அறிவியல் பேசுவோம்!
இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
1. பூமிக்கும் ஒரு வளையம் இருந்தது – ஆச்சரிய கண்டுபிடிப்பு.

மொனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமிக்கு 46.6 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகோள் மோதலால் ஏற்பட்ட வளையம் இருந்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இந்த வளையம் பூமியைச் சுற்றி நிழலை ஏற்படுத்தி, பூமியின் காலநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆர்டோவிசியன் காலத்தில் பூமத்திய ரேகைக்கு அருகில் ஏற்பட்ட குழிப்பள்ளங்கள் இதன் ஆதாரங்களாக இருக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
https://www.sciencedirect.com/
2. ஹைபர்ஃபைன் தொடர்பின் மூலம் அணுக்கருவைக் கட்டுப்படுத்தி புதிய சாதனை

டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அணுவின் மையப்பகுதியில் உள்ள நியூட்ரானின் சுழற்சியை ஹைபர்ஃபைன் தொடர்பின் மூலம் கட்டுப்படுத்தி, குவாண்டம் உலகில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை, அணுக்கருவை ஒரு குவாண்டம் பிட்டாகப் பயன்படுத்திட வழிவகுக்கும்.இது குவாண்டம் தகவல்களை பாதுகாப்பாக சேமிப்பதற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது.
https://dx.doi.org/10.1038/ s41467-024-52270-0
3. பாக்டீரியாக்களைப் போல இயங்கும் நுண்ணிய செயற்கைமோட்டார்கள் உருவாக்கம்

முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வேதி எரிபொருளைப் பயன்படுத்தி சுழலும் மிகச்சிறிய பெப்டைடு ரிப்பன்களை உருவாக்கியுள்ளனர். இந்த நுண்ணிய செயற்கை மோட்டார்களை, பாக்டீரியாவின் இயக்கத்தைப் போல, திரவங்களில் நகர்வதற்கும், மேற்பரப்பில் ஊர்ந்து செல்வதற்கும் பயன்படுத்தலாம். இவை, மருத்துவத் துறையில் நானோ மருந்துகளை கொண்டு செல்ல உதவலாம்.
https://dx.doi.org/10.1016/j.
4. தாவரங்களின் வலிமையை அதிகரிக்கும் ஸ்டெம் செல்கள்
.jpg?1678966269)
சிலவகை ஸ்டெம் செல்கள், தாவரங்களின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு முக்கியமானவை. விஞ்ஞானிகள், HVA என்ற ஒரு குறிப்பிட்ட ஜீன், தாவரங்களின் தண்டுகளில் உள்ள நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கடத்தும் வாஸ்குலார் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதனால், தாவரங்கள் வலுவாகி, காற்று மற்றும் இயற்கை இடர்பாடுகளை எதிர்க்கும் திறன் பெறுகின்றன. இந்த ஆய்வின் விவசாயப் பயன்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
https://dx.doi.org/10.1111/
5. அண்டார்டிக் கிரில்: கடலின் கார்பன் உறிஞ்சி
![]()
அண்டார்டிக் கிரில் (கூனிப்பொடிகள்) என்பவை இறால் போன்ற மிகச்சிறிய கடல் விலங்குகளாகும். இவை கார்பனைத் தக்கவைக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. கிரில் மலம் கழிக்கும் போது அல்லது அவற்றின் வெளிப்புற எலும்புகளை உரிக்கும் போது, அவை உறிஞ்சிய கார்பன் ஆழ்கடலில் மூழ்கடித்து, ஆண்டுதோறும் குறைந்தது 20 மில்லியன் டன் கார்பனை ஆழ்கடலில் தனிமைப்படுத்துகின்றன.
https://dx.doi.org/10.1038/
6. காற்றிலுள்ள மகரந்த துகள்கள் மழையை ஊக்குவிக்கின்றன.

காற்றிலுள்ள மகரந்தத் துகள்கள், உள்ளூர் வானிலையில் தாக்கம் செலுத்துவதாக புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. மகரந்தங்கள் பனி உருவாக்கும் கருவாக செயல்பட்டு, மேகங்களில் உள்ள நீரின் உறைதல் வெப்பநிலையைப் பாதித்து மழைப்பொழிவை ஊக்குவிக்கின்றன என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மகரந்தத்தின் இந்த பங்கு காலநிலை மாதிரிகளில் சேர்க்கப்பட வேண்டுமென்கிறது ஆய்வு.
http://dx.doi.org/10.1088/
7. Ultra Processed Foods சர்க்கரை நோய் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு புதிய ஆய்வு, அதிகமாக செயல்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra Processed Foods-UPF) உட்கொள்வது இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ஸ்நாக்ஸ்கள், ரெடி-டு-ஈட் இறைச்சி மற்றும் இனிப்பு பானங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. உணவில் UPF உணவுகளின் அளவு 10% அதிகரிக்கும் போது, இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆபத்து 17% அதிகரிக்கிறது.
http://dx.doi.org/10.1016/j.
8. செவ்வாயின் குலுங்கல்களும், கருந்துளைகளும் ஓர் புதிய புரிதல்.

பிரபஞ்சத்தில் பெரும்பாலான இருண்ட பொருள்கள் நுண்ணிய மூல கருந்துளைகளால் ஆனவை. இந்த ஈர்ப்பு குள்ளர்கள் தசாப்தத்திற்கு ஒரு முறையாவது நமது சூரிய மண்டலத்தின் வழியாக பறந்து செல்ல வேண்டும் என்று முன்மொழியப்படுகிறது. இதுபோன்ற ஒரு பறத்தல், செவ்வாயின் சுற்றுப்பாதையில் ஒரு குலுங்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் MIT இயற்பியலாளர்கள். இன்றைய தொழில்நுட்பம் இதனைக் கண்டறியக்கூடும்.
http://dx.doi.org/10.1103/
9. தேனீக்களைக் கவரும் மலர்களின் வண்ண வட்டங்கள் உருவாவது எவ்வாறு?
கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி குழு, செம்பருத்தி இதழ்களில் காணப்படும் வண்ண வட்டங்கள் உருவாகும் விதத்தை ஆராய்ந்துள்ளது. மலர்கள் மிகச் சிறியதாக இருக்கும் போதே இந்த வண்ண வட்டங்களுக்கான அடிப்படை உருவாகிறது என்கிறது இந்த ஆய்வு. வண்ணவட்டங்கள் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து, இனப்பெருக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன. மலர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலை இந்த ஆய்வு மேம்படுத்துகிறது.
http://dx.doi.org/10.1126/
10. மிகப்பெரிய கருந்துளை ஜெட் கண்டுபிடிப்பு

வானியலாளர்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகப்பெரிய ஜோடி கருந்துளை ஜெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். இது 23 மில்லியன் ஒளி ஆண்டுகள் நீளமாக உள்ளது. இது 140 பால்வெளித் திரள்களை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்துவதற்கு சமம். கிரேக்க புராணங்களில் ஒரு ராட்சதனின் பெயரான போர்ஃபிரியன் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பில்லியன் கணக்கான சூரியன்களுக்கு சமமான ஆற்றல் இதில் வெளியிடப்பட்டது.
https://www.nature.com/
இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் எழுதியவர் :
பெருமாள் ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

