அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 21: அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் / முதுமக்கள் தாழி,பிரமீடுகள்,                                              ரேபீஸ் கிருமி - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்

அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள்

அறிவியலாற்றுப்படை 21

முனைவர் என்.மாதவன்

பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு நாள் நாய் என்னை கடித்துவிட்டது. நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்க்கும் நாய்தான் என்றாலும் எனக்குத் தேவையான ஊசிகளை வரிசைப்படி போட்டுக்கொண்டேன். இதே காலகட்டத்தில் எங்கள் ஊரில் ஒரு விவசாய தொழிலாளி ஓருவரையும் வேறு ஒரு தெரு நாய் கடித்தது. தகவல் தெரிந்த நான் அந்த தொழிலாளியை அழைத்து பேருந்து செலவுக்கு காசு கொடுத்து அரசு மருத்துவமனையில் கிடைக்கும் ஊசிகளை போட்டுக்கொள்ளச் சொன்னேன். இரண்டுநாட்கள் கழித்து அவரைச் சந்தித்தேன். அவர் ஊசி மருந்து செலுத்திக் கொண்டாரா? எனக் கேட்டேன். அவரும் சிகிச்சை பிரமாதமாக நடைபெறுகிறது என்று சொன்னார். நான் எனது பணிகளில் ஆழ்ந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து அவர் இறந்துபோனார். விசாரித்த பின்னர்தான் தெரிந்தது அவர் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வைத்தியரிடம் சென்று பச்சிலை வைத்தியம் செய்துகொண்டாராம். மிகவும் வருத்தப்பட்ட நான் அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது ”என்ன செய்வது இவருக்கு பச்சிலை மருந்து  ஒப்புக்கொள்ளவில்லை. இதைவிட பெரிய நாய் கடித்தவர்கள் எல்லாம் அந்த வைத்தியரின் பச்சிலை வைத்தியத்தால் குணம் அடைந்தார்கள்” என பல்வேறு வகைகளில் புளகாங்கிதம் அடைந்துபேசிக்கொண்டிருந்தனர்.

Graphic Rabies Virus - The Travel Doctor
                                              ரேபீஸ் கிருமி

ரேபீஸ் கிருமி அணில், பூனை போன்ற விலங்குகளால் கூட பரவும். அதற்கு பெரிய சிறிய வேறுபாடில்லை என்பதை புரியவைக்க பக்குவமில்லாத வயது அது அந்த சூழலில் என்னால் அதிகம் வாதிட இயலவில்லை. ஆனாலும் அறிவியல் பூர்வமான தீர்வுகள் இருக்கும்போது இதுபோன்ற உயிர் தொடர்பான இடர்களில் மக்கள் எவ்வாறு புரிதல் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்பதைப் புரியவைத்தது. மக்கள் மத்தியில் சரியான புரிதலை அதிகப்படுத்த நாம் மேலும் அறிவியல் பூர்வமான தகவல்களைக் கற்று அவர்கள் மொழியில் பேசவேண்டும் என்ற பேரறிவை இந்த நிகழ்வு அளித்தது. நான் உதவி செய்ய முன்வந்த நபர் ரேபீஸ் தொற்று உள்ள நாய் கடித்தவர். பச்சிலை சாப்பிட்டு குணமானவர்கள் ரேபிஸ் தொற்றில்லாத நாய்களால் கடிபட்டவர்கள் என்பது இன்றைக்கும் புரியாதோர் உள்ளனர்.

இந்த இடத்தில் ஒருவரது நம்பிக்கை என்பது தவறில்லை ஆனால் எந்த நேரத்தில், எவ்வெவற்றை , எந்த அளவில் நம்புவது என்பதுதான் விவாதப்பொருளாகிறது. அறிவியலாற்றுப்படையின் அடுத்த சில பகுதிகள் நம்பிக்கைகள் தொடர்புடைய மதநம்பிக்கைகள் தொடர்புடையன. அந்த வகையில் இந்த முன்னுரை.

இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் குறிப்பிட்ட ஒழுங்குகளால் நிறைந்தது. அவ்வாறான ஒழுங்குகள் தொடர்ந்து மேம்படும்போது அறிவியல்பூர்வமான வழிமுறைகள் பிறக்கின்றன. பெருவெடிப்பு தொடங்கி சூரியகுடும்பத்தின் பிறப்பு வரையிலும் இவ்வாறான ஒழுங்குகளின் பயன்பாட்டைப் பார்த்தோம். மனிதர்களின் பரிணாமம், அவர்களின் உணவுத் தேடல், நாகரீகங்களின் தோற்றம், மொழியின் பிறப்பு, எழுத்துக்களின் பிறப்பு, சாகரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என பல்வேறு அறிஞர்களின் பிறப்பும் கருத்துகளையும் பார்த்தோம். அறிவியல் எல்லாக் காலகட்டங்களிலும் வீறுகொண்டு எழுந்துவருவது கண்கூடு. அறிவியல் இயற்கையிடமிருந்தும், பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களிடமிருந்தும் விடுதலை பெற்றது. இவ்வாறு விடுதலையடைந்த அறிவியல் பல்வேறு மதங்களின் பிடியிலும் ஆட்பட்டு தவித்தது. அவ்வாறான தவிப்புகளில் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பட்டியலிடுவது இத்தொடரின் நோக்கமல்ல. அறிவியலின் வளர்ச்சியை நேரடியாகப் பாதித்த ஒரு சில தகவல்களைப் பார்ப்போம்.

