இந்திய வேளாண்மை – சுதந்திரத்திற்கு முந்தைய நிலை – பாகம் 1
(75 ஆண்டுகால இந்தியாவில் வேளாண்மை துறையின் வளர்ச்சி நிலைகள்)
பேரா.பு.அன்பழகன்
பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை மிகமுக்கியப் பங்காற்றுகிறது. தொன்மைப் பொருளியல் அறிஞரான ஆடம் ஸ்மித் வேளாண்மையின் மிகை உற்பத்தியானது வேளாண்சாராத் தொழில்களின் உற்பத்திக்கு உதவுகிறது என்றும் இதனால் பொருளாதாரம் வளர்ச்சியினை அடையும் என்றார். வேளாண்மையானது உச்ச அளவில் செல்வத்தினை உருவாக்கும் வல்லமை படைத்தது என்கிறார். தொழில் வளர்ச்சிக்கான மூலப் பொருட்களை அளிப்பது> மனித உழைப்பினை நல்குவது> உணவினை அளிப்பது போன்ற பணிகளை வேளாண்மைச் செய்கிறது. வேளாண்மை வேலைவாய்பினை உருவாக்குவதில் தொன்றுதொட்டு முன்னிலையில் உள்ளது. உலகில் வாழும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மைத் திகழ்கிறது. இந்திய வேளாண்மையானது வாழ்வியல்> கலாச்சாரம்> பாரம்பரியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியா பல்வேறு காலநிலைகள்> மண்> தாவர இனங்கள்> இயற்கை வளங்களைக் கொண்டதாகும். இந்திய வேளாண்மையானது பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி செய்தல்> அதிக அளவில் பெண்களின் ஈடுபாடு> விவசாயிகள் வறுமை மற்றும் பட்டினியில் வாழ்வது> வெள்ளம் மற்றும் வறட்சியினை எதிர்கொள்ளுதல் என பல்வேறு இயல்புகளைக் கொண்டுள்ளது.
இந்திய வேளாண்மையானது சுமார் 11000 ஆண்டுகள் வரலாற்றுப் பின்புலம் கொண்டது. கால்நடை வளர்ப்பு> தாவரங்களை வளர்த்தல்> வேளாண்மை செய்தல் போன்றவை தொடர்ந்து தழைத்தோங்கியது. இந்தியாவில் வேறுபட்ட வேளாண் சூழல் மண்டலங்கள்> மண்> தாவர இனங்கள் எனக் காணப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் இந்திய விவசாயம் பருவமழையினைச் சார்ந்து உள்ளது. இயற்கைச் சீற்றம்> பருவமழை பொய்த்தன் காரணமாகப் பயரிடுவதில் தோல்வியினைக் கண்டள்ளது. இந்தியா உலகஅளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாகப் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு இருந்தது. ஆனால் இந்தியா சுமார் 200 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தின் கீழ் (90 ஆண்டுகள் நேரடி பிரிட்டிஷ் ஆட்சி) இந்தியப் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டும்> சுரண்டப்பட்டும் இருந்தது. 1757ல் நடந்த பிளாசி போர் மூலம் கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தில் ஆட்சியினைத் துவக்கி நில வரி வசூலைத் துவக்கியது இந்திய வருமானத்தை 1947ல் சுதந்திரம் அடையும்வரை தொடர்ந்து சுருட்டிக்கொண்டிருந்தது. இதனால் இந்தியாவில் முதன்மைத் தொழிலான வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்த பெரும் பகுதி மக்கள் பல்வேறு வடிவங்களில் (பஞ்சம் உட்பட) துயரங்களைச் சந்தித்தனர். இதனைத் தடுக்க அவ்வப்போது சில திட்டங்களையும்> சீர்திருத்தங்களையும் மேற்கொண்டது. பிரிட்டிஷ் அரசு தலையிடாக் கொள்கை> கட்டுப்பாடற்ற சந்தை முறையினைப் பின்பற்றியதால் வேளாண் சிக்கல்களைத் தீர்க பெருமளவிற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவைப் பிரிட்டிஷ் அரசு ஒரு மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாகவும்> சந்தைக்கான நாடாகவும் மட்டுமே அதன் பார்வையில் இருந்தது.
பிரிட்டிஷ்; அரசு மேற்கொண்ட சில வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்கள் இந்திய வேளாண்மையினைப் புதிய பாதையில் அழைத்து சென்றது என்பதை மறுப்பதற்கில்லை. 1907ல் பூனேவில் வேளாண்மைக் கல்லூரி துவங்கப்பட்டது> 1921ல் இந்திய மத்திய பருத்தி குழு எற்படுத்தப்பட்டது> 1926ல் வேளாண்மைக்கான ராயல் குழு தொடங்கப்பட்டது> 1929ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் நிறுவப்பட்டது. சாயம் (துணிக்கான வண்ணம்) தயாரிக்க இண்டிகா பயிரிட விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதைத்தவிர கரும்பு> கோதுமை போன்றவை அதிக அளவில் பயிரிடப்பட்டது. 1869ல் சூயஸ் கால்வாய் பயன்பாட்டிற்கு வந்தது> இதனால் இந்தியாவிலிருந்து தவரஎண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது. பல்வேறு மேற்கத்திய நாடுகளில் பயிரிடப்படும் பழம்> காய்கறி வாணிபப் பயிர் வகைகள் இந்தியாவில் பயிரிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்தியாவில் பயிர் சுழற்சி> கலப்பு பயிர் முறை தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ்; இந்தியாவில் பருத்தி> இண்டிகோ> ஓப்பியம்> அரிசி போன்றவை உலக வர்தகத்தில் முக்கிய இடத்தை வகித்தது. பஞ்சாப்> நர்மதை பள்ளத்தாக்கு> மேற்கு மாகாணப்பகுதி> ஆந்திர கடற்கரையோர பகுதிகளில் வேளாண் பயிரிடலின் விரிவாக்கம் நடைபெற்றது. இதனால் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி ஆண்டுக்கு 0.4 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் மக்ககள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை. தலா உணவு இருப்பானது குறையத் தொடங்கியது. 1921-1946க்கும் இடையே ஆண்டுக்கு 0.71 விழுக்காடு உணவு உற்பத்தி குறையத் தொடங்கியது ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி 1 விழுக்காடு அதகரித்தது. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்திய வேளாண்மை பெருமளவிற்கு வளர்ச்சியினை எட்டியது. இந்தியாவில் வேளாண்மைக்கு எனத் தனி துறையினை 1871ல் நிறுவப்பட்டது. இத்துறையின் முக்கிய குறிக்கோள் பஞ்சத்திலிருந்து மக்களை மீட்பதாகும்.
1891-1946ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது ஆண்டுக்கு சராசரியாக 0.37 விழுக்காடு வளர்ச்சியினை அடைந்தது. உணவு தானிய உற்பத்தி 0.11 விழுக்காடும். உணவல்லா–வேளாண் உற்பத்தி 1.31 விழுக்காடும் இக்காலகட்டத்தில் அதிகரித்தது. நெல் உற்பத்தியில் தேக்க நிலை காணப்பட்டது ஆனால் கோதுமை உற்பத்தி அதிகரித்திருந்தது. உணவல்லா–வேளாண் உற்பத்தியில் நிலக்கடலை அதிக அளவாக ஆண்டுக்கு சராசரியாக 6.26 விழுக்காடும்> பருத்தி 1.30 விழுக்காடும்> கரும்பு 1.30 விழுக்காடும்> தேயிலை 2.74 விழுக்காடும் 1891-1946ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிகரித்தது.
1891-1916ஆம் ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை ஆண்டுக்கு 0.44 விழுக்காடு உயர்ந்தது ஆனால் அனைத்து வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி 0.84 விழுக்காடும்> உணவு தானிய உற்பத்தி 0.61 விழுக்காடும்> உணவல்லா–வேளாண் விளைபொருட்கள் 1.66 விழுக்காடும் அதிகரித்தது. இதற்கு மாறாக 1921-1946ஆம் ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை வளர்ச்சியானது ஆண்டுக்கு 1.12 விழுக்காடு உயர்ந்தது ஆனால் அனைத்து வேளாண் விளைபொருட்களும் 0.34 விழுக்காடும்> உணவு உற்பத்தி 0.13 விழுக்காடும் அதிகரித்திருந்தது (Bipan Chandra et al 2008). இதனால் உணவு தட்டுப்பாடு காணப்பட்டது.
இந்தியாவின் தேசிய வருமானம் 1870-1914ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 1 – 2 விழுக்காடு அதிகரித்தது> தலா வருமானம் ஆண்டுக்கு 0.5 – 1 விழுக்காடு அதிகரித்தது. தொழில் துறையின் உற்பத்தி பொருட்கள் அதிக அளவிற்கு வருமான பங்களிப்பை வழங்கியது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1900-01க்கும் 1945-46ஆம் ஆண்டுகளுக்கிடையே 0.3 விழுக்காட்டிலிருந்து 1.8 விழுக்காடுவரை அதிகரித்திருந்தது (Balakrishnan 2022). சிவசுப்பரமணியம் ஆய்வின்படி இந்தியாவின் தலா வருமானம் காலனி ஆதிக்கத்தின் கடைசி 50 ஆண்டுகளில் மிகவும் சிறிய அளவிற்கே அதிகரித்தது. இதனால் இந்தியர்களின் வாழ்கைத்தரம் தேக்க நிலையில் இருந்தது என்று குறிப்பிடுகிறார் (Sivasubramonian 2005).
அட்டவணை 1: இந்திய வேளாண்மையின் போக்கு
ஆண்டு | வேளாண் பொருட்கள் ஏற்றுமதி (ரூ.மில்லியன> 1873 அடிப்படை விலையில்) | வேளாண் வருமானம் (ரூ.பில்லியன்) | நிகர சாகுபடி பரப்பு (மில்லியன் ஏக்கர்) | மொத்த ஏற்றுமதியில் வேளாண் ஏற்றுமதியின் பங்கு |
1865 | 513 | 15.5 | — | 87 |
1880 | 438 | 17.6 | 120 கீழ் | 79 |
1895 | 631 | 18.9 | 170 | 72 |
1910 | 570 | 25.4 | 209 | 69 |
1925 | 854 | 22.8 | 207 | 64 |
1940 | 537 | 24.7 | 209 | 48 |
Source: Tirthankar Roy (2010): “The Economic History of India 1857-1947,” New Delhi: Oxford University Press.
அட்டவணை 2: இந்தியாவின் தேசிய வருமானம் மற்றும் வேலைஆற்றலின் பங்கு
துறை ஆண்டு | தேசிய வருமானத்தில் பங்கு (விழுக்காடு) | வேலை ஆற்றல் பங்கு (விழுக்காடு) | ||||
1900 | 1925 | 1946 | 1900 | 1925 | 1946 | |
வேளாண்மை | 51.0 | 42.0 | 40.0 | 74.9 | 76.5 | 74.8 |
தொழில் | 11.5 | 13.0 | 17.0 | 13.6 | 9.0 | 9.6 |
மற்றவை | 37.5 | 45.0 | 43.0 | 14.5 | 14.5 | 15.6 |
மொத்தம் | 100.0 | 100.0 | 100.0 | 100.0 | 100.0 | 100.0 |
Source: Tirthankar Roy (2010): “The Economic History of India 1857-1947,” New Delhi: Oxford University Press.
அட்டவணை 3: மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் துறைவாரியனா வளர்ச்சி
துறை | ஆண்டு வளரச்சி (விழுக்காடு) | ||
1900-1929 | 1930-1946 | 1900-1946 | |
முதன்மைத் துறை | 0.5 | 0.2 | 0.4 |
வேளாண்மை | 0.4 | 0.2 | 0.3 |
இரண்டாம் நிலைத் துறை | 0.9 | 1.2 | 1.5 |
உற்பத்தி (Manufacturing) | 2.7 | 7.0 | 3.8 |
சிறுதொழில் & கிராமத் தொழில்கள் | 0.2 | -2.9 | 0.4 |
மூன்றாம் நிலைத் துறை | 1.6 | 1.7 | 1.7 |
ஓட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி | 0.8 | 0.8 | 0.9 |
மக்கள் தொகை | 0.5 | 1.3 | 0.8 |
தலா வருமானம் (GDPயில்) | 0.4 | -0.5 | 0.1 |
Source: Shankar Acharyan, Isher Ahluwalia, K L Krishna and Illa Patnaik (2003): “India: Economic Growth, 1950-2000,” Indian Council for Research on International Economic Relations, New Delhi.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 1900-01 முதல் 1946-47ஆம் ஆண்டுகளுக்கிடையே தேக்க நிலையில் இருந்தது. குறிப்பாக வேளாண்மைத் துறை மற்றும் சிறுதொழில் மற்றும் கிராமப்புற தொழில்களில் தேக்க நிலை காணப்பட்டது. ஆனால் உற்பத்தி துறையானது நல்ல வளர்ச்சியினை அடைந்தது. வேலை ஆற்றலில் (Workforce) அதிக மாற்றமின்றி இக்காலகட்டங்களில் இருந்தது. பெருமளவிற்கு மக்கள் வேளாண்மையும்> கிராமப்புறத் தொழிலகளையும் சார்ந்திருந்தனர் எனவே தலா வருமானத்தின் வளர்ச்சி மிகக் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வேளாண்மைக்கான ராயல் குழுவானது இந்திய விவசாயிகள் இடைவிடாமல் சாகுபடி செய்ததால் மண்ணின் தன்மை குறைந்துவிட்டது என்றும்> விவசாயிகள் குறைந்த அளவிற்கே உரத்தினைப் பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டது. மேலும் இந்தியாவில் நீர்பாசன சாகுபடி பரப்பு குறைவாகவே இருந்தது. 1885-86ல் மொத்த வேளாண் சாகுபடி பரப்பில்> 12.4 விழுக்காடு மட்டுமே நீர்பாசன வசதியினைப் பெற்றிருந்தது. இது 1938-39ல் 22.1 விழுக்காடாக அதிகரித்தது அதாவது 23.09 மில்லியன் ஏக்கரிலிருந்து 53.73 ஏக்கராக அதிகரித்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் அடிப்படை கருவிகளில் மாற்றம் ஏற்பட்டது. உழுவதற்கு மர கலப்பைகளைப் பயன்படுத்துவதால் ஆழமான உழவு ஏற்படாததால் விளைச்சல் குறைவாக இருந்தது. எனவே இரும்பு கலப்பைகள் பயன்படுத்தப்பட்டது இதனால் விளைச்சல் அதிகரித்தது (குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது). மேலும் கோதுமை> பருத்தி சகுபடிசெய்ய மேம்படுத்தப்படட விதைகள் பயன்படுத்தப்பட்டது. பல வேளாண் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் இப்புதிய முறைகள் வசதியான விவசாயிகளால் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.
இந்தியா உலக அளவில் அதிகமான கால்நடைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்ததும் ஒரு பின்னடைவாகப் பார்கப்படுகிறது. இந்தியாவில் 100 ஏக்கர் நிகர சாகுபடி பரப்பிற்கு 67 கால்நடைகள் பயன்படுததப்பட்டது (Tirthankar Roy 2010). எருது மாடுகள்> எருமை மாடுகள் ஏர் உழுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றின் திறன் மிகவும் குறைவாக இருந்தது.
இந்தியாவில் ரயில்> துறைமுகம்> பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்டது. இதனால் அயல் நாடுகளுக்காக வேளாண் உற்பத்தி பெருக்கப்பட்டது. ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரிக்;கத் தொடங்கியது. விவசாயத்தில் பணப்பயிர்கள் அதிமாக (கரும்பு> பருத்தி> எண்ணெய் வித்துகள்) பயிர் செய்யத் தொடங்கினர். இந்தியாவின் ஏற்றுமதி 1870-1914ஆம் ஆண்டுகளுக்கிடையே 500 விழுக்காடு அதிகரித்தது. வேளாண் விளைபொருட்களின் விலை சந்தையில் அதிகரித்தது. 1928ல் வேளாண் பொருட்களின் விலையினை 1870களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிமாக இருந்தது. சாகுபடி நிலப்பரப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. கிராமப்புற போக்குவரத்து (மாட்டு வண்டி) பயன்பாடும் அதிகரித்தது. 1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால்> இந்தியவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமான கப்பல் போக்குவரத்து செலவானது குறைந்தது. இத்துடன் தொழில் புரட்சியின் விளைவால் இந்திய வர்தகம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் வேளாண் விளைபொருட்கள் குறைந்த விலைக்கு கிடைகப்பெற்றதை ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. பயிர் தொழிலில் லாபம் பார்கத் தொடங்கியது. சேமிப்பு> முதலீடு அதிகரித்தது.
சாலைப் போக்குவரத்து வழியாக நீண்ட தூரம் பொருட்களை எடுத்துச்செல்ல இடர்களும்> கலாதாமதமும்> செலவும் அதிகமானது. ரயில் போக்குவரத்து வசதிக்கேற்ற நிலையில் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து (கால்வாய்> ஆற்று போக்குவரத்து) நடைமுறைக்கு வந்தது. வேளாண் விளைபொருட்களை எற்றிச்செல்ல இப்போக்குவரத்து பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
1920களின் முற்பகுதியில் அபரீதமான வேளாண் விளைபொருட்கள் அளிப்பினால்> விலை வீழ்ச்சியடைந்தது. இநதியாவில் பணப்பயிர்கள் தேக்கமடைந்தது இதனால் வேளாண்மை சரியத்தொடங்கியது. 1929-1932ஆம் ஆண்டுகளுக்கிடையே ஏற்பட்ட உலகப் பெருமந்தத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக கடனில் மூழ்க ஆரம்பித்தனர். தொழிலாளர் கூலி குறைந்தது> வாழ்கைத்தரம் பாதிக்கப்பட்டது. அதேசமயம் மக்கள் தொகை அதிகரித்ததினால் பயிரிடும் நிலத்தின் தேவை அதிகரித்தது. வணிகப் பயிர்களான பருத்தி> கரும்பு> கோதுமை போன்றவற்றின் பயிரிடும் பரப்பு அதிகரித்தது. 1941-1946ஆம் ஆண்டுகளுக்கிடையே 74.1 மில்லியன் ஏக்கர் சராசரியாகப் பயிர் செய்யப்பட்டது> கோதுமை 26.4 மில்லியன் ஏக்கரும்> பருத்தி 11.6 மில்லியன் ஏக்கரும்> கரும்பு 3.6 மில்லியன் ஏக்கரும் பயிரிடப்பட்டது. மொத்ததில் இந்தியாவின் சாகுபடி நிலப்பரப்பு 1885ல் 186 மில்லியன் ஏக்கராக இருந்தது 1921ல் 254 மில்லியன் ஏக்கராகவும் 1938ல் 258 மில்லியன் ஏக்கராகவும் அதிகரித்தது.
1860களிலிருந்து இந்திய பருத்தி பன்னாட்டு சந்தையில் தேவை அதிகரித்தது. இதேபோல் இங்கிலாந்தின் மொத்த இறக்குமதியில் இந்தியாவின் கோதுமை 1883ல் 14 விழுக்காடு பங்கினைப் பெற்றிருந்தது. இதுபோன்று சர்க்கரை ஏற்றுமதியும் அதிகரித்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் 1867 முதல் 1921முடிய பஞ்சாப்பில் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டது. நீர்பாசன கால்வாய் 2000 மைலிருந்து 15000 மைல்வரை கட்டப்பட்டது. சாலைகள் இரு மடங்காக அதிகரித்தது> ரயில்வே இருப்புபாதை நான்கு மடங்காக அதிகரித்தது. இதனால் சாகுபடி பரப்பும் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது. பயிரிடப்படாத நிலங்களின் அளவு மிகவும் குறைந்தது.
இதுபோன்றே மேற்கு உத்திரப் பிரதேசம்> ஹரியான> கடலோர ஆந்திரம் போன்ற பகுதியில் கால்வாய்ப் பாசனம் அமைத்து தரப்பட்டது. பிற போக்குவரத்து கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. இதன் விளைவு கரும்பு> கோதுமை> சோளம்> பார்லி பயிர்களின் விளைச்சல் அதிகரித்தது. பாம்பாய்> சென்னை மாகாணங்களில் பருத்தி பயிரிடப்பட்டது. வங்காளத்தில் நெல் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டது. கடலோர ஆந்திரத்தில் நெல்> எண்ணெய்வித்துக்கள்> கரும்பு> புகையிலை> மஞ்சள்> மிளகாய் போன்றவை அதிகமாகப் பயிர் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர்> செங்கல்பட்டு பகுதிகளில் நெல் பயிர் செய்யப்பட்டது. கோயம்புத்தூர்> ராமநாதபுரம்> மதுரை> திருநெல்வேலி பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. வடஆற்காடு> தென்னாற்காடு பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்பட்டது. மத்திய இந்தியாவில் பருத்தி> கோதுமை பயிரிடப்பட்டது.
அட்டவணை 4: சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் பஞ்சம்
பஞ்சம் | ஆண்டு | பாதிக்கப்பட்டவர்கள் (மில்லியன்) |
வங்காளப் பஞ்சம் | 1769-1770 | 2 – 10 |
சால்ஸ் பஞ்சம் | 1783-1784 | 11 |
டோஜி பாரா பஞ்சம் | 1791-1792 | 11 |
ஆக்ரா பஞ்சம் | 1837-1838 | 0.8 |
மேல் தோவாப் பஞ்சம் | 1860-1861 | 2 |
ஒரிசா பஞ்சம் | 1865-1867 | 4 – 5 |
ராஜஸ்தான் பஞ்சம் | 1868-1870 | 1.5 |
பீகார் பஞ்சம் | 1873-1874 | 2.5 |
தென்னிந்தியப் பஞ்சம் | 1876-1878 | 6 – 10 |
இந்தியப் பஞ்சம் | 1896-1897 | 12 – 16 |
இந்தியப் பஞ்சம் | 1899-1900 | 3 – 10 |
பெரும் வங்காளப் பஞ்சம் | 1943 | 2 – 3 |
Source: ICAR 2022.
பஞ்சம் இயற்கையினாலும்> மனிதர்களாலும் உருவானது. இந்திய விவசாயம் தென்மேற்கு> வடகிழக்கு பருவமழையினைச் சார்ந்துள்ளது. பருவமழை பொய்ததினால் விவசாயத்தில் தோல்வி ஏற்பட்டு உணவு தட்டுப்பாட்டினால் பஞ்சம் உண்டானது. காலனி ஆதிக்கத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள் மனிதர்களால் உருவானதாகும். பயிர்த் தொழில் வணிகமயாக்க உந்தப்பட்டதனால் உணவு தானிய உற்பத்தி அளவு குறைந்து போனது. உபரியாக உற்பத்தி செய்யும் காலங்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. எனவே உள்நாட்டுக்கு தேவையான உணவு கையிருப்பு குறைந்துபோனது. அறுவடை குறைவான காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. நீண்ட கால அடிப்படையில் பயிர்த் தொழில் வணிகமாயமானதால். பணப் பயிர்களான கரும்பு> பருத்தி> புகையிலை போன்றவை அதிகமாகப் பயிர்செய்யப்பட்டன. இவை அதிமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் உணவு பஞ்சம் எற்பட்டது. 1876-77 மற்றும் 1896ல் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் மாண்டுபோனார்கள். 1900ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இது பருவமழை பொய்த்ததால் எற்பட்டது. இதன்பிறகு 1943ல் பெரும் பஞ்சம் வங்காளத்தில் உருவானது. இக்காலகட்டத்தில் இந்திய ரயில்வே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களையும்> அவர்களின் பொருட்களையும் ஏற்றிசெல்லும் வேலையில் ஈடுபட்டிருந்தது> உணவினை பஞ்சம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்ல முற்படவில்லை.
1899-1900ஆண்டுகளுக்கிடையே கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது இதனை போக்கும் வகையில் வேளாண்மைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக 1905ல் பீகாரில் உள்ள பாஷ என்ற இடத்தில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1868ல் சென்னை சைதாப்பேட்டையில் வேளாண் கல்லூரி துவக்கப்பட்டது இது 1906ல் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. இதனால் பல்வேறு புதிய விதை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1905ல் இந்திய வேளாண்மைக் கழகம் துவக்கப்பட்டது> 1906ல் இந்திய வேளாண் ஆட்சிப் பணி அறிமுகப்படுத்தப்பட்டது. நீர்பாசன வசதியினை மேம்படுத்த கிருஷ்ணராஜ் சாகர் (1911-1931)> நிசாம் சாகர் (1921-1931)> காவிரி மேம்பாட்டு திட்டம் (1921-1935)> சட்லெட்ஜ் கால்வாய் திட்டம் (1921-1935) கட்டப்பட்டது.
(பாகம் 2 தொடரும்)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.