கீதா பிரஸுக்கு காந்தி அமைதி விருது – இந்தியாவை மனித அவலத்தின் அடியாழத்திற்கு இட்டுச் செல்லும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள்
நூல்அறிமுகம் : ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் ! – பொ. நாகராஜன்
ஆர்எஸ்எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம் கட்டுரை- சவெரா (தமிழில்: ச.வீரமணி)
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடிக்கு வாக்களித்த இந்தியர்களில் அநேகமாக எவருக்குமே தாங்கள் ஆர்எஸ்எஸ் என்னும் ‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்’ இயக்கத்திற்குத்தான் உண்மையில் வாக்களித்திருக்கிறோம் என்று தெரியாது. மோடி அந்த இயக்கத்தின் பிரச்சாரகர் என்னும் முழு நேர ஊழியராக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும், மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானவர்களும் நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இருந்துவருபவர்களேயாவர். பிரதமர் மோடியிலிருந்து அவரின்கீழ் பணிபுரியும் அத்தனை பேர்களுமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தாலும், சிந்தனைகளாலும் பயிற்றுவிக்கப் பட்டவர்களாவார்கள். ஆர்எஸ்எஸ் கடந்த 90 ஆண்டு காலமாக எதனைப் பிரச்சாரம் செய்து வந்ததோ, அதனை நாடு முழுதும் தங்களின் வன்முறை நடவடிக்கைகளின் மூலமாக எடுத்துச் செல்லும் வேலைகளையே இதன்கீழ் இயங்கிடும் டஜன் கணக்கான அமைப்புகள் துணிச்சலுடன் செய்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய இவர்களின் பிரச்சாரம் இந்திய சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே சண்டை மற்றும் அவநம்பிக்கையை உருவாக்கிடும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் ஒற்றுமையைக் கிழித்தெறிந்து, நாட்டை மத்தியகால இருள்சூழ்ந்த காலத்திற்கு இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனாலும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கூட்டாளிகளும் விரும்புவது என்ன? எந்தவிதமான இந்தியாவை அவர்கள் கட்டி எழுப்பு விரும்புகிறார்கள்? எந்தவிதமான சமூகத்தை அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கும் சமூகம் ஆபத்தானது என்றும் நாட்டையே எரித்துச் சாம்பலாக்கிடும் என்றும் ஏன் கூறுகிறோம்? இதனைப் புரிந்துகொள்ளச் சற்றே முயல்வோம்.
இவர்கள் கூறும் ‘இந்து’ தேசம்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இறுதி இலட்சியம் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் ‘இந்து தேசத்தை’ அமைத்திட வேண்டும் என்பதேயாகும். ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ்-இன் தொலைநோக்குப் பார்வை என்ன என்பது குறித்து இவ்வியக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும் இவ்வியக்கத்தின் சித்தாந்தத்திற்கு மிகவும் முக்கியமாக விளங்குபவருமான எம்.எஸ். கோல்வால்கர், இது தொடர்பாக ஏராளமான விவரங்களைத் தன்னுடைய “நாம் – அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம்” (“We-or Our Nationhoold Defined”) என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். மோடி, இவரை ஓர் ஆன்மீக ஜாம்பவான் என்றும் தொலைநோக்குப் பார்வையுள்ளவர் என்றும் சித்தரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கோல்வால்கர், அனைவரும் அறிந்துள்ள அறிவியல் சாட்சியங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, இந்த பூமியில் உள்ள இந்த ‘தேசத்தில்’ நாம் பல லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம் என்கிறார். இந்த பூமி, பன்முகத்தன்மை கொண்டவர்கள், ஆன்மீக மேதைகள் மற்றும் தெய்வீகத்தன்மை படைத்தவர்கள் வாழ்ந்த பூமி. பின்னர் இந்துக்கள் திருப்தி மனப்பான்மையுள்ளவர்களாகவும், உணர்வு மங்கியவர்களாகவும் மாறிப்போனார்கள். இம்மாபெரும் பூமி, “கடந்த ஆயிரம் ஆண்டுகளில்” “கொலைபாதகக் கொள்ளையர்களின் கூடாரமாக” மாறிப்போனது. இது, இந்துக்களின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு கூறுவதன்மூலம் கோல்வால்கர், முஸ்லீம்களைத்தான் இவ்வாறு இந்துக்கள் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் என்று குறைகூறுவது தெளிவாகவே தெரிகிறது. இப்போது நம்முன் உள்ள கடமை மீளவும் இந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதும், மீளவும் நிறுவுவதுமேயாகும் என்று கோல்வால்கர் கூறுகிறார்.
இந்து ராஷ்ட்ரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முதல் குணாம்சம் என்பது, இந்துக்கள் மட்டுமே அதன் அங்கமாக இருக்க முடியும் என்பதாகும்.
“இந்த நாட்டில், இந்துஸ்தான், அதன் இந்து மதம், இந்து கலாச்சாரம் மற்றும் (சமஸ்கிருதம் மற்றும் அதன் தொடர்புனுள்ள இயற்கையான குடும்பத்தைச்சேர்ந்த) இந்து மொழி ஆகியவற்றுடனான இந்து இனம் தேசம் என்பதன் கருத்தியலை முழுமையாக்குகிறது. அதாவது, இந்துஸ்தான் புராதன இந்து தேசமாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது மற்றும் தொடர்ந்து இருந்து வரவேண்டியதுமாயிருக்கிறது. இதனுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், அதாவது இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழியுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், ‘இயற்கையாகவே’ அவர்கள் உண்மையான தேசிய வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ந்துவிடுவார்கள்.”(ப.99)
இவ்வாறு தாங்கள்தான் மற்ற இனத்தைவிட மேலாதிக்கவாதிகள் என்று பொருள்படக்கூடிய கோல்வால்கரின் இந்தக் கூற்றானது, மற்ற மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதை மறைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்களுடைய சமஸ்கிருத பிராமணியக் கண்ணோட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. இவர்களின் கூற்றுப்படி, இந்து ராஷ்ட்ரம் என்பது சமஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே. இவ்வாறு இவர்களின் இந்து ராஷ்ட்ரம் திராவிட மொழிக் குடும்பத்தை ஒதுக்கிவிடுகிறது மற்றும் பழங்குடியினர் மொழிகள் பலவற்றையும் ஒதுக்கிவிடுகிறது.
இதன் காரணமாகத்தான் பாஜக மற்றும் அதன் முந்தைய பெயரில் அமைந்திருந்த ஜன சங்கம் உட்பட சங் பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் இந்தியைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில் இவர்களின் பார்வையில் இந்து அல்லாத அனைவரும் தேச வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தப்படுவதாகும். இதனைப் பின்வரும் பத்திகளில் கோல்வால்கர் நேரடியாகவே முன்வைக்கிறார்:
“ஆரம்பத்திலேயே ஒன்றை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ‘தேசம்’ என்கிற வரையறை குறித்து நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து நிபந்தனைகளுக்குள், வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு, இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை, அவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்களெனில், அவர்கள் அந்நியர்களாக (foreigners)க் கருதப்படுவதைத்தவிர, வேறெப்படியும் இருக்க முடியாது. (ப.101)
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் – முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்திஸ்டுகள் மற்றும் பல பழங்குடியினத்தவர்களாகவுள்ள – இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துயிசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல், இரண்டாம்தர பிரஜையாக அல்லது அதைவிட மோசமாக வாழ்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கோல்வால்கர் மிகவும் தெளிவாகவே அவர்களை ‘அந்நிய இனத்தினர்’ (‘foreign races’) என்று அழைப்பதன் மூலம், இதில் எவ்விதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
“…இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று, இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து இனத்தையும், கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும், அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும் உரிமைபாராட்டாமல், முன்னுரிமை சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது.” (பக்.104-5)
கோல்வால்கர் 1930களின் பிற்பகுதியில், அடால்ப் ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி ஜெர்மனியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார்.
