கவிதை : தொலைந்து போகும் மனிதம்
குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும்
குழந்தையின் வயிற்றுப் பசிதனில்
வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்…
உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில்
ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்…
இலவசத்தின் பின்னணியில்
தன்வசமிழக்கிறது மனிதம்…
மேசைக்கு கீழே நீளும் கரங்களால்
கறைபடிந்தே தலைகுனிகிறது மனிதம்…
சுயநலத்தில் சுருண்டு போய்
காலங்கள் மாற மாற காலப்போக்கில்
மனிதமும் மரணிக்கிறதிங்கே…
சாதி மத பேதமென்னும் வர்ணங்கள் பூசியே
மனிதமில்லா மனிதர்களாய்
நிறம் மாறிப் போனோம்…
கேட்காத கடவுளுக்கு
அனுதினமும் நடக்கிறது அன்னாபிஷேகம்…
வறுமையால் வற்றிப்போகும் வயிற்றிற்கோ
சிந்திச் சிதறும் பருக்கைகள் கூட மிச்சமில்லை…
யார் பிழை இது?…
பசித்தவர்களின் உணவில் அவரின் பெயரெழுதா
இறைவனின் பிழையா?…
நெஞ்சினில் ஈரமில்லாதவர்களுக்கு இடையில்
வயிற்றினில் ஈரம் போர்த்தி
வறுமையில் உழல்பவர்களின் பிழையா?…
ம்ஹூம்.. எது எப்படியோ…
மனம் மறத்துவிட்ட மனிதர்களுக்கிடையே
மரணித்து மறைந்தொழிந்து போகிறதிங்கே
மனிதம்…
எழுதியவர் :
சசிகலா திருமால்
கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.