அளவறிந்து வாழாதான் – சிறுகதை
அழைப்பு மணி ஓசை கேட்டு விழித்துக் கொண்டான் முருகன். தூக்கக் கலக்கம் இன்னும் போகவில்லை. கதவைத் திறந்து வெளியே வந்தான். வீட்டின் பின்புறம் வசிக்கும் ஐயர் நின்று கொண்டிருந்தார்.
முருகனுக்கு வியப்பு அவர் வீடு கட்டி குடியேறி பத்து ஆண்டுகள் ஆகிறது.இதுவரை ஒருநாள்கூட எதற்கும் அவன் வீட்டிற்கு வந்ததில்லை.அவர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்ற போதுகூட அவனை வீட்டிற்கு உள்ளே அழைக்காமல் வெளியிலேயே பேசி அனுப்பிவிடுவார்..
வசதியாக இருக்கும்போது வசதி குறைந்த முருகனைப்போன்றவர்களின் வீட்டிற்கெல்லாம் செல்லமாட்டார். சூத்திரர்கள் வீட்டில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று நினைக்கக்கூடிய சாதித்திமிரும் கொண்டவர்.
தயங்கித் தயங்கி வெளியே நின்றவரை உள்ளே அழைத்து இருக்கையில் அமரச்சொன்னவன் மனைவியை அழைத்து “சாருக்குக் காஃபி கொடும்மா”என்றான். மறுத்துவிடுவார் என்று நினைத்தான். மறுக்கவில்லை வாங்கி குடித்துவிட்டு ” ஃபில்டர் காஃபியா?நன்னா இருக்கறது. எங்காத்துக்காரி போடாறா மாதிரியே உங்காத்துக் காரியும் போட்ருக்கா”என்று பாராட்டினார்.
ரொம்ப ஆச்சாரமான பிராமணக் குடும்பம்..பயங்கர வருமானம்.கரி விற்பனை.ஏராளமான வரவு,சிமென்ட் கடையும் வைத்திருந்தார்.ஒரு மகள் ஒரு மகன். மகன் தலித் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு ஒரு மகன்.எந்த வேலைக்கும் போகாமல் அப்பன் பணத்தில் தனியே குடும்பம் நடத்திவந்தான்.ஒரே மகனான அவனை விட்டுவிட மனமில்லை ஆனால் மருமகள் தலித் பெண் என்பதால் வீட்டில் சேர்ப்பதில்லை..
தீபாவளி வந்தால் இரண்டு நாள்கள் முன்னதாக அவர்கள் வீட்டில் வெடிச்சத்தம் தொடங்கிவிடும். தீபாவளியன்று இடைவிடாமல் விலை உயர்ந்த வெடிகளும், மத்தாப்பும், இரவைப் பகலாக்கும்.வானத்தை நோக்கிக் கிளம்பும் இராக்கெட்டின் விலை ஒன்றிற்கு ஐநூறு,ஆயிரம் ரூபாய் இருக்கும் அவ்வளவு வேலைப்பாடு அமைந்தது. வானமே வண்ணமயமாகும். மறுநாள் பார்த்தால் வீட்டின்முன் ஒரு வண்டி குப்பை தேறும்.
அவர் வீட்டில் விலையுயர்ந்த டாபர்மேன் நாய் இருந்தது.பிராமணர் என்பதால் மாமிசம் போடுவதில்லை..காலையில் ஒரு லிட்டர் மாலையில் ஒரு லிட்டரென ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர்பால் வாங்கி நாய்க்கு ஊற்றுவார்.அது இல்லாமல் அவர்களுக்கு இரண்டு லிட்டர்பால்.இப்படி ஓகோ..என்று வாழ்ந்தவர்.அவரைப் பற்றிய சிந்தனைகள் தொடர ‘ நம்ம வீட்டுக்கு வந்திருக்காரே…!என்னவாக இருக்கும்’?’
“அப்புறம் “மெதுவாகப் பேச்சைத் தொடங்கினான்.
“சொல்றதுக்கு வெட்கமாத்தான் இருக்கு…ஆனா சொல்லாமலும் இருக்கமுடியாது..இன்றைக்கு என் வீட்டு நெலம மோசமா இருக்கு..மத்தியான சாப்பாட்டுக்கு பொட்டு அரிசி இல்ல….சாம்பார்,காய்கறிகூட வேண்டாம் சோத்த வடிச்சி தண்ணியாவது ஊத்தி சாப்பிடனும்ல…
“என்று சொல்லி நிறுத்தினார்.
முருகனுக்கு சங்கடமாகப் போய்விட்டது. இவ்வளவு மோசமான நிலைக்குப் போயிருக்க மாட்டார் என்று நினைத்திருந்தான்.
“கேக்கறதுக்கே கஷ்டமா இருக்கு…அரிசி,பருப்பு சாமான்லாம் வீட்டிலேர்ந்து கொடுக்கிறேன் எடுத்துகிட்டு போயி சமச்சி சாப்பிடுங்க”
“வேண்டாம்…வேண்டாம் இப்ப கொடுத்துடுவீங்க அடுத்த வேளைக்கு என்ன செய்யறது..? எங்கிட்ட சின்ன பீரோ ஒன்னு இருக்கு..அதோட கீழே இரண்டு கதவும்,மேலே இரண்டு டிராயரும் உள்ள மரத்தால் ஆன பெஞ்சும் இருக்கு.அத எடுத்துகிட்டுப் பணம் கொடுங்க”
முருகனுக்கு அவைகள் தேவையில்லை. இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் வேறு எங்குபோவார்? நன்றாக வாழ்ந்த மனிதர்.
“சரி…வாங்க”என்று சொல்லிவிட்டு அவரோடு அவர் வீட்டுக்குப் போனான்.
பழைய இரும்பு பீரோ இருநூறு ரூபாய்கூட போகாது.அந்த மரப்பொருளும் உளுத்துப்போய் பயன் படுத்தமுடியாத நிலையில்தான் இருந்தது.சரி…அவருடைய இன்றைய நிலைக்குத் தீர்வு வேண்டும். பொருளுக்காக இல்லை என்றாலும் அவருடைய வறுமையைத் தற்காலிகமாவது தீர்ப்போம் என்று நினைத்து வீட்டிற்கு வந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று கொடுத்தான்.அவர் இவ்வளவு தொகையை எதிர்பார்த்திருக்க மாட்டார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டவர்.”ஒரு வாரம் சமாளிச்சுடலாம்”என்றார்.
“சரி…தப்பா நெனச்சுக்கலேன்னா..நான் ஒன்னு கேக்கலாமா”தயங்கியபடியே கேட்டான் முருகன்.”கேளுங்க..நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு நன்னாத் தெரியும் கேளுங்கோ”என்றார் ஐயர்.
“நல்லாத்தானே இருந்தீங்க திடீர்னு இந்த நெலம எப்படி வந்திச்சு?”
ஒரு விரக்தியான சிரிப்போடு தொடங்கினார்”அது பெரிய கதை சார்….பெத்த பிள்ளையும் திறமையில்ல..சொந்த மருமகனும் யோக்கியன் இல்ல….சிமென்ட் கடையில் பல லட்சம் இழப்பு,கரி வியாபாரத்தை சென்னையிலிருந்து கவனித்துவந்த மருமகன் லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக இருப்பதையெல்லாம் விற்று விற்று வாழ்க்கையை நகர்த்திகிட்டு இருந்தேன். எவ்வளவு நாள்தான் அப்படி ஓட்டமுடியும்?
“குந்தித் தின்றால் குன்றும் மாளும்னு சொல்லுவாளே. விலையுயர்ந்த நாய் பட்டினியால் செத்துப்போச்சு.இப்ப அரிசிவாங்கக்கூட பணமில்லாமல் பட்டினி கிடக்கவேண்டிய சூழல் வந்துடுச்சு.”
வசதியை அனுபவித்த ஐயர் வறுமையை அனுபவிக்கின்ற நிலையை நினைத்து வருத்தமடைந்தான் முருகன்.
“ஆளைவிட்டு பீரோவையும் அந்த மரப்பொருளையும் எடுத்துவந்தான். அது பயன்படுத்த முடியாமலேயே முற்றிலும் வீணாயிற்று.பீரோ மட்டும் இருக்கிறது.
அதற்குப் பிறகு வீட்டையும் விற்றுவிட்டு வெளியூர் போய்விட்டார் ஐயர்.இப்போது எங்கே இருக்கிறாரோ?எப்படி இருக்கிறாரோ?தெரியவில்லை.
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்”
என்ற குறள்தான் முருகனின் நினைவிற்கு வந்தது.
கதையாசிரியர்:
கோவி.பால.முருகு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

