கவிஞர் ஆசையின் 50 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தேய்ந்துபோன அல்லது தேர்ந்த ஒரு 100 சொற்களைக் கொண்டு இந்நூலுக்கு வாசிப்புப் பதிவு எழுதிவிட முடியுமா என்ன?
ஒவ்வொரு கவிதையும் வார்த்தைகளை சிறகுகளாக்கி அண்டவெளியெங்கும் வாசகனை சுழற்றியடிக்கிறது.
பாரதி கவிதைகளில் இடம்பெறும் காளி மீதான பாடல்களில் சிலவற்றை வாசித்திருக்கிறேன்.
அவற்றின் நூற்றாண்டுக்குப் பிறகான தொடர்ச்சியாக ஆசையின் இக்கவிதைகளைக் கருதலாம்.
‘கண்ணைத்
திறந்துகொண்டு
காணும் காளியல்ல நீ
கண்ணை மூடினால்
விழிக்கோளத்துக்கும்
இமையடைப்புக்கும்
இடையே
இருள் தாண்டவம்
ஆடுபவள் நீ
இருட்காளி’
அடுத்தடுத்த வாசிப்புகளினூடே நுட்பங்களை கூர்மையாக விளக்கிச் செல்லும் கவிதைகள் வாசகனை வியப்பில் ஆழ்த்துபவை.
பா.வெங்கடேசனின் ‘வாரணாசி’ நாவலில் இடம்பெறும் ‘மறிநிலைப் படிமம்’ என்ற அழகிய சொல் ஒரு கவிதையில் காளியை பேரண்டமாக உருவகிக்கப் பயன்படுகிறது.
காளியை அன்னையாக, அண்டமாக, பேயாக கட்டுக்கடங்காத தனது வர்ணிப்புகளால் உருவகித்து சன்னதம் கொண்டு ஆடி கவி பாடுகிறார் ஆசை.
‘எவ்வளவு கவிதை தந்தாலும்
ஒரே மடக்கில்
குடித்து முடித்து
தலைமயிர் பிடித்து ஆட்டி
பித்தா பிறைசூடியே
இன்னும் கொண்டு வா
கவிதை என்கிறாள்’
இதன் தொடர்ச்சியாக
‘தருவான் தருவான்
நிறுத்தினால்
தாங்காதடி
உன் வெம்மை
என் அம்மை’
என்ற வரிகள் அமைகின்றன.
தேர்ந்த கவிஞனின் படைப்பாற்றலுக்கு கிரியா ஊக்கிகளாக செயல்பட வியப்புத் தரும் படிமங்கள் வற்றாது ஊறிக் கொண்டே இருக்கின்றன
நூலின் தகவல்கள்:-
நூல் : அண்டங்காளி
ஆசிரியர் : ஆசை
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : ரூ. 100/-
பக்கங்கள் : 86
நூலறிமுகம் எழுதியவர்:-
சரவணன் சுப்ரமணியன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

