மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் ஆர்.பி.மோரே (RB More) – மயிலை பாலு

மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் ஆர்.பி.மோரே (RB More) – மயிலை பாலு

மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் – மயிலை பாலு

1914……. அந்த சிறுவனுக்கு வயது 11. ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டான். அதற்கான தேர்வு அன்றைய பம்பாயில் நடைபெற்றது. 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல்நிலை மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். அத்துடன் அவன் படிப்பதற்கு உதவியாக மாதம்தோறும் ஐந்து ரூபாய் கல்வி உதவித்தொகை பெறவும் அனுமதிக்கப்பட்டான். தனது கனவு நனவாகப் போகிறது என்ற உற்சாகம் கரைபுரள சொந்த ஊரான தாசகான் (மகாராஷ்டிராவில் மஹத் அருகே இருந்த ஒரு கிராமம்) திரும்பினான். தகுதி சான்றிதழையும் கல்வி உதவித் தொகை அனுமதிச் சீட்டையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றான்.

வரவேற்பு கிடைக்கும் என்று நம்பியவனுக்கு அதிர்ச்சி தான் பரிசானது. அவன் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஏன்? அந்தப் பிஞ்சு மனம் பேதலித்தது. ஏன் என்ற கேள்வி மனதைத் துளைத்தது. காரணம் தேடினான். அவன் மஹர் (தலித்) வகுப்பைச் சேர்ந்தவன் என்பது ஒன்றே வகுப்பறைக்குள் நுழைய தடையாக இருந்தது. தகுதி…… தகுதி……. என்று கதைப்பவர்கள் அதற்கும் மதிப்பளிக்க மறுப்பதற்கு காரணம் சாதி…… ஒடுக்கப்பட்ட சாதி……… தீண்டத்தகாத சாதி…….

சிறுவன் தனது மனச்சீற்றத்தை தானறிந்த ஆங்கிலத்தில் எழுதினான். நல்லிதயமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட சிலரின் உதவியை நாடினான். பிரிட்டிஷ் அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பினான். அத்துடன் நிற்காமல் அதனை சத்ய பிரகாஷ் (உண்மையின் ஒளி) என்ற பத்திரிகைக்கும் அனுப்பினான். கடிதம் அப்படியே அதில் வெளியாகிவிட்டது. இது மக்களிடம் பேசு பொருளானது. நிர்வாகம் கீழிறங்கி வந்து அந்தச் சிறுவனை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தது.
11 வயதிலேயே பம்பாய் மாகாணத்தில் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்திய அந்தச் சிறுவன் யார்?

23 வயது இளைஞனாய் அவன் வளர்ந்து நின்றபோது பம்பாய் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானச் செய்தியைப் படித்தான். சமூக சீர்திருத்தவாதி சி கே போலே முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அது. பொது ஏரிகளில், கிணறுகளில் மஹர் மக்கள் தண்ணீர் எடுக்கவும், தர்மசாலைகளில் அவர்கள் தங்கவும் தடை இல்லை என்றது அந்தத் தீர்மானம். இதனால் ஊக்கம் பெற்ற அந்த இளைஞன் அக்கம் பக்கத்து ஊர்களின் மஹர்களையும் திரட்டினான். தான் வசித்த கிராமத்திலிருந்த கிராஃபோர்ட் ஏரியில் அவர்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைப் போராட்டத்தை நடத்தினான்; வெற்றி பெற்றான். மாவட்டமே அந்த இளைஞனைக் கொண்டாடியது.

ஆதிக்கச் சாதிகளின் அடிவயிறு கலங்கியது. அப்படி ஒரு கலக்கத்தை ஏற்படுத்திய அந்த இளைஞன் யார்? உரிமைக்கான போரில் அடுத்தடுத்து வெற்றியின் வித்துக்கள் விழுந்து முளைத்தன. அதனை மாபெரும் விருட்சமாக்க அந்த இளைஞன் விரும்பினான். குலாபா, ரத்தினகிரி, தானே, பம்பாய் மாவட்டங்களுக்கும் இயக்கத்தை விரிவுபடுத்தினான். ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்த வேண்டும். அதற்கு பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரை அழைக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். தன் வயதுடைய மற்ற சில இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு களமிறங்கினான். 1927 மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஐந்தாயிரம் மஹர்கள் அணி திரண்டனர். முதல் நாள் மாநாடு முடிந்தது. இதில் எழுச்சி பெற்றவர்கள் இரண்டாவது நாள் காலையில் சவுதார் பொதுக்குளத்தில் அம்பேத்கருடன் சேர்ந்து தண்ணீர் எடுக்க ஊர்வலமாக சென்றனர். தண்ணீரும் எடுத்தனர்.

ஆதிக்கச் சாதியினர் மீண்டும் அரண்டு போயினர். சவுதார்குளம் தீட்டுப்பட்டுவிட்டதாக பொங்கி எழுந்தனர். மஹர்கள் விட்டல் கோவிலுக்குள் நுழையப்போகிறார்கள் என்று வதந்தி பரப்பினர். (வதந்தி பரப்பி காரியம் சாதிப்பது உயர் சாதியினருக்கு கைவந்த கலையாயிற்றே!) மஹர்களில் சிலரை அடித்து காயப்படுத்தினர். சில வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வீடுகள் எரிக்கப்பட்டன. மஹத் பகுதி ரணகளமானது. ஆனால் அதுவே அம்பேத்கரை தலித் சமூக விடுதலைப் போராளியாக உலகுக்கு அடையாளப்படுத்தியது.

தலித் மக்கள் உரிமைக்கான எழுச்சிப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்த மஹத் மாநாடு திட்டமிடலில் முன்னணியில் நின்ற அந்த இளைஞன் யார்?
அதே ஆண்டு டிசம்பர் 25, 26 தேதிகளில் இரண்டாவது மஹத் மாநாட்டிற்கு திட்டமிடப்பட்டது. இந்த முறை சவுதார் குளத்தில் தண்ணீர் எடுக்க முடியாமல் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர் சாதி ஆதிக்கவாதிகள். அதனால் என்ன? கிளையை தொடக்கூடாது என்றால் வேரையே வெட்டுவோம் என்று எழுச்சி கொண்டனர் மஹர் இளைஞர்களும் மக்களும். அம்பேத்கர் தலைமை தாங்கினார். டிசம்பர் 25 அன்று சனாதனத்தின் ஆணிவேரான மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது.
நால்வர்ணத்தைப் பாதுகாத்து, ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனு(அ)நீதிக்கு தீயிட்ட அந்த போர்ப்படையை வழிநடத்திய இளம் வீரன் யார்?

இத்தனை யார்களுக்கும் ஒரே பதில்தான். அந்தச் சிறுவன், இளைஞன், வீரன் ஆர் பி மோரே என்ற ராமச்சந்திர பாபாஜி மோரே. 1914 முதல் 1927 வரை முன்னின்று நடத்திய போராட்டங்கள், கிடைத்த வெற்றிகள், பெற்ற அனுபவங்கள் அந்த இளைஞரை மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டின. 1928-ல் பம்பாயில் நடந்த வீரஞ்செறிந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம் அவருக்கு வேறொரு பரிமாணத்தைத் தந்தது. சமூக ஒடுக்குமுறையைப் போலவே பொருளாதார சுரண்டலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை அந்தப் போராட்டக் களம் அவருக்கு வழங்கியது. தொழிற்சங்கத் தலைவர்களோடு பி. டி. ரணதிவே, எஸ்.வி. தேஷ் பாண்டே போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் அறிமுகமும் கிடைத்தது. சாதி, வர்க்கம் பற்றி புதிய புரிதல் ஏற்பட்டது.
1929-ல் மீரட் சதி வழக்கு, கேளாக்காதினர் கேட்க நாடாளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, 1930-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு என்பதெல்லாம் மோரேயின் சிந்தனையில் அளவு மாற்றத்தோடு குணமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

ஆலை முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக அனைத்து சாதி தொழிலாளர்களும், நிலப்பிரபுத்துவத்திற்கும், ஜமீன்தாரி முறைக்கும் எதிராக அனைத்து சாதி விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் போராடுகின்றனர். இந்தப் போராட்டங்கள் சமூக மாற்றத்திற்கானவை; புரட்சிக்கானவை என்ற வலுவான எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டது. இதனால் தலித் விடுதலையையும் உள்ளடக்கிய சமூக மாற்றத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார். 1930 பிற்பகுதியில் மோரே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அம்பேத்கருடனான நட்பைப் பராமரித்துக் கொண்டே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீண்டாமை ஒழிப்பு, வர்க்கப் போராட்டம் எனும் இரண்டுக்கும் வலுவாகக் குரல் எழுப்பினார்.

தான் மட்டுமின்றி தனது மனைவி சீதாபாய், மகன் சத்யேந்திரமோரே, மகள் கமல் ஆகியோரையும் கட்சி செயல்பாட்டில் ஈடுபடுத்தினார். இதனால் 1943-ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது மாநாட்டிலேயே அவரது குடும்பம் “சிவப்புக் குடும்பம்” என்ற பாராட்டைப் பெற்றது.

1945 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு தோழர் மோரேக்கு கிடைத்தது. ஏஐடியுசி மூலம் தோழர் என். எம். ஜோஷி பங்கேற்றார். அதேசமயம் அப்போது பிரிட்டிஷ் மேற்பார்வையில் இருந்த மத்திய அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர், அரசின் ஆலோசகராக மோரேயை மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும், விடுதலைக்காகவும் பயன்படுத்துவது கம்யூனிஸ்ட்களின் குணாம்சம். அந்த வகையில் மோரேயும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்தியாவில் தொழிற்சாலைகள் நவீனமாக இருந்தாலும் தலித் மக்கள் எப்படி பழைய அடிமை நிலையிலேயே நடத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். அடுக்கிய மூட்டைகளிலும் அடி மூட்டைகளாக கிடக்கும் தலித் மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு என்ற கோட்பாடு ஏற்கப்படுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே, அதற்கு வித்துன்றியவராக மோரே திகழ்ந்துள்ளார். அவரது பேச்சும் கோரிக்கையும் சர்வதேசப் பத்திரிகைகளில் வெளியாகி, விவாதப் பொருளாக மாறிவிட்டது. தனது சகாவின் சிந்தனை அம்பேத்கருக்குள்ளும் இட ஒதுக்கீடு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

விவசாயி தொழிலாளி வர்க்கங்களின் போராட்டம் ஒரு கண் என்றால் தலித் விடுதலையும் உரிமை கோரலும் இன்னொரு கண் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் தோழர் மோரே. இதன் வெளிப்பாடாக 1953 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு முன் தீண்டாமை மற்றும் சாதி அமைப்பு குறித்த தனிக் குறிப்பை தலைமைக்கு அனுப்பினார். இது கட்சியின் மாநிலக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட குறிப்புகளை 1957, 1964 ஆகிய ஆண்டுகளிலும் அனுப்பினார். இதன் முக்கியத்துவத்தை ஒரு கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சுபாஷினி அலி, தொடர்ச்சியாக மோரே பேசியதன், எழுதியதன் தாக்கமாகவே ஆந்திராவிலும், கேரளாவிலும் சாதி ஒழிப்பு அமைப்புகள் உருவாயின. தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவானது. அகில இந்திய அளவில் தலித் சோஷன் முத்தி மஞ்ச் உருவாகியுள்ளதாக நான் நினைக்கிறேன் என்கிறார்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” என்ற வள்ளுவர் வாக்கு மோரேயின் வாழ்க்கையில் நிரூபணம் ஆகி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தத்துவார்த்த அடிப்படையில் பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது (1964) அந்தக் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறை முழுநேர ஊழியர்களில் ஒருவராகத் திகழ்ந்த மோரே, பலமுறை சிறை தண்டனை அனுபவித்தவர். ஒன்பதாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தவர். 1945-ல் ராகுல்ஜி எழுதிய “புதிய இந்தியாவின் புதிய தலைவர்கள்” என்ற நூலில் முசாபர் அஹமது, பி சுந்தரய்யா, இ. எம். எஸ். நம்பூதிரி பாட், பி. சி. ஜோஷி, கல்பனா தத் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வரிசையில் மோரே இடம்பெற்றுள்ளார்.

அவரைப்பற்றி அண்ணல் அம்பேத்கரின் கருத்து இப்படி இருந்தது: “ஆர்பி மோரே ஒரு மகத்தான மனிதர். நான் அரசியல் வாழ்க்கைக்கு வருவதற்குத் தூண்டுதலாக இருந்த வெகுசிலரில் ஆர்.பி.மோரேயும் ஒருவர்.”

தோழர் ஆர்.பி.மோரே ( RB More) 1972 மே 11 அன்று செயற்பாட்டை நிறுத்திக்கொண்டார். வாழ்நாளின் இறுதிவரை சமூக மாற்றத்திற்கான வர்க்கப் போராட்ட பாதையில் வழுவாமல் நடைபோட்ட தோழர் ஆர்.பி.மோரே (RB More)ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான, விடுதலைக்கான போராட்டமும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற பாதையையும் வகுத்துத் தந்தவர்.

இவரது முழுமையான வாழ்க்கை வரலாற்றை பாரதி புத்தகாலயம் அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக கேள்விப்பட்டேன். முன்கூட்டிய வாழ்த்துக்களும் நன்றியும்.

கட்டுரையாளர்  : 
Tamil writers: எழுத்தாளர் மயிலை பாலு

மயிலை பாலு

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *