கவிதை : தெருக்களின் பெயர்கள்
முதன் முதலில்
குடியிருப்புகளுக்குப் பெயரிட்டவன்
மனுவின் ஏகபுத்திரனாய் இருந்திருக்கவேண்டும்
நகரமென்றால் சேரி
பறச்சேரி பள்ளச்சேரி
கிராமம் என்றால் குடி
பறக்குடி பள்ளக்குடி சக்கிலியக்குடி.
இரண்டும் கெட்டான் ஊர் என்றால்
சக்கம்மா கோவில் தெரு
சங்கிலி கோவில் தெரு
கீழத் தெரு அவிங்க தெகு
ஒட்டாத தெரு
மனிதர்கள் தான் பெயருக்குப் பின்னால்
சாதியைச் சேர்த்துக்கொள்கிறார்களென்று
யார் சொன்னது?
தெருக்களும் அந்த புளகாங்கிதத்தில்
உப்பி போய் ஊதியபடியேதான் இருக்கின்றன
இதில் விசேசம் என்னவென்றால்
அந்தந்த தெருநாய்களுக்கும்
அதே பவிசும் பகுமானமும்
குறித்திமிரும்
தெனாவட்டும் பவ்யமும்
பங்கு சேர்த்தலும்
தானாக வந்து விடுகின்றன
தெரு நாய்களுக்கே இத்தனையென்றால்
வீட்டின் வளர்ப்பு மிருகங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கள்?
வீட்டிற்குள் நுழைந்ததும்
அவை சாதியை
ஈஷிக்கொண்டு தானே
நடமாடுகின்றன
வளர்ப்பு மிருகங்களுக்கே அப்படியென்றால்
மனிதனின் சொற்களுக்கு
எவ்வளவு வெறி ஏறியிருக்கும்
என்று யோசியுங்கள்
அவை எவ்வளவு
நட்போடு பழகினாலும்
அந்தந்த வீதிகளுக்குள்
நுழையும் போதே
அந்தந்த நாற்றத்தை உள் வாங்கிகொண்டு
முகத்தைச் சுளித்தபடியே தானே
பயணிக்கின்றன
சொற்களை விடுங்கள்
மனிதனை என்ன சொல்வது?
சிலரின் நிழல் பட்ட தெருக்களை
அலசிவிட்ட கதையெல்லாம்
வருடமெல்லாம் பெருமையடித்துக்கொள்ளும்
மேலத்தெரு
தொழிலின் அடிப்படையிலா
பிறப்பின் அடிப்படையிலா
குலத்தின் அடிப்படையிலா
அல்லது தெய்வத்தின் அடிப்படையிலா
எப்படி பிரித்தான் என்று
தெரியவில்லை
நம் உழைப்பைத் தீண்டித் தீண்டி
உடல் வளர்த்து உயிர் வளர்த்து
உடை உடுத்தி
போஷித்து
நம்மை இழிந்தவனென்று
தள்ளிவைப்பவனைக் கூட
மன்னித்து விடுவோம்
குடி தண்ணீரில் மலம்
கரைத்தவனையும்
அரசு நின்று கொல்லும் என்று
விட்டு விடுவோம்
ஆனால் அரும்பிலிருந்து
தோன்றும் மொட்டுக்களைப்
போல உதித்த
பச்சிளம் குழந்தைகள் மீதும்
சாதி வன்மத்தை உமிழும்
ஒரு நாட்டிற்கு
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
பாராம்பரிய புளகாங்கிதம்
உண்டென்று அவன் சொல்ல
நீயும் நிலை மறந்து
கை தட்டுகிறாய் என்றால்
எவன் யோசனையில்
முதலில் உதித்திருக்கும்
இந்த சாதி?
நீயே சொல்
எழுதியவர் :
தங்கேஸ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.