நட்டநடுநசியை தொட்டுவிட்டது காலம் . உறைந்த நிலையில்அசைவற்றுக் கிடந்த அந்த வீதிக்கு அவன் ஒரு சருகு போல ஓசையெழுப்பாமலே மெல்ல அசைந்தபடியே வந்து சேர்ந்தான். இருளில் மூழ்கி கிடந்த அந்த வீட்டிற்கு முன்பு வந்ததும் ஆவலாக வாசலுக்கு முன்பு நின்றான். வாசலில் இருந்த வேப்பமரம் அவன் வரவை சட்டென உணர்ந்து கொண்டு நெடு நாள் காணா நண்பனை கண்ட மகிழ்ச்சியில் குலுங்கி குலுங்கி தலையசைத்து . அவன் வாஞ்சையின் மிகுதியில் சிறிய பசிய இலைச்சுருள்களை உச்சிமுகர்ந்து கைகளால் நீவிவிட்டபடியே இருந்தான் . அவைகள் மெய் சிலிர்த்து பதிலுக்கு அவன் கன்னத்தை ஆதுரமாய் வருடின. தூரத்திலேயே அவனை அடையாளம் கண்டுகொண்ட சிமி ஒரே ஒருகுரைப்போடு நிறுத்திவிட்டு ஓடிவந்து அவன் புறங்கையை நக்கியபடி மூஸ் மூஸ் என்று மூச்சிரைத்தது..
வீட்டுக்குள்ளிருந்த கண்ணாடி சன்னல் வழியாக எல்ஈடி குண்டு பல்பின் ஒளிக்கீற்றுகள் கசிந்து வந்து இளமஞ்சள் நிறத்தில் வாசலை நனைத்துக்கொண்டிருந்தன. அந்த நேரத்தில் அந்த ரசவாத ஒளிக்கலவையில் வாஞ்சையாக வாலாட்டிபடி தன்னை சுற்றி வரும் சிமியை பார்ப்பது அவனுக்கு கள்ளமற்ற தன் ஆன்மாவை பார்ப்பது போல இருந்தது .வெகுநேரமாக தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தவனுக்கு சம்பவங்கள் இரயில் பெட்டியாக தடதடத்து நினைவுக்குள் ஓடின. அதை தொடர்ந்து வந்த நிலையில் இந்த நினைவுகள் இந்த நிலையிலும் எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறன என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. கேள்வி எழுந்த மனதில் நினைவு ளையங்கள் தற்காலிகமாக அறுந்து சூன்யத்தில் விழுந்தன நெடுநேரம் அசைவற்ற அரூபமாகக் கிடந்தான்.
மேல் சட்டை போடாத குழந்தையின் வயிற்றை ஆற்றாமையில் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள் .பெரியவள் பசியில் அரற்றி அரற்றி அரைமயக்கத்திலேயே துங்கிப்போயிருந்தாள் சின்னவள் மட்டும் வயிற்றை உரிக்கும் பசியை அடக்க முடியாமல் மோட்டு வளையில் பெரிய எருமை போல சுற்றி சுற்றி வரும் காற்றாடியின் நிழலை வெறித்தபடியே படுக்கையில் கிடந்தாள்.
‘’ என்ன செய்யிறதுன்னு யோசிங்க பெரியவங்க வைராக்கியமா பசியை தாங்கிக்கிறலாம் ஆனா பிஞ்சு குழந்தைங்க என்ன செய்யும் ‘’ என்றாள் .
ஏன் ரேசன் அரிசி இன்னிக்குகிடைக்கலியா ? என்றான் அவன்
மொதல்ல பக்கத்து வீடுகள்ள ரேசன் அரிசியையெல்லாம் நம்மளையே வாங்கிக்கிற சொல்லிடுவாங்க நமக்கும் சாப்பாட்டுக்கவலை இல்லாம இருந்துச்சு இப்ப கொரான பஞ்சத்துல எல்லாத்தையும் அவங்க அவங்களே வாங்கி சமைச்சுக்கிறாங்க .யார் பச்சப்புள்ளைங்கன்னு பாவம் பரிதாபம் பார்க்குறது. ?
‘’ கடவுளே ‘’
பக்கத்து வீட்டு சமையல் வாசனையை மோந்து பாத்துட்டு பச்சைப்புள்ளைக ஏங்கி ஏங்கி அழுவுறாங்க
நம்ம மளிகை கடையில கேட்டுப்பார்த்தியா ?
புள்ளைங்க பசியிலயே செத்துரும் போல இருக்கேன்னு ஆளில்லாத நேரமா பார்த்து நம்ம வழக்கமா சரக்கு வாங்குற மளிகை கடைக்காரன் கிட்ட போய் கொஞ்சம் அரிசி பருப்பு உப்பு புளின்னு மளிகை சாமான்கள் கேட்டேன். கையில காசு இல்லாம கடன் கேட்குறேன்னு தெரிஞ்சதும் உப்பு புளி குடுக்குற சாக்குல கையை தடவி தடவி குடுக்குறான் . மொறைச்சா நீ என்னை கவனிச்சா நானும் உன்னை கவனிச்சிக்கிறேன்னு கூசாம சொல்றான் பாவி.
அத அப்படியே அவன் மூஞ்சியில தூக்கி வீசிட்டு வரவேண்டியது தான?
தூக்கி வீசல அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்
அடுத்த நாள் கேட்டாள்
ஏங்க நம்ம ஊருக்கே மறுபடியும் திரும்ப போயிர முடியாதா?
நடந்து கூட போறதுன்னாலும் போயிடலாம் தான் ஆனா எப்படி முடியும் ? முக்குக்கு முக்குதான் போலிசு நிக்கிறானே.
ஊருலயே கூட இருந்திருக்கலாம் இல்ல ?
“”தப்பு என் மேலதான். கூலி வேலை செஞ்சாலும் ஊருல மதிப்பு மரியாதை இல்ல பட்டணம் போனால் சாதி மதம் பார்க்க மாட்டான் பசியாறி பொழைச்சுக்கலாம்னு ஊருல இருக்கிறவங்கள்லாம் சொன்னதை நம்பி நான் தான் உங்களை நச்சரிச்சு இங்க கூப்பிட்டு வந்தேன் .ஆனா விதி இப்படியாகும்னு யாருக்கு தெரியும் ?”
சம்சாரியா இருந்திருந்தாலும் அரைக்கஞ்சியாவது குடிச்சிருக்கலாம் .கட்டிட வேலை செஞ்சு பெரிய பொழப்பு பொளச்சிக்கலாம்னு கண்டவங்க பேச்சை கேட்டு ஒடி வந்துட்டோம் ஆனா இங்க திரும்புன திசையெல்லாம் பொணக்காடால்ல இருக்கு
கடவுள் விட்ட வழி
அந்தக்கடவுள மட்டும் இங்க இழுக்காத கடவுள் அப்படினு எல்லாம் இங்க எதுவும் இல்லை
நீங்க இப்படி மனசு விட்டு பேசக்கூடாது உங்க நண்பருகிட்ட கடன் கேட்டு போனீங்களே என்னாச்சு ?
எல்லாருமே கையை விரிச்சுட்டாங்க பாதிப்பேரு ஊருலயே இல்ல தப்பிச்சு போயிட்டாங்க.
சரி முதலாளிய பார்த்தீங்களா என்ன சொன்னாரு ?
மொதலாளியா ”” நீ அசலுர்க்காரன்னாலும் நல்லா உழைப்பாளி தான் ஆனாலும் வேலை இல்லையேப்பா நான் என்ன செய்யிறதுன்னு ஒரு நூறு ரூபாய் நோட்டை கொடுத்து எப்படியாவது ஊர் போய் சேர்ந்திருன்னார் ”” மறுபடியும் என்னை பார்க்க வந்திராதன்னு மட்டும் கராறாக சொல்லிவிட்டார்.
சிறிது நேரம் ஆனபின் பையில இருந்த பணத்தை எடுத்து அவளிடம் நீட்டியபடி
“”இந்தா நூறு ரூபாய் இந்தா இந்தப்பணத்தை வச்சிக்க நல்ல சமையல் பண்ணி ஒன் கையால ஒரு வாய் சோறு சாப்பிட்டு எத்தனை நாளாச்சு ? சாப்பிடனும்னு ஆசையா இருக்கு . ஆனா ஞாபகம் வச்சுக்கோ அது தான் நாம சாப்பிடுற கடைசி சாப்பாடா இருக்கனும் .நான் சொல்றது புரியுதா ?
விசம் குடிச்சிறலாம்ங்கிறியா ? விசத்தை வாங்குறதுக்கும் காசு வேணுமே பிறகு எப்படி சமைக்க முடியும் ?
கவுரமா சாகிறதுக்கும் தான் வழி இல்லையா ? சொல்லும் போதே ஹோவென்று அழுதுவிட்டான்.
பாவி மனுசன் பசி தாங்க மாட்டானே என்று அவளுக்கு மனசுக்குள் பதறியது.
மறு நாள் சில்லறை வேலை தேடி ஊரை சுற்றியலைந்து விட்டு வெறும் கையோடும் பற்றி எரியும் வயிற்றோடும் மனதில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது அடுப்பில் சமைத்ததற்கான வாசனை அடித்தது..
பிள்ளைகள் வாய் நிறைய சாப்பிட்டிருக்க வேண்டும். நிம்மதியாக துங்கினார்கள். அவனுக்கும் பரிமாறினாள். தேவைக்கும் அதிகமாக முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். பரிமாறும் போது கன்னம் மினுமினுத்தது.
கொஞ்சம் உணர்வு பெற்றதும் இவனுக்கு இடம் கால பரிமாணங்கள் பிடிபட்டன. வீட்டுக்குள்ளிருந்து இளமையின் தாள கதியில் மெல்லிய கொலுசொலி சப்தம் விட்டு விட்டு கேட்டது. சாவித்துவாரத்தின் வழியாக எட்டிப்பார்த்தான். இரவின் உருவெடுத்த இரண்டு உடல்கள் ஒன்றை ஒன்று கூடிக்களித்துக்கொண்டிருந்தன .அதில் ஒரு உடல் அவன் மனைவியினுடையது என்று கண்டு கொண்டான். காலம் துரோகத்தின் சாட்சியாக சுவர் பல்லியாக மாறி கடிகாரத்தின் மேலிருந்து வெறித்து நோக்கிக் கொண்டிருந்தது. நடு ஹாலில் அவனது உடல் தூக்கில் தொங்கியது இப்பொழுதும் அவன் ஞாபகத்திற்குள் வந்து அரூபமான அவனையும் பதறடித்தது .
சாவித்துவாரத்திலிருந்து உடனடியாக கண்களை அப்புறப்படுத்திக்கொண்டான் . எந்த உயிராக இருந்தாலும் இழையும் நேரத்தில் இடையூறு செய்யக் கூடாது என்ற ஒரு நினைப்பு தன்னிச்சையாய் வந்து போனது. தவிரவும் இந்த நேரம் தான் மனிதனுக்கு மனம் செத்துப்போகும் நேரம். . மனம் செத்துப்போனவைகளை இடையூறு செய்வதால் என்ன இலாபம் ? அது சரி மனம் செத்துப்போன தனக்கு ஏன் இவ்வாறு சிந்திக்க வருகிறது என்று மறுபடியும் எண்ணினான். எண்ணியதால் அதலபாதாளத்தில் விழுந்தான்
பார்வை இருளில் பறிபோயிற்று மீண்டும் நினைவு வந்த போது எங்கேயோ தாழம்பூ மடலவிழும் வாசம் வந்து நாசியை நிறைத்துப்போனது. சுவருக்குள் தேரையைப்போல ஊடுருவி வீட்டுக்குள் நுழைந்தான். சொந்த வீட்டிலேயே அன்னியனாக நுழைவது எத்தனை அவலமானது என்று எண்ணினான். ஹாலில் பச்சை நிற ஜீரோவாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது.சிறிது அறையில் இருந்த பொருட்கள் யாவும் சிறிது நேரத்தில் துலக்கம் பெற்றன அவனைத்தவிர புகைப்படத்தில் கம்பீரமாய் சிரித்துக்கொண்டிருந்த அப்பாவின் மூக்கு கண்ணாடி பளபளத்தது .ஒற்றுமை தேசத்தை வலியுறுத்தும் நம் மகத்தான தலைவரின் கோட்டுப்பாக்கெட்டில் சொருகியிருந்த தங்கப்பேனா உட்பட அனைத்தும் தெளிவாக பார்வைக்கு கிடைத்தன.
தன் படத்தை ஏன் இன்னும் அப்பா புகைப்படத்தின் அருகில் மாட்டி வைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
படுக்கையறையில் குழந்தைகள் நன்கு உண்ட அசதியில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தனர். பெரியவளை பார்த்தால் அச்சு அசலாக அவனைப் பார்ப்பது போலவே இருந்தது. இந்த நிலைமை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான்காவது படித்துக் கொண்டிருப்பாள். கண்ணீரின் விளிம்பில் குழந்தைகளுக்கு எண்ணற்ற முத்தங்கள் வைத்துவிட்டு அவளை தேடிப்போனான். அவள் மட்டும் தான் தனித்திருந்தாள். நெடு நேரம் நிலைகுத்திப் போன பார்வையோடு சூன்யத்தை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து எழுந்து போய் அலமாரியை குடைந்து அந்த கத்திரிப்பூ நிறத்தில் வெள்ளை பூக்கள் சிந்திய புதுப் புடவையை மார்போடு அணைத்தபடி எடுத்து வந்தாள். கண்கள் முழுவதும் கண்ணீர் வழிந்த படியே இருந்தது. அவள் அழுவதை பார்த்த அவனுக்கு கோபம் நொடியில் காணாமல் போய் மனது தானாக கனிந்து இளகியது அவன் அருகிலேயே நெடுநேரம்நின்றான். அவன் மட்டும் அவளை இரகசியமாக அழைக்கும் செல்லப்பெயர் சொல்லி அழைத்துப்பார்த்தான்.
விடிவெள்ளி போல கள்ளமற்று உறக்கும் குழந்தைகளை ஆசைதீர முத்தமிட்டவள் சேலைத்தலைப்பின் ஒரு முனையை கைகளால் முறுக்க ஆரம்பித்தாள் .அப்போது அவளது கண்களில் கண்ணீர் துளிகள் முத்து முத்தாக முளைத்திருந்தன. நீர்க்குமிழ் போல ஒரே ஒரு துளி கண்ணீரை உள்ளங்கையில் ஏந்திக்கொள்ளலாம் போலிருந்தது. சேலையோடு ஹாலுக்கு வந்தவள் வெகுநேரம் புடவையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். இது போனதிருமணநாளன்று கோவிலுக்கு போய் விட்டு அழகு சக்தி ஜவுளிக்கடையில் அவர்கள் இருவரும் ஒன்றாக சென்று எடுத்து வந்தது.ஞாபகத்திற்கு வந்தது. சிறிது நேரத்தில் சேலையை மார்போடு அணைத்திருந்தவளிடமிருந்து தாங்காத கேவல்கள் பீறிட்டு கிளம்பின.. அவனுக்கு தாங்க முடியாத வேதனை பிறந்தது.
பிறகு அவள் மர ஸ்டுலின் மீது ஏறி நின்று ஹால் மேல்சுவரில் மின்விசிறி பொருத்துவதற்கு பதிக்கப்பட்டிருந்த இரும்பு வளையத்திற்குள் நன்றாக முறுக்கிய சேலைத்தலைப்பின் ஒரு முனையை நுழைத்தாள். மறுமுனையை கழுத்தில் சுற்றிக்கொண்டாள் .அவ்வளவு தான் அவன் தாவிச் சென்று அவளை அள்ளி அணைத்துக்கொண்டு கேவினான். , இனம் புரியாத தீண்டலில் