அறிவியல் பேசுவோம் (Ariviyal Pesuvom)!
இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
29.10.2024
அறிவியல் உலகம் இந்த வாரமும் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை! முட்டை ஓடு இல்லாமல் கோழிக்குஞ்சுகள் பொரிக்கும் அதிசயம், ஆதி மனிதர்கள் யானையை விருந்து வைத்த வரலாறு, திமிங்கலங்கள் பிளாஸ்டிக்கைத் தின்னும் அவலம், பட்டிலிருந்து உருவாக்கப்பட்ட ஹைட்ரோஜெல் பேட்டரி… இப்படி பலவற்றை உள்ளடக்கிய இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் இதோ!
1. பிளாஸ்டிக்கை உணவு என நினைக்கும் திமிங்கலங்கள்
ஆழ்கடல் இருளில் திமிங்கலங்கள் ஒலி அலைகளை வெளியிட்டு, அவற்றின் எதிரொலியை உணர்ந்து, இரையின் இருப்பிடம், அளவு மற்றும் வடிவத்தை அறிந்து கொள்கின்றன. டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பிளாஸ்டிக் குப்பைகளை நீருக்கடியில் எதிரொலிப்பு சோதனைக்கு உட்படுத்தியதில், அவை திமிங்கலங்களின் இரை போலவே ஒலியை எதிரொளிப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் திமிங்கலங்கள் பிளாஸ்டிக்கை உணவாக நினைத்து உட்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
http://dx.doi.org/10.1016/j.
2. நகரும் திறன் கொண்ட பூமியின் முதல் விலங்குகளில் ஒன்று!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 57.5 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவம், பூமியின் ஆரம்பகால விலங்குகளில் ஒன்றாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ‘குவாஸ்டியோ சிம்ப்சோனோரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது பல செல்கள் கொண்ட ஒரு தட்டையான, வட்டமான blob ஆகும். இது ஒரு மர்மமான கேள்விக்குறி வடிவத்தைக் உள்ளடக்கியுள்ளது. இது நகரும் திறன் மற்றும் உடல் சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
https://onlinelibrary.wiley.
3. ஓடு இல்லாத முட்டை குஞ்சு பொரிக்குமா?

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் முட்டை ஓடு இல்லாமல் கோழிக்குஞ்சுகளை வளர்க்கும் புதிய ‘ஷெல்-லெஸ் கலாச்சார அமைப்பு’ (SLCS) முறையைக் கண்டுபிடித்துள்ளனர். கருவை ஒரு சுழலும் கலாச்சார பாத்திரத்தில் வைத்து, ஆக்சிஜன் மற்றும் கால்சியம் கார்பனேட் தூளை சேர்த்து வளர்க்கும் இந்த முறையில் 10.5% குஞ்சுகள் வெற்றிகரமாக குஞ்சு பொரித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு கரு வளர்ச்சி, ஸ்டெம் செல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்தும்.
https://www.nature.com/
4. இந்தியாவில் ஆதி மனிதர்கள் யானைகளை உண்டதற்கான ஆதாரம்

காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்ட 3 லட்சம் ஆண்டுகள் பழமையான யானை எலும்புகளில் மனிதர்கள் வெட்டியதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. இது இந்தியாவில் மனிதர்கள் விலங்குகளை உண்டதற்கான மிகப் பழமையான சான்றாகும். அழிந்துபோன பாலியோலோக்சோடன் எனும் யானை இனத்தைச் சேர்ந்த இந்த எலும்புகள், மனிதர்கள் எலும்பு மஜ்ஜையை உண்பதற்காக எலும்புகளை உடைத்ததைக் காட்டுகின்றன. மனித பரிணாம வளர்ச்சியில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன.
5. 4.1 கோடி இலக்கங்களைக் கொண்ட புதிய பகா எண் கண்டுபிடிப்பு!

தன்னார்வ கணிதவியலாளர் லூக் டியூரன்ட், இலவச GIMPS மென்பொருள் மற்றும் பல GPU களைப் பயன்படுத்தி 4.1 கோடி இலக்கங்களுடன் கூடிய மிகப்பெரிய பகா எண்ணைக் கண்டுபிடித்தார். இந்த 52வது மெர்சென் பகா எண்ணிற்கு 2.52 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. 10 கோடி மற்றும் 100 கோடி இலக்க பகா எண்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 1.26 கோடி மற்றும் 2.1 கோடி ரூபாய் பரிசுகள் காத்திருக்கின்றன. பகா எண்கள் கிரிப்டோகிராஃபி போன்ற துறைகளில் முக்கியமானவையாகும்.
https://www.mersenne.org/
6. மெதுவாகும் அட்லாண்டிக் நீரோட்டங்கள்: உலகிற்கு அச்சுறுத்தல்.

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டங்கள் விரைவில் நின்றுபோய், உலகளாவிய காலநிலையைப் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வட அரைக்கோளத்திற்கு வெப்பத்தைக் கடத்தும் முக்கிய நீரோட்டங்களான இவை, புவி வெப்பமடைதல் காரணமாக மெதுவாகி வருகின்றன. IPCC அறிக்கையை விட இந்த சரிவு விரைவில் நடக்கக்கூடும். இதனால் ஏற்படும் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைய நோர்டிக் கொள்கை வகுப்பாளர்கள் முயற்சிக்க வேண்டும்.
https://en.vedur.is/media/ads_
7. பூமியின் உயிரினங்களை மாற்றிய விண்கல் தாக்குதல்!

326 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு எவரெஸ்ட் சிகரங்கள் அளவுள்ள S2 விண்கல் பூமியைத் தாக்கியது. இதனால் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டு, கடலின் மேற்பரப்பு கொதித்தது. வளிமண்டலம் சூடாகி, தூசி பூமியை மூடியது. ஒளிச்சேர்க்கை நின்று போனது. ஆனால் பாக்டீரியாக்கள் அழியவில்லை. சுனாமி கடலில் இருந்து இரும்புச்சத்தை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததால், இரும்பு-உண்ணும் பாக்டீரியாக்கள் பெருகின. இது ஆரம்பகால உயிர் பரிணாமத்திற்கு உதவியிருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
http://dx.doi.org/10.1073/
8. நேரக் கட்டுப்பாட்டு உணவு முறை டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நேரக் கட்டுப்பாட்டு உணவு முறை (காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை) பயனுள்ளதாக இருப்பதாக, ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. இந்த முறை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆய்வில், சிலரது எடைக்குறைப்புக்கும் இம்முறை உதவியது. உண்ணாவிரதம் கூடாத மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு இந்த முறை பொருந்தாது. மருத்துவரது ஆலோசனை அனைவருக்கும் முக்கியமானது.
https://doi.org/10.1016/j.
9. பட்டு ஹைட்ரோஜெல் பேட்டரி: மருத்துவ உலகில் புதிய புரட்சி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பட்டு ஹைட்ரோஜெல்லைப் பயன்படுத்தி மிகச்சிறிய லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இந்த பேட்டரி மனித முடியைப் போல ஆறு மடங்கு அகலம் கொண்டது. சுண்டெலி இதயத்தில் இது சோதிக்கப்பட்டு, டிஃபிபிரிலேட்டராகவும் பேஸ்மேக்கராகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டது. எதிர்காலத்தில் இது பயோமெடிக்கல் உள்வைப்புகள், மைக்ரோரோபோடிக் சாதனங்களை இயக்கப் பயன்படலாம்.
https://doi.org/10.1038/
10. பார்கின்சன் நோய் குடலில் தொடங்கலாம்

பார்கின்சன் நோய் மூளையை பாதிக்கும் நோய் என்றாலும், அது குடலில் தொடங்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. குடலில் உள்ள E. coli பாக்டீரியாக்கள் உருவாக்கும் ஒருவகை புரதத்துண்டுகள் மூளைக்குச் சென்று பார்கின்சனை ஏற்படுத்துகின்றன. காபி குடிப்பது இந்த புரதத் துண்டுகள் உருவாவதைத் தடுக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புரதத் துண்டுகள் குடலில் இருந்து மூளைக்கு எவ்வாறு பயணிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.
https://doi.org/10.1021/
தொடர்ந்து அறிவியல் பேசலாம்!
த. பெருமாள்ராஜ்,
அறிவியல் பேசுவோம் (Ariviyal Pesuvom) கடந்த வார செய்திகளைப் படிக்க…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Pingback: இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் - Book Day