமாக புரிய வைக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் இப்போது கவனம் செலுத்தியாக வேண்டும். காது கேளாமல் இருப்பது தான் பிரச்சனை என்றால் காதுமடல், சவ்வு, உள்காது, நரம்புகள் மற்றும் மூளை வரை இருக்கிற இந்த கேட்பதற்கான பாதையில் எது பாதிக்கப்பட்டாலும் அது அவர்களை காது கேளாதவர்களாக ஆக்கிவிடக்கூடும்தான். ஆனால் பிறவியிலேயே பாதிக்கப்படுகிற இக்குழந்தைகளுக்கு அப்படி என்ன தான் தீரக்க முடியாத பிரச்சனை என்பதை நான் முக்கியமாக அவர்களுக்கு விளக்கியாக வேண்டும்.
அதாவது காதுகளில் அழுக்கு படிந்திருப்பது, சவ்வில் ஓட்டை விழுவது, நடுக்காதில் கிருமித்தொற்றாகி வெளியே சீழ் வடிவது போன்ற காரணங்களையெல்லாம் உடனே மருந்துகள் ஊசிகளைக் கொண்டு சரிசெய்து விடுகிறபோது பிறவிக் குறைபாடுகளெல்லாம் ஏன் மருந்துகளையும் ஊசிகளையும் வைத்தே சரிசெய்துவிட முடியாதா என்கிற கேள்விக்கு ஒரு மருத்துவராக நான் பதில் சொல்லியாக வேண்டும் தானே!
தொடரும்..
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்
மருத்துவப் பித்தம் தெளிதல்
இரவெல்லாம் குளிர்பனி பொழிந்து அறையின் ஜன்னல்களில் அவை துளிர்த்துப் படிந்திருந்தன. இருள் கலைந்து அதிகாலை கூடல் கொள்ளத் துவங்கிய அந்திம பொழுதில் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். சேலையை விலக்கி காம்பைத் தேடுகிற சிறுகுழந்தையைப்போல இருள்திரையை விலக்கியபடி மெல்ல மெல்ல சூரியனின் மஞ்சள் கதிர்கள் வெளிப்பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவை ஜன்னல் கண்ணாடியில் படிந்த பனித்துளிகளை துடைத்தபடி அறைக்குள்ளே கள்ளமாக எட்டிப் பார்த்தது. அதன் மினுமினுக்கிற பொன்னிற துகள்கள் ஜன்னல் கதவிடுக்கின் துளைகளின் வழியாக நுழைந்து தரையிலே கலைந்து கிடந்த புத்தகங்களின் மேல் அது நெடுஞ்சாண்கிடையாய் வந்து விழுந்தது.
சூரிய ஒளியின் விரல்கள் காற்றிலே திறந்தபடி அலைபட்டுக் கிடந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் புரட்டி எதையோ தேடி வாசிக்க முயலுவதைப்போல காகிதத்தின் மீது ஊர்ந்து தவழ்ந்தபடி இருந்தது. அது நல் இரவினது வானிலிருந்து விழுகிற எரிநட்சத்திரத்தைப் போல இருட்டு அறைக்குள்ளாக ஒரு கோணத்தில் வந்து பெரும் புள்ளியாய் விழுந்தது. புத்தகத்தின் மீது விழுந்த வெளிச்சத்திலிருந்து ஒளியோ பெருகிப் பெருகி அறைக்குள்ளே பெருமழையைப்போல சுவரெங்கும் பரவி அதன் விளக்கொளியால் அறையையே ஒரு தேர்ந்த நடன அரங்கைப்போல மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் காற்றிலே துருவித்துருவி படுக்கையின் மேலே வந்து முகத்தின் மீது விழுந்தபோது யாரோ முகத்திற்கருக்கே வந்து பெருமூச்சு விடுவதைப் போல இருந்தது.
இரவு முழுவதும் நீடித்த கனவுகளாலும் கலைந்து போன தூக்கத்தாலும் சோர்ந்து போன உடலின் அசதியால் மேற்கொண்டு கண்களைத் திறக்க முடியாமலே தான் படுக்கையில் நான் படுத்துக் கிடந்தேன். யாரோ என்னைச் சுற்றிலுமாக நின்று கொண்டு கைகொட்டி சிரிப்பதைப் போலவும், சில நேரங்களில் யாரோ எதற்காகவோ அவசர அவசரமாக தட்டி எழுப்ப முயலுவதைப் போலவும், அதல பாதாளத்தில் வீழ்ந்துவிடப் போகிறவர்களைக் காப்பாற்றச் சொல்லி யாரோ அரற்றி அழுகிறவர்களைப் போலவுமாக அடிக்கடி கனவுகளில் வருவதும் போவதுமாக இப்போதெல்லாம் எதையெதையோ நினைத்து மனம் பிதற்றியபடியே ஒவ்வொரு இரவும் கடந்து கொண்டே இருக்கிறது. என்றாவது ஒருநாள் நாம் புத்தி பேதலித்தவனாக ஆகிவிடுவோமோ என்கிற பயம் வேறு மெல்ல மெல்ல என்னை பற்றிக் கொள்வதைப் போலிருந்தது.
வெயிலின் கதகதப்பையும் மீறி முகம் சூடேறி வெளிறிப்போய் உடலும் மயிர்க் கூச்சமடைந்து உறைக்கத் துவங்கியபோதுதான் பட்டென்று கனவுகள் கலைந்து எழுந்து கண்விழித்துப் பார்த்தேன். நேற்றிரவு எத்தனையோ முறை எழுந்து பார்வையற்றவனைப் போல காற்றிலே துளாவித் துளாவி அறைக்குள்ளாக நடந்து கொண்டிருந்த ஞாபகம் இன்னும் நினைவிலேயே தங்கியிருக்கிறது. சோர்வு கலையாத தூக்கக் கலக்கத்தில் ஒவ்வொரு புத்தகங்களாக தரைமீது கலைத்துப் போட்டு இரவுப்பூனை போல எதையெதையோ புரட்டிக் கொண்டிருந்த சுவடுகள் இப்போது வெயில் போர்த்தியபடி கிடந்த புத்தகங்களைப் பார்த்தவுடனே எல்லாம் நினைவுக்குள் வந்து விழுகின்றன. அவையெல்லாம் குறும்புக் குழந்தைகள் விளையாடித் தூக்கிப் போட்ட பொம்மைகளைப் போல ஆங்காங்கே தரையிலே சிதறிக் கிடந்தன.
படுக்கையிலிருந்து எழுந்து ஒரு தாயின் பேரன்போடு புத்தகங்களின் அருகாமையில் போய் அமர்ந்து கொண்டேன். கல்லூரிக் காலம் முடிந்த பின்னால் கத்தை கத்தையாக பெட்டிகளில் அடுக்கப்பட்டு பரணில் தூக்கிப் போட்ட மருத்துவ புத்தகங்கள் யாவும் இன்னும் தூசி களையாமல் கலையிழந்து போய் அப்படியே கிடந்தன. அழகாய் துயில் கொள்கிற பிள்ளையை அள்ளியெடுத்து மடியில் கிடத்துவதைப் போல ஒவ்வொரு புத்தகமாய் எடுத்து மடியில் வைத்தபடி அவற்றை வாஞ்சையோடு தொட்டுத் தடவிப் பார்த்தேன். தாயின் சேலை முந்தானை நுனியால் அழுத பிள்ளையின் கண்ணீரைத் துடைத்துவிடுவது போல ஆசை ஆசையாய் அவற்றின் மேல் படிந்த கசடுகளை எனது சட்டை முகப்பால் துடைத்துவிட்டேன்.
மலைக்குவியல் போல சரிந்து கிடக்கிற இந்த மருத்துவப் புத்தகங்களிலிருந்துதான் என்னுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடைய பரிதாபப்பட்ட அம்மாக்களுக்கும் நான் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும் என்கிற நினைப்பே பெரும் மலைப்பாக இருந்தது. முதலில் இத்தகைய சலிப்பிலிருந்து விடுபடுவதற்கான வழியை நான் தேடியாக வேண்டும். இப்போது ஒரு மருத்துவராக இருந்து மட்டுமே இப்பெற்றோர்களுக்கான விழிப்புணர்வை தயாரித்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறைபட்ட குழந்தைக்கு நேசமான தந்தையாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ இருந்துதான் அவர்களுக்கான மருத்துவத்தை எளிமைப்படுத்துவதற்கான வேலையை நான் துவக்கியாக வேண்டும். அப்படியாக நான் காலம் தாழ்த்துகிற ஒவ்வொரு நாளும், அவர்களுக்குப் புரியும்படியாக மருத்துவத்தை விளக்க முடியாமல் போகிற ஒவ்வொரு பொழுதும் அக்குழந்தைகளை இனி சரிசெய்யவே முடியாது என்கிற ஆறு வயதின் விளிம்பை நோக்கிய ஆபத்தில் தள்ளிக் கொண்டேயிருக்கும் என்பதை முக்கியமாக நான் மனதில் பதிய வைத்துக் கொண்டாக வேண்டும்.
எப்போதும் நான் எதற்காகவும் ஆசுவாசமடைந்துவிடக் கூடாது. எந்த சூழலிலும் மனமோ இளகிக் கொடுத்துவிடக் கூடாது. நான் எவ்வளவுக்கு எவ்வளவு என் அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டங்களிலிருந்தும் மகிழ்ச்சியூட்டும் அற்ப செயல்பாடுகளிலிருந்தும் என்னை விலக்கியே வைத்திருக்கிறேனோ அதேபோல எந்த அளவிற்கு இத்தகைய குழந்தைகளை எனக்குப் பிறந்த குழந்தைகளாக மனதில் இருத்திக் கொண்டு மனதை இறுக்கமாய் வைத்திருக்க முடிகிறதோ அந்த அளவிற்கு என்னால் ஆத்மார்த்தமாக இக்குழந்தைகளுக்காக எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற துடிப்பு என்னுள்ளே இருந்து கொண்டே இருக்கும். அதனால் இப்போதெல்லாம் வீட்டை விட்டு எங்கும் நான் செல்வதில்லை. அப்படியே விரும்பினாலும் எந்த கேளிக்கையான விசயங்களிலும் என்னால் முழுமனதாக ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததில்லை.
ஏனோ இப்போதெல்லாம் சட்டென்று அறைக்குள் இருள் தன் வலையை விரித்துக் கொள்ளும்போது வெறுமனே விளக்கை எரியவிடாமல் அப்படியே அமர்ந்திருக்கவே பிடித்திருக்கிறது. அடர்ந்த இருட்டு என்னைச் சூழ்ந்திருக்கும்போது எல்லாமுமே கண்முன்னே சூன்யமாய் மறைந்துவிடுகிற பொழுதில் இப்படித்தானே ஒரு பார்வையற்ற குழந்தையும் எங்கோ ஒரிடத்தில் எப்படியோ தட்டுத்தடுமாறி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கக் கூடும் என்ற நினைவுகள் எழும்பி மனமோ வேதனைகள் கொள்ளத் துவங்கிவிடும். சட்டென்று அடுத்த கணமே என்னுடைய காது கேளாத குழந்தைகளையெல்லாம் நினைத்து துக்கமோ தொண்டையை அடைத்துக் கொள்ளும். உடனே இரண்டு கைகளையுமே காதுகளில் இறுக்கமாக வைத்துக் கொண்டு வெளி உலகத்தின் எந்த சப்தங்களும் எனக்குள் சென்றுவிடாமலிருக்க முயன்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருவேளை காது கேளாமல் இருப்பதன் துயரத்தை அனுபவிக்காமல் என்னால் ஆத்மார்த்தமாக இப்பணியில் செயல்பட முடியாதோ என்று வேறு மனம் அப்போது அவஸ்தையும் தடுமாற்றமும் கொள்ள ஆரம்பித்துவிடும்.
எவ்வளவுதான் இறுக்கமாக கச்சிதமாக காதுகளை மூடினாலும் நாம் விடுகிற மூச்சுக்காற்றும் படபடக்கிற இதயத்துடிப்பும் காதுக்குள்ளே சலசலத்து ஓடுகிற இரத்தக் குழாயின் துடிப்போசையும் இன்னும் சத்தமாக நமக்குள்ளாக கேட்டபடியேதான் இருக்கும். காதுகளை இறுகப் பொத்திக் கொண்டால் பிறவியிலிருந்தே காது கேளாமல் போகிறவர்களின் துயரங்களை ஒருவர் அனுபவித்துப் பார்த்துவிடலாம் என்கிற எண்ணம் எவ்வளவு கேலிக்குரிய விசயம் என்பதன் சாட்சியமாய் அப்போது நான் இருட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பேன்.
பிறவிக் குறைபாட்டுடைய குழந்தைகளைத் தேடியலைகிற நாட்களில் இந்த உலகின் சப்தங்கள் யாவும் எனக்கு கூடுதலான துன்பத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. அறையின் சிறு கடிகார முட்கள் நகருதலும்கூட எரிச்சலூட்டுவதாய் அமையும். குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி அவதியுறுகிற பொழுதில் அவ்வப்போது தூரத்தில் சொட்டிக் கொண்டிருக்கிற குழாயின் சப்தமும்கூட என்னுடைய வேதனையை துரிதப்படுத்துவதாய் இருக்கும். துயரத்தைத் தருகிற இந்த சப்தங்களில் இருந்தெல்லாம் என்னால் ஒருபோதும் துண்டித்துக் கொள்ளவே முடியாதா என்கிற கோபமும் எரிச்சலுமாக அவை ஒவ்வொன்றும் என்னை சித்திரவதை செய்வதைப் போலிருக்கும்.
இந்தப் பிஞ்சுக் குழந்தைகளால் மகிழ்ச்சியின் சிறு சப்தங்களைக்கூட கேட்டு இரசிக்க முடியாது என்பது எத்தகைய துயரமான விசயம்? பெற்ற தாயின் குரலைக் கூட கேட்டுச் சிரிப்பதற்கு உரிமையில்லாத குழந்தைகளா இவர்கள்? தங்களின் சொந்த மூச்சுவிடுகிற சப்தங்களையும் இருதயம் துடிக்கிற துடிப்பொலியையும்கூட இவர்களால் கேட்டு உணர முடியாமல் போய்விட்டதா? கருவாய் உருக்கொண்ட தருணத்திலிருந்தே அவர்களுக்கென்ற தனித்த உலகில் மீட்டப்படுகிற இசையாகவும் புரிந்து கொள்ளப்படாத மொழியாகவும் இறுதிக் காலம் வரையிலும் அவர்களோடே தொடர்கிற நுரையீரலினுடைய அந்த குட்டி இதயத்தினுடைய குரல் மட்டும்தான் இவர்களது ஒட்டு மொத்த வாழ்க்கையின் ஓசைகளின் உலகமா? இப்படி யோசித்து யோசித்து இன்னும் எத்தனைக் காலம் தான் வலியிலும் வேதனையிலும் என்னை நானே துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கப் போகிறேனோ என்று எனக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் இப்படி பைத்தியக்காரத்தனமாக சிந்திக்கிற போதுதான் இத்தகைய குழந்தைகளுக்கென்று என்னால் இயன்ற ஏதாவது ஒன்றை செய்துவிட முடியாதா என்கிற ஏக்கமும் பரிதவிப்பும் என்னோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
மஞ்சள் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அறைகளை வண்ணங்களால் நிரப்பிக் கொண்டிருந்த தருணத்தில் பகல் பொழுது மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் நான் அடிக்கடி எங்கே இருக்கிறேன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. விடியற் பொழுதிற்கென வீசுகிற புங்கை மரத்தினூடே நுழைந்து வருகிற மெல்லிய தென்றல் காற்று நாசித்துவாரம் வழியே நெஞ்சுக்குள் இதமாய் இறங்குகிறது. ஜன்னலுக்கு வெளியே காட்டு ரோஜாக்கள் சிவப்பாயும் மஞ்சளாயும் வெள்ளையாயும் வண்ண வண்ணமாய் பூத்துச் சிரித்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது நான் நிதானத்திற்கு வருவதற்கான வழிகள்தான் இவையெல்லாம்.
என் பள்ளிக் காலத்தில் பெரியவர்களாக ஆவது பற்றிய கற்பனைகளும் ஆசைகளையும் போல வகுப்பில் நன்றாக படிப்பவர்களிடையே மருத்துவர்கள் ஆவது பற்றிய கட்டுக்கதைகள் தான் அதிகமாயிருக்கும். மாளிகை வீடும் காரும் வைத்திருப்பவர்களால் மட்டுமே டாக்டராக முடியும், மருத்துவம் படிக்கப் போகிறவர்களை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றுதான் பாடம் நடத்துவார்கள், உயிரோடு ஒருவரை அறுத்துப் பார்த்துத்தான் படித்து தேர்ச்சியாக வேண்டியிருக்கும், நோயளிகள் இறந்து போனவுடன் அவர்களின் ஆவியுடன் மருத்துவர்கள் பேசுவார்கள், அவர்களுக்கு ஆவியின் பாஷை தெரியும் என்பன போன்ற கத்தை கத்தையான கதைகளோடும் நெஞ்சிலே தங்கிவிட்ட பதட்டத்தோடும் தான் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று நான் படிப்பில் சேர்ந்தேன்.
அன்றாடம் மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளெல்லாம் அவர்களுடைய நோய்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கிச் சொல்வதை சரியாக புரிந்து கொள்வதில்லை, அதன்படி நடந்து கொள்வதில்லை என்று பரிகாசம் செய்கிறவர்களைப் போலத்தான் நானும் ஒரு மருத்துவனாய் ஆரம்பத்தில் இருந்தேன். ஆனால் மருத்துவம் பற்றிய எவ்வித முன் அறிமுகமும் இல்லாமல் மருத்துவக் கல்லூரி சென்று அங்கே நான் படித்துத் தெளிந்து புரிந்து கொள்வதற்கு பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சியடைந்த எனக்கே ஐந்தரை ஆண்டுகளாகிற போது கிராமத்தின் படிக்காத பாமர மக்களாகிய இந்த பெற்றோர்களெல்லாம் நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்வதற்கு அதிகமான காலமும் கூடுதல் புரிதலும் தேவையானதாகத்தானே இருக்கும் என்று விளங்கிக் கொள்ளவே எனக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது.
ஆனாலும் தமிழ்வழி கல்வி கற்ற, அதிலும் கிராமத்தின் பின்புலத்திலிருந்து வந்த என்னால் வெகுசீக்கிரமாகவே மக்களின் மொழியில் எளிதாக மருத்துவத்தைக் கொண்டு சேர்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இன்னும் எனக்குள் வலுவாகவே இருக்கிறது. இப்போது நான் செய்ய வேண்டியதெல்லாம் பள்ளி மாணவனாக கல்லூரி சென்ற போது இருந்த மனிநலையிலிருந்தே மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதுதான் சரியானதாகவும் இருக்கக்கூடும் என்று ஆழ்மனதின் குரல் என்னிடம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
மருத்துவக் கல்லூரிக் காலமானது கூட்டுப்புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் பறப்பது வரையிலான பருவங்களைப் போல அழகழனாக வசந்தகால பருவங்களாக இருக்கும். அங்கே படிப்பு என்பதே முழுக்க முழுக்க மனிதர்களைப் பற்றியே பகுத்துப் பார்க்கிற படிப்பாக முற்றிலும் வேறானதாக இருக்கும். ஐந்தரை ஆண்டுகாலம் கொண்ட மருத்துவப் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் படித்து தேர்ச்சியடைவதாகவும், இறுதியில் ஓராண்டானது மருத்துவமனையில் பணிபுரிகிற பயிற்சிக் காலமாகவும் சேர்ந்தே இருக்கும். முதலாம் ஆண்டில் மனிதனைப் பற்றிய மருத்துவத்தின் அடிப்படை பாடங்களான உடலமைப்பு, அதன் இயக்கங்கள், அப்படி உடல் தொடர்ந்து அயராமல் ஓடுவதற்குத் தேவையான உள்ளே நடக்கிற வேதியல் மாற்றங்கள் போன்ற பாடங்களைப் பற்றித்தான் நன்றாக படிக்க வேண்டியிருக்கும். முதலாம் ஆண்டின் மருத்துவ மாணவர்களாகிய நாங்கள் அந்த வருடத்தில் நேரிடையாக நோயாளிகளைச் சந்திக்கவே வாய்ப்பிருக்காது. கல்லூரியின் இரண்டாம் ஆண்டில்தான் நுண்ணியிரிகள், மருந்துகள், உடல் கோளாறுகள், போஸ்ட் மார்டம் பற்றியும் அதே சமயம் மருத்துவமனைக்குச் சென்று வார்டுகளில் நோயாளிகளை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அறிகுறிகளைக் கேட்டு அவையெல்லாம் என்ன நோயென்று படித்த புத்தகங்களின் வழியே தேடிக் கண்டுபிடிக்கிற படிப்பினையும் துவங்கும்.
நாங்கள் மூன்றாவது ஆண்டில் கால் வைத்த போதுதான் காது மூக்கு தொண்டைக்கென தனியொரு படிப்பும், அதற்கான தனித்துறையும் இருப்பதை அறிந்து அங்கே தினந்தினம் வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தோம். அப்போதெல்லாம் அங்கே வரும் பெரும்பாலான குழந்தைகள் யாவும் காதுகளில் அழுக்குப் படிந்திருக்கிறது, சீழ் வடிகிறது, காதுக்குள் எறும்பு போய்விட்டது இப்படியாகத்தான் வருவார்கள். அவர்களின் குறைகளைக் கேட்டுப் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதோடு எங்களது கடமைகள் முடிந்துவிடும். ஆனால் படிக்கிற அந்த ஐந்தரை ஆண்டுக் காலத்திலே காது கேளாமலோ வாய் பேசாமலோ பிறவிக் குறைபாட்டோடு வருகிற, அவர்களைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிற ஒரு குழந்தையைக் கூட அப்போது நான் கண்டதில்லை. அதனாலேயே இது மிகவும் அபூர்வமாக தோன்றக்கூடிய நோயென்றும், ஆகையால் அதுவொன்றும் அவ்வளவு முக்கியமான பாடமில்லை போல என்றுமே புரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று மக்களிடையே சென்று பார்க்கிற போதுதான் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இச்சமூகத்திலே இக்குறைபாட்டைக் கண்டறிந்தும், இன்னும் கண்டறியப்படாமலும், சிகிச்சை கிடைக்காமலும், கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ள இயலாமலும் இருக்கிறார்கள் என்கிற உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு மருத்துவராக நோயாளிகளைக் காண்கின்ற போது எனது மருத்துவப் பாடங்களில் சொல்லப்பட்ட அறிகுறிகள் யாவும் அந்த குறிப்பிட்ட நோயாளியிடம் இருக்கிறதா என்று புத்தகங்களையும் நோயுற்ற அந்த மனிதனையும் பொருத்திப் பார்த்தே படிக்கவும் சிகிச்சையளிக்கவும் துவங்கியிருந்தேன். அந்த புத்தகங்களையும் தாண்டி ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்கு அவர்களின் குடும்பச் சூழலையோ, வருமானத்தையோ அவர்களது படிப்பறிவற்ற நிலையையோ கணக்கில் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் கிராமத்திற்கு அரசு மருத்துவராக பணிக்கு வந்துவிட்ட இந்த ஐந்தாண்டுகால அனுபவத்தில் அவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளும்படியான எத்தனையோ சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன்.
அதிகாலையில் மில் வேலைக்கும், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் செல்வதற்கு முன்பாக அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு அரைவயிற்றோடு வேலை பார்க்கக் கிளம்புகையில் ஏதோ ஒரு ஊசி போட்டால் போதும் உடல் அசதியின்றி சுலகுவாக வேலையை முடித்துவிடலாம் என்று மருத்துவமனைக்கு வருபவர்களை நான் சும்மா சும்மா ஊசி போட்டுக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது என்று சத்தம் போட்டு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்து வரிசையில் நிற்கையில் அன்றாடம் வந்து ஊசியை போட்டுக் கொண்டால் அப்படியே கிட்னியை கழற்றி வெளியே வைத்துவிட வேண்டியதுதான் என்று ஊசியின் மீதான பயத்தை ஏற்படுத்தி அவர்களை சமாதானப்படுத்தவே முயன்றிருக்கிறேன். ஆனாலும் அப்படி அவர்கள் ஊசியைப் போட்டுக் கொள்ள வருவதற்கும் தினக்கூலியாய் வேலை செய்து அன்றாட வாழ்வை ஓட்டுவதற்குமான புரிதலை இப்போதுதான் நான் உணரவே ஆரம்பித்திருக்கிறேன்.
இப்படி கிராமத்திற்கு வந்து மக்களிடையே பணிபுரிந்த அனுபவத்திற்குப் பின்னால் தான் நாம் வெறும் புத்தகத்தின் பக்கங்களை வைத்துக் கொண்டு மட்டும் மருத்துவத்தை அளித்துவிட முடியாது. அப்படி முழுமையான மருத்துவத்தை வழங்குவதற்கு மக்களின் வாழ்க்கையும் அவர்களது அடிப்படையான குடும்பச் சூழலையும் நாம் நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே விளங்கத் துவங்கியது.
நன்றாக பொழுது புலரத் துவங்கிய அதிகாலை வேளையில் வெயிலும் உக்கிரம் கொள்ளத் துவங்கியிருந்தது. புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க வாசிக்க கல்லூரிக்கால நினைவுகளும் பால்யகால ஞாபகங்களும் அத்தோடு அந்த பால்யகாலமே கேள்விக்குறியாக்கப்பட்ட காது கேளா குழந்தைகளுமாக நினைவுகள் மாறிமாறி வந்த வண்ணமாகவே இருந்தது. அது என்னவோ கண்முன்னே சிதறிக் கிடந்த கல்லூரிக்கால புத்தகங்களைப் பார்க்கிற போதே கடந்த கால வாழ்க்கைக்குள் மனம் சிறகடித்துப் பறக்கத் துவங்கிவிடுகிறது. பல வருடங்களுக்குப் பின்பாக இந்த மருத்துவப் புத்தகங்களுள் ஒன்றாக கிடந்த காது மூக்குத் தொண்டை புத்தகத்தை எடுத்து அதன் பக்கங்களை விரல்களில் ஓடவிட்டு நுகர்ந்து பார்த்தேன். இதுவரையிலும் தெரிந்த புத்தக வாசம் மாறி முகம் புதைத்து அழுது நனைந்த ஈரம் படிந்த தலையணையின் வாசம் போல துக்கத்தின் மணம் மூக்கை நிறைத்தது.
அதன் ஒவ்வொரு பக்கங்களாக நகர்த்தி நகர்த்தி பிறவியிலயே காது கேளாத நோய்களைப் பற்றிய பக்கங்களைத் திறந்த போது அன்று நான் மருத்துவனாக படித்ததற்கும் இப்போது நான் சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்து படிப்பதற்குமான பார்வை முற்றிலுமாக வேறுபட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அப்போதெல்லாம் கல்லூரியில் அபூர்வமான நோயென்ற புரிதலில் இருந்த பிறவியிலியே காது கேளாத குழந்தைகளைப் பற்றிய பாடங்களெல்லாம் ஏனோ தேர்வுக்குத் தயாராக வேண்டிய பகுதியாகவும் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்குரிய பக்கங்களாகவும்தான் நினைத்துக் கொள்ளவே மனமோ இடமளித்திருந்தது. ஆனால் இப்போது இத்தகைய குறைபாட்டுடைய குழந்தைகளை நேரில் சந்தித்து வீடுகளுக்குச் சென்று களப்பணியாற்றிய பின்புதான் இவையெல்லாம் வெறுமனே சாதாரண பக்கங்கள் அல்ல, அவர்களின் எதிர்கால வாழ்க்கையே மாற்றிவிடக்கூடிய துருப்புச்சீட்டுகள் என்பதே புரிகிறது.
ஐந்தரை ஆண்டுகளாக படித்து தேர்ச்சியடைந்த போது நடுங்காத இந்த மருத்துவனின் கைகள் இன்று அதே காது மூக்கு தொண்டை பாடப் புத்தகத்தை திரும்ப வாசிக்கிற போது அதீதமாக நடுக்கம் கொள்கிறதென்றால் உண்மையில் இப்போதுதான் நான் ஒரு மருத்துவனாகவே தேர்ச்சியடைந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது. மருத்துவராவதற்கு முன்பாக நானும் ஒரு சாதாரண மனிதனாகத் தானே இருந்திருக்கிறேன் என்கிற புரிதலோடு காதுகளைப் பற்றிய மருத்துவத்தை எளிமையாக்குவது பற்றிய பணியை விரைவிலே நான் துவக்கியாக வேண்டும். இந்த புரிதல் வந்துவிட்ட பின்னால் தான் என்னால் தீர்க்கமான முழுநம்பிக்கையோடு புத்தகங்களிலிருந்து குறிப்புகளை எடுக்கவே முடிந்தது. அப்போது என்னிடமிருந்த எல்லா விதமான தயக்கமும் நடுக்கமும் அப்படியே முற்றிலுமாக கரையத் துவங்கிருந்திருந்தது.
அடுத்த பகுதியில் காதுகளைப் பற்றியும் அதன் இயங்களைப் பற்றியும் அதன் இயக்கம் தடைபடுவதால் நோயுறுவதால் ஏற்படுகிற பாதிப்புகள் சிகிச்சைகள் பற்றி விரிவாக பார்க்கலாமா..
தொடரும்..
முந்தைய தொடர்களை படிக்க:








