காற்று எம் தோழன்
நீர் எம் தெய்வம்
வானும் பூமியும் எம் வீடு
இயற்கை யாவும் எம் உறவு
நீ மட்டுமேன்?
பேத சாக்கடைக்குள் வாழ்கிறாய்
எம் வியர்வையில் விளைந்தவைகள்
உன் உடலை.. உயிரை..
காக்க.. பராமரிக்கத் தேவை
ஆனால்
எம் அருகாமை அருவருப்போ…!
எம் தொடுதல் தீட்டோ…!
எம் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி
நீ வெறியாடுவாய்
வல்லுறவில் எம் பெண்களை சிதைத்து
நீ சின்னபின்னாமாக்குவாய்
இழிந்த..ஈனம்.. என்று அடையாளமிடுவாய்..
சேரி எனப் பெயரிட்டு
தனி உலகிற்குள்
எம்மைத் தள்ளிப் பூட்டுவாய்
உன் யாகத்திற்கு எம் இரத்தம்
உன் தாகத்திற்கு எம் கண்ணீர்
உன் தினவுக்கு எம் சந்ததி
உன் மனப் பிறழ்வுக்கு எம் வாழ்வு
உன் அதிகாரம்.. திமிர்..
கொலை மிரட்டல்.. பயமுறுத்தல்.. அராஜகம்… என்பவை
இனியும் கோலோச்சாது
எமக்கு கரங்கள் உண்டு
எம் எதிர்காலத்தை வடித்தெடுக்க
எமக்கு உணர்வுகள் உண்டு
எம் கனவுகளை நிகழ்த்த
உன் இதயம் மாமிசத்தாலானது
எம் இதயம் விசப்புகை வீசும் ரணம்
காலம் காலமாய் அடக்கப்பட்டு கொதித்துக் கொண்டிருக்கிறது
எரிமலையாய் வெடிக்கும்
உன் சவமேடுகளில் பூக்களைச் சொரியும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

