‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five) - போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்ன Kurt Vonnegut's Novels - https://bookday.in/

கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five) – போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11

போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல்

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five) என்று பெயர். போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட நேசப்படையைச் சேர்ந்த பல நாடுகளின் வீரர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாஜிகளின் தோல்வியை உறுதிப்படுத்துவதாக, அந்த நகரத்தின் மீது நேசப்படை விமானங்கள் குண்டுகளைப் போடுகின்றன. கட்டுமானங்கள் அனைத்தும் நொறுங்கிப் போன நிலையில், கசாப்புக் கூடத்தில் உயிரோடு மிஞ்சியவர்கள் வெளியே வருகிறார்கள். சாலையோரத்தில் ஒரு கழிப்பறை மட்டும் இடிந்து போகாமல் அப்படியே இருக்கிறது. ஒருவன், ஊரே அழிந்தபின் கழிப்பறை மட்டும் எஞ்சியிருப்பதில் உள்ள அபத்தத்தை எண்ணிச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்து ஒன்றுக்கடித்துவிட்டுத் திரும்புகிறான்.

Slaughterhouse-Five

அன்றைய ஜெர்மனியின் இனவெறிச் சர்வாதிகார ஆட்சியைச் சிறிதும் நியாயப்படுத்தாமல், ஆனால் பொதுவாகப் போர் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு முட்டாள்தனமானது என்று முரண் நகை வடிவில் வேதனைச் சிரிப்பைப் பகிர்ந்துகொள்கிறது ‘ஸ்லாட்டர்ஹவுஸ் – ஃபைவ்’ நாவல் (1969). அவ்வாறு மனிதநேய வேதனையைப் பகிர்ந்துகொண்டது, அரசின் போர்க் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தாக்குவதாக இருக்கிறது என்று கூறி அமெரிக்காவின் பல மாநில அரசுகள் நாவலுக்குத் தடைவிதித்தன. பாலியல் உறவு பற்றிப் பேசுகிறது, ஆபாசமான சித்தரிப்புகள் இருக்கின்றன, மதத்தை விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி தடை நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது.

பள்ளி, கல்லூரி நூலகங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட புத்தகப் படிகள் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன. குப்பையில் கிடக்கிற புத்தகத்தை யாராவது எடுத்துப் படித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துப் பல இடங்களில் புத்தகப் படிகளுக்குப் பள்ளிகள், கல்லூரிகளின் முதல்வர்களே தீ வைத்தார்கள். அரசியல்வாதிகள் நாவலைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். வேறு பல நாடுகளிலும் நாவல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதிலேயே ஒரு முரண் நகை என்னவென்றால், நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே தேசிய சிறந்த நூல் விருது வழங்கப்பட்டது, 1972ஆம் ஆண்டிலிருந்து தடை நடவடிக்கைகள் பாய்ந்தன.

நாவலாசிரியர்

The First Reviews of Slaughterhouse-Five Book Marks

இந்த நாவலை எழுதிய குர்ட் வோன்னேகட் (1922–2007) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.. முரண் நகை எள்ளல் நடையோடு கூடிய அறிவியல், அரசியல் புனைவுகளுக்காகவும், மனிதம் குறித்த ஆழ்ந்த பார்வைகளுக்காகவும் இலக்கிய உலகில் கொண்டாடப்படுபவர். கருப்பொருள்களாகப் போர்களின் விளைவு, தொழில்நுட்பத்தின் தாக்கம், தனிமை, மரணம், மனித நேயம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டார்.. அதிகாரத்தையும், தலைவிதி நம்பிக்கை உள்ளிட்ட சமூகத்தின் போலித் தனங்களையும் கேள்விக்கு உட்படுத்தினார்.

தலைமுறைகள் கடந்தும் நேசிக்கப்படும் வோன்னேகட் எழுதத் தொடங்குவதற்கு முன், அமெரிக்கச் சட்டப்படி ராணுவத்தில் பணி செய்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். அப்போது உண்மையாகவே ஜெர்மன் படையிடம் சிக்கிக்கொண்டார், டிரெஸ்டன் நகரத்தில் குண்டு போடப்பட்டபோது நல்வாய்ப்பாகத் தப்பித்தார். அந்த அனுபவங்களின் தாக்கத்திலும், மனிதநேயச் சிந்தனையிலிருந்தும், ராணுவப் பணி ஓய்வுக்குப் பிறகு எழுத்துத்துறையில் ஈடுபட்டார். ‘பிளேயர் பியானோ’ என்ற நாவல் அவரிடமிருந்து 1953இல் வந்தது. ‘பூனையின் தொட்டில்’ (கேட்ஸ் கிரேடில் –1963), ‘கடவுள் உம்மை ஆசிர்வதிப்பாராக திருவாளர் ரோஸ்வாட்டர்’ (காட் பிளெஸ் யூ, மிஸ்டர் ரோஸ்வாட்டடர்– 1965), ‘காலை உணவு சாம்பியன்கள் (பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் –1973), கலபாகோஸ் (1985) உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களையும் வழங்கியிருக்கிறார்.

‘ஸ்லாட்டர்ஹவுஸ்–ஃபைவ்’ ஒரு தனித்துவமான படைப்பு. இந்த நாவல் போர், மரணம், காலம், விதி நம்பிக்கை, மனித இருப்பு பற்றிய ஆழமான கேள்விகளை நகைச்சுவை கலந்து அறிவியல் புனைகதையாக ஆராய்கிறது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மையக் கதாபாத்திரம் காலவெளியில் சிக்கிக்கொள்ள, கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக மாறி மாறிக் கால ஒழுங்கற்ற முறையில் பயணிக்கிறான். அந்தப் பயணத்தில் வேற்றுக் கோளில் வாழ்கிறவர்களையும் சந்திக்கிறான். முக்காலத்தையும் ஒரே நேரத்தில் காணக்கூடியவர்களாக இருக்கிற அவர்களோடு உரையாடுவதில், மரணம் இயல்பானது, தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொள்கிறான். அந்தப் புரிதல், வாழ்கிற வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வழிசெய்கிறது. போர் எதிர்ப்புச் சிந்தனையும் அதிலிருந்து வலுப்பெறுகிறது. போர்களிலிருந்து உலகத்தைக் காப்பதோடு, அதிகாரக் கரங்களிலிருந்து புத்தகங்களைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணரலாம் என்று நாவல் அறிமுகக் கட்டுரைகள் கூறுகின்றன.

Slaughterhouse Five: Author's Intentions vs. Audience Insights – My Book  Rants

கதைத்துளி

இணையத்தில் ஏஐ வழியாகத் தேடியதில் கிடைக்கும் கதைச் சுருக்கத்தையும் கருத்தாக்கத்தையும் பார்ப்போம்:

கண் பரிசோதனைத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவனான பில்லி பில்கிரீம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு சாதாரண சிப்பாயாக இருக்கிறான்.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறான். 1944இல் பதுங்கு குழியில் இருந்த நேரத்தில் ஜெர்மன் சிப்பாய்களால் பிடிக்கப்படுகிறான். மற்ற போர்க் கைதிகளுடன் அவன் டிரெஸ்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவர்கள் ‘ஸ்லாட்டர்ஹவுஸ்-ஃபைவ்’ என்ற ஒரு கைவிடப்பட்ட கசாப்புக் கூடத்தில் அடைக்கப்படுகிறார்கள்.

Slaughterhouse-Five - film-authority.com

1945 பிப்ரவரி மாதம் டிரெஸ்டன் நகரம் நேசப்படை குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிறது. பில்லியும் வேறு சில கைதிகளும் கசாப்புக்க கூடத்தின் சுரங்க அறையில் இருந்ததால் உயிர் பிழைக்கிறார்கள். அப்போதுதான் முதலில் குறிப்பிட்ட அந்தக் கழிப்பறையைப் பார்க்கிறார்கள். அந்த நிகழ்வுகளின் பயங்கரமும் இடிபடாத கழிப்பறைக் காட்சியும் அவன் மனதில் ஆழமான காயத்தையும் குழப்பமான எண்ணங்களையும் ஏற்படுத்துகின்றன.

கதை பின்னர் அறிவியல் கற்பனைக்குள் நுழைகிறது. பில்லி பில்கிரிம் காலவெளியில் “சிக்கிக் கொள்கிறான்”. அவனால் தனது வாழ்க்கையின் எந்த நேரத்திற்கும் – பிறப்பு, போர் அனுபவங்கள், திருமண வாழ்க்கை, குழந்தைகள், எதிர்காலத்தில் அவனைக் கடத்திச் செல்லும் டிரால்ஃபாமடோர் என்ற வேற்றுக் கோள்வாசிகள் என்று கட்டுப்பாடின்றி பயணிக்க முடிகிறது. கதையின் இந்த கால ஒழுங்கற்ற தன்மை போரின் அதிர்ச்சியையும், நினைவுகளின் பன்முகக் கூறுகளையும் பிரதிபலிக்கிறது.

SLAUGHTERHOUSE-FIVE Graphic Novel to Be Released This Year! - Nerdist

மனித இனமல்லாத, அறிவுக் கூர்மையுடன் உள்ள டிரால்ஃபாமடோர் கோள்வாசிகள் காலத்தை ஒரு நேர்கோடாகப் பார்க்காமல், ஒரே நேரத்தில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கக் கூடியவர்களாக இருப்பதை அறிகிறான். அவர்கள் மரணத்தை ஒரு முடிவாகக் கருதுவதில்லை, மாறாக ஒரு மோசமான பொழுது, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள். “இது இப்படித்தான் நடக்கும்” என்று அவர்கள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். இந்தச் சொற்றொடர் மரணத்தையும், தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் காட்டுகிறது. அந்த மனநிலை பில்லிக்கும் ஏற்பட்டு, வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறான். இயல்பான வாழ்க்கைக்கு எதிரியாகப் போர்களைப் பார்க்கிறான்.

நாவல் பில்லியின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் முன்னும் பின்னும் நகர்கிறது. நாம் அவனுடைய குழந்தைப் பருவம், விரும்பித் தேர்ந்தேடுக்காமல் வாழ்க்கை வசதிகளுக்காகச் செய்துகொள்ளும் திருமணம், அதன் மூலம் கிடைக்கிற கண் பரிசோதகர் வேலை ஆகியவற்றைப் பார்க்கிறோம். போருக்குப் பிறகு அவனுடன் நாமும் காலச்சுழலில் சிக்கி எதிர்காலத்திற்குச் சென்று மாறுபட்ட வேற்றுக்கோள்வாசிகளுடனான அனுபவங்களைப் பெறுகிறோம். ஒரே நீரோட்டமாக அமையாத கதை உத்தி போரின் அபத்தத்தையும், மனித எண்ணங்களின் குழப்பத்தையும் வாசகர்களுக்கு எடுத்துக்கூறுகிறது.

போர் எதிர்ப்பு நாவலாக மட்டுமல்லாமல், நினைவுகள், அதிர்ச்சி, எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடிதான் நிகழ்கின்றன என்று கருதும் வேற்றுக்கோள்வாசிகளை அறிமுகப்படுத்தி, விதித் தத்துவம் பற்றிப் பேச விட்டு, பின்னர் அதை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இறுதியில் புதிய மாற்றங்களை நிகழ்த்தும் மனித முயற்சிகளை உயர்த்திப் பிடிக்கிறது. சுதந்திர வேட்கை போன்ற பெரிய கேள்விகளையும் ஆராய்கிறது.

நாவலுக்குப் பாராட்டு, படத்திற்கு விருது

Exploring Vonnegut and “Slaughterhouse-Five” | Roger Williams University

இத்தனை சிறப்புகள் இருப்பினும் இந்த நாவல் குறிப்பிடத்தக்க பெரிய விருதுகள் எதையும் பெறவில்லை. ஆனால் திரைப்படமாக வந்து கேன்ஸ் திரைப்பட விழா, ஹ்யூகோ, சாட்டர்ன் ஆகிய குறிப்பான விருதுகளைக் கைப்பற்ற்றியது. படக்கதைப் புத்தகமாகவும் வந்து சிறார்களிடமும் இளையோர்களிடமும் சென்றது.

குர்ட் வோன்னேகாட் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இணைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க கலை மற்றும் இலக்கிய அகாடமி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போர் சூழ் உலகாக இருக்கிற, போர் மோகப் பேச்சுகள் ஒலிக்கிற நிலையில் இந்த நாவல் பற்றிய தகவல் தற்செயலாகக் கண்ணில் பட்டது.உடனே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. தெரிந்துகொள்ளவும், தெரிந்துகொண்டதை சக மனிதர்களுக்குக் கதையாகச் சொல்லவும் வாழ்க்கை எத்தனை அனுபவங்களைக் குவித்து வைத்திருக்கிறது!

எழுதியவர் : 
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/
அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *