“எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை”எனும் இப்புத்தகத்தின் தலைப்பை வாசித்ததுமே இது ஒரு கவிதை தொகுப்பாக இருக்கக்கூடும் என நாம் எதிர்பார்க்கலாம். சிறுகதை தொகுப்பாக கூட இருக்கலாம். அவ்வளவு ஏன்.. க்ரைம் நாவல் என நினைத்துக்கூட நம்பலாம். ஆனால், இது ஒரு கட்டுரை தொகுப்பாகும்.
பொதுவாகவே என சொல்வதை விடுத்து, குறிப்பாகவே சொல்வதெனில் சிறுகதை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் கட்டுரைகளில் ஆங்காங்கே சிறுகதைகள் ஒளிந்திருக்கும். அதுபோலவே ஆதவன் தீட்சண்யாவின் இந்த கட்டுரை தொகுப்பில் கவிதைகள் மறைந்துள்ளன. அந்த அளவிற்கு மொழியாளுமை மிக்க வரிகள் நிறைந்துள்ளன. கவித்துவ வாக்கிய வடிவங்களை வாசித்த கண்கள் விரைய நினைத்தாலும், கனத்த கருத்தாளுமை நம் கண்களை கட்டிப்போட்டு நிற்க வைக்கிறது.
சுடுகாட்டிற்கு செல்லும் வழியெங்கும் பூக்களை தூவி வைப்பது போல, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் புதைக்கப்பட்டுள்ளதை தோண்டியெடுத்து நமக்கு காட்ட, கூட்டிச் செல்லும் வழியெங்கும் செறிவான மொழியை பூக்களாக தூவி செல்கிறார்.
முதல் கட்டுரையில் மனிதர்களுக்கு இடையேயான “வெறுப்புணர்வு” என்ற ஒன்றை வரையறை செய்து, மேம்போக்காக நினைப்பது போல் அது இப்போது வந்த ஒன்றல்ல என அதன் வரலாற்றை ஆரிய வருகை வரலாற்றோடு ஆராய்ந்து விளக்கி சொல்லும் கட்டுரையை இப்படி முடிக்கிறார். “காலம் பணித்துள்ள பணிகளை காலம் கடந்தேனும் கண்டுணர்வது அவசியம்”.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டத்திருத்தம் பற்றி பேசும் “சூரியனையே பார்க்க முடியாதபடி செய்து விடாதீர் ” என்ற கட்டுரையில் திமுகவின் கட்சி சின்னத்தையே குறியீடாக காட்டி முடிப்பது நெத்தியடி பகடி. அதோடு “உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களை கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலைய செய்கிறது” என எழுதுவதன் மூலம் முறைசாரா தொழிலாளர்களின் மனநிலையோடு அவருக்கிருக்கும் நெருக்கத்தை நம்மால் உணர முடிகிறது.
“இந்தியா தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்கு அல்ல” என்ற கட்டுரையில் தலைப்பு வரிகளை பிரான்ஸ் கம்யூனிஸ்ட் மற்றும் காரல் மார்க்ஸின் மருமகன் பால் லபார்க் அவர்களுடைய வரிகளை எடுத்து கையாண்டுள்ளார் என அறியும்போது அவரது வாசிப்பின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
“ஆளுநரே நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி” என்ற கட்டுரையில் சனாதனத்தின் நான்கு ஆஸ்ரமங்களையும் விளக்கிச் சொல்லி சனாதன நாக்கை பிடுங்கி அதாலேயே அவரை அடி பின்னியுள்ளார்.
“ஆளுநரின் ஆன்மீகப்பொய்” கட்டுரையில் சிவாஜியின் புகழ் பாடும் காவிப் படத்தை புள்ளி விவரங்களோடு கிழித்து தொங்க விடுகிறார்.
“வாச்சாத்தி வன்கொடுமையும் தீர்ப்புகளும்” கட்டுரையில் வாச்சாத்தியின் வீர வரலாற்றை (ஆம். இப்போது அது வரலாறு தான்) விரிவாக விளக்கியுள்ளார்.
“குலத்தொழில்” கட்டுரையில் விஸ்வகர்மாவை வைத்துக்கொண்டு சனாதனத்தை வாங்கு வாங்கென வாங்குகிறார். குழந்தை தொழிலாளிகள் பிஞ்சு கைகளை துடைத்துக் கொண்டு கைக் கொட்டி சிரிப்பது நமக்கு தெரிகிறது.
“பள்ளிப்பட்டியும், அண்ணாமலையும்” கட்டுரையில் சமகால சம்பவத்தை தெளிவான அரசியல் பார்வையில் ஆராய்ந்திருக்கிறார்.
“ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் 12 வது வார்டும்” கட்டுரையில் அரூர் நிலப்பரப்பில் நிகழும் வன்கொடுமை சம்பவங்களை விவரித்து விட்டு “தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று சொன்னால் பரிகாரம் செய்துவிட்டு தொடர்ந்து பாவம் செய்வார்கள் என்பதனால்தான் தீண்டாமை ஒரு குற்றம் என்று வரையறுத்து அதற்குரிய தண்டனைகளையும் கடுமையாக்கினோம்” என வேதனையோடு தொடர்கிறார்.
“தெற்கு தேய்கிறது வடக்கு மேய்கிறது” கட்டுரை “தொகுதி மறுவரையறை” குறித்து ஆழமான பார்வையை நமக்கு தந்து விடுகிறது.
“அகமண முறை அபாயங்கள்” கட்டுரையில் ஸ்பானிஷ் “ஹாப்ஸ்பர்க் தாடை” குறித்தான தகவல் சுவாரசியமானது.
புத்தகத் தலைப்பை கொண்ட கட்டுரை நமக்கு “ஆர்எஸ்எஸ்” ன் சமூக பொறியியல் நடவடிக்கை பற்றிய ப்ளூ பிரிண்ட்டை வரைந்து காட்டிவிடுகிறது.
புத்தகத்தின் இறுதி பகுதிகளான முன்னுரைகள் நூல் அறிமுகத்தில் திரைப்படங்கள் குறித்தும் எழுதியுள்ளார். அதையும் சேர்த்து வாசித்து முடிக்கும்போது, நம் மனக்கண்ணில் இதுவரை கோபமான நமுட்டு சிரிப்போடு இருந்த கட்டுரையாளர் கொஞ்சம் பெரிதாக சிரிக்கத் துவங்கி பின்னட்டை புகைப்படமாக நம் மனதில் பதிந்து விடுகிறார்.
சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடிக்கையில் ஏதேனும் ஒரு கட்டுரை மூலமாகவோ அல்லது அனைத்து கட்டுரைகளின் வழியாகவோ நமது சிந்தனையின் வடிவம் மாறியிருப்பது நிச்சயம்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை (2025) |
| ஆசிரியர்: | ஆதவன் தீட்சண்யா |
| வெளியீடு: |
சந்தியா பதிப்பகம்
|
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 அமீபா |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
