நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது எட்டாவது ஐந்தாண்டு திட்டம் (1992-93 முதல் 1996-97) நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யவும், உற்பத்தித் திறன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அதிகரிக்கவும், பசுமைப் புரட்சி இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், வறண்ட நிலப் பரப்பில் வேளாண்மைச் சாகுபடியினைச் செய்யவும், எண்ணெய்வித்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்யவும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புற வறுமைக்கான முக்கியக் காரணம் விவசாயிகளிடையே நிலமற்றத் தன்மையாகும் என்றும் எனவே நிலச் சீர்திருத்தத்தை வேகப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. கிராமப்புறங்களில் நிலவும் வலுவற்ற உள்கட்டமைப்பே அவற்றின் பின்தங்கிய நிலைக்கான காரணமாகக் கருதப்பட்டு அவற்றை மேம்படுத்த 1995-96ல் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (RIDF) கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை (NABARD) உருவாக்கியது. இதன்படி கிராமப்புறக் கட்டமைப்பினை மேம்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வேளாண்மைத் துறைக்குக் கடன் வழங்கியது (Chnandra Shekhar Prasad 2009).
நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்த உத்தியில் ஒன்றானதாக வேளாண் உற்பத்தி பொருட்களின் கொள்முதல் விலையினை உயர்த்தியதாகும். இது உழவர்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியினை அதிகரிக்க ஊக்கப்படுத்தியது. வேளாண் உற்பத்தி பொருட்கள் தங்கு தடையின்றி வணிகப் போக்கிற்கு வழிவகைச் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டில் தளர்வு செய்யப்பட்டது.
விவசாயக் கடன்களை திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் விளைவால் பெரிய விவசாயிகள் அதிக அளவிற்கு பயனடைந்து லாபம் ஈட்டினர். 1991-92ல் வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக 2 விழுக்காடு இருந்தது 1993-94ல் 4.9 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியானது ரூ.700 கோடியாக 1990-91ல் இருந்தது ரூ.10840 கோடியாக 1993-94ஆக அதிகரித்தது. அதேசமயம் வேளாண்மையின் மீதான முதலீட்டில் தேக்க நிலை காணப்பட்டது.
முதல் கட்டப் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கிராமங்களை நோக்கிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இதன்படி வேளாண் இடுபொருட்களான மின்சாரம், உரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டது. 1991-92ல் இம்மூன்று இடுபொருட்களின் மானியமானது ரூ. 122.6 பில்லியன் ஆகும் (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22 விழுக்காடு) இது 1995-96ல் ரூ.279.4 பில்லியனாக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.62 விழுக்காடு ஆகும்). இம்மூன்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பாதி அளவிற்கு மின்சாரத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1970ல் நாட்டில் 35 விழுக்காடு கிராமங்களும், 1990ல் 90 விழுக்காடு கிராமங்களும் மின்சார வசதியினைப் பெற்றது (தற்போது 100 விழுக்காடு கிராமங்கள் மின்சார இணைப்பு பெற்றுள்ளது). இதன் விளைவு வேளாண்மையில் மின்சாரப் பம்ப் செட்டுகள் பயன்பாடு; அதிகரித்தது. அதுவரை பயன்பாட்டிலிருந்த கால்வாய் பாசனம், குழாய் நீர்ப் பாசன முறைக்கு மாற்றமடைந்தது. இதனால் விவசாயத்தில் விரிவாக்கம் அதிகமாக நடைபெற்றது. அதேசமயம் மின்சார பம்ப் செட்டுகளின் அதிக பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு நீர்ப்பாசன பற்றாக்குறை ஏற்பட்டது. பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நெல் பயிர் செய்யும் பகுதிகள் பயன்பெற்று உற்பத்தி பெருகியது. வேளாண் உற்பத்தி உயர்ந்ததால் இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 1970களுக்கும் 1990களுக்கும் இடையில் 2லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினை கண்டது. இதனால் பஞ்ச காலங்களில் உணவு இறக்குமதி தவிர்க்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவால் 1980களில் வறுமை குறைய தொடங்கியது. குறிப்பாக 1990களில் வறுமை பெருமளவிற்கானதாகக் குறைந்தது. வேளாண் இடுபொருட்களின் விலைகளும் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகளின் வருமான இழப்பையும், கடன் அதிகரிப்பையும் எதிர் கொண்டனர். குறு, சிறு விவசாயிகள் இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் சாகுபடி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் பெருமளவிற்கு வேளாண் பணிகளைத் தவிற்று வேளாண் சாராத் தொழில்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். இதன் விளைவு பெரிய முதலாளிகள், மனை வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் கைகளில் விளைநிலங்கள் மாறின. விளைநிலங்கள் பெருமளவிற்குச் சாகுபடியற்ற நிலங்களாக மாறத் தொடங்கியது. நிகர விளைநிலங்களின் பரப்பு குறையத் தொடங்கியது.
அரசு பஞ்ச காலங்களில் புதிய உத்தியினைக் கையாண்டு உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. பன்னாட்டு அளவில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்வதால் அதிக லாபம் பெற இயலும். அவ்வப்போது உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படும் போது உள்;ர் விலைக்கு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைச் செய்வதால் பெரும் இழப்பினைச் சந்திக்க வேண்டியுள்ளது. உலக வர்த்தக மையத்தின் உருகுவே சுற்றின்படி விவசாய பொருட்களின் சுங்க வரியினைக் குறைத்ததால் வெளிநாடுகளுடன் காய்கறி, பழம், அதிக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் வரத்து அதிகமாகி உள்;ர் வேளாண் விளைபொருட்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனால் இந்திய விவசாயிகள் அதிக பாதிப்பினை அன்மைக் காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டு அளவில் அதிக தேவையினை உடைய பாசுமதி அரசி, சோயபீன்ஸ், மலர்கள், பழங்கள் போன்றவை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைப்பதால் பல விவசாயிகள் பரம்பரைச் சாகுபடி பயிர்களிலிருந்து புதிய வகை பயிர்களுக்கு மாற்றினர் (Tirthankar Roy 2020).
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வேளாண்மையின் முக்கியப் பிரச்சனையாக நீர்ப்பாசன பற்றாக்குறை, அதிக அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் தண்ணீர் உவப்பு தன்மையினை அடைந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் இருந்தது. இவற்றால் 6 முதல் 13 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் கடன் தேவையினை அரசு முழு அளவிற்கு நிவர்த்தி செய்யும் நிலையினை அடையவில்லை. கடனுக்கான மானியம் அதிக அளவிலிருந்தது இதனால் ஆண்டுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண்மையின் மீது திணிக்கப்பட்டது (India Today 1995).
புதிய பொருளாதார சீர்திருத்தங்களினால் முதலீடு, தொழில், வேளாண்மை, பணித் துறைகள் ஆகியவற்றில் நேர்மறை வளர்ச்சியினைக் காண முடிந்தது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97 ஆண்டுகளுக்கிடையே சராசரியாக ஆண்டுக்கு 3 விழுக்காட்டுக்கு மேல் வளர்ச்சியடைந்தது ஆனால் இது தொழில் மற்றும் பணித்துறையினை ஒப்பிடும்போது குறைவான அளவிற்கே இருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் கிராமப்புற வறுமை 1992-93ல் அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் இக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சமாகும். 1993-1998க்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் சமூகச்செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது. இதனால் வேளாண் கூலி 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்தது. இதே ஆண்டில் 6.3 மில்லியன் மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தது. பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது 1996ல் 5 விழுக்காடாக்க குறைந்தது. உணவு தானிய மானியமானது 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.4 பில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் விளைநிலங்கள் உபரியானது என அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண் சார்ந்த முக்கியத் தொழிலான கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1995ல் இந்தியாவில் 69875 கிராமப்புற பால் கூட்டுறவு செயல்பட்டதில் 8.9 மில்லியன் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். இதில் 60 விழுக்காடு விவசாயிகள் குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள். ‘வெண்மைப் புரட்சி’ என்ற பால் உற்பத்தியினை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. இத் திட்டமானது கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது (Bipan Chandra et al 2008). வறுமையை ஒழிக்க 1997ல் தகுதியுடையவர்களுக்கான பொது விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண்மை விளைபொருட்களின் கொள்முதல் அதிகரித்தது.
அட்டவணை: இந்திய வேளாண்மையின் போக்கு
வேளாண்மை தரவுகளின் விவரங்கள் | 1990-91 | 1995-96 |
இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் வேளாண்மையினை மொத்த மதிப்புக் கூட்டல் (விழுக்காடு) | 35.13 | 30.61 |
நிகரச் சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) | 143.00 | 142.20 |
மொத்த சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) | 185.74 | 187.47 |
உணவு தானிய உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) | 68.83 | 64.55 |
எண்ணெய் வித்துக்கள் (மில்லியன் ஹேக்டேர்) | 13.00 | 13.85 |
பருப்பு வகைகள் உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) | 13.28 | 11.88 |
உணவு தானிய ஏற்றுமதி (ஆயிரம் டன்னில்) | 666.60 | 5636.29 |
Source: Akina Venkateswarlu (2021): “Polititical Economy of Agricultural Development in India: Policies, Achievements and Concerns,” Aakar Books, Delhi.
அட்டவணை: வேளாண் சாகுபடியின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்திறனின் போக்கு (விழுக்காட்டில் ஆண்டுக்கான வளர்ச்சி😉
விளைபொருட்கள் | பரப்பளவு | உற்பத்தி | உற்பத்தித் திறன் | |||
1980 களில் | 1990 களில் | 1980 களில் | 1990 களில் | 1980 களில் | 1990 களில் | |
அனைத்துப் பயிர்களும் | 0.1 | 0.4 | 3.2 | 2.2 | 2.6 | 1.4 |
உணவு தானியங்கள் | -0.2 | -0.1 | 2.9 | 1.8 | 2.7 | 1.4 |
உணவல்லா பயிர்கள் | 1.1 | 1.5 | 3.8 | 3.3 | 2.3 | 1.4 |
நெல் | 0.3 | 0.5 | 3.6 | 1.9 | 3.2 | 1.3 |
கோதுமை | 0.5 | 1.7 | 3.6 | 3.1 | 3.1 | 1.6 |
சிறு தானியங்கள் | -1.4 | -1.8 | 0.4 | 0.2 | 1.7 | 2.0 |
பருப்பு வகைகள் | -0.1 | -0.2 | 1.5 | 1.0 | 1.6 | 1.7 |
எண்ணெய் வித்துக்கள் | 2.4 | 0.8 | 5.5 | 3.4 | 2.9 | 2.6 |
கரும்பு | 1.5 | 1.8 | 2.7 | 2.5 | 1.2 | 0.7 |
பருத்தி | -1.3 | 3.3 | 2.8 | 1.7 | 4.1 | -2.0 |
ource: Uma Kapila et al (2003): “Indian Economy Since Independance,”Academic Foundation, New Delhi.
1950-51 மற்றும் 1994-95ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த சாகுபடி பரப்பானது 132 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 188 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. மேம்படுத்தப்பட்ட விதையானது 1950-51ல் மிகவும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது 1996-97ல் 70 லட்சம் குவிண்டாலாக அதிகரித்தது. உரப் பயன்பாடு இக்கால கட்டத்தில் மிகக் குறைவாக 6900 டன்னிலிருந்து இது 14 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உரம் ஒரு ஏக்கருக்கு 1950-51ல் மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டது 1996-97ல் 77 கிலோவாக அதிகரித்தது. பூச்சிக் கொல்லியானது 2400 டன்னாக இருந்தது 59000 டன்னாக இதே காலகட்டங்களில் அதிகரித்தது. வேளாண்மைக்கான மின்சாரப் பயன்பாடானது 1980-81ல் 15200 மில்லியன் கிலோ வாட்டாக இருந்தது 1995-96ல் 85736 மில்லியன் கிலோ வாட்டாக அதிகரித்தது. 1990-91ல் மொத்த வேளாண்மையின் உள்நாட்டு உற்பத்தியில் அதன் ஏற்றுமதிப் பங்கானது 4.5 விழுக்காடாக இருந்தது 1995-96ல் 8 விழுக்காடாக அதிகரித்தது (Rao et al 2003).
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்ததை நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகள் அதிகராம் பெறும் 73 (ஏப்ரல் 24, 1993ல்) மற்றும் 74வது சட்டம் (ஜூன் 1, 1993ல்) கொண்டுவரப்பட்டது. இதன்வழியாக கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சாலை போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. 1988ல் தொடங்கப்பட்ட வேளாண் சூழலியல் வட்டாரத் திட்டமானது முன்னுரிமை நோக்கில் உள்கட்டமைப்பிற்கான முதலீடுகளைச் செய்தது.
நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.2 விழுக்காடாக இருந்தது இது ராஜீவ் காந்தி (5.7 விழுக்காடு) மற்றும் இந்திரா காந்தி (1980-84 கால கட்டத்தில் 5.5 விழுக்காடு) ஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருந்தது (Montek S Ahluwalia 2018). 1990களில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்ததால் வறுமையின் அளவு குறைந்தது. அதே சமயம் ஏழைகள் கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு பெருமளவிற்கு நகர்ப்புறங்களுக்குச் சாதகமாக இருந்தது. 1990களில் வேளாண்மை வளர்ச்சியானது மிகவும் குறைவான அளவிற்கே இருந்தது. வேளாண் பயிர் சாகுபடியில் பெரும் மாற்றத்தைக் கண்டது. ஏற்றுமதி வழியாக அதிக லாபம் பெரும் நோக்கில் பழ வகைகள், காய்கறி, பூக்கள் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். மற்ற பயிர் வகைகளின் சந்தைப் படுத்துதலின் கட்டமைப்பானது (குறிப்பாக மின்சாரம், சேமிப்பு கிடங்கு, சாலை போன்றவை) வலுவாக இல்லாததால் குறிப்பிடத்தக்க வெற்றியினை பெற இயலவில்லை.
உணவு ஆதாரம் அரசின் கையிருப்பில் (Buffer stock) 40 முதல் 50 மில்லியன் டன் இருப்பிலிருந்தது. இது மக்களுக்கு வழங்க போதுமானதாக இல்லை. பொதுவிநியோக முறையில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இது எளிதாகச் சென்றடைந்தது. பொது விநியோக முறையில் நடைமுறைப்படுத்துதலில் ஊழல் தலைவிரித்தாடியது. கள்ள வாணிபம் வழியாகப் பொதுவிநியோக உணவு தானியங்கள் விற்கப்பட்டன. 20 விழுக்காடு உணவு தானியம் தகுதியான நபர்களுக்குச் சென்றடையவில்லை. பசியும், குறை ஊட்டச்சத்தும் இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரமாகவே இருந்தது. மழைபொழிவு இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டு இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் காணப்பட்டது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஒரு முக்கிய நிகழ்வாக அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுத் துவக்க (1995 முதல்) உறுப்பினராக்கியது. இதன்படி வேளாண் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது (இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த காப்பு வரி மற்றும் வணிகம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதன்படி உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் வேளாண்மைக்கு அளித்துவந்த மானியத்தை 10 விழுக்காட்டுக்குக் கீழ் குறைக்க வேண்டும், ஒவ்வொரு நாடும் 3லிருந்து 5 விழுக்காடு நாட்டின் மொத்த வேளாண் பொருட்களின் நுகர்ச்சியின் அளவில் இறக்குமதி செய்ய வேண்டும், பொது விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதித்து உண்மையாக வறுமையினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேளாண் ஒப்பந்தத்தில் பசுமைப் பெட்டி (Green Box) மற்றும் நீலப் பெட்டி (Blue Box) என்பதைச் சேர்த்துக்கொண்டது. பசுமைப் பெட்டி என்பது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் ஆகும். நீலப் பெட்டி என்பது வருமான ஆதரவு மற்றும் கால்நடைகள் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தும் திட்டங்கள் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் பொருட்களின் மீது கட்டப்பாடுகளை விதித்தது. இவையனைத்தும் ஜனநாயக முறையில் இல்லாமல் உலக வர்த்தக அமைப்பு கடைப்பிடித்தவையாகும்.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் வழியாக வேளாண்மையினைப் பொருத்த அளவில் சறுக்கலைச் சந்திக்க வேண்டியிருந்தது. வளரும் நாடுகளில் வேளாண்மையின் முன்னேற்றத்திற்கு பல செயல்பாடுகளைச் செய்து வந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் அதன் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. வேளாண்மைக்கான நிலம் மற்றும் நீர் தவிற்று, விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி காப்புரிமை பெறப்பட்டது. இதனால் காப்புரிமை வைத்திருந்த நிறுவனங்கள் இதன் விலைகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியது. பல வளரும் நாடுகளின் வேளாண் பொருட்கள் பன்னாட்டு நிறுவனத்தினால் காப்புரிமை பெறப்பட்டது. இவற்றைச் சாதாரண விவசாயிகள் (சிறு, குறு விவசாயிகள்) பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே இந்திய விவசாயிகள்; அறுவடையில் பெறப்படும் விளைச்சலின் ஒரு பகுதி தானியத்தை தங்களின் அடுத்த போக சாகுபடிக்காக விதையினை எடுத்தும் பயன்படுத்தும் முறை புழக்கத்திலிருந்து வந்தது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயன்படுத்த இயலாது. குறிப்பிட்ட காப்புரிமை பெறப்பட்ட நிறுவனங்களில் இருந்து விதைகளைப் பெற்றுத்தான் பயன்படுத்த முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட காப்புரிமையும், சந்தைப்படுத்தும் முறையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். இந்தியா உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி மூன்று முக்கியச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து. அதன்படி 1) சந்தை அணுகல்: அளவுக் கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்படும் சுங்கக் கட்டணத்தை குறைப்பது. 2) உள்நாட்டு ஆதரவு: குறிப்பிட்ட சில உற்பத்தி பொருட்களுக்கு மற்றும் உற்பத்தி சாராத பொருட்களுக்கும் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 13.3 விழுக்காடு குறைத்தல். 3) ஏற்றுமதி மானியம்: 2005க்குள் மதிப்பின் அடிப்படையில் 24 விழுக்காடு மானியத்தை குறைத்தல் மற்றும் 14 விழுக்காடு பொருட்கள் அளவின் அடிப்படையில் குறைத்தல் ஆகும். பன்னாட்டு அளவில் இந்திய வேளாண்மைக்கு பெரும் வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் பசுமை பெட்டி மற்றும் நீலப் பெட்டி என்ற காரணிகளைப் பயன்படுத்தி சில நிபந்தனைகளை வளரும் நாடுகள் மீது விதித்தது. இதனால் இந்திய வேளாண்மையானது அதிக அளவில் பாதிக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றி கட்டுப்பாடற்ற வர்த்தக நடைமுறையினால் வேளாண் பொருட்களின் விலை குறைந்தது (பன்னாட்டுச் சந்தையில்). இதன் விளைவு இந்தியாவில் பன்னாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய வேளாண் பொருட்களின் விலையினைவிடக் குறைவாகச் சந்தையில் கிடைத்தது. பன்னாட்டுச் சந்தையில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ள பொருட்களை இந்திய விவசாயிகள் பயிரிட அதிக கவனம் செலுத்தினர். இவர்கள் பெரும்பாலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர். ஆனால் குறு மற்றும் சிறு விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தத்தால் மொத்த அளவில் விவசாயிகள் அதிக இழப்பினைச் சந்தித்தனர். இதனால் வேளாண்மையிலிருந்து சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பெருமளவிற்கு வெளியேறத் தொடங்கினர்.
1991-92ஆம் ஆண்டைப் பொருத்த அளவில் 1990-91ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காணப்பட்டது. எனவே அரசு இவற்றைச் சரிசெய்யும் முயற்சியிலிருந்தது. பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் கணிசமாகக் குறைந்தது. இதற்கு அடிப்படையாகப் பகுதி அளவில் வேளாண்மையில் ஏற்பட்ட தோல்வியும், தொழில் வளர்ச்சி குறைந்ததுமாகும். மூன்றில்–ஒருபங்கு மக்கள் வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தும், அதன் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றில்–ஒருபங்கினை மட்டுமே அளித்தது. வேளாண்மை வளர்ச்சிக்கு முதலீடு, குத்தகைச் சீர்திருத்தம், விவசாய கடன் அளிப்பை அதிகரித்தல், சரியான வேளாண் விலைக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்துதல் போன்றவை கட்டாயத் தேவைகளாக இருந்தது. விவசாய இடுபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியக் குறைப்பு நடவடிக்கையினால் இடுபொருட்களின் விலை அதிகரித்தது. அதே சமயம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார வளர்ச்சி வங்கிகள் பெரும் இழப்பில் இயங்கிக் கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு போதுமான கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் முறைசாரா நிதி அமைப்புகளிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனை பெற்றதால் கடன் சுமை அதிகரித்தது. அதே சமயம் அரசு 1992-93 வேளாண் விளைபொருட்களுக்குக் கணிசமான அளவிற்கு ஆதார விலையினை அறிவித்தது. 1993-94ல் தடையற்ற வர்த்தக நடைமுறையின் விளைவு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது, வேளாண் சார் தொழில்கள் பெருகத் தொடங்கியது. 1993-94ல் வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-95ல் பருவமழை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்ததால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது குறிப்பாக உணவு உற்பத்தியானது 185 மில்லியன் டன்னை எட்டியது. 1995-96ல் வேளாண்மை உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்தது. அரசு பொதுவிநியோக முறையின் வழியாக உணவு தானியங்கள் வழங்க அதிகமாகக் கொள்முதல் செய்ய தொடங்கியதால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வேளாண்மையில் லாபம் பார்க்க தொடங்கினர். இது வேளாண் சாகுபடியினை அதிகரிக்க உதவியது. ஆனால் இது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளையும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 40 விழுக்காடு பயிரிடும் நிலப்பரப்பு மட்டுமே நீர்ப்பாசன வசதியினைப் பெற்றிருந்தது. பெரும்பாலான விவசாயிகள் மழைப் பொழிவினைச் சார்ந்திருந்தனர். நகர்ப்புறங்களில் தண்ணீர் பயன்பாடு பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் விவசாய நீர் ஆதாரங்கள் பறிபோனது. வறட்சி, பஞ்சம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, கடன் பொறியில் வீழ்ந்தது போன்ற நிலைகளினால் விவசாய தற்கொலைகள் அதிகரித்தது. 1995-2005ஆம் ஆண்டுகளுக்கிடையே 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் அதிக அளவிற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் தொழிலாளர்கள் வேலை இழப்பினைச் சந்தித்தனர், எனவே இவர்கள் கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்கும், அதிக கூலி பெறவும் புலம் பெயர்ந்தனர். இதனால் குறு, சிறு விவசாயிகளின் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. வேளாண் சாராத் தொழில்கள் கிராமங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் சாரா வருமானம் கிராமப்புறக் குடும்பங்களில் முக்கியப் பங்கினை எடுத்துக்கொண்டது. 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாக உருவாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், இந்திய வேளாண் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 14 விழுக்காடு அளவிற்கே இருந்தது. வேளாண் சாரா பொருட்களின் மீதான தாராளமய நிலையும், வேளாண்மை பொருட்களின் மீது குறைந்த நிலையிலும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டது. இந்திய இறக்குமதிக்கு அதிக மதிப்புடைய பொருட்களின் மீது அதிக சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. 1980களிலும், 1990களிலும் இந்திய வேளாண்மைக்கான ஏற்றுமதி சார்ந்த நிலை காணப்படவில்லை. இக் காலகட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண் பொருட்களின் மீது விதிக்கப்பட்டது. வேளாண் ஏற்றுமதிக் கொள்கையால் 1994 முதல் தொடர்ந்து வேளாண் ஏற்றுமதி அதிகரித்தது. இக் கொள்கையால் பல சீர்திருத்தங்கள் (பொருட்களின் வர்த்தகத்துக்கு ஏற்ப எண்ணிக்கையை குறைத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டைத் தளர்வு செய்தல், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையினை ஒழித்தல் மற்றும் ஏற்றுமதிக் கடன் இருப்பை அதிகரித்தல்) நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் சட்ட திட்டங்களை வளர்ந்த நாடுகள் வகுத்தது இதனால் இது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் அமைந்தது. இந்திய வேளாண்மையின் மீதான மானியத்தை குறைந்தது என்பது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தந்தது. வேளாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்கியது, இதனால் வேளாண்மை ஆராய்ச்சி கிராமப்புற உள்கட்டமைப்பு மீதான அரசின் ஆதரவு நிலைப்பாடு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. வேளாண் தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, வேளாண்மையில் லாபம் பார்க்கும் பயிர் வகைகள் (பழம், காய்கறி, பூக்கள்) பயிரிட தொடங்கினர். இதனால் தனியார் முதலீடு வேளாண்மையில்அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையில் பொதுத் துறை முதலீடு மற்றும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1986-90ல் 7.92 விழுக்காடாக இருந்தது 1991-95ல் 7.26 விழுக்காடாகக் குறைந்தது (Narasimha Reddy et al 2009). வேளாண்மையில் அரசின் முதலீடுகள் குறையத் தொடங்கியது, வேளாண்மையின் நிலைமையினை பெரும் சிக்கலான நிலைக்குக் கொண்டு சென்றது.
– பேரா.பு.அன்பழகன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.