ஒன்றுமற்றதின் ஒளி
,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,.,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,

ஒன்று மற்றதில்
நிரம்பியிருக்கும் நிஜம்
உனக்குப் பிடிபடுகிறதா?
நேற்றிலும்
நாளையிலும் பரவிப் பாய்கிறது
உனது வேர்
வாழ்வை இருகப் பற்றுவ தென்பது
இன்றின் வேர்விடலில்
உள்ளது!
உன் வீட்டிலிருந்து
வெளியேறும் போது தான்
உண்மையாக
வீட்டில் இருக்கிறாய்
விலகி இருத்தலில்
இருக்கும் நெருக்கம் உன்னதமானதைப் போல
நீ
இல்லாமல்
போன பிறகான
உன் இருப்பும்
உன்னதமானது!
நெருங்கி இருத்தலில்
நிகழும் வெறுப்பு
சட்டெனப் பிடித்தாட்டுகிறது
மூன்று வேளைப்
புசிப்பாளன்
புலன்களின் சிறைவாசி
பசித்தலின் வாய்க்கு
கொஞ்சம் பதில் தந்து
நடப்பவன்
பிரபஞ்சத்தின்
மாபெரும் கேள்விகளுக்கான
பதிலைநோக்கிப்
போய்க் கொண்டிருக்கிறான்
கடவுளைத் தேடி
அலைவது அநாவசியம்
குப்பைகளைச் சுமந்த
உன் மனத்தை
வெளியேற்றி
விரட்டி விடும்
சமயம் பார்த்து
குடியேறுவதற்காக
நீண்ட காலமாய்க் காத்துக் கொண்டிருக்கிறான்
சாகாத
கிழட்டுக் கடவுள்.
நட்பு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இசை சேர்ந்த நட்பு
யோகப் பொருத்தம்
புல்லாங்குழல்
இசைத்தல் மூலம் நண்பனின்
காதுகளையே
பூ மடல்களாய் மாற்றிக் கொண்ட
யமகாத இசையுணர் நண்பன் சொன்னான்
உன்
வாசித்தலால்
மலர்கள் கூடி
நடனம் ஆடுவதாக,
மனத்திற்குள் பொழியும் இசை மழை
பூமியெங்கும்
மழைக்காமம்
தூண்டுவதாக
சொல்லி வைத்தாற்போல்
ஒரு
தொடர் மழைத் திருவிழா
தொடங்கியது
நண்பனை அழைத்துக்
கொண்டு போன புல்லாங்குழலாளன்
நேரிசையைக் காட்டினான்
மழையால் நிரம்பி ஓடும்
சிற்றாறு ஒன்றின்
இசை வாசிப்பை
கரையில்நின்று
கரைந்து நிற்கிறார்கள்
இசையில் மூழ்கி
இமைகள் மூடலாம்
ஆற்றில் மூழ்கி
இமைகள் மூடலாமா
ஓடும் ஆற்றில்
குளிக்க இறங்கி
கூட்டம் கூட்டி விட்ட நண்ப னை
காப்பாற்ற முடியாத
இசையாளன்
தன் புல்லாங்குழலை
சுக்குநூறாக்கி
ஆற்றில் வீசினான்
ஆண்டுகள் பல கடந்தும்
அதற்கப்புறம் ஒரு
புல்லாங்குழலை
பார்த்ததே இல்லை
அதற்கப்புறம்
நட்பு செய
நண்பனென்று
ஒருவரைக் கூட
சேர்த்துக் கொள்ளவே இல்லை
அந்த புல்லாங்குழல்காரன்.
,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,…..,,,,,,,.., .

