அம்பேத்கர் தலித் அல்லாதவராக மட்டும் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸ்க்கு இணையாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருப்பார். மனசாட்சியற்ற இந்திய சமூகத்தில் தலித்தாக பிறந்த ஒரே காரணத்தினாலே இன்றும் தீண்டப்படாத தலைவராக நீடிக்கிறார். உயிர்களை கொல்லும் போது மட்டுமல்ல, உன்னதமான மனிதர்களை வரலாறு வஞ்சிக்கும் போதும் என் இருதயத்திலிருந்து ரத்தம் வழிகிறது!” என கண்களில் வழிந்த விழிநீரை துடைத்து கொண்டே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் முன்னாள் சுப்ரிம் கோர்ட் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
வரலாறை வன்மம் இல்லாமல் மனசாட்சியோடு வாசித்த 100 வயதை நெருங்கும் கிழட்டு வாசகனின் ‘நீதி மொழிகள்’ சமூகத்தின் பொட்டில் அறைகின்றன.
நீங்கள்.. பாடசாலையில் கோணிப் பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்திற்காக தண்ணீர் குடித்த போது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா? ரோட்டோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காய் உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா? என்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா? தலித் என்பதற்காகவே நீங்கள் பயணம் செய்த வண்டிகள் கவிழ்க்கப்பட்டு இருக்கின்றனவா? அமெரிக்காவில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து ஆபிஸர் ஆன பிறகும் உங்களுடைய வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா? மலத்தை வாயில் திணிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக் கேட்டு ‘துராத்மா’க்களால் ஒரு முறையாவது நீங்கள் அவமதிக்கப்பட்டு இருக்கிறீர்களா..? ”இல்லை” என்றால் நிச்சயமாக, உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது!
அன்றைக்கு தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர் தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை தீட்டு தீட்டுவென தீட்டியவர். அந்த தீண்ட தகாதவனின் வியர்வை சிந்திய அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என எந்த அதிகார மையத்தாலும் ஒரு நொடிக் கூட செயல்பட முடியாது. அடுத்த வல்லரசு ‘இந்தியா’ தான் என பீற்றி திரியும் சூரப்புலிகளுக்கு,’இந்தியாவின் பொருளாதாரத்தை தீமானிக்கும் ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’ யாருடைய உழைப்பால் உருவானதென எப்படி தெரியும்? தேசிய கொடி உருவாக்கத்தின் போது மூவண்ண கொடிக்கு மத்தியில் நயவஞ்சகமாக யோசித்த காந்தி, காங்கிரசின் சின்னமான ‘ராட்டையையும்’,சவார்க்கர் இந்துக்களின் அடையாளமான ‘ஓம்’ முத்திரையும் தான் போட வேண்டும் என அடம்பிடித்த போது ‘அனைவரும் சமம்’ என பறைச்சாற்றும் ‘அசோக சக்கரத்தை’ தான் போட வேண்டும் என வலியுறுத்திய அம்பேத்கரை, இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்தி கொண்டு திரியும் ‘ஜெய்ஹிந்த்’களுக்கு எப்படி தெரியும்? வேண்டுமானால் ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்ற சொல்லாடல் பொய்யாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் ‘அம்பேத்கர் இன்றி அணுவும் அசையாது’என்பதே பேருண்மை!
அரசியல்,பொருளாதாரம், சமூகம், சட்டம், வணிகம், வரலாறு, தத்துவம், கல்வி, மொழியியல், இதழியல், சமயம் என அனைத்து துறைகளிலும் கற்றறிந்த ஒரே மேதை இந்தியாவிலே அம்பேத்கர் மட்டுமே. ஆனால் அவரை பற்றி உப்பு சப்பில்லாமல் அரைப்பக்கத்திலே கடந்து போகிறது நமது பாடத்திட்டம்.’வர்க்க பேதத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்திய மார்க்ஸ், லெனினினுக்கு அடுத்து லண்டன் மியூஸிய நூலகத்தை முழுமையாக கரைத்து குடித்தவர் பிறவி இழிவான சாதிய வர்க்கத்திற்கு எதிராக போராடிய அம்பேத்கர் மட்டுமே. ஆனால் அவர் எழுதிய பல கட்டுரை தொகுதிகளை மறைத்து வைத்து இன்னமும் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது இந்தியா.”ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. ஆதலால் இந்தியை விட தமிழுக்கே இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் இருக்கிறது”என எந்த பச்சை தமிழனும் பேசாததை, உரத்த குரலில் பாராளுமன்றத்தில் வெடித்த அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.”நாய்களை விடவும், பன்றி விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும், இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்?”என காந்திக்கு எதிராக வீசப்பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை. தீண்டாமையை, சாதியை ஒழிக்க முற்படவில்லை. இந்திய திருநாடு என ஜால்ரா அடிப்பதையும் நிறுத்தவில்லை!
”இந்தியாவில் காலந்தோறும் மகாத்மாக்கள் வந்தார்கள். மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்”என லண்டன் வட்டமேஜை மாநாட்டில் மகாத்மாக்களை அம்பேத்கர் வறுத்தெடுத்த போது, மிஸ். ஸ்லேடுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த காந்தி ‘மகாத்மா’வானார். ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் துடித்த அம்பேத்கருக்கு ‘துரோகி, ஆங்கிலேயனின் கைக்கூலி, மகர் நாய்’ என்ற பட்டங்களை பம்பாயில் வழங்கி, உருவ பொம்மையையும் கொளுத்தியது காந்தியின் ஹரிஜன சேவா சங்கம். ஒரு கட்டத்தில் தேசிய அரசியலில் அம்பேத்கரின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அம்பேத்கர் ‘தலித்தே’ இல்லை என தலித்துகளின் வாயாலே சொல்ல வைத்தது காந்தியின் காங்கிரஸ்.’அப்படியென்றால் எங்களை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்’என ஹரிஜன மக்கள் கேட்ட போது,’ நாங்கள் ஹரிஜன மக்களுக்காக போராடுவோம். அவர்களை உறுப்பினர்களாக எல்லாம் சேர்த்து கொள்ள மாட்டோம்’என உடனே பல்டியடித்தார் தேசபிதா. இது தான் உண்மையிலே சத்திய சோதனை! கலங்கமற்ற கடவுளாக வலம் வரும் காந்தியின் முகத்திரையை கிழிக்க வேண்டும். இல்லையென்றால் ஆயிரமாயிர ஆண்டுகளாக தொடரும் தலித்துகளின் புலம்பல், பழங்குடிகளின் விசும்பல், காஷ்மீரிகளின் ஓயாத செந்நீர், வடகிழக்கு பெண்களின் வற்றாத கண்ணீர், தெலங்கானாவில் நொறுக்கப்படும் எலும்புகள் ஈழத்தில் அறுக்கப்படும் தாலிகள் எல்லாம் என்றென்றும் ஜன்பத் மகாத்மாக்களால் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு கொண்டே இருக்கும்.
‘கார்ல் மார்க்ஸை வர்க்கத் தலைவர்’ என்றும் ‘அம்பேத்கரை சாதீய தலைவர்’ என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள். ஏனென்றால் சாதிய தலைவர் என்றால் அவர் சாதிக்காக மட்டுமே அறிவாளை தூக்கி கொண்டு போராடுபவர். ஆனால் அம்பேத்கர் அவர் பிறந்த ‘மகர்’ சாதிக்காகவோ அல்லது மராட்டியருக்காவோ மட்டும் போராடாமல் இந்தியா மற்றும் உலகம் முழுக்க பரந்து வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதியால் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக அறிவாயுதம் ஏந்தினார். தந்தை பெரியார் தலைவர் என்றழைத்த ஒரே புரட்சியாளரான அம்பேத்கரை ‘சாதீய தலைவர்’ என சொல்வதும் சாவான பாவமாகும்., அம்பேத்கர் தலித் லீடர் என சொல்லும் காவி கோஷ்டிகளின் முகத்தில் நாளைய வரலாறு காறி உமிழப் போகும் வார்த்தை… ”போடா ஃபூல்!”
கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.