பரந்து விரிந்த இந்த உலகில் பெரிதாக தொலைதொடர்பு வளர்ந்திருக்காத நிலையில் ஆங்காங்கே வாழ்ந்த மனிதர்கள் அவர்களது வாழ்க்கையைப் பற்றியே முற்றிலும் அறியாதவர்களாக இருந்தனர். இவ்வாறு கூட்டமாக வாழ்ந்திருந்தோரில் யாரேனும், நோயுற்றோ,வயது முதிர்ந்தோ இறக்கும்போது அவர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது.

இந்நிலையில் காலத்திற்கும் நம்மோடு வாழ்ந்த மனிதர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். அவர் விரைவில் விழித்தெழுவார் என்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்திருக்கலாம். மேலும் வசதியான வாழ்க்கை வாழ்ந்துமுடித்த அரசர்கள் போன்றவர்களின் இறப்பையும் சாதாரண மக்களால் நம்ப இயலவில்லை. அந்த வகையில் அவர்களை அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் துணையுடனேயே பாதுகாப்பாக வைத்திருக்க முடிவு செய்திருக்கலாம். அப்படி அடக்கம் செய்யப்பட்டவைகளே பிரமீடுகள் என்று நம்பப்படுகிறது.

எகிப்து பிரமிடுகள் பற்றி நீண்ட காலமாக வெளிவராத ரகசியங்கள்... தலைசுற்ற  வைக்கும் ரகசிய வரலாறு...! | Unknown Secrets About Pyramids of Egypt - Tamil  BoldSky

சாதாரண மக்களையும் தாழிகளில் வைத்து அடக்கம் செய்யும் பண்பாடு உலகெங்கிலும் உள்ளது. தமிழ்நாட்டிலும் கூட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இவ்வாறு இறப்புக்குப் பின்னான வாழ்க்கை என்பது பல்வேறு நம்பிக்கைகளை துவக்க காலங்களில் உருவாக்கியது. மனிதர்கள் வாழும் வரை அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் இறப்புக்குப் பின்னர் நன்றாக வாழவேண்டுமானால் உயிருடனிருக்கும்போதே சில நல்ல காரியங்களை செய்யவேண்டும் என்ற நம்பிக்கைகளுடன் கடவுள் நம்பிக்கைகளின் பிறப்பை ஒற்றுமைப்படுத்த இயலும். புவியியல் எல்லைகள் கடந்து அனைத்து மத நம்பிக்கைகளிலும் இதனைப் பொருத்திப் பார்க்க இயலும். சுருக்கமாக இறப்பு பற்றிய பயமே பல்வேறு நம்பிக்கைகளையும் அதனோடு தொடர்புடைய கடவுள் மற்றும் மதங்களை உலகெங்கிலும் தோற்றுவித்துள்ளன.

RAMANATHAPURAM ARCHAEOLOGICAL RESEARCH FOUNDATION: முதுமக்கள் தாழி

இந்த நம்பிக்கைகளில் ஆங்காங்கே வாழ்ந்த மனிதர்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றலுக்கு ஏற்றபடி கதைகளும் வரலாறுகளும் தோன்றின. இவ்வாறான கதைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாக சொல்லப்பட்டன. வாய்மொழியாக சொல்லப்பட்டதால் இவ்வாறான கதைகளில் பல்வேறு ஏற்ற இறக்கங்களும், விறுவிறுப்பைக் கூட்ட பல்வேறு இடைச்செறுகல்களும் ஏற்பட்டன. மேலும் மனித வாழ்வின் எல்லை மிகவும் குறுகியதாக இருந்ததாலும் எழுத்துகளும் அச்சு இயந்திரங்களும் பிறப்பதற்கு முன்பாகவே இவைகள் பிறந்ததாலும் வெவ்வேறு பகுதிகளில் இதே கதைகள் பல்வேறு வடிவங்களில் புழங்கத் தொடங்கின. இவ்வாறான கதைகள் பொழுதுபோக்கிற்காகச் சொல்லப்பட்டு பகிரப்படுவட்டதில் எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் அவை அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன. இது அறிவியலின் வளர்ச்சிக்கு தடைகற்களாக இருந்தன. அவற்றில் சிலவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

கட்டுரையாளர்:

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 20: தேனிலவு நாட்களிலும் ஆராய்ச்சி செய்த அறிஞர் அரிஸ்டாட்டில் (Aristotle) | Philosophies in Tamil - https://bookday.in/

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்

முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 16: எழுத்துக்களின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *