இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல்.
நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக் இந்தோனேசியாவின் நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர். இது அவரது முதல் நாவல். இதற்குப் பின் ‘அருணாவின் தட்டு’ என்ற அடுத்த நாவல், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,
இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் ஆகியவையும் வந்துள்ளன. பிரமோதய அனந்த தோய்ர் (Pramoedya Anastya Toer 1925-2006) அவர்களுக்குப் பிறகு இந்தோனேசியாவிற்கு வெளியே நன்கறியப்பட்ட எழுத்தாளராக லக்ஷ்மி பமன்ஜக் (பிறப்பு. 1971) உருவாகியுள்ளார். இந்தியப் பெயர் போல ஒலித்தாலும் இந்திய கலாச்சாரத் தாக்கம் கொண்ட கிழக்கு ஜாவாவின் மண்ணின் புதல்விதான்.