சிறார் சிறுகதை : “அச்சமில்லை அச்சமில்லை”
நிலவனுக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை. எப்படியாவது இன்று பள்ளிக்கு போகாமல் இருக்கனும் என்று யோசித்தான். இன்று லீவு இல்லைன்னு அம்மாக்குத் தெரியும். அதனால அம்மா கேட்பாங்களே? என்ன சொல்லி பள்ளிக்கு லீவு போடுவது என யோசித்தான்.
“அம்மா… அம்மா … என்னடா“? ”நான் இன்னைக்குப் பள்ளிக்குப் போகலமா?”
“ஏன் ? என்னாச்சு என்றாள் அம்மா”. காய்ச்சல் வர மாதிரி இருக்குமா?
அச்சச்சோ…இங்கு வா அம்மா நிலவனைத் தொட்டுப்பார்த்தாள்.
உடம்பு சில்லென்றுதான் இருந்தது. நிலவனின் அம்மாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. பழைய பள்ளிக்குப் போகும்போது நிலவன் எப்போதும் சந்தோசமாக போவான். விடுமுறை அதிகமாக போட மாட்டான். திருவிழா நாட்களில் அம்மா கேட்டாலுமே பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடிப்பான். புதிய பள்ளியில் சேர்ந்ததில் இருந்துதான் அவனுக்குள் இப்படியொரு மாற்றம் வந்ததைக் கவனித்தார். அம்மாவுக்கு குழப்பமாகவே இருந்தது. அவனுக்குள் இருக்கும் பிரச்சனையைக் கண்டு பிடிக்க நினைத்தார்.
“ நிலவா.. நிலவா… இங்க வா… என்ன அம்மா“?..
அம்மா ஒன்னு கேப்பேன்? நீ சொல்வையா என்றாள்.
சரி மா.
எட்டாம் வகுப்புவரை பள்ளிக்குப் போகும் போது சந்தோசமாகதானே போவாய்?
சிரித்துக்கொண்டே ஆமாம் என்றான்.
சரி….
இப்ப ஏன் அடிக்கடி பள்ளிக்கு லீவு போடறேன்னு சொல்ற? என்று தலைமுடியை வருடிக்கொண்டே கேட்டாள்..
இல்லை மா.. இப்பவும் நான் சந்தோசமா……க போ…றே…ன்னு சொல்லி முடிப்பதற்குள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையா வந்தது.
அம்மா பதறி போனார்… புடவை முந்தானை எடுத்து கண்களைத் துடைத்து விட்டார். நிலவா அழக்கூடாது. தைரியமாகச் சொல்லனும் சரியா என்றார்.
அ..ம்..மா… அ..ம்..மா…
வகுப்பில் மாணவர்கள் எல்லாம் கிண்டல் செய்றாங்க அம்மா..
ஏன்?.
அம்மா.. ஆசிரியர் வகுப்பில் புத்தகத்தைப் படிக்க சொன்னார். எல்லாரும் படிச்சாங்க. என்னைப் படிக்க சொன்னார்.
நானும் படிச்சேன்..
சரி…
அப்புறம் என்னாச்சு?
இல்லை..
இல்லைன்னா?
நான் சரியாகவே படிக்கல… அம்மா.. திக்கி திக்கி… படிச்சதும்… என் வகுப்பில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் திக்குவாய்னு கிண்டல் பண்றாங்க அம்மா என்று சொல்லி கேவி கேவி அழுதான். அது மட்டும் இல்லை அம்மா…. என்னைப் பார்த்தாலே திக்கி திக்கி… பேசுறாங்க.. எனக்கு அது கஷ்டமா இருக்கு அம்மா என்றான் .
சரி இன்று நீ பள்ளிக்குப் போக வேண்டாம்..விட்டிலே இரு. என்றாள். நான் வெளியே போய்ட்டு உடனே வந்து விடுவேன். அது வரை வீட்டில் பத்திரமாக இரு என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார்.
பள்ளிக்குச் சென்று ஆசிரியர் ஓய்வு அறையில் நிலவனின் ஆசிரியரைத் தேடுகின்றாள். ஆசிரியா் வருகிறார். வணக்கம் சார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் நிலவனின் அம்மா என்கிறாள்.
ஓ… வாங்க மா. உட்காருங்க.
இன்று நிலவன் பள்ளிக்கு ஏன் வரலை?
அவனுக்குப் பள்ளிக்கு வரவே பிடிக்க வில்லை சார்?
புதிய பள்ளிக்கூடம், நண்பர்கள், சூழல் காரணமாக இருக்கும்னு இருந்தேன் சார்.
ம்ம்..
ஆனால் இங்க பிரச்சனையே வேற சார் என்றாள்.
என்ன? …
நீங்க வகுப்பில் நிலவனைப் புத்தகத்தை வாசிக்க சொன்னிங்களாமே?
ஆமாம்.
அது நான் வகுப்பில் வழக்கமாக செய்வதுதானே? மாணவர்கள் தமிழ் எழுத்துக்களைத் தெரிந்து கொண்டு இருக்கின்றார்களா என்பதை பார்ப்பதற்காக சில கதைப் புத்தங்கள் கொடுத்து வாசிக்க சொல்வேன்.
அது பிரச்சனையில்லை …
அப்படீன்னா.. வேறென்ன ?
அவன் திக்கி திக்கி வாசித்தது என்றார்.
ஓ அதுவா… அதுவொரு பிரச்சனையே இல்லையே.
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை இயல்பாக இருக்க கூடியதுதானே என்றார்.
புதிய இடம் எப்போதும் சிலருக்குப் பயத்தைக் கொடுக்கும். சிலருக்கு அதனால பேசும்போது படிக்கும்போதும் திக்கும் அது இயல்புதான் அம்மா என்றார்.
நான் நிலவனைப் பார்த்த போது எனக்கு அது ஒரு விசயமாகவே தெரியலை என்று ஆசிரியா் சொன்னதும் நிலவனின் அம்மாவுக்கு மகிழ்ச்சி.
நாளை நிலவனைப் பள்ளிக்கு அழைச்சிட்டு வாங்க…
நான் அவனிடம் பேசுறேன்.
மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று வகுப்பில் அமைதியாக இருந்தான் நிலவன் .
ஆசிரியர் சக்தி வகுப்பிற்குள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள்.
உடனே அனைவரும் கைகளை உயர்த்தி வணக்கம் சக்தி என்றனர்.
சிரித்துக்கொண்டே சக்தியும் வணக்கம் என்றார்.
சக்தி… ”இன்று ஒரு குட்டிக்கதை சொல்றேன்னு சொன்னீங்களே”? என்றான் குறும்புக்கார மாணவன் பாலு.
சரிங்க பாலு … சொல்லிட்டா போச்சு
ஒரு ஊர்ல….என்றதும்
ஒரு ராஜா தானே சக்தி என்றான்….பாலு…
ஹா ஹா….
மெதுவாக நிலவனைப் பார்த்தார் சக்தி. இறுக்கமாக இருந்த நிலவனுக்குச் சக்தி ஆசிரியரின் செயல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. சக்தி அடுத்து என்ன சொல்ல போகிறார் என கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தான் நிலவன்.
ஒரு வகுப்பில் ….என்றதும் வகுப்பிலா என்றனர்.
கதை கவனிச்சாதானே சொல்வாங்க.. என்றதும்
சரி சரி கவனிக்கிறோம் என்றனர்.
ஒரு வகுப்பில் ஒரு குட்டி பையன் இருந்தான்.
குட்டி பையனா…என்றான் பாலு…
மறுபடியுமா? என்றார் சக்தி.
இல்லை சக்தி என்று சிரித்தான்.
அந்தக் குட்டிப்பையன் பேரு பாலு என்றார்.
அட அவன் பேரும் பாலுவா…என்று அனைவரும் சிரித்தனர். அவனுக்குப் பள்ளிக்குப் போகவே கவலையா இருக்கும் என்றார். நிலவன் ஆமாம் சக்தி… எனக்கும் பள்ளிக்குப் போவது என்றாலே கவலையாக தான் இருக்கு என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
பாலு புதிய பள்ளியில் சேர்ந்திருந்தான். அவனுக்கு புதிய பள்ளி , ஆசிரியா்கள் எல்லாமே பயமா இருந்தது..
அப்புறம்….
ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் கதைபுத்தகம் ஒன்றைக் கொடுத்து வாசிக்க சொன்னார். பாலு வாசிக்கத் தொடங்கினான். அவனால் சரியாக வாசிக்க முடியவில்லை. திக்கி திக்கி வாசித்தான். உடனே வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் நிலவனைப் பார்த்து சிரித்தனர். பாலு பேசும்போதெல்லாம் திக்கிபேசுவது போல மாணவர்கள் செய்து காட்டினா். பாலுவிற்கு அழுகையாக வந்தது. வீட்டிற்குப் போனதும் அவன் அம்மாவிடம் இனி நான் பள்ளிக்குப் போக மாட்டேன் என்றான். ஆனால் அவனுடைய அம்மாதான் அவனுக்கு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அன்று பள்ளிக்குப் போகாமல் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் கதை சொல்லி கொண்டு இருக்க மாட்டார். வகுப்பில் மாணவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டனர். நிலவன் கண்களில் கண்ணீரோடு வந்து சக்தியை அணைத்துக்கொண்டான். மாணவர்களும் ஓடிவந்து நிலவனையும் சக்தி சேர்த்து அணைத்து கொண்டனர். மாணவர்களும் தங்களின் தவறை உணர்ந்தனர்.
எழுதியவர் :
ம.பரிமளா தேவி
முதுகலைத் தமிழாசிரியா்
மல்லப்பள்ளி
திருப்பத்தூர் மாவட்டம்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மாணவர்களிடம் உள்ள ஒரு பழக்கமான மற்றவர்களின் குறையை கண்டு ஏளனம் செய்வது, சிரிப்பது என்ற பழக்கத்தை திருத்துவதற்கு தேவையான சரியான, ஆழமான காரணம் இல்லாமல் உள்ளது.
பள்ளி தொடர்பான வசனங்கள் சிறப்பு.