தொடர் : 8 அறிவியலாற்றுப்படை – நாகரீகங்களின் தோற்றுவாய்
– முனைவர் என்.மாதவன்
”இன்றைய பணியை நேற்றைய கருவியைக் கொண்டு செய்யாதீர்கள்” என்பார் அறிவியலாளர் வா.செ குழந்தைசாமி அவர்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு காலத்திலும் கருவிகளின் பயன்பாடு மனிதர்களின் வாழ்வை செழுமைப்படுத்தியது. கருவிகள் காலந்தோறும் மனிதர்களின் பணிகளை எளிமைப்படுத்திவருகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு எளிமைப்படுத்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆரம்பக் கால கணினிகள் அறை முழுவதும் நிரம்பியிருந்ததாம். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆண்ட்ராய்டு கைபேசியும் ஒரு கணினி போல்தானே செயல்படுகிறது.

சரி மீண்டும் கொஞ்சம் ஆதிகாலத்திற்கு செல்வோம். குகைகளிலும் மலைகளிலும் வாழ்ந்த மனிதர்கள் மெல்ல சமவெளிகளை நோக்கி வந்தனர். ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கிய பிறகு தினசரி பூவாவுக்கு என்ன செய்வது என்ற கவலை வந்தது விவசாயத்தின் கண்டுபிடிப்பு இப்போதுதான் உண்டானது. விவசாயத்தின் கண்டுபிடிப்பு குறித்து பல்வேறு கற்பனைக் கதைகள் உள்ளன. ஒன்றை இங்கு பார்ப்போம்.

கிராமமோ நகரமோ விவசாயமோ எதுவும் முறைப்படியாக உருவாகாத காலம். பசியோடிருந்த ஆதிமனிதன் மாம்பழமென்றை தன்னை அறியாமலே சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அளவுக்கதிகமான ருசி கடித்துக் கடித்துச் சுவைத்தான். பின்னர் பழத்தின் கதுப்புகள் தீர மாங்கொட்டை வந்தது. மேலும் சப்ப முடியாத நிலையில் அதனைத் தூர எறிந்தான். சில நாட்கள் கழிந்தன. நல்ல மழை பெய்திருந்தது. அப்போது அங்கே வந்த நாய் ஒன்று மண்ணைத் தோண்டத் தொடங்கியது. தனது கூரான நகங்களால் மண்ணைத் தோண்டுவதை அவன் அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தான். நாய்தோண்டத் தோண்ட பள்ளம் உருவானதும் அவனுக்கும் அதிசயமாக இருந்தது அந்த நாய் சிறிது நேரத்தில் கத்தத்துவங்கியது. சத்தம் தாளாத அவன் நாயை விரட்டினான். நாயும் போகிற போக்கில் ஒரு மாங்கொட்டையைப் பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றது.
தினம் தினம் இவ்வாறு தின்று கொட்டைகளை வீசி எறிந்து வந்தான். சில நாட்கள் வெய்யிலும், மழையுமாகக் கழிந்தது. பல நாட்களுக்குப் பிறகு அங்கே ஓரிடத்தில் இரண்டு மாவிலை துளிர் விட்டிருப்பதைக் கண்டான். அழகான சின்ன இலை பார்க்க அழகாக இருந்தது இது எப்படி இங்கே வந்தது என்று யோசித்தவாறே சுற்றியிருந்த பகுதிகளை நோட்டம் விட்டான். வேறு சில மாங்கொட்டைகள் காய்ந்து உலர்ந்திருப்பதையும் பார்த்தான். சிறிது தூரத்தில் மண்ணில் சிறிதே புதைந்திருந்த மாங்கொட்டையும் வளர்ந்திருப்பதைப் பார்த்தான். கொட்டையை மண்ணில் புதைத்தால் வளரும் என அறிந்தான்.

சில நாட்கள் கழிந்தன. மீண்டும் மாம்பழம் சாப்பிட்டான். அப்போது முன்னர் பார்த்த அந்த மாஞ்செடி சிறிது உயரம் வளர்ந்திருந்தது. இக்கொட்டையைப் புதைத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. முன்னர் நாய் மண்ணைத் தோண்டியது நினைவுக்கு வந்தது. தனது கை நகங்களால் மண்ணை நோண்டத் துவங்கினான். என்ன ஆச்சரியம் முதல் நாள் பெய்த மழையில் ஊறியிருந்த தரை ஆகையால் சிறிது தூரம் சிரமமில்லாமல் பள்ளம் உருவானது. பின்னர் ஒரு சிறிய கல் பதிந்திருந்ததில் அவன் நகம் மாட்டிக்கொண்டு கிழிந்தது. விரல் நகத்திலிருந்து இரத்தம் வந்தது. அவன் துடி துடித்துவிட்டான். அவனது முயற்சியை கைவிட்டு விட்டான்.
மேலும் சில நாட்கள் கழிந்தது. இப்போதும் நல்ல மழை பெய்திருந்தது. ஒரு நரி அவனை நோக்கிக் கத்திக்கொண்டே வந்தது. தன்னிடமிருந்த கம்பை எடுத்து வீசினான். நரி தப்பித்துவிட்டது. சேறும் சகதியுமாயிருந்த இடத்தில் கம்பு குத்திக்கொண்டு துளைத்து நின்றது. நகத்தின் புண்கள் ஆறியிருந்த நிலையில் கைகளுக்குப் பதில் கம்பைப் பயன்படுத்தி தோண்டலாம் போலிருக்கிறது என எண்ணினான்.
ஆம் விவசாயமே அன்றும் இன்றும் மனித இனத்தின் பசியைப் போக்க உதவுவதாக உள்ளது. எல்லா உயிரினங்களுக்குப் பசி என்பது தவிர்க்க இயலாததே. பசியைத் தணிக்க எல்லா உயிரினங்களும் தொடர்ந்து போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டியிருந்தது.. கதை முடிந்தது நமது பகுதிக்கு வருவோம்.
நெருப்பின் தற்செயலான கண்டுபிடிப்பு நமது மூதாதையர்களுக்கு பலவிதங்களில் பயன்பட்டது. முதலில் உணவு தயாரிப்பு, குளிரிலிருந்து பாதுகாப்பு, விலங்குகளிலிருந்து பாதுகாப்பு என பல உடனடி தேவைக்குப் பயன்பட்டது. அதே நேரம் மண்ணிலிருந்து வெண்கலம், இரும்பு போன்ற தாதுக்களைப் பிரித்தெடுக்கவும் பயன்பட்டது. இரும்பு போன்ற உலோகங்களை உருக்கி பிரித்தெடுக்கத் தொடங்கினான். இந்த உலோகங்களின் பயன்பாட்டையொட்டி கூட மனிதர்கள் வாழ்ந்த காலகட்டத்தை வரலாற்றாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

காடு விலங்குகளுக்கானது நாடு மனிதர்களுக்கானது என்ற என பாகப்பிரிவினை அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் உலகில் உயிரினங்கள் தோன்றிய அனைத்துப் பகுதிகளிலும் காட்டுவிலங்குகள் வாழும் பகுதி, மனிதர்கள் வாழும் பகுதி என ஒருவகையான பிரிவுகள் ஏற்பட்டன. மனிதர்களின் மூளை வளர்ச்சி அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதை உறுதிபடுத்தியது. காட்டிலும் தாவர உண்ணிகளும், ஊன் உண்ணிகளும் ஒருவழியாக தங்களுக்குள் பாகப்பிரிவினை போன்று செய்துகொண்டன. இதைத்தாண்டி எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்தவர்கள் செத்து மடிந்தனர். மன்னிப்பு விலங்கினங்களுக்கு பிடிக்காத வார்த்தை.
ஓரிடத்தில் மூதாதையர்கள் தங்கி வாழத் தொடங்கியபோது உணவுக்காக விவசாயம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. தங்கியதால் விவசாயம் செய்ததும், விவசாயம் செய்ததால் தங்கியதும் ஒன்றுக்கொன்று இணையான வாய்ப்பாயிருந்திருக்கும்.
இவ்வாறு விவசாயம் செய்ய அவசிய தேவையானதாக நீர் இருந்தது. எனவே ஆற்றங்கரைகள் பொருத்தமானதாக அமைந்தது. மேலும் ஆற்றங்கரையானது வண்டல் மண் உரம் போன்ற வளம் கொழிப்பதாக அமைந்தது.. விவசாயம் செய்யத் தேவையான பல்வேறு கருவிகளின் தேவையும் பல்வேறு வகையான கைவினைஞர்களையும் பெருகச் செய்தது. விவசாயம் உருவாக்கிய உபரி தயாரிப்பு நிலத்தை கைப்பற்றியிருந்தவர்களை செல்வந்தர்களாகவும் ஆக்கியது. செல்வந்தர்களானதும் மனிதர்கள் குணமும் மாறத் தொடங்கியது. எது எப்படியோ உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு காலகட்டங்களிலும் ஆற்றங்கரையோர நாகரீகங்கள் தோன்றின. இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் உலகின் பல பகுதிகளிலும் தோன்றின. அவற்றில் சிலவற்றினிடையே இணைப்பும் பிணைப்பும் கூட இருந்தது. அவற்றைப் பார்த்துவிட்டு அடுத்த கட்டம் செல்வோம். சரி இந்த உடையைப் பற்றி இன்னும் பேசவில்லையே. பேசுவோம்.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார். உறைவிடலாற்றுப்படை
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: தொடர் : 7 அறிவியலாற்றுப்படை – அறிவின் ஊற்றாய் உழைப்பு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சுவையான கட்டத்திற்கு வந்திருக்கிறது தொடர்.
Pingback: மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?