நூல் அறிமுகம் : எஸ். ரா. வின்… ” அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது ”  – யாழினி ஆறுமுகம் 

நூல் அறிமுகம் : எஸ். ரா. வின்… ” அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது ”  – யாழினி ஆறுமுகம் 



ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
நூல்: “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது”
விலை: ₹114.00 INR*·
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
கடந்த ஆண்டு வெளியான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களது சிறுகதை தொகுப்பான “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” தற்போது தான் படித்து முடித்தேன்.
ஒவ்வொரு கதையும்  வரலாற்றையும், நினைவுகளையும், நடப்பு உலகையும் தனது அடித்தளமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.
அதிலும் கிரேக்கத்து முயல் கதை மிகவும் அருமை. ( இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா…?
வியப்பாக இருக்கிறது…!)
பின்னிரவுத் திருடன், பெரிய வார்த்தை, இருபது வயதின் அவமானங்கள், வயதின் கனவுகள் ஆகிய கதைகள் எல்லாம் ஆழ் மனதின் சிக்கல்களை மிக நுட்பமாக போகிற போக்கில் கதை மாந்தர்கள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு கதையும் வெகு இயல்பான, சரளமான நடை.
“தரமணியில் கரப்பான் பூச்சிகள்” கதையில் “மனிதர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள், ஏமாற்றியதைப் பற்றி பெருமை பேசுகிறார்கள், மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள்” என்று கூறுவதெல்லாம் படிக்கும் போது உண்மையிலும் உண்மை என்றே தோன்றுகிறது.
எஸ். ராமகிருஷ்ணன் – Welcome to S Ramakrishnan
“ரசவாதியின் எலி” கதையில் “வெளிச்சம் மட்டுமே உலகின் இயல்பாகவும், இருள் விலக்கப்படவும், ஒதுக்கப்படவும் வேண்டியது என்று முடிவு செய்து  விட்டார்கள். ஆனால் உண்மையில் இருளும், வெளிச்சமும் எதிரான இரண்டல்ல, ஒன்றைப் புரிந்து கொள்ள இன்னொன்று அவசியமானது ”  மனிதனுடைய எல்லா நடத்தைகளிலும் இதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.
முதல் கதையான  “அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது ”  எங்கோ அதிகாரத்தில் உள்ள ஒருவரின் அற்ப சந்தோசத்திற்காக திரிசடை தீவில் ஒன்பது ஆண்டுகள் தனது வாழ்க்கையை கழித்ததன் மூலம் டக்ளஸ் வேறு ஒரு உலகை புரிந்து கொள்ளவும், வாழ்க்கை அர்த்தமுள்ளது தான் என்று தெரிந்து கொள்ளவும் அவனுக்கு ஒன்பது ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டது…
(நமக்கு…!?)
ஒவ்வொரு கதையையும் படிக்கும் நேரத்தை விட அக்கதையின் சிரத்தன்மையையும்,
படித்து முடித்தவுடன் ஏற்படும் எண்ண ஓட்டமும், கற்பனைக் கிளர்ச்சியுமே அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இது தான் படைப்பின், படைப்பாளியின் வெற்றி என்றே கருதுகிறேன்.
*வாய்ப்புள்ளோர் மட்டும் அல்ல…*
*வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்…*
– யாழினி ஆறுமுகம் –

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *