நூல் பெயர்: அறம் செய்ய விரும்பு வோம்! நாடக வடிவில் ஆத்திச்சூடி கதைகள்.
ஆசிரியர்: மோ.கணேசன்.
விலை: ரூபாய் 50.
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்,
Books for Children.
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/authors/k-m-k-elango-writer/
அவ்வை எழுதிய ஆத்திச்சூடி நூலின் அர்த்தம் புரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி என்றால் சிறுவர்களுக்கு? ‘அறம் செய்ய விரும்பு’ முதல் ‘அஃகஞ் சுருக்கேல்’ வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப நாடக வடிவில் எழுதப் பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு உதவிடும் வகையில் சிறுவர்களுக்காக எளிமையான வழியில் எழுதப்பட்டு இருக்கின்றது. ஆசிரியர் மோ.கணேசன் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி. தன்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக அவர் பெற்றோர், சகோதரர்கள் ஆகியோரைப் பட்டியலிட்டதுடன் தன்னுடைய எழுத்துப் பணிக்கு தூண்டுகோலாக கருதியது ஆசிரியர்களைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு .
தமிழ்வாணன் என்ற பத்திரிக்கையாளர் தந்தையாகவும், தாமரை என்னும் இல்லத்தரசி தாயாகவும், ஆதித்தன் என்கின்ற நான்காம் வகுப்பு மாணவன் , அகிலன் என்னும் ஒன்றாம் வகுப்பு மாணவன் பிள்ளைகளாகவும், சங்கீதா டீச்சர், வினோதன், பரமன், யாழினி ஆகிய மாணவர்களுடன் தாத்தா மோகன் ராஜி, பாட்டி வள்ளி ,ராமு என்னும் நாய்க்குட்டி, பேசும் கிளி , பிச்சை எடுக்கும் பாட்டி என்று கதை மாந்தர்கள் அமைக்கப்பட்டு நாடகம் வடிவம் பெற்றுள்ளது.
13 காட்சிகள் மூலம் 13 ஆத்திசூடிகளை எளிய நாடக வடிவம் அளித்து இருப்பது பாராட்டுக்குரியது. பள்ளிகளில் நடத்த சிறப்பான நாடகங்கள் இவை. தனித்தனியான நாடக வடிவம் பெறாமல் ஒரே கதைமாந்தர்கள் உடன் ஒரே நாடகமாக அல்லாமல் தனித்தனி கதை வடிவாகச் செயல்படுத்தப் பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளுக்காக பணி செய்பவர்கள், குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்கு பயனுள்ள நூல் இது.
பாராட்டுக்கள்!