பூமியின் வடிவம் என்ன?
அறிவியலாற்றுப்படை – 29
முனைவர் என்.மாதவன்
அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையிருந்தது.. தனது ஆயுள் எவ்வளவு என்று அறிந்துகொள்ள விரும்பினார். தமது நாட்டிலிருந்த ஜோதிடர்கள் அனைவரையும் அழைத்தார். பலரும் அவர்களுக்குத் தோன்றிய வகையில் கணித்துச் சொன்னார்கள். அரசருக்கு திருப்தி ஏற்படவில்லை.குறைவான ஆயுளைக் கணித்தவர்களை கண்டபடி ஏசினார். சிலரை தண்டிக்கவும் செய்தார்.
ஆனால் அந்த நாட்டிலிருந்த ஏனைய ஜோதிடர்கள் அவரிடம் செல்லவேத் தயங்கினர். ஆனாலும் வரிசைப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவேளையில் அனைவரும் சந்திக்கப் பணிக்கப்பட்டனர். அனைவரும் கவலையோடு இருந்த அந்த நாட்களில் ஒரு ஜோதிடர் மட்டும் மிகவும் தன்னம்பிகையுடன் சென்றார். அவரது கணிப்பு அரசருக்கு மகிழ்வைத் தந்தது. பல்வேறு பரிசுப் பொருட்களைத் தந்து அனுப்பினார். அதோடு இனிமேல் யாரும் ஜோதிடம் சொல்ல வரவேண்டாம் எனவும் சொல்லிவிட்டார். அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
அந்த ஜோதிடர் என்ன சொல்லியிருப்பார் என்பதை அறிய அனைவரும் விரும்பினர். அவர்கள் ஜோதிடர் வீட்டையடைந்து அவரிடம் அவரது கணிப்பைப் பகிருமாறு விளக்கினர். அவர் சொன்னது இதுதான் எனச் சொன்னார்.
- உங்கள் தந்தையைவிட நீங்கள் அதிக ஆண்டுகள் அரசராக இந்த நாட்டை ஆள்வீர்கள்.
- உங்கள் மகன் உங்களைவிட அதிக ஆண்டுகள் அரசாட்சி செய்வான்.
- எவ்வளவு என்பதை நான் பகிர்ந்தால் அது பொய்த்துப்போக வாய்ப்புண்டு.
- இந்த தகவலை இரகசியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
ஆனால் இது எப்படி சரியான கணிப்பாக இருக்கும் என்று சிலர் வாதிட்டனர். சரியோ தவறோ மன்னர் மகிழ்ந்துவிட்டார் அல்லவா. மேலும் ஒருவேளை அவருக்கு முன்னமோ இறப்பு ஏற்பட்டாலும் இந்த கணிப்பைப் பற்றி அவரைத் தவிர வேறு யாருக்கு நினைவிருக்கப்போகிறது.
இது ஜோதிடத்துக்கு மட்டுமல்ல அறிவியல் உண்மைகளுக்குப் பொருந்துவதாக பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. உண்மையையே கூறினாலும் அடுத்தவர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் கூறவேண்டும். வானத்தில் பல்வேறு விண்பொருட்களும் அந்தரத்தில் மிதந்தாலும் பூமி அப்படியல்ல எதன் மேலோ நிற்கிறது. பூமியை சுற்றிதான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது என்று பலரும் நம்பிக்கொண்டிருந்தனர். பாற்கடலில் மிதக்கும் ஆமையும் அதன் மேல் தாங்கி நிற்கும் யானைகளும் பூமியைத் தாங்கி நிற்பதாக பழங்கால இந்தியர்கள் நம்பினர்.
இதை ஓவியமாகவும் வடித்துவைத்தனர். பைபிள் நூலிலும் பூமியானது தட்டைவடிவமானது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பூமி சூரியனைச் சுற்றுகிறதா? சூரியன் பூமியைச் சுற்றுகிறதா? என்ற பஞ்சாயத்துகளும் இருந்தன. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அதற்கு முன்னால் பூமி உருண்டை என்ற சிந்தனை யாருக்கெல்லாம் வந்தது என்று பார்த்துவிட்டு வருவோம்.
பூமி எங்கிருக்கிறது? அதன் வடிவம் என்ன? என்பதைப் பற்றிய சிந்தனை மக்கள் மத்தியில் பண்டைய நாட்களிலிருந்தே இருந்துவந்தது. இன்றும் கூட பூமி அறுத்துவைத்த பூசணிக்காய் போன்று இருக்கிறது. அதனுள் நாம் இருக்கிறோம் என்று நினைப்போர் இருக்கலாம். பண்டைய காலம் தொட்டே வானத்திலுள்ள நிலவு, நட்சத்திரம் போன்றவற்றின் அசைவுகளை அறிவியல் நோக்கோடு பலரும் உற்று நோக்கினர்.. பித்தோகரஸ் (Pythagoras) அவர்கள்தான் முதன்முதலில் மற்ற எந்த வடிவியல் வடிவத்தையும் விட கோளவடிவமே பூமிக்குப் பொருத்தமான வடிவம் என்று குறிப்பிட்டார். இந்தியாவிலும் ஆர்யபட்டா அவர்கள் பூமி கோளவடிவமானது என்று குறிப்பிட்டதாக குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

ஏற்கனவே நமக்கு அறிமுகமான அரிஸ்டாட்டில் அவர்கள் வானவியலையும் விட்டுவைத்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே அறிவு ஜீவியாக இருந்த அவருக்கு அவரது மாணவர் அலெக்ஸாண்டர் பேருதவி புரிந்ததாகக் கூறப்படுகிறது. உலகை வெல்லப் புறப்பட்ட அவர் தாம் சென்ற இடங்களில் தாம் பார்த்த பல்வேறு வித்தியாசமான பொருட்களையும் வாங்கி அனுப்பினாராம். தொடர்ந்து கடிதங்கள் எழுதியும் கருத்துப் பரிமாற்றம் நடத்தினாராம். இதன் மூலம் அரிஸ்டாட்டில் தமது ஆய்வுகளை மேலும் கூர்மையாகச் செய்ய இயன்றது. பண்டைய காலங்களில் கிரகணங்கள் தீயவிளைவுகளின் முன்னோட்டம் என பலரும் பயந்தனர்.
ஆனால் அரிஸ்டாட்டில் (Aristotle) கிரகணங்கள் ஏற்பட்ட காலங்களில் பலரும் பயந்து வீடுகளுக்குள் முடங்கிய நேரங்களில் பயமின்றி அதனைக் கவனித்துக் குறிப்பெடுத்தார். இதன் மூலம் நிலவினை மறைப்பது பூமிதான். ஆனால் அது ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது என்பதற்காக பல ஆராய்ச்சிகளையும் செய்து பார்த்தார். குறிப்பாக சப்பாத்தி போன்ற வட்டவடிவிலான பொருட்களை சூரியனுக்கு நேரில் வைத்து நிழலை ஏற்படுத்திப் பார்த்தார். அது வட்டமாக விழுந்தாலும் வெவ்வேறு கோணங்களில் பிடித்தபோது சிறுகுச்சி போன்ற வடிவத்திலெல்லாம் நிழலை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு ஆரஞ்சு பழத்தை வைத்து சோதனை செய்ய முயன்றாராம். அப்போது எந்த கோணத்தில் வைத்தாலும் வட்டமாகவே இருந்ததாம். இதனை அடிப்படையாக வைத்து பூமியின் வடிவம் உருண்டை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் பூமி கோளவடிவம் என்பதை நிறுவிய பெருமை எரடோஸ்தனிஸ் (Eratosthenes) என்ற விஞ்ஞானி அவர்களையே சாரும். அவர் சூரியனது நிழல் விழும் கோணத்தை அடிப்படையாக வைத்து கிரேக்க நகரங்களான சீயோன் மற்றும் அலெக்சாந்திரியா ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறினார். குறிப்பாக இரவு பகல் சமநோக்கு நாளில் இந்த சோதனையை நிகழ்த்தினாராம். ஒரு இடத்தில் சூரிய ஓளிக்கதிர் நேர்க்கோணமாகவும் மற்றொரு இடத்திலும் சற்று சாய்கோணமாகவும் விழுகிறது என்று சொன்னால் பூமியின் வடிவம் கோளவடிமாகவே இருக்கும் என்பது அவரது வாதம்.
அறிவியல் என்பது நம்பிக்கையல்ல தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பலரும் அறிந்துணர்ந்த அறிவைக் கேள்வி கேட்பது அதன் மூலம் ஏற்கனவே இருக்கும் சிந்தனைகளை மேலும் மெருகேற்றுவது. இன்றைக்கு அனைத்துக்கும் அறிவியல் உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால் வெறும் கண்களையும் சிறிய அளவிலான கோணமானி உள்ளிட்டவற்றை நமது முன்னோர்கள் செய்துள்ள சாதனைகள் அளப்பரியவை. மேலும் அனைத்து நாடுகளிலும் இருந்த சமய நம்பிக்கைகள் இதுபோன்ற நம்பிக்கையாளர்களைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமயசீர்திருத்த இயக்கமும், சமய சீர்திருத்த எதிர்ப்பியக்கமும்,மறுமலர்ச்சியும் இவற்றின் வேகத்தைக் கூட்டின என்பதை மறுக்க இயலாது.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.