தொப என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர். அழகர் கோயில். பண்பாட்டு அசைவுகள் தெய்வம் என்றோர் மற்றும் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நூல்கள் பல ஆய்வு வட்டத்திற்கு வெளியேயும் பரவலாக கவனத்தைப் பெறுகின்றன.

அறியப்படாத தமிழகம் தமிழ் மொழியின் நீட்சியால் தமிழகத்திலும் பண்பாட்டு அசைவுகளிலும் மக்களின் வாழ்வு முறையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் பல அறியாத பக்கங்களின் வழியே நமக்கு அறியத் தருகிறது.
இந்த நூலில்
தமிழ்
வீடும் வாழ்வும்
தைப்பூசம்
பல்லாங்குழி
தமிழக பௌத்தம் எச்சங்கள்
பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும் கருப்பு
என ஏழு அதிகாரங்களின் கீழ் தமிழ் மொழியின் தன்மையையும் அதன் விளைவாக தமிழகம் மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சிகளையும் நாகரீக முன்னேற்ற நகர்வையும் நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
இஸ்லாம் கிறித்துவ மதங்களின் பரவலால் தமிழ் மொழியில் ஏற்பட்ட தாக்கங்களையும் நூலில் அலசியிருக்கும் அதே வேளையில் சாதிய அடக்குமுறைகளால் தமிழ் பண்பாட்டில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
பண்டைய தமிழக அரசர்கள் (சேர சோழ பாண்டியர்கள்) பலர் தங்களின் அதிகாரிளுக்கு பெயர்களோடு தமிழையும் இணைத்துள்ளனர்.
வெப்ப மண்டலப் பகுதியான தமிழகத்தில் மக்கள் நீரின் மீதான மதிப்பை எவ்விதம் போற்றிப் பாதுகாத்தனர் என்பதை விளக்கும் கட்டுரையில் ஏரி குளம் ஊருணி பொய்கை என ஒவ்வொன்றின் பெயர்க் காரணங்களை வாழ்வியலின் பின்னணியோடு விளக்கியிருக்கிறார்.
மனிதர்கள் உயிர்வாழ உணவு அவசியம். உணவு பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை வாழ் நிலத்தின் விளை பொருட்கள் சமூகப் படிநிலைகள் உற்பத்தி முறை பொருளாதார நிலை ஆகியவற்றை பொருத்து அமைகிறது.சமைத்தல் அடுதல் நீரிலிட்டு அவித்தல் அவித்து வேக வைத்தல் வறுத்து அவித்தல் சுடுதல் வற்றலாக்குதல் எண்ணெயிலிட்டுப் பொரித்தல் வேக வைத்து ஊறவைத்தல் என உணவை உண்பதற்கான சமையல் முளைகளை அன்றைய கூட்டும் குடும்பத்தில் வாழ்ந்த தமிழர்கள் பின்பற்றியிருந்தனர். உண்ணும் உணவானது உடல்நலத்திற்கு ஏற்றதாயும் தமது வேலைக்கு உகந்ததாயும் எவ்விதமான வேதிப்பொருட்கள் கலந்து உடலுக்குத் தீங்கு வராமலும் பொருளாதாரத்திற்கு உட்பட்டதாயும் இருக்கும்படியாக அமைத்துக் கொண்டனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக் குடும்பத்தில் வீட்டுச் சமையல் என்பது பெரும்பாலும் மறைந்து வருவதையும் ஏதோ ஒரு வேற்று தேசத்தில் விளைந்த உணவை உண்பதும் நாக்கிற்கு அதிக சுவையூட்டக்கூடிய துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதையும் நாம் எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது தமிழர் உணவு என்ற கட்டுரை.
பக்தி இயக்கத்தின் வளர்ச்சி தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல அதன் வருகையே சமண மற்றும் பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்கும் ஆரம்பமாயிருக்கிறது என்பதையும் நூலின் கட்டுரை விளக்குகிறது.
தமிழகத்தில் நிலவி வந்த சாதியப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருளில் ஒன்றாக உப்பு இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியார் சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பை இடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் பழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது.

பிறப்பு இறப்பு போன்ற தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்றால் அது தைப்பொங்கல் திருவிழா மட்டுமே.தமிழர் திருவிழா இந்துக்களின் திருவிழா என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற வினாவிற்கு விடையளிக்கும் பகுதியில் இவரின் ஆராய்ச்சியும் விளக்கமும் மிக அருமை. மக்களின் வாழ்வு முறையோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த விழாக்களே தமிழர் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுவதை விளக்கும் பாங்கு வியக்கத்தக்கது.
சாதிய்ப் படிநிலைகளில் மாட்டிக் கொண்ட இந்திய சமூகத்தில் ஒரு மனிதனின் வாழ்வில் சாதி பல்வேறு விளைவுகளை உருவாக்கி விடுகிறது.சாதியில்லாமல் மனிதன் பிறப்பதும் இல்லை மடிவதும் இல்லை.ஒரு மனிதன் மதம் மாறலாம் ஆனால் சாதி மாறுவது என்பது இயலாத காரியம்.மத எல்லைகளை மீறி தமிழ்நாட்டைசாதி வாட்டிக் கொண்டிருக்கிறது மத ஒற்றுமைக்கான அணுகுமுறைகளும் முன்னெடுப்புகளும் சாதியத்தின் அடக்குமுறைக்கு தீர்வைக் காண்பிக்கவில்லை.
தனி உடைமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி விளையாட்டு என அன்றைய சமூகத்தின் போக்கினை விவரிக்கிறது அறியப்படாத தமிழகம்.
தவிடும் தத்தும் துடுப்புக்குழி பண்பாட்டு அசைவுகள் நிர்வாணம் என்ற தலைப்பிலான கட்டுரைகள் அன்றைய காலகட்டத்தில் நிலவிவந்த வாழ்வு நெறிகளையும் மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது.
சங்ககாலப் பாடல்கள் இடம்பெற்ற நூல்கள் பல அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் பண்பாடு தொடர்பான நிறைய கள ஆய்வுகள் என நீண்ட உழைப்பும் இடைவிடாத சேகரிக்கும் ஆர்வமும் தொடர்ச்சியான வாசிப்பு அனுபவமும் அறியப்படாத தமிழகம் உருவாவதில் மிகுந்த சிரத்தையுடன் உதவிகரமாக விளங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது தொ.ப அவர்களின் எழுத்து.
நூலின் தகவல்கள்
நூல் : அறியப்படாத தமிழகம்
ஆசிரியர் : தொ.பரமசிவன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
ஐந்தாம் பதிப்பு : ஜூலை 2013
பக்கம் : 136
விலை : ரூ.100
நூல் அறிமுகம் எழுதியவர் :

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

