“ஹூவாங்டி நெய்ஜிங் சுவென்: மஞ்சள் பேரரசரின் மருத்துவக் கோட்பாடுகள் அடிப்படைக் கேள்விகள் (பகுதி – 1)” நூல்
முன்னுரை : வரலாறு – ஒரு வாழ்வியல் அவசியம்
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் பதிவாக மட்டும் அல்ல; நிகழ்காலத்தை விளங்கிக்கொள்ளவும் எதிர்காலத்தை எதிர்கொள்ளவும் தேவையான அடிப்படை அறிவாகும் என்ற அறிமுகத்துடன் நூல் துவங்குகிறது. பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பாடத்தில் விருப்பமின்றி இருந்த ஆசிரியர், மாணவப் பருவத்தில் உருவான இலக்கிய ஈர்ப்பும் வாசிப்பு ஆர்வமும் மூலமாக, பின்னாளில் வரலாற்றின் மீது ஆழமான ஈர்ப்பை வளர்த்துக் கொண்ட அனுபவம் இந்நூலின் முன்னுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்குபங்சர் மருத்துவத்தின் வேர்கள் சீன நாகரிகத்தின் தொன்மைக்குள் ஆழமாகப் பதிந்திருப்பதால், அதன் வரலாற்றை எளிமையாக அறிந்துகொள்வது சாத்தியமற்ற ஒன்றாகவே தெரிகிறது. சீனாவின் தொன்மை வரலாற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள எழுத்தாளர் ஜிங் லூ எழுதிய “Foundations of Chinese Civilization” என்ற படக்கதை நூல் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது என்பதும் இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
4700 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் நெய்ஜிங் குறித்து அறிந்துகொள்வதில் ஏற்பட்ட சவால்கள், தடைகள், குழப்பங்கள் ஆகியவை இந்நூலின் தேடல் பயணத்தை ஆய்வுப் பதிவாக மாற்றுகின்றன.
நெய்ஜிங் உயிர்த்தெழுந்த வரலாறு தொடங்கி, வாழ்வியல், உடலியல், இன்-யாங், பஞ்சபூதங்கள், நோயறிதல் மற்றும் சிகிச்சை என வெவ்வேறு தலைப்புகளில் தத்துவங்களும் வரலாறும் இந்நூலில் பொதிந்துள்ளன.
நெய்ஜிங் : மொழிபெயர்ப்பு அல்ல – மொழியாக்கம்
இந்நூல் ஒரு வழக்கமான மொழிபெயர்ப்பு நூல் அல்ல; இது மொழியாக்க முயற்சி. ஏழு வகையான நெய்ஜிங் பிரதிகளை வாசித்ததுடன், ஆறு செயற்கை நுண்ணறிவு செயலிகளின் உதவியையும் ஆசிரியர் எடுத்துக்கொண்டுள்ளார். 81 அத்தியாயங்களைக் கொண்ட நெய்ஜிங் நூலிலிருந்து 25 முக்கிய அத்தியாயங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழில் வெளிவரும் முதல் ‘நெய்ஜிங்’ பிரதி என்பதே இந்நூலின் வரலாற்றுச் சிறப்பாகும்.
நெய்ஜிங் என்பது அக்குபங்சரின் மூல நூல் மட்டுமல்ல. அது சீனக் கலாச்சாரம், சீன தத்துவம், சீன மருத்துவம், சீன நம்பிக்கை, சீன வரலாறு ஆகிய அனைத்திற்குமான மூல நூலாக வலியுறுத்துகிறது. ஐ சிங் மற்றும் நெய்ஜிங் ஆகியவை மருத்துவ நூல்கள் மட்டுமல்ல; சீன நாகரிகத்தின் தொடக்கப் புள்ளிகளாக விளங்கிய ஆதாரங்கள் ஆகும்.
தொன்மைச் சீனம் : மன்னர்கள், பேரரசர்கள், நம்பிக்கைகள்
தொன்மைச் சீனத்தில் மூன்று மன்னர்களும் ஐந்து பேரரசர்களும் வாழ்ந்ததாக சீன மக்கள் நம்புகிறார்கள். சீன மொழியின் குறியீட்டு வடிவத்தை உருவாக்கியவராக நம்பப்படும் மஞ்சள் பேரரசர் ஹூவாங்டி, நெய்ஜிங் நூலின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
சீனாவின் ஐந்து பேரரசர்களில் முதலாவதாகக் கருதப்படும் ஹூவாங்டி, அவரது அமைச்சர்களான கீபோ மற்றும் லீகாங் ஆகியோருடன் மேற்கொண்ட மருத்துவம், வாழ்வியல், இயற்கை, உணவு, தாவோ குறித்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல்.
நூல் உருவாக்க காலம்: வரலாற்று ஆதாரங்கள்
வரலாறு என்பது சமகாலத்திலிருந்து ஆய்வுகளின் வழியாக முற்காலத்தை அறிவதாகும் என்ற அடிப்படையில், நெய்ஜிங் குறித்த வரலாற்று குழப்பங்களை ஆசிரியர் ஆதாரங்களுடன் விளக்குகிறார். சீன அரசின் “மெமெரி ஆஃப் வேர்ல்ட் ரிஜிஸ்டர்” தரவுகளின்படி, நெய்ஜிங் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்டதாகவும் கி.மு. 475–221 வரையிலான வாரிங் ஸ்டேட்ஸ் காலத்தில் முழுமையாக உருவானதாகவும் உறுதி செய்யப்படுகிறது.
அக்குபங்சரின் தந்தை என அழைக்கப்படும் ஹூவாங்டியின் காலம் கி.மு. 2697–2596 என இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெய்ஜிங் மூன்று தலைமுறைகளின் எழுத்து அடுக்குகளாக கி.மு. 400 முதல் கி.பி. 260 வரை இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அரசியல் அதிகாரமும் நூல் அழிப்பும்
ஹூவாங்டி தொகுத்த நெய்ஜிங் நூலை ஹூவாங்டியே எவ்வாறு அழித்தார் (?) என்பதையும், சீன சர்வாதிகாரத்தின் அடக்குமுறைகளையும் இந்நூலினை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பழமையான மருத்துவ நூல்களை அழித்தலும், மரபுவழி மருத்துவர்களை ஒடுக்குதலும் மக்கள் நலனுக்கான செயல் என ஆட்சியாளர்கள் கருதிய காலங்கள் இருந்துள்ளன. இதன் விளைவாக மரபுவழி மருத்துவக் கல்வி முடக்கப்பட்டது.
டாங் வம்சம், சின் வம்சம், தேசிய அரசுகள் உருவான காலம், சீனப் புரட்சி, மக்கள் சோசலிச குடியரசாக சீனா, கலாச்சாரப் புரட்சி என அரசியல் வரலாற்றின் பல கட்டங்களை இந்நூல் பதிவு செய்கிறது. 1962ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு அக்குபங்சரை மரபு மருத்துவமாக அங்கீகரித்தது ஒரு முக்கிய திருப்பமாகக் குறிப்பிடப்படுகிறது.
தடைகளைத் தாண்டி வந்த நெய்ஜிங்
இத்தனை தடைகளையும், அழித்தொழிப்புகளையும் கடந்து இன்றைய காலத்திற்கு வந்து சேர்ந்துள்ளது அக்குபங்சர் மருத்துவம் மட்டுமல்ல; நெய்ஜிங் நூலும்தான். டாங் வம்ச காலத்தில் கி.பி. 762-இல் வாங் பிங் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றி நெய்ஜிங் நூலின் முதல் பகுதியை தொகுத்து வெளியிட்டார். அதன் தலைப்பே “சூ வென்”.
ஒன்பது பாகங்களும், 81 பகுதிகளும் கொண்ட இந்த நூல் மனித உடற்கூறு, இயங்கியல், நோய் உருவாக்கம், நோய் குறியீட்டியல், பரிசோதனை முறைகள், நோய்களின் வெளிப்பாடுகள், வருமுன் காத்தல், இன்–யாங், பஞ்சபூதத் தத்துவம், சிகிச்சை முறைகள், மனிதன்–இயற்கை தொடர்பு போன்றவற்றை கேள்வி–பதில் முறையில் விளக்குகிறது.
கி.பி. 1339ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட ஒரு நெய்ஜிங் பிரதி சீன தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. சீன மொழி வெவ்வேறு காலங்களில் எவ்வாறு மொழி மாற்றம் அடைந்தது என்பது குறித்த பதிவுகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
வாழ்வியல் பேருண்மை : மனிதன் – இயற்கை – பிரபஞ்சம்
“மஞ்சள் பேரரசரின் மருத்துவக் கோட்பாடுகள் – வாழ்வியல் பேருண்மை” என்ற தலைப்பில், ஹூவாங்டி மற்றும் அவரது அமைச்சர்கள் இடையே நிகழும் உரையாடல்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மன வாழ்விற்கு இயற்கை வாழ்க்கையும் முறையான உணவுப் பழக்கமும் எவ்வளவு அவசியம் என்பதை விளக்குகின்றன.
காலம் கடந்த நான்கு வகை மனிதர்களின் பண்புகள், அவர்கள் கொண்ட நீண்ட ஆயுள், உடல்–மன சமநிலை ஆகியவை வாசகனை ஆழ்ந்த சிந்தனைக்கு இட்டுச் செல்கின்றன. காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற தகவமைப்பு மனித ஆரோக்கியத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதும் இங்கு விளக்கப்படுகிறது.
உடலியல் மற்றும் உள்ளுறுப்பு ஒத்திசைவு
ஆண்–பெண் இருபாலரிலும் ஒவ்வொரு ஏழு வயதிலும் ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்த விரிவான விளக்கம் வழங்கப்படுகிறது. சரியான வாழ்க்கை முறையும், ஆற்றலைச் சரியான விதத்தில் பயன்படுத்தும் அறிவும் மனித வாழ்வின் அடிப்படைகள் என இந்நூல் வலியுறுத்துகிறது.
உணவின் சுவை, மணம் மற்றும் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் ஆகியவற்றின் தொடர்பு விளக்கப்படுவதுடன், ஐந்து மூலாதார உறுப்புகளின் ஆற்றல் முகத்தில் வெளிப்படும் விதமும் விவரிக்கப்படுகிறது. மரணத்தின் நிறங்களையும் வாழ்வின் நிறங்களையும் முகமே பிரதிபலிக்கிறது என்ற கருத்து ஆழமான மருத்துவ தத்துவ சிந்தனையாகத் தோன்றுகிறது.
இன் – யாங் : சமநிலையின் தத்துவம்
மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்நூல் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இன் மற்றும் யாங் பிரபஞ்சத்தின் இயற்கையான ஒழுங்கமைவாகவும், அனைத்திற்குமான அடித்தளமாகவும் விளங்குகிறது.
இன்–யாங் சமநிலையை அறிந்த முன்னோர்கள் தமது உடல் செயல்பாடுகளை இயற்கையோடு இணக்கமாக நடத்தினர். இந்த ஆற்றல்களுடன் உள்ளுறுப்புகளும் உடல் அமைப்பும் கொண்ட தொடர்பு விரிவாக விளக்கப்படுகிறது.
ஆற்றல் சமநிலையின்மை மற்றும் நோய்
ஆற்றல் சமநிலை குலைந்தால் அது உடலில் மட்டுமல்ல; மனதிலும், கனவுகளிலும் கூட வெளிப்படும் என்பதும், உயிர் தெளிவாக இருந்தால், மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் இயல்பாக இருக்கும்; அதுவே வாழ்க்கையை பாதுகாக்கும் நிலைத்தன்மை என்பதும் விளக்கப்படுகிறது.
நோய்த் தொற்றை எதிர்கொள்ள ஒரு மருத்துவன் தன் உடலையும் மனதையும் இயல்பில் வைத்துக் கொண்டு ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து, மருத்துவம் ஒரு அக ஒழுக்கம் என்பதை உணர்த்துகிறது.
நோயறிதல் மற்றும் சிகிச்சை
நோயறிதலில் பயன்படும் ஐந்து பகுதிகள் குறித்த விளக்கம் மற்றும் உடல் அறிகுறிகளும், நாடி மாற்றங்களும் துல்லியமான நோயறிதலுக்கான திறவுகோல்களாகக் குறிப்பிடப்படுகின்றன. நோயாளியின் உடல் மாற்றங்களை கவனிப்பதும் நாடிப் பரிசோதனையும் மருத்துவ அறிவின் அடிப்படைகள் என வலியுறுத்தப்படுகிறது.
சிகிச்சையில் நோயாளியின் நம்பிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. அக ஒழுங்கு மூலம் ஆற்றல் ஓட்டத்தைச் சீராக்கி, புற நோய்களை சரிசெய்த அணுகுமுறையே முதன்மையானதாக கருதப்படுகிறது.
மருத்துவர்களின் பொறுப்பும் நற்பண்புகளும்
நோயறிதல் மற்றும் சிகிச்சையில் மருத்துவர்கள் செய்யும் நான்கு தவறுகள், ஐந்து தோல்விகள் ஆகியவை விளக்கப்படுகின்றன. மருத்துவம் ஆழமானதும் எல்லையற்றதும் என இந்நூல் மருத்துவர்களுக்கு நினைவூட்டுகிறது. மருத்துவருக்குத் தேவையான நான்கு நற்பண்புகள் சுட்டிக்காட்டப்படுவதன் மூலம், மருத்துவம் ஒரு தொழில் அல்ல; ஒரு அறம் எனும் பார்வை முன்வைக்கப்படுகிறது.
முடிவுரை
அக்குபங்சர் மருத்துவர்கள் மட்டுமல்லாமல், வரலாறு, தத்துவம், வாழ்வியல், மருத்துவம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய நூலாக இது திகழ்கிறது.
“அக்குபங்சரை சரியாகப் புரிந்துகொள்ள நவீன கோட்பாடுகள் அல்ல; அதன் தொன்மையான விதிகளின் ஆழ்ந்த புரிதலே அடிப்படை” என்ற மாஸ்டர் ஆஃப் அக்குபங்சர் – டாக்டர் உவேபிங் அவர்களின் மேற்கோளுடன் இந்நூல் நிறைவை அடைகிறது.
ஹூவாங்டி நெய்ஜிங் சுவென் – சீனத் தொன்மை மருத்துவம், தத்துவம் மற்றும் நாகரிக நினைவின் தமிழாக்க மீட்பு.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஹூவாங்டி நெய்ஜிங் சுவென் (2025) |
| ஆசிரியர்: | அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் |
| வெளியீடு: |
எதிர் வெளியீடு
|
| விலை: | ₹.220 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻பிரியா ஜெயகாந்த் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
