கேள்வியின் நாயகனாகும் அறிவியல்
அறிவியலாற்றுப்படை – 22
– முனைவர் என்.மாதவன்
நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.
”நோவா மிகப்பெரிய படகு போன்று கடலில் மிதக்கும் ஒரு அமைப்பை உருவாக்கு, அதில் உனக்கும் உனது குடும்பத்தினருக்குத் தேவையான தானியங்களை கொஞ்சம் சேமித்துக்கொள். பல அடுக்குகள் கொண்டதாக அது அமையட்டும். கண்ணில் காணும் அனைத்து விலங்கினங்கள்,பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் ஒரு செட் (ஆண் ஒன்று பெண் ஒன்று) அந்த படகில் அடைக்கலப்படுத்து, நான் விரைவில் ஒரு நீர்ப்பிரளயத்தை உண்டு பண்ணப்போகிறேன். அதிலிருந்து உங்களில் சிலரைக் காப்பாற்றி மீண்டும் உலகில் உங்களை உயிர்ப்பிக்கவே இந்த ஏற்பாடு” என்கிறார்.
கடவுளுக்குக் கீழ்ப்பணிந்து நோவாவும் அப்படியே செய்தார். நீர்ப்பிரளயம் ஏற்பட்டது. நோவாவின் மூலம் மீண்டும் உலகம் உயிரினங்களுடனான உயிர்க்கோளமானது என்று விவரிப்பு செல்கிறது.
இது ஒரு நல்ல ஏற்பாடுதான். இந்த நிகழ்வுகுறித்த குறிப்புகள் பைபிளில் காணப்பட்டாலும் பல்வேறு இதர சமய நூல்களிலும் காணக் கிடைக்கிறது. எங்கிருந்து எங்கு சென்றது என்பதற்கான ஆதாரங்கள் ஆய்வுக்குரியன. இது கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா ? கதை. இன்றைக்கும் பல்வேறு நல்ல கருத்துக்கள், நிகழ்வுகள் பல்வேறு அறிஞர்களின் பெயர்களில் உலவுகிறது அல்லவா? மனிதர்களின் கூட்டுழைப்பாலும் அனுசரணையான நடவடிக்கைகளாலும் அனைத்து உயிரினங்களும் காக்கப்படவேண்டும். உலகின் நீட்சிக்கு பல்லுயிர்களின் பங்கு தேவை என்று இதனைப் புரிந்துகொண்டு மேலும் நகர்வோம்.
மனிதர்கள் தொடக்க காலங்களிலிருந்தே கூட்டாகவே செயல்பட்டுவந்தனர். நாடுகளாகத் திருத்தப்படாத காடுகளில் பல்வேறு வனவிலங்குகளை எதிர்கொள்ளவும் அவற்றில் உண்ணத்தக்கவற்றை வேட்டையாடவும் இந்த குழு உணர்வே பயன்பட்டிருக்கும். பெரிய மிருகமாகக் கிடைத்துவிட்டால் அவை கெட்டுப்போவதற்குள் பகிர்ந்து உண்ணவும், பின்னர் அதுபோலவே பெரிய விலங்கை அடித்துச் சுவைக்கவும் உதவிய ஏற்பாடு. வேறுவகையில் சொல்வதானால் கூட்டாய்க் கொன்று பல்லுயிர் சாப்பிடுவதற்கான ஏற்பாடாகவும் பார்க்க இயலும்.
பின்னாளில் விவசாயம்,வீடு, வாசல் என செட்டில் ஆன பிறகு அவர்களுக்கு ஓய்வு கிடைத்தது, இவ்வாறான ஓய்வு நேரம் அவர்களுக்குள் வழிபாட்டுணர்வை ஏற்படுத்தின. இன்றைக்கும் ஓய்வு நாட்களில்தான் நம்மூரிலும் திருவிழாக்கள் கொண்டாடுவதை இதனோடு ஒப்பிட இயலும். இயற்கையில் எவையெல்லாம் அவர்களை அச்சுறுத்தினவோ அவைகள் அனைத்தையும் வழிபாட்டுக்குரியதாக்கினர். இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் எல்லா நாடுகளில் இது பொதுவானதாகியது.
உதாரணமாக பண்டைய எகிப்தில் ரா என்ற பெயரில் சூரியக்கடவுளும், ஆசிரிஸ் என்ற பெயரில் இறப்புக்குப் பின்னான நல்வாழ்வை ? தரும் கடவுளாகவும் கருதப்பட்டார். இசிஸ் என்ற பெயரில் ஒரு பெண்கடவுளும் பட்டியலில் இருந்தார். இவரது பொறுப்பு தாய்மை மற்றும் மந்திரம் செய்வது. இதுபோலவே பண்டைய கிரேக்க நாட்டிலும் காண இயல்கிறது. இவர்கள் நம்மூர் நவக்கிரகம் போன்று ஒரு குழுவினை வழிபட்டதாகத் தெரிகிறது. நேரடியாகவே ஜுபிடர், ஜுனோ, நெப்டியூன், மினர்வா, மார்ஸ் (செவ்வாய்), அப்போல்லோ, டயனா, வல்கன், வெஸ்டா, மெர்குரி, சிரிஸ் என்பதாக இவைகள் இருந்தன. இந்தியாவிலும் இது போலவே இயற்கை சக்திகளான நெருப்பு, தண்ணீர், காற்று போன்ற சக்திகளை கடவுளாக்கி வழிபட்டனர்.
இவ்வாறான பொதுத்தன்மைகளுக்குப் பிறகு பல்வேறு நாடுகளிலும் பல்வேறு காலகட்டங்களில் மதங்கள் உருவாகின. இவ்வாறன மதங்களின் பிறப்பு அனைத்துமே முதலில் மனிதர்களை நல்வழிப்படுத்துவதாகவே அமைந்தன. எந்தெந்த மதங்கள் எப்போது பிறந்தன? அவற்றைத் தோற்றுவித்தவர்கள் யார் என்பதையெல்லாம் ஆராய்வது இத்தொடரின் நோக்கமல்ல என்றாலும் அறிவியலின் பாதையில் தடையாக அமைந்தவை என்ற ரீதியில் இந்த சிறிய பகிர்வு. விரைவில் அறிவியலுக்குத் தாவிவிடுவோம். பல்வேறு மதங்களின் பிறப்பில் அமைந்துள்ள ஒற்றுமைத் தன்மையைப் பகிர்வது மிகவும் அவசியமானது என்ற ரீதியில் சில கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வோம்.
- அனைத்து மதங்களையும் உருவாக்கியவர்கள் தங்களின் சுயநலத்தைத் தியாகம் செய்து அன்பை போதித்துள்ளனர்.
- மக்களை ஒற்றுமைப்படுத்துவதின் அவசியத்தை உணர்ந்து மக்கள் ஒற்றுமைப்படும் புள்ளிகளை சேகரித்து தமது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர்.
- முக்கியமாக முன்மாதிரியாக திகழ்வதே ஆயிரம் சொற்பொழிவுகள், போதனைகளைவிட சிறந்தது என்பதை உணர்த்தியுள்ளனர்.
- தனக்குப் பிறகும் தமது கருத்துக்களை உலகில் பரப்ப சீடர்களை உருவாக்கினர்.
- தமது கருத்துக்களைப் பரப்ப கல்வி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போதனைகளைப் பரப்பினர்.
- தமது கண்ணில் பட்ட அனைத்து நல்ல விஷயங்களையும் தொகுத்து தமது கருத்துகளையும் இணைக்க முற்பட்டுள்ளனர்
இவ்வாறான பல்வேறு ஒற்றுமைத் தன்மைகள் நிலவினாலும் மத நம்பிக்கைகளை மக்கள் அப்படியே பின்பற்றாமல் கேள்விகளை எழுப்பும் பணியை அறிவியல் கண்ணோட்டங்கள் செய்யத் தொடங்கியது . இந்நிலையில் மதங்கள் அறிவியலை சந்தேகக் கண்ணுடன் பார்க்கத் தொடங்கின. குறிப்பாக அரிஸ்டாட்டில் போன்ற மேதைகள் சொன்ன ”இந்த உலகம் இப்படியே என்றென்றைக்கும் இருக்கும் மாறாது” என்ற கருத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருந்தது. அவர் அப்படி சொல்லிவிட்டு தமது ஆராய்ச்சிகளை பதிந்துவைத்துவிட்டுச் சென்றார். ஆட்சியாளர்களுக்கு மாற்றாகவோ அல்லது ஆட்சியாளர்களின் ஆலோசகர்களாகவோ மாறிய மதநம்பிக்கை கொண்டோர் எண்ணிக்கையும்பின்னாளில் பெருகின. இவ்வாறான எண்ணிக்கைக்கு குறைவாகவே அறிவியல் பார்வை கொண்டோர் இருந்தனர். இந்த விகிதாச்சாரம் இன்றுவரை மாறாதது வருத்தத்துக்குரியதே.
எழுத்துக்களின் உருவாக்கம் ஒருவகை புரட்சியை ஏற்படுத்தியது. அனுபவங்களைத் தொகுக்க உதவியது. அவ்வாறு தொகுக்கப்பட்ட அனுபவங்கள் நூலாக்கம் பெற அச்சு இயந்திரங்கள் உதவின. இவ்வாறான அச்சு இயந்திரங்களின் வரவு அறிவு பலரையும் அடைய உதவியது. துவக்க காலங்களில் வாய்வழியாக மதம் தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டபோது அவரவர் விருப்பத்திற்கு கருத்துகளை அடித்துவிட முடிந்தது. ஆனால் எழுத்து போன்ற நிரந்தரமான ஏற்பாடு மதங்களிலும் ஒருவிதமான ஒழுங்கினைக் கொண்டுவர முயன்றது. வேறுவகையில் சொல்வதானால் அறிவும் அறிவியலும் ஒன்றுபட்டுச் செயல்படத் தொடங்கின. இவ்வாறான கூட்டுச் செயல்பாடு பல்வேறு ஆரோக்கியமான மாற்றங்களை சமூகத்திற்கு கொண்டுவந்தன. அவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம். அறிவியல் பார்வை உலகை ஆளத்தொடங்கியவுடன் அது பல்வேறு பின்னடைவுகளையும் சந்தித்தது. அவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.
படை எடுப்ப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 21: அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.