எரிச் மரியா ரெமார்க் (Erich Maria Remarque) நூலாசிரியர், புகழ் பெற்ற ஜெர்மனிய நாவலாசிரியர், முதல் உலகப்போரில் தான் அனுபவித்தக் கொடுமைகளை கண்ணீர் காவியமாக விரித்திருக்கிறார். அவரின் புகழ்பெற்ற படைப்பில், *All Quiet on the Western Front* போருக்கு எதிரான மிக வலிமையான போராயுதமாக எழுத்தாளரால் வீசப்பட்டுள்ளது நம் முன்..
நம்முள் பதிந்திருக்கும் இளமை, கனவு, நம்பிக்கை போன்ற வெற்றிக்கான ஏணிப்படிகளை போரின் ஆணிவேராயிருக்கும் வெடிகுண்டுகள் எப்படி தவிடுப்பொடியாக்கி விடுகின்றது என்பதை நுணுக்கமாக பேசி செல்கிறது இந்நூல்..
1929 ல் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்நூல், 2022 ஆம் ஆண்டு திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி அனைவரையும் திக்குமுக்காடச் செய்யும் திரைப்படமாகவும் வெளிவந்தது..
அதில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், கதையின் தீவிரத்தையும் காட்சிப்படுத்திய விதம், முதல் உலகப்போர் வாசனையை உலகறிய செய்தது மட்டுமல்லாது 4 ஆஸ்கர் விருதுகளையும் 2023 ல் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது..
சில சமயங்கள்ல நாம கூட இந்த மாதிரி ஒரு செயல்பாட நாம செய்யணும் இல்லனா இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் நமக்கு அமைந்தால் எப்படி இருக்கும் அப்படின்னு ரொம்பவே ஏங்குவோம் இல்ல ரொம்பவே ஆசைப்பட்டிருப்போம் அதே விஷயம் நமக்கு கிடைத்த பிறகு அப்பாடா சாமி எப்படா இதுல இருந்து வெளில வருவோம் அப்படின்னு நமக்கு தோணும் இல்லையா அதேபோல தான் இங்கேயும்..
முதலாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சார்பில் கலந்து கொண்ட ஒரு போர் வீரர் பால் எப்படியாவது தன் தாய் நாட்டிற்காக ஏதாவது செய்து சாதித்திட வேண்டும் என்ற நோக்கோடு படையினுள் நுழைய தனது இளமை கனவு நம்பிக்கை அனைத்தும் சின்னா பின்னம் ஆகிறது சில தினங்களிலே..
இப்படியாக போர் வீரர் பாலின் நிழலோட்டத்தில் இருந்து இந்த கதை விரிகிறது.. முதல் உலகப்போரின் முடியும் தருவாயில் நார்த் பிரான்ஸ் எல்லையில் சில நூறு மீட்டர் இடத்திற்காக ஏற்பட்ட போரில் பல லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாக நேர்ந்தது..
அங்கே போரில் கலந்து கொண்ட வீரர்களின் உணர்ச்சிகளையும், மனநிலையையும், எண்ண ஓட்டங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து நம்மையும் பதற்றத்துடன் போருக்குள்ளாக பயணிக்க வைத்திருக்கிறது இந்நூல்..
இப்புத்தக வாசிப்பு பயணத்தில் என் மனதை கிழித்த சில வரிகள் போர்வீரர் பால் தனது எதிராளியை தாக்கி விட்டு பின்னர் அவனது சட்டை பையினுள்ளிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்து சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்த அந்த நிமிடங்கள், காரணம் புகைப்படத்தில் இருந்தது அவரது குடும்ப உறுப்பினர்களின் நினைவலைகள்..
“After the man’s death, Paul looks through his wallet and finds letters and photographs of the soldier’s wife and child. He learns the man’s name is Gerard Duval..
He realizes that the man he killed was a person with a life, a family, and a future, just like himself. He is depressed and devastated, feeling an intense connection to the man he has just killed and the life he has ended.”
போர்வீரர் பால் மரணித்தபின் உணர்வற்ற வார்த்தைகளாக பதிவு செய்யப்பட்ட வாக்கியம் தான் நம் புத்தகத்தின் தலைப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது,
*All quiet on the Western Front*
கொடூரமான உள்ளர்த்தமிக்க வரிகள் நமது உணர்ச்சியின் ஆழத்தை நேரடியாகத் தாக்கி, மனிதநேயம் மற்றும் அமைதியின் அவசியத்தை உலகிற்கு நினைவூட்டிய எழுத்தாளராக வலம் வருகிறார் நூலாசிரியர்..
*வளங்களைக் கைப்பற்றுவதற்கும், அதிகாரங்களை அஸ்திபாரமிடுத்துவதற்கும், மத மற்றும் இன முரண்பாடுகளே போராய் வெடிக்கின்றன.. ஆனால் இழந்த குருதியையும், உயிரையும் மீட்க இயலுமா?*
என்ற கேள்விக்கணைகளோடு எந்தப் பிரச்சனையையும் தீர்க்கும் வழி வன்முறை அல்ல..!!
புரிதலும், உரையாடலுமே..!! அமைதிக்கான வித்தாய் அமைகிறது என்று மௌனமாய் பேசி செல்கிறது இந்நூல்..
போரினால் ஏற்பட்ட வலிகளையும், போர் வீரர்களின் வலிநிறைந்த வழியையும் கண்ணீர் துளிகளாய் என் விழிகளில் கொண்டு வந்து நிறுத்தியது இப்புத்தகம்🥺🥺
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | All Quiet On the Western Front |
| ஆசிரியர்: | எரிச் மரியா ரெமார்க் (Erich Maria Remarque) |
| வெளியீடு: | Raphael Publishing Company |
| விலை: | ₹.412.69 |
| அறிமுகம் எழுதியவர்: |
அ.சுகிர்தா
|
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