நாஜிக்கள் யூதர்கள் நடத்திய விதத்தால் இயற்கையாகவே மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த கோல்வால்கர், அவர்கள் யூதர்களை நடத்திய விதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதியதாவது:
“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.’’(ப.88)
முஸ்லீம்கள் குறித்து ஆர்எஸ்எஸ்-இன் கருத்து என்ன என்பதை இப்போது நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ஒன்று அவர்கள் இந்துயிசத்தைத் தழுவிட வேண்டும் (“தாய்மதத்திற்குத் திரும்பிட வேண்டும்”) அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான் பாஜக தலைவர்கள், தங்கள் மதவெறிக் கருத்துக்களை விமர்சிப்பவர்களை, ‘இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்றும் ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்றும் திரும்பத்திரும்பக் கூறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கொலைகளைப் போன்று இந்தியாவின் இதர பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும்போது அவற்றைக் கண்டித்து வாயே திறப்பதில்லை.
ஆர்எஸ்எஸ்-இன் வரையறையின்படி, ‘தேசியவாதம்’ (‘nationalism’) என்பதும், ‘தேசபக்தி’ (‘patriotism’) என்பதும் இந்துயிசத்தைப் புகழ்வது என்பது மட்டுமேயாகும். வேறெந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது தேச விரோதச் செயலே. அவற்றைச் செய்வோர் தேசத்துரோகிகளே (traitors)யாவார்கள்.
இவ்வாறுதான் கோல்வால்கர் கூறுகிறார்:
“தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் `தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல் படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் லட்சியத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், அல்லது, கருணையான பார்வையுடன் கூறவேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.’’(ப.99-100)
மதத்தின் அடிப்படையிலான அரசு
கோல்வால்கர் சிந்தனைகள் வெளிப்படுத்துவது என்ன? அவை மதத்தின் அடிப்படையில் ஓர் அரசு அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். அதன் வழிகாட்டும் கொள்கை என்பது சனாதன தர்மமேயாகும். (அதாவது இந்து புராணங்களில் காணப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களேயாகும்.) இவர்கள் அமைக்கவிரும்பும் மத அடிப்படையிலான அரசு எதுபோன்று இருக்கும்? இப்போது சில நாடுகளில் மத வெறியர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றுவரும் ஆட்சிகளை இதற்கு உதாரணங்களாகக் கூற முடியும். தலிபான் இயக்கத்தினர் நடத்தி வரும் ஆப்கன் நாட்டை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இதே போன்றே சிரியாவில் சில பகுதிகளில் நடைபெறும் ஐஎஸ்ஐஎஸ் மதவெறியர்களின் ஆட்சியையும், மற்றும் ஈராக்கில் நடைபெறும் ஆட்சியையும் கூற முடியும். இவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்துகிறார்கள். சவுதி அரேபியாவில் நடைபெறும் ஆட்சியும் இதே போன்றதுதான். (இங்கே பெண்கள் தனியாக எங்கும் செல்ல முடியாது. சமீபத்தில்தான் அவர்களுக்கு வாக்குரிமையே அளிக்கப்பட்டது.) ஈரானில் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பாஸ்தானில் 1978-88க்குப் பின்னர் ஜெனரல் ஜியாவுல்ஹக் ஆட்சிப் பொறுப்பேற்றபின்பு, இஸ்லாம் மதம்தான் வழிகாட்டும் கொள்கையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று மற்றுமொரு மதத்தின் அடிப்படையிலான அரசு என்பது இஸ்ரேல். அங்கேயுள்ள மக்களை விரட்டியடித்துவிட்டு வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் ஹீப்ரு கொள்கைகளின் அடிப்படையிலேயே ஆட்சிபுரிவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் வன்முறை வடிவங்களில் மிகவும் அதிதீவிரமான வடிவங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இவை தங்கள் மதத்தினருக்கு எதிரானவர்கள் மீது மட்டுமல்ல, தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களையும்கூட வன்முறைரீதியாக நசுக்கிடும் விதத்திலும் ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், இவற்றால் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன என்பதேயாகும்.
உதாரணமாக, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள்தான் இருந்தார்கள். எனினும் அவர்களால் மேற்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, 1971இல் சுதந்திர வங்க தேசத்தை அமைத்தார்கள். உலகில் இந்து நாடு என்று பிரகடனம் செய்யப்பட்ட நேபாளம், அங்கே ஆட்சிசெய்த கொடுங்கோலனுக்கு எதிராக, சுமார் பத்தாண்டு காலம் ஆயுதமேந்தி வீரச் சமர் புரிந்து, அரசாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, தற்போத ஒரு குடியரசை நிறுவியிருக்கிறார்கள்.
இவ்வாறு உலக அளவிலான அனுபவம் காட்டுவது என்னவென்றால் பன்முகத் தன்மையுள்ள மக்கள் வாழ்கின்ற ஒரு நவீன மயமான நாட்டில் ஆட்சி செய்வதற்கு அடிப்படையாக எந்தவொரு மதமும் இருக்க முடியாது என்பதேயாகும். இந்தியாவில் இந்து அரசு ஒன்றை ஆர்எஸ்எஸ் விரும்புவதாக மிகைப்படுத்திக் கூறுவதாக சிலர் கூறலாம். ஆனால் இதில் எவ்விதப் பிழையும் கிடையாத. இதுபோன்ற ஓர் அரசைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். கோல்வால்கரின் சிந்தனைகள் இதைத்தான் கூறுகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் வழிகாட்டும் கொள்கைகளாக விளங்குவது கோல்வால்கரின் சிந்தனைகளேயாகும். அதனால்தான், சுதந்திரத்திற்குப்பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசர், நாட்டை இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சி புரிவதற்குப் பதிலாக, இந்தப் பூமியின் சட்டமாக விளங்கும் மனுஸ்மிருதியையே நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று, கோரியது. (அதன் 1949 நவம்பர் 30 மற்றும் 1950 ஜனவரி 25 இதழ்களைக் காண்க).
மனுஸ்மிருதி என்பது மனு என்னும் முனிவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் இந்து தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வரையறைகளை வகுத்துத்தந்திருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஏராளமான விவரங்கள் இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இதன் நகலை எரித்திட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
கோல்வால்கர், ஜனநாயகம் என்பது மேற்கத்தியக் கட்டமைப்பு என்றும், அது இந்தியாவுக்குப் பொருந்தக்கூடியது அல்ல என்றும் கூறுகிறார். இந்து ராஷ்ட்ரம் சுயநலமற்ற மற்றும் சுய அர்ப்பணிப்பு கொண்டோரால் நேர்மையான முறையில் ஆட்சிபுரியப்பட வேண்டும் என்று கோல்வால்கர் எழுதுகிறார். (ஸ்ரீ குருஜி சமாக்ரா, தொகுப்பு 5, பக்.89-90). இந்து ராஷ்ட்ரம் என்பதில் பாசிஸ்ட் சித்தாந்தம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை இவர் மூடிமறைப்பதோடு, பிராமணர்களை உயர்த்திப்பிடிக்கும் வர்ணாச்ரம (அ)தர்மத்தைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதையும் மூடி மறைத்துள்ளார். ஆர்எஸ்எஸ் என்னும் பாசிஸ்ட் அமைப்பு இத்தகைய வர்ணாச்ரம முறையில் கட்டுப்பட்டுள்ளதுதான் என்பதை இன்றைக்கும் பலர் அறியாதிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-இல் தேர்தல்கள் கிடையாது. இதன் தலைவர், சர்சங்சலக் (sarsanghchalak) என்பவர், இதிலிருந்து ஓய்வுபெறுபவரால் நியமனம் செய்யப்படுபவரே யாவார். இதுநாள்வரையிலும் இவ்வாறு இதன் தலைவராக இருந்த அனைவருமே பிராமணர்கள்தான். அவரின்கீழ் மாநில மற்றும் பிராந்த மட்டத்திலான தலைவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பின்கீழ் ராணுவ அணிவகுப்புப் பயிற்சிகள் உண்டு, சிறப்பு வணக்கம் அளிக்கும் நடைமுறை உண்டு, சீருடை உண்டு, ‘தேசப்பற்று’ பாடல்கள் உண்டு. இவை அனைத்துமே நாஜிக்கள் பின்பற்றிய நடைமுறைகளையொட்டியே இருப்பதைக் காண முடியும். இவர்கள் அணியும் காக்கி கால் சட்டைகள் மற்றும் கறுப்பு குல்லாய் உட்பட நாஜிக்கள் பாணியிலேயே அமைந்திருக்கின்றன.
மக்கள் குறித்த கண்ணோட்டம் என்ன?
இந்து ராஷ்ட்ரத்தின் பார்வையில், அவர்கள் மக்களை எப்படிப் பொருத்துகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? கோல்வால்கர் கூறியிருப்பதுபோல், ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி, வாழ்க்கையின் குறிக்கோள் என்பது தங்கள் மதத்தில் தனக்கு இடப்பட்டுள்ள கட்டளைப்படி வாழ்ந்து, பல்வேறு பிறவிகள் எடுத்து, பின்னர் இறுதியாக பிறவியே இல்லாத நிலையை எட்டியபின் மோட்சத்திற்குச் செல்வதாகும். இப்பூலகில் சுகபோகங்களில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கண்டிக்கிறார்கள். அவற்றை அவர் அவசியமான பாவங்கள் (necessary evils) எனவும் அவற்றை ஒருவர் பொருட்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். மக்களின் கடும் வறுமை, வேலையின்மை, பிணி, அறியாமை மற்றும் ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்கள் குறித்தும் தனிநபர் எவரும் கவலைப்பட வேண்டாம், அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதே கோல்வால்கரின் கூற்றாகும். இந்து ராஷ்ட்ரம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையின் விவரங்கள் குறித்து இவர்கள் கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதாகும்.
கோல்வால்கர் கனரகத் தொழில்மயத்திற்கு எதிரானவர் (தொகுதி 9, ப.59). கிராமங்கள் சுயசார்புடையவைகளாக மாற வேண்டும் என்றே விரும்புகிறார் (தொகுதி 5, பக்.13-14). உற்பத்தியைப் பெருக்குவதற்கு மாட்டு சாணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் (தொகுதி 5, பக்.65-68). வறுமை குறித்தும் வழக்கம்போல் கண்ணீர் விடுகிறார். அத்துடன் அதனை ஒழித்தக்கட்டுவதற்காக முழக்கம் எழுப்புகிறவர்களையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். பின்னர் அவர் வறுமையை ஒழிப்பதற்காக முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கையளவு தானியம் எடுத்து ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கும், பசியால் வாடுகிறவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்(தொகுதி 5, ப.92)! ஆனால் தீர்வு என்ன?
வறுமையை ஒழிக்க ஒரே வழி மக்கள் சுயநலத்துடன் வாழ்வதை கைவிட்டு, மிகவும் நேர்மையுடன் கடினமாக உழைத்து தேசிய வளங்களை அதிகரித்திட வேண்டும் என்று எழுதுகிறார். (தொகுதி 5, பக்.263-265). இதுதான் மாபெரும் இந்து ராஷ்ட்ரம் இவ்வாறான அடித்தளத்தின்மீதுதான் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நம்பிக்கை அளித்திடும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்றும் கூறுகிறார்!
இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால் உழைக்கும் மக்கள் அதிக ஊதியமோ அல்லது வசதிகளோ எதுவும் கோராது, தேசத்திற்காக உழைத்திட வேண்டும் என்பதும், அவர்களின் உடனடித் தேவைகளுக்கு குறைந்தபட்சம் எந்த அளவுக்குத் தேவையோ அதை மட்டுமே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுமேயாகும். அவர்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் அவர்களைச் சுற்றி பரந்து பரவிடும். ஆனால் அவர்கள் அதனைத் துய்த்திட முடியாது.
நிலம், எந்திரங்கள் மற்றும் மூலதனம் போன்ற உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகப் பெற்றிருக்கக்கூடிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் குறித்து கோல்வால்கர் கூறுவது என்ன? இவர்களிடம் ‘மன மாறுதலை’ (‘change of heart’) எதிர்பார்த்திட வேண்டும் என்று கோல்வால்கர் பரிந்துரைக்கிறார். அப்போதுதான் அவர்கள் செல்வத்தை சேகரிப்பதை நிறுத்திக்கொண்டு, அதனைப் பகிரத் தொடங்குவார்களாம் (தொகுதி 2, பக்.100-101)! இது முதலாளித்துவம் மற்றும் சுரண்டலுக்கு ஆதரவான ஒரு காந்தியபாணி தீர்வாகும். கோல்வால்கர் இதனை ஓர் ‘இந்தியனின்’ தீர்வு என்கிறார். உண்மையில் இது ஓர் இந்தியனின் தீர்வும் கிடையாது, இரக்கமற்ற முறையில் இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் வர்க்கச் சுரண்டலுக்குத் தீர்வும் ஆகாது. அனைத்து மனித சமூகங்களிலுமே வர்க்கச் சுரண்டலின் சுபாவம் இப்படித்தான் இருக்கும்.
ஆர்எஸ்எஸ் இயக்கம், மாபெரும் இந்துயிசத்தின் அடிப்படையில் அமைக்கவிரும்பும் இந்து ராஷ்ட்ரத்தில் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கஜானாக்களை நிரப்பிட, கோடானுகோடி இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படும் என்பதே பொருளாதாரரீதியாக இவர்களின் எதார்த்த நடவடிக்கைகளாகும்.
இவர்கள், மக்களைக் குருட்டுத்தனமான முறையில் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது, அவர்களை முட்டாளாக்கும் ஒரு கருவியேயாகும். இவ்வாறு மதவெறி நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்திடும் அதே சமயத்தில் அவர்கள், பொருளாதார மற்றும் சமூகத்தில் மேட்டுக்குடியினராக இருப்பவர்களை, நிலவுடைமையாளர்களையும் தொழில் உடைமையாளர்களையும், உயர் சாதியினரையும், தங்களைப் பின்பற்றுபவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பதற்காகவும், இவர்களின் லாபங்களை அறுவடை செய்வதற்காகவும் எப்போதும் தங்கள் பாசிஸ்ட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ஆர்எஸ்எஸ் வெற்றி பெற முடியுமா?
இத்தகைய மதத்தின் அடிப்படையிலான பயங்கரமான பார்வை இவர்களுடைய அறிவியலற்ற, பண்டைக்கால பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளிலிருந்து உதித்தவைகளாகும். இதனை அப்படியே இந்திய மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றால் அவர்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்திடுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன் உயர்சாதியினர் நாக்பூரில் அமர்ந்து பல பத்தாண்டுகளுக்கு முன் சிந்தித்திட்ட உயர்சாதியினரின் சிந்தனைகளையெல்லாம் தாண்டி இந்திய சமூகமும், உலக சமூகமும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. இந்திய மக்கள் மிகவும் வலுவாக ஆட்சி புரிந்துவந்த காலனியாதிக்க வெள்ளையர்களையே எதிர்த்துப் போராடி வெற்றிகரமாகத் தூக்கி எறிந்தவர்களாவார்கள். இதில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு, சாதிகளுக்கு அப்பாற்பட்டு, இன மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று போராடியிருக்கிறார்கள். பகுத்தறிவின் அடிப்படையில் அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு நின்றுதான் ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைத்திட முடியும் என்பது உண்மை என்ற போதிலும், அதனை இன்னமும் இந்தியாவில் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் சுதந்திர இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்கள் மக்கள் மத்தியில் பிளவு விஷத்தைத் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனைவரின் விடுதலைக்குமான பாதை என்பது மதத்தின் அடிப்படையில் இருக்க முடியாது என்பதை மக்கள் தங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தெரிந்துகொண்டு வருகிறார்கள். எனவேதான், ஓர் இந்து முதலாளி தன்னைக் கொடூரமான முறையில் சுரண்டினாலும், தன்னை அவமானப்படுத்தினாலும் அதனை எந்தவொரு இந்து தொழிலாளியும் பொறுத்துக்கொள்ள மாட்டான். இந்து நிலப்பிரபுக்களால் பாலியன் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ எந்தவொரு தலித் பெண்மணியும் பொறுத்துக்கொள்ள மாட்டாள்.
எனவேதான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகள் அவிழ்த்துவிடும் சரடுகளையெல்லாம் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, முறியடித்திட வேண்டும். ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் இயக்கங்களும் இந்து ராஷ்ட்ரம் என்னும் தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக, மக்களைக் கூறுபடுத்திடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்திடும். மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் மதவெறி விஷத்தை விதைத்துக்கொண்டே இருந்திடும், இவற்றின் மூலம் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்திட முயற்சித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய இவர்களின் இழிநடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடி, முறியடித்திட வேண்டும். இதில் ஏராளமானவர்கள் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்.
இப்போது ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதையொட்டி இவர்களின் இத்தகைய இழிநடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, சமூகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் முடமாக்கி, தங்களுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை உருவாக்கி, எப்படியாவது ஆழமாக தங்கள் விஷ விதைகளை வேரூன்ற வைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதனை வெற்றி பெறச் செய்திடக் கூடாது.
– சவெரா
(தமிழில்: ச.வீரமணி)
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை வீழ்த்திட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)
சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, அக்டோபர் 14-18 தேதிகளில் விஜயவாடாவில் நடைபெற்றது. அக்டோபர் 15 அன்று நடைபெற்ற துவக்கவிழா மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:]
அன்பார்ந்த தோழர்களே!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு இதமான சகோதர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துவக்க விழா நிகழ்வுகளில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய தினம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக, இடதுசாரிக் கட்சிகளிடையே பரஸ்பரம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டிருப்பதற்காக இதர இடது சாரித் தலைவர்களையும் வாழ்த்துகிறேன்.
தோழர்களே, நண்பர்களே!
ஆந்திர மாநிலத்தின் அரசியல் மையமாக விளங்கும் விஜயவாடாவில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த மாநகரமானது பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர நடவடிக்கைகளில் மையமாக இருந்திருக்கிறது. அது இன்றளவும் தொடர்கிறது. நம் நாட்டில் நடைபெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க மாபெரும் மக்கள் போராட்டம் நடந்த இடங்களில், மிகவும் கொடூரமான நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரதாக விவசாயிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் நடந்த இடங்களில் ஒன்றாக விளங்கும் அரசியல் மையத்தில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த ஆயுதப் போராட்டம், 18 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று, சுமார் 30 லட்சம் விவசாயிகளை விடுவித்தது. 16 ஆயிரம் சதுர மைல்களில் அமைந்திருந்த மூவாயிரம் கிராமங்களில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகித்தது.
இந்த ஆயுதப் போராட்டமும், இதேபோன்று கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் வங்கத்தில் நடைபெற்ற தேபாகா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா-வயலார் போராட்டம், மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற ஓர்லி பழங்குடியினர் போராட்டம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள்தான் நாட்டிலிருந்த ஜமீன்தாரி அமைப்புமுறை ஒழிப்பு, பல்வேறு நிலச்சீர்திருத்தங்களை நாட்டின் மையத்திற்குக் கொண்டு வந்தது. இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் நடைபெற்ற பகுதிகள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் இம்மாநாடு நடைபெறுவது கம்யூனிச செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்கும், இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் உதவிடும் என நான் நம்புகிறேன்.
தோழர்களே! நண்பர்களே!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, சுதந்திர இந்தியாவும் நம் மக்களும் அனைத்துவிதத்திலும் நெருக்கடிக்கு உள்ளாகி மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற நிலையில் நடந்துகொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாஜக அரசாங்கம் பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. மதச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களைக் குறிவைத்து, தன்னுடைய நச்சு வெறுப்புப் பிரச்சாரத்தையும் வன்முறை வெறியாட்டங்களையும் வெறித்தனமான முறையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் இந்தியக் குடியரசின் இன்றைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைத் தங்களின் சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதேசமயத்தில் பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை, மதவெறி-கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பின் மூலமாக வலுப்படுத்தி, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து நாட்டின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது, அரசியலில் லஞ்ச ஊழலை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. ஜனநாயக உரிமைகளையும் குடிமை உரிமைகளையும் எதேச்சாதிகாரமுறையில் முழுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நண்பர்களே! தோழர்களே!
இந்தியக் குடியரசின் குணாம்சத்தை மாற்றுவதற்காக திட்டமிட்ட முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்புமுறை, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நான்கு அடிப்படைத் தூண்களும் இவர்களின் ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் வெறித்தனமான முறையில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையே ஒழித்துக்கட்டும் விதத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் எல்லையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளும் வாரிவழங்கப்பட்டு வருகின்றன.
அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கைகள் மீது கடும் தாக்குதல்கள். இவை அனைத்தும் மோடி அரசாங்கம், இந்தியாவை ஓர் இந்துத்துவா நாடாக மாற்றுவதற்காக மேற்கொண்டுள்ள எதார்த்த நடவடிக்கைகளின் சமிக்ஞைகளாகும்.
ஒன்றிய மோடி அரசாங்கமும், மாநிலங்களை ஆளும் பல்வேறு பாஜக அரசாங்கங்களும் மதவெறித் தீயை விசிறிவிடும் வேலைகளை நோக்கமாகக் கொண்டு சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் அப்பாவி சிறுபான்மையினரைக் குறிவைத்துப் பிரயோகிக்கப்படுகின்றன. அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை வகைதொகையின்றி பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல, தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்கூறும் இதழாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு எதிராகவும் ஏவப்படுகின்றன. தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறப்படுவதே, தேசத்துரோகம் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு கல்வி, அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் நிதி போன்று பல முனைகளிலும் கூட்டாட்சி அமைப்புமுறையின்கீழ் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதைப் பார்த்தோம்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள் பாஜக-வின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கிறோம். அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவையும் பாஜக ஆட்சியாளர்களால் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அதிலும் குறிப்பாக அமலாக்கத் துறையும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து, ஆளும் கட்சியின் ஓர் அரசியல் அங்கமாகவே செயல்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜோடனை செய்யப்பட்ட செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியாளர்களின் இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் அறிவியலுக்குப் புறம்பானது, வரலாற்றுக்குப் புறம்பானது, பகுத்தறிவற்றதாகும். இந்து புராணங்களின் பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளையும், கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளையும் உண்மையான வரலாறு எனக் கூறி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
தோழர்களே! நண்பர்களே!
மோடி அரசாங்கமானது இந்தியா காலங்காலமாகப் பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இந்தியா இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக தன்னைத் தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டது. இஸ்ரேலுடன் போர்த்தந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நாம் காலங்காலமாக பாலஸ்தீன போராட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா பிணைப்பு ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தியா, அமெரிக்காவுடன் தன் ராணுவ ஒப்பந்தங்களைக் கெட்டிப்படுத்தி இருக்கிறது. சீனாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணியை (QUAD alliance) ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தோழர்களே! நண்பர்களே!
அரசாங்கம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டோம் என்று என்னதான் தம்பட்டம் அடித்தபோதிலும், நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக அதலபாதாள நிலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றைக் கையாள முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. வேலையின்மை மிகவும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதிகரித்துவரும் பணவீக்கம் கோடிக்கணக்கான மக்களை வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும், அதிகரித்துவரும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளும், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்களின் போராட்டங்கள் உக்கிரமடைந்திருக்கின்றன.
குடியுரிமைத் திருத்தத் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் பெரும் திரளாக அணிதிரண்டதைப் பார்த்தோம்.
ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், மிகவும் முரட்டுத்தனத்துடன் இருந்துவந்த மோடி அரசாங்கத்தை, படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்தது. மத்தியத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதற்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றன. சமீபத்தில் அவர்கள் மார்ச் 28-29 தேதிகளில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சமீப காலங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்திடும் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்று வருகின்றன.
மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றிட இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அதன் அடிப்படையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன் ஒருங்கிணைத்திட வேண்டும்.
அதே சமயத்தில் இந்துத்துவா மதவெறியர்களின் தாக்குதல்களைத் தனிமைப்படுத்தி, முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்ட வேண்டியதும் அவசியமாகும்.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தன்னுடைய மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கைகள் மூலமாக மக்களின் மத்தியில் நல்லாதரவைப் பெற்று, கேரளாவின் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அதன் சாதனைகள் காரணமாக கேரளம், நாட்டிலேயே மனிதவள வளர்ச்சி அட்டவணையில் உயர்ந்த இடத்தைப் பதிவு செய்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்திட ஆர்எஸ்எஸ்-உம், ஒன்றிய அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாயின. இடதுசாரி சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு இவர்களின் முயற்சிகளை முறியடித்திட வேண்டும்.
இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும், இந்திய மக்களின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம் சத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக முன்னேறிச் செல்வதற்கும், நாட்டு மக்களை அணிதிரட்டுவதன் மூலம் இந்தக் கடமைகளை நிறைவேற்றிட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தை வீழ்த்திடுவோம்!
இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி, ஒருங்கிணைத்திடுவோம்!
மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களில் இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருங்கிணைத்திடுவோம்!
இந்துத்துவா மதவெறிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்டிடுவோம்!
மார்க்சிசம்-லெனினிசம் நீடூழி வாழ்க!
ஆர்எஸ்எஸ் தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா? -சம்சுல் இஸ்லாம் தமிழில்: ச.வீரமணி
ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் “பூரண ஸ்வராஜ்யம்” அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்த சமயத்தில் தேசிய இயக்கத்தின் அடையாளமாக இருந்த மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, சுதந்திர தினத்தைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்ததுடன், அனைத்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களும் காவிக் கொடியைத்தான் (Bhagwa Jhanda) வணங்கிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக இருந்த கே.பி. ஹெட்கேவார் அனைத்து ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
இன்று வரையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ உயர்த்தப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல் ஜனநாயகத்தின் மீதான தங்கள் பற்றுதலைக் காண்பிப்பதற்காக மூவர்ணக்கொடியை ஏற்றியிருக்கலாம். அதேபோன்றே இஸ்லாமியர்களின் மதராசாக்களில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கோரிக் கொண்டிருக்கலாம். எனினும் ஆர்எஸ்எஸ் இயக்கமானது மூவர்ணக்கொடியை வெளிப்படையாகவே கண்டித்தும், கேவலப்படுத்தியும்தான் வந்திருக்கிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர்களின் கீழ்க்கண்ட அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
1946 ஜூலையில் நாக்பூரில் நடைபெற்ற குருபூர்ணிமா வைபவத்தின்போது கோல்வால்கர் பேசியதாவது:
“பாரதத்தின் கலாச்சாரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது காவிக் கொடி (saffron flag)தான். அது கடவுளின் உருவகம். இந்தக் காவிக் கொடியின் முன் ஒட்டுமொத்த தேசமும் முடிவில் தலைவணங்கிடும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.”
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக வெளிவரும் ஆர்கனைசர் என்னும் அதன் ஆங்கில இதழில் 1947 ஜூலை 17 தேதியிட்ட இதழில் தேசியக் கொடி என்னும் தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், மூவர்ணக்கொடியைக் கடுமையாகச் சாடி இருக்கிறார்கள். அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் நிர்ணய சபையில் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக அங்கீகரித்திட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டதை மூர்க்கமான முறையில் எதிர்த்தே அந்தத் தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:
“இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமாகும். கொடி என்பது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்துஸ்தானத்தில் ஒரேயொரு தேசம்தான் இருக்கமுடியும், அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான உடைசலும் இல்லாது இருந்துவரும் இந்து தேசம்தான். இதுவே நம் தேசம். இதை அடையாளப்படுத்தக்கூடிய விதத்தில்தான் கொடியும் இருந்திட வேண்டும். அனைத்து சமூகத்தினரின் ஆசைகளுக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் ஒரு கொடியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அது பிரச்சனைகளைச் சிக்கலாக்கிடும், அது தேவையுமில்லை. அது முற்றிலும் அவசியமற்றதுமாகும். .. ஒரு தையல்காரரிடம் நாம் நமக்காக ஒரு சட்டையையோ அல்லது ஒரு கோட்டையோ தைப்பதற்கு உத்தரவு வழங்குவதுபோல் நாம் நம் கொடியைத் தெரிவு செய்வதற்கு உத்தரவு வழங்க முடியாது.
இந்துஸ்தானத்தில் உள்ள இந்துக்கள் ஒரு பொதுவான நாகரிகம் (civilization), கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், ஒரு பொது மொழி மற்றும் பொது பாரம்பர்யங்களைக் கொண்டிருந்ததைப்போல, அவர்கள் ஒரு கொடியையும் பெற்றிருந்தார்கள். உலகில் மிகவும் உன்னதமான, மற்றும் பழைமையான கொடியைப் பெற்றிருந்தார்கள். உலகில் அவர்களின் நாகரிகம் எந்த அளவுக்குப் பழைமையானதோ அந்த அளவுக்கு அவர்களின் கொடியும் பழைமையானது. அந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் தேசியக் கொடியின் பிரச்சனையையும் அணுகிட வேண்டும். மாறாக இப்போது செய்திருப்பதைப்போன்று ஏனோதானோவென்று அணுகிடக்கூடாது. அந்நிய படையெடுப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தற்காலிக துரதிர்ஷ்டங்கள் மற்றும் அனைத்துப் பயங்கரங்களும் சேர்ந்து இந்துக்களின் தேசியக் கொடியை ஓரங்கட்டிவிட்டது. ஆயினும் அந்தக் கொடி பழைமையான மகிமையையும் மகத்துவத்தையும் மீளவும் பெறும் என்று அனைவருக்கும் தெரியும். கொடியின் வர்ணம், கிழக்கே சூரியன் உதயமாகும்போது மெதுவாக ஆனால் கம்பீரமாகத் தோற்றத்தை அளிக்கும்போது என்ன வர்ணத்தை அளிக்குமோ அதேபோன்ற நிகரற்ற வர்ணத்தில், தேசத்தின் இதயத்தையும் ஆத்மாவையும் மிகவும் நேசிக்கும் விதத்தில் இருந்திடும்.
இதே வழியில், உலகத்திற்கே உயிரூட்டக்கூடிய சக்தியாக விளங்கும், இத்தகைய மதிப்புவாய்ந்த நம் கொடியை நம் முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். சூரியனைப்போன்றே புகழ்பெற்ற வசீகரத்துடனும், பெருந்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும் உள்ள விநோதமான நம் கொடியைக் காண முடியாதவர்கள் அல்லது பாராட்ட முடியாதவர்கள் எதுவும் அறியாதவர்களாகவோ அல்லது தீங்கிழைப்பவர்களாகவோதான் இருப்பார்கள். இந்தக் கொடிதான் இந்தக் கொடி மட்டும்தான் இந்துஸ்தானத்தின் உண்மையான தேசியக் கொடியாக இருக்க முடியும். அதுதான், அதுமட்டும்தான் தேசத்திற்கு ஏற்புடைய ஒன்றாக இருந்திட முடியும். பொதுமக்களின் மத்தியில் இதனை வலியுறுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் நிர்ணயசபை அவர்களின் விருப்பத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவது நல்லது.”
இந்தியா சுதந்திம் அடைந்த சமயத்தில், இந்திய தேசம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் தில்லி, செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசர் இதழில் (1947 ஆகஸ்ட் 14 தேதியிட்டது), மூவர்ணக்கொடியை இழிவுபடுத்தும் விதத்தில் எழுதியிருந்ததாவது:
“விதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்துள்ளவர்கள் நம் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனாலும் அது எந்தக்காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடியதாகவோ, சொந்தம் கொண்டாடக்கூடியதாகவோ இருக்க முடியாது. மூன்று என்கிற வார்த்தையே தீங்கு பயப்பதாகும். மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடி நிச்சயமாக ஒரு மோசமான தீய உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.”
எனவே, ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி இந்தியத் தேசியக் கொடி எந்தக் காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்று அல்ல. அது ஒரு மோசமான சகுனம் ஆகும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.
நாடு சுதந்திரம் பெற்றபின்னரும்கூட, மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியே ஏற்க ஆர்எஸ்எஸ் மறுத்தே வந்திருக்கிறது. கோல்வால்கர், ‘சிந்தனைத் துளிகள்’ (‘Bunch of Thoughts’) என்னும் தன்னுடைய நூலில் மூவர்ணக் கொடியைத் தேசியக்கொடியாகத் தெரிவுசெய்திருப்பதை, கண்டித்து எழுதியிருப்பதாவது:
“நம்முடைய தலைவர்கள் நம் நாட்டிற்கு ஒரு புதிய கொடியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? இது மிகவும் போலித்தனமான நகர்தல் ஆகும். … நம்முடைய தேசம் மிகவும் பழைமையான மற்றும் புகழ்மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட மாபெரும் தேசமாகும். நமக்கென்று சொந்தக் கொடி இல்லாமலா நாம் இருந்தோம்? இவ்வளவு ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக தேசிய சின்னம் எதுவும் இல்லாமலா நாம் இருந்தோம்? சந்தேகமேயின்றி நாம் பெற்றிருந்தோம். பின் ஏன் நம் மனதில் இந்த வெற்றிடம், முழு வெற்றிடம்?”
(கட்டுரையாளர், தில்லிப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)
தமிழ்நாட்டில் தோல்வி காணும் ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத திட்டங்கள் – சசிகாந்த் செந்தில்
மாவட்ட நீதிபதி என்ற முறையில் முதன்முதலாக மங்களூரு மாவட்டச் சிறைச்சாலையில் நான் மேற்கொண்ட ஆய்வு என்னுடைய கண்களைத் திறந்து விட்டது. அந்தச் சிறையிலிருந்த இரண்டு பகுதிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சிறைக்குள்ளிருந்த அனைத்து வகையான கைதிகளையும் முஸ்லீம்கள், ஹிந்துக்கள் என்று அந்த இரண்டு பகுதிகளும் தங்களுக்குள்ளாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தன. வகுப்புவாத வெறி மட்டுமே அந்த இரண்டு பகுதிகளுக்கிடையில் பொதுவானதாக அந்தச் சிறைக்குள்ளாக நிறைந்திருந்தது. அங்கிருந்த சில பகுதிகள் மிகவும் தீவிரமான களமாக சிறை அதிகாரிகளால்கூட அணுக முடியாதவையாக இருந்ததால் அந்த அதிகாரிகள் என்னை மிகவும் எச்சரித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக அங்கிருந்த மனிதர்களின் கதைகளையும், வகுப்புவாத திட்டங்கள் காஸ்மோபாலிட்டன் பன்மைக் கலாச்சாரத்தை சிதைத்து எவ்வாறு செழித்து வருகின்றன என்பதையும் அறிந்து கொள்வதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாகவே இருந்தேன்.
பல்வேறு நபர்களுடன் தொடர்புகளை உள்ளடக்கி அந்த மாவட்டத்தில் எனக்கு கிடைத்த அந்த இரண்டு ஆண்டு நீண்ட பதவிக்காலம் வகுப்புவாதப் பிரச்சனை குறித்த முறையான புரிதலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வகுப்புவாதத் திட்டங்களின் தோற்றம், தக்க வைத்தல் என்று அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனே இருந்து வருகின்றன. அதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் இன்று தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவையாகவும் இருக்கின்றன.
அதை இங்கே நேரடியாகவே முன்வைக்கிறேன்: குறிப்பிட்ட இடத்தை வகுப்புவாதமயமாக்குகின்ற செயல்பாடுகள் மக்களைத் துருவமயப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகச் செயல்முறை மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று ஒற்றை நோக்கத்துடனே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் செயல்பாடுகள் ஒருபோதும் பெரும்பான்மையினரைப் பாதுகாப்பது அல்லது சிறுபான்மையினரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுவதில்லை. மூடிய அறைகளுக்குள்ளாக வலதுசாரி தீவிரவாதிகளுடன் பலமுறை நடைபெற்ற உரையாடல்கள் ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்திக் காட்டியிருந்தன. ‘தர்மம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்களிடமிருந்த ஆர்வம் உண்மையில் கேலிக்கூத்தாகவே இருந்தது. மக்களை துருவமயப்படுத்துவதை தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான கருவி என்று அவர்கள் நன்கு கண்டறிந்து கொண்டுள்ளனர். அதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஹிந்து வலதுசாரி அமைப்புகள் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளன. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) என்பது அறிவுசார்ந்து இயங்கக் கூடியவர்களை மற்றும் நேரடியாகக் களத்தில் வேலை செய்பவர்களைக் கொண்டது. பாரதிய ஜனதா கட்சி என்பது அதன் அரசியல் பிரிவு. மேலும் அதன் பல துணை அமைப்புகள் முன்னணியில் நின்று செயல்படுகின்ற அமைப்புகளாக இருக்கின்றன.
அவர்களிடம் இருக்கின்ற வகுப்புவாத திட்டம் ஒன்றன் பின் ஒன்று என்று நான்கு தனித்தனி நிலைகளைக் கொண்டதாக இருக்கின்றது.
நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்
இந்த நிலை அனைத்து நிலைகளிலும் முதன்மையானதாக, தனக்கென்று தேவைப்படுகின்ற காலத்தை எடுத்துக் கொண்டு நிகழக்கூடியதாக உள்ளது. இதைத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அடுத்த நூறு ஆண்டுகளில் அமைதியாகச் சாதித்துக் கொள்ள நினைத்தது. இளைஞர்கள் சிலர் உள்ளூர்ப் பள்ளி மைதானங்களில் பானை வயிற்றுடன் இருக்கின்ற சிலரைத் தவறாமல் சந்தித்து வருவதைக் கவனித்திருக்கலாம். இந்த அமைப்புதான் அதுபோன்ற இடங்களில் கட்டப்படுகிறது. சேவை, ஒழுக்கம், தேசியவாதம் என்ற பெயரில் வகுப்புவாத வெறியர்களை உருவாக்குவதற்கான களமாக ‘ஷாகாக்கள்’ (கிளைகள்) என்றழைக்கப்படுகின்ற அமைப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஷாகாவில் கலந்து கொண்ட எவருடனும் பேசிப் பார்த்தால் ‘அது வகுப்புவாத வெறுப்பு கொண்டதாக இருக்கவில்லை. சேவை, தேசபக்தி பற்றி மட்டுமே பேசுவதாக உள்ளது’ என்று உறுதியுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க நேரிடும். இது போன்ற விஷயங்களில் அறிவார்ந்த உரையாடலை உருவாக்குவது, சமூக-பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களை தங்களுடைய வெளிப்படையான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள துணை அமைப்புகளில் நியமித்துக் கொண்டு செயல்படுவது போன்றவையே ஷாகா என்ற அந்த அமைப்பின் செயல்பாடுகளாகும்.
இந்தக் கட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக ‘ஹனுமன் சேனா’, ‘ஹிந்து முன்னணி’, ‘ஹிந்து ஜாக்ரன் வேதிகே’ போன்ற துணை அமைப்புகளின் வளர்ச்சி அமைந்துள்ளது. இதுபோன்ற துணை அமைப்புகள் அனைத்தும் தங்களை நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்ற முன்னணி அமைப்புகளாகும். அவை அரசு நிர்வாகத்தையும், மக்களையும் இலக்காகக் கொண்டு வகுப்புவாதச் சாயல் கொண்ட பிரச்சனைகளை உருவாக்குகின்றன. ‘உயர்தட்டில்’ இருப்பவர்களால் புதிய அடையாளம், ஏற்றுக்கொள்ளல் போன்றவை உறுதியளிக்கப்பட்டுள்ள மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி, வர்க்கத்தைச் சார்ந்தவர்களாலேயே இந்த துணை அமைப்புகள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் பெரும்பகுதி இந்த துணை அமைப்புகளிடமே விடப்பட்டுள்ளதால் ஆர்எஸ்எஸ் எந்தவொரு வன்முறையையும் பரப்புவதில்லை என்ற கருத்து ஓரளவிற்கு உண்மை என்பதாகவே பலருக்கும் தோன்றும். அவர்களால் வழக்கமாக நடத்தப்படுகின்ற கூட்ட அமர்வுகளில் நேரடி நடவடிக்கைக்கான நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. தங்களுக்கான கணிசமான நிதியுதவி, ஆதரவை ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் இருந்தே இந்த துணை அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன.
மக்களிடையே ஆர்எஸ்எஸ்சின் இத்தகைய நிறுவனக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதை தமிழ்நாடு போன்ற மாநிலங்களால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த, பக்தி நிறைந்த ஹிந்துவான ஜெயலலிதா அவர்களுடைய இந்தக் கட்டமைப்பை அனுமதிக்கக் கூடாததன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டவராகவே இருந்தார். தன்னுடைய பதவிக்காலத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கமாக நடத்துகின்ற அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதித்திருந்த அவர் 2014ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் தினத்தைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டை தடுத்தும் நிறுத்தினார். அவரது மறைவிற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் உடனடியாகச் செயல்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தனது ஷாகாக்களின் எண்ணிக்கையை 1,355ல் இருந்து 2,060 என்று அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஷாகாக்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
அவர்களுடைய அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு தமிழ்நாட்டில் உச்சக்கட்டத்தை எட்டாமலிருப்பதே ‘வேல் யாத்திரை’ (ரத யாத்திரை போன்றது) போன்று மாநிலத்தில் துருவமுனைப்பை ஏற்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்நாட்டில் கணிசமான வேலைகளைச் செய்து வருவதோடு தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறது. போதுமான நிறுவன பலத்தை அடைகின்ற போது அவர்களுடைய அமைப்பு ‘துருவமுனைப்பு நிலை’ என்ற இரண்டாவது நிலைக்கு நகர்கிறது.
துருவமுனைப்பை உருவாக்குதல்
தாங்கள் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற பொதுவான உணர்வை பெரும்பான்மை சமூகத்தினரிடையே உருவாக்குவதைச் சுற்றியே இந்த அடுத்த கட்டம் அமைகின்றது. நிர்வாகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் கட்டம் எட்டப்படுகிறது. ஹிந்து மத நூல் குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘கறுப்பர்கூட்டம்’ என்ற யூடியூப் சேனலைச் சுற்றி தமிழ்நாட்டில் பாஜகவால் உருவாக்கப்பட்ட சர்ச்சை; மனுஸ்மிருதி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளைச் சுற்றி உச்சஸ்தாயியில் எழுப்பப்பட்ட குரல்கள் இந்தக் கட்டத்தை எட்டுவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.
கால்நடைகளைக் கொண்டு செல்வதற்குத் தடை, தார்மீகக் கண்காணிப்பு, கட்டாய மதமாற்றம் குறித்த புகார்கள், பொது இடங்களில் காவிக் கொடிக்கம்பங்களை நிறுவுவது என்று நிர்வாகத்தைத் தலையிடத் தூண்டுகின்ற பிரச்சனைகளை எழுப்புவதிலேயே அவர்களுடைய துணை அமைப்புகள் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்கின்றன. அவர்கள் நிர்வாகம் எடுக்கின்ற நடவடிக்கைகளை – பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிராக ஒருசார்புடையதாக நிர்வாகம் இருக்கிறது, அது தங்களுடைய வகுப்புவாத உணர்வுகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று நிர்வாகத்திற்கு எதிரான உணர்வை பொதுமக்களிடையே உருவாக்குகின்ற வகையிலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். நிர்வாகம் ‘சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துகின்ற’ வகையில் தன்னை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்கிறது என்பதைக் காட்டுகின்ற பிரச்சாரமும் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ரேஷ்மாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரணம் கட்டாய மதமாற்றத்தின் காரணமாக நடந்தது என்று குற்றம் சாட்டினார். மக்களைத் துருவமயப்படுத்துவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டாகவே அவரது அந்தச் செயல்பாடு அமைந்திருந்தது. அந்தச் சிறுமியின் வீடியோ மற்றும் பிற விவரங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) மற்றும் சிறார் நீதிச் சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்ற உண்மையை முற்றிலுமாகப் புறக்கணித்தே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை செயல்பட்டிருந்தார்.
‘இந்த வழக்குடன் தொடர்புடைய சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனத்தை மூட வேண்டும், மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்த அவர் முழுக்க முழுக்கப் பொய்களின் அடிப்படையில் அந்த மரணத்தைச் சுற்றி மாபெரும் பிரச்சாரத்தை உருவாக்கினார். அந்தக் கட்சி மதரீதியான சிந்தனைகள் குறித்து சமூகத்திற்குள் இருந்து வருகின்ற ‘அலட்சியத்தை’ சீர்குலைப்பது குறித்து மட்டுமே கவலைப்படுவதை இதுபோன்ற விவகாரங்கள் அவர்களால் பெரும்பாலும் தர்க்கரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதிலிருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். சமூகத்தில் உள்ள அந்த அலட்சியம் நீங்கிய பிறகு அவர்களுடைய கட்சி அடுத்த பிரச்சனைக்குச் சென்று விடும். ஆயினும் அவர்களுடைய பிரச்சாரம் சமூகத்திற்குள் வகுப்புரீதியாக துருவமயப்படுத்தப்பட்ட கிருமிகளைச் செலுத்தி, தொடர்ந்து சமூகத்தில் அதற்கான பலனை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதாகி விடும்.
வெளித்தோற்றத்தில் தங்களை யாருக்கும் தீங்கு விளைவிக்காதவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஷாகா உறுப்பினர்கள் நேரடியாக வீடுகளுக்கே செல்வதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்கின்றனர். தாம்பூலம் (ஹிந்துக்கள் பின்பற்றுகின்ற மங்களகரமான வாழ்த்து) வழங்குவதன் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சேரிகளில் உள்ள பதினெட்டு லட்சம் வீடுகளில் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நன்கு அறிந்த ஒன்றாகவே உள்ளது. பிரச்சாரப் பொருட்களும் அதிக அளவிலே அச்சிடப்பட்டு அவர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் பிரச்சார இதழான ‘ஹிந்து சங்க செய்தி’ நாற்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல், தேவைப்படுகின்ற பொருட்கள், நிதி உதவியை மட்டுமே வழங்கி வருகிறது. துணை அமைப்புகளில் உள்ளவர்கள் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்ற போது அவர்களைப் பாதுகாப்பதில் பாஜகவின் தீவிரமான பங்கு இருப்பதைக் காண முடிகிறது. அனைத்து குற்றச் செயல்களிலிருந்தும் தன்னைத் தனியாக விடுவித்துக் கொள்கின்ற பாஜக இந்த மும்முனை அணுகுமுறையின் மூலமாக நடத்தப்படுகின்ற துருவமுனைப்புத் திட்டத்தின் பலனை அரசியல் ரீதியாக அறுவடை செய்து கொள்கின்ற நிலையில் தன்னை இருத்திக் கொள்கிறது.
துருவமுனைப்பிற்காக மிகச் சாதாரணமாக மேற்கொள்ளப்படுகின்ற எளிமையான முயற்சிகளாக இருக்கின்ற இதுபோன்ற செயல்கள் சிறுபான்மை சமூகத்திடம் பழிவாங்கும் செயல்களைச் தூண்டிவிடுவதன் மூலமாக தங்களை இயல்பானவையாக்கிக் கொள்ளும் வரையிலும் தொடர்கின்றன. சிறுபான்மை சமூகத்திடம் உருவாகின்ற பழிவாங்கும் செயல்கள் மூலமாக துருவமுனைப்பு இயல்பாக்கப்பட்ட பிறகு துருவமுனைப்பு சுழற்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலே கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் அது இரண்டு சமூகங்களுக்கிடையில் நேரடியாகத் தாக்கிக் கொள்வது, கொலைகளைச் செய்வது என்ற கட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. நிகழ்கின்ற ஒவ்வொரு மரணமும் அடுத்த நகர்விற்கான ஆதாரப் புள்ளியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. இறந்த உடல்களைக் கொண்டு நடத்தப்படும் ஊர்வலங்கள் பெரும்பான்மையினரிடம் உள்ள ‘தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற உணர்வை அதிகரிக்கவும், நிர்வாகத்திற்குப் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களே 2002ஆம் ஆண்டு குஜராத்திலும், அதற்குப் பிறகு 2008 ஆகஸ்ட் மாதத்தில் கந்தமாலிலும் அவர்களுடைய கீழ்த்தரமான, கொலைகாரத் திட்டங்களுக்காக வேலை செய்தன. அவர்களுடைய பிரச்சாரத்தைப் பெருக்கிக் காட்டுவதில் ஒற்றைத்தன்மை கொண்ட சமூக ஊடகத்தின் பங்கு நன்கு அறியப்பட்டதாகவே இருக்கிறது. அது குறித்து ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றுதல்
துருவமுனைப்புக் கட்டம் சாதகமான நிலைமையைக் களத்தில் உருவாக்கித் தரும் போது, தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வகுப்புவாதப் பிரச்சனைகளை அவர்கள் முன்னிலைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிறுபான்மை சமூகத்தினருடன் இணைந்து கொள்வது, ஊழல்களில் ஈடுபடுவது, பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க அரசாங்கமும், நிர்வாகமும் தவறியுள்ளது என்பது போன்ற பிரச்சாரங்களே அவர்களால் தேர்தல்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்றதொரு மிகவும் ஆபத்தான கலவையான பிரச்சாரத்திற்கு பெரும்பான்மை சமூகத்தில் உள்ள தாராளவாதிகள்கூட இரையாகி விடும் போது அந்தப் பிரச்சாரம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் சென்று முடிவடைகிறது.
மனிதவளம் சார்ந்த ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்கிட, தேர்தல்கள் குறித்த நுண்ணிய மேலாண்மை, கருத்துகளை உருவாக்கும் கலையை பாஜக மிகவும் கச்சிதமாக உருவாக்கி வைத்திருக்கிறது. சங்பரிவாரத்தைக் கொண்டு வாக்குச்சாவடி நிர்வாகம் மிக விரைவிலேயே தொடங்கி விடுகிறது. ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலை அவர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஏ-பட்டியலில் பொதுவாக வலதுசாரி சக்திகளுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களும், சி-பட்டியலில் எந்தவகையான பிரச்சாரத்தையும் பொருட்படுத்தாது வாக்கே அளிக்காதிருப்பவர்களும் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பெரும்பாலும் பிற சமூகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களே இருப்பார்கள். பி-பட்டியலானது எந்த முடிவும் எடுக்காது இருப்பவர்களைக் கொண்ட பட்டியலாக இருக்கும். இந்த பி-பட்டியலில் இருக்கின்ற பலரையும் ஏ-பட்டியலில் இருப்பவர்களாக மாற்றும் பொறுப்பு ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அளிக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி நிர்வாகத்தை தேர்தல்களின் போது நடைபெறுகின்ற வாக்குப்பதிவு கண்ணோட்டத்தில் மட்டுமே பயன்படுத்துபவையாக மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. ஆனால் அதேவேளையில் வலதுசாரிகள் வாக்குச்சாவடி நிர்வாகத்தை கருத்து திணிப்பு மற்றும் உருவாக்கத்திலிருந்து தொடங்கி பின்னர் வெளிப்படையான துருவமுனைப்பு என்பதாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதுவே இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாக உள்ளது. வாக்குச் சாவடிகளில் எத்தனை பேர் ஏ-பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற கணிப்புகளைக் கணக்கிடுவதற்காக பாஜகவின் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி வாக்கு எண்ணப்படும் வரை அங்கேயே தங்கியிருப்பதைக் காண முடியும்.
நிறுவனங்களின் மீதான தாக்குதல்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும், பெரும்பான்மை சமூகத்தின் மீதான தங்களுடைய வெளிப்படையான சார்புநிலையை வெளிப்படுத்துவதற்காக ஜனநாயக நிறுவனங்களை முற்றிலுமாகக் கைப்பற்றிக் கொள்ளும் வகையில் அவர்களால் அரசு இயந்திரம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கும், சிறுபான்மை மதத்தவரில் தீவிரமாக இயங்குபவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் வகையிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில்தான் அதிகாரத்துவ அமைப்பு ஒருபக்கச்சார்பற்ற நிர்வாகத்தை வழங்குவது, அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பது போன்ற செயல்களைச் செய்யத் தவறுகின்ற அமைப்பாக மாறுகின்றது.
வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்காக எதிர்மறையான, நேர்மறையான ஊக்கங்களை அளிப்பதன் மூலம் ஊடகங்கள் போன்ற பிற நிறுவனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ‘சிறுபான்மையினர் குற்றவாளிகள்’ என்ற கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்ய கூடுதல் முயற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆளும் கட்சியிடம் தனக்குள்ள விசுவாசத்தை நிரூபித்துக் கொள்ள அதிகாரத்துவ அமைப்பு முயல்கிறது. இவ்வாறு நிறுவனங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு அமைப்பின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை இழந்து போகின்ற சிறுபான்மைச் சமூகம் சுயமாகச் செயல்பட முயல்கின்றது. அதன் விளைவாக அதுபோன்ற நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகி விடுகின்றன.
இந்த நான்கு நிலைகளையும் கடந்த பிறகு, சிறுபான்மையினரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலே பல்வேறு சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அந்தச் சுழற்சி நீட்டித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. இரு குழுக்களிடமும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டு அதிகாரத்துவ அமைப்பு நிலைமையை மீட்டெடுக்கும் வரை இந்த சுழற்சி ஒரு வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஆயினும் அது சமூக கட்டமைப்பிற்கு, குறிப்பாக இளைஞர்களிடம் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. வகுப்புவாதமானது தனிப்பட்ட குடும்பங்களை, மாவட்டம் அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். தார்மீக எதேச்சாதிகாரத்தை நோக்கிய ஆபத்தான இந்தச் சுழல் மிக விரைவில் பரவி பெரும்பான்மை சமூகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதன் விளைவாக எந்தவிதமான மனச்சஞ்சலமும் இல்லாமல் அப்பட்டமான ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்துகின்ற புதிய தார்மீகக் காவலர்கள் உருவாக்கப்படுவார்கள். சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த சூழ்நிலையால் ஏற்படுத்தப்படும் அதிகபட்ச சுமையை பெண்களும், பொருளாதாரமுமே தாங்கும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது சமூக-பொருளாதார அடிப்படையில் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. வகுப்புவாதத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிற இடங்களிலிருந்து இந்த மாநிலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. தங்களுடைய துருவமுனைப்பு முயற்சிகளுக்கு அதிக ஆதரவை தமிழ்நாட்டில் இதுவரையிலும் பெற முடியாத வலதுசாரிகள் தமிழ் மொழி, தமிழ்க் கடவுளர்கள் தொடர்பாக புதிய கதைகளுடன் தங்களுடைய முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அவை அம்பேத்கரிய-பெரியாரிய திராவிட சிந்தனை கொண்ட தலைவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தனமற்ற தோரணைக்கான எடுத்துக்காட்டாகவே இருக்கின்றன.
முடிவெடுக்காது இருப்பவர்களை ஹிந்துத்துவா எல்லைக்குள் கொண்டு வருவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாடு இதுபோன்ற சமிக்ஞைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து இந்த பிற்போக்குச் சக்திகளை அண்ட விடாமல் தொலைவிலேயே வைத்திருக்க வேண்டும். தேர்தல்களில் வலதுசாரி சக்திகளுக்கு ஏற்படுகின்ற அரசியல் தோல்வியைக் கொண்டு தமிழ்நாடு தன்னுடைய விழிப்புணர்வை முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது. மாநிலத்திற்குள் ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணித்து வரப்பட வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் ஆர்எஸ்எஸ்சின் துருவமுனைப்படுத்தும் திட்டம் தங்கள் குழந்தைகள், குடும்பங்கள் மீது ஏற்படுத்தப் போகின்ற நீண்டகால விளைவுகளைப் பற்றி அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதன்முதலாக மங்களூர் சிறையில் நான் பார்த்த அங்கே அடைக்கப்பட்டிருந்த இரு சமூகத்தினர்களில் எழுபது சதவிகிதம் பேர் நமது குடும்பங்களில் உள்ள வாலிபர்களைப் போல வயதில் மிகவும் சிறியவர்களகவே இருந்தனர். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டுமே துருவமுனைப்பை ஏற்படுத்துவது அந்தக் கட்சிக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
எனவே அந்தக் கட்சி தன்னுடைய வியூகத்தை மறுசீரமைத்துக் கொண்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் இந்த அரசியலைப் பார்த்திருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை (உடுப்பியில் ஒரு முறை காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர்) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து அவர்களுடைய பாணி, முறையை இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்பை இழந்து விடாமல் மாநிலத்தை வகுப்புவாதமயமாக்குவதில் இரவு பகலாக அவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரையிலும் சங்பரிவாரம் மேற்கொண்டிருக்கும் வகுப்புவாத முயற்சிகள் அனைத்தையும் தமிழ்நாடு முறியடித்துக் காட்டியுள்ளது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக இயக்கத்தால் சித்தாந்த ரீதியாக உந்தப்பட்டு இயங்கி வருகின்ற இந்த மாநில அரசு பாஜகவை கட்டுப்படுத்துகின்ற வீரனாக இருக்கும் என்றே நம்புகிறோம்.
நன்றி: நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு
தமிழில்: தா.சந்திரகுரு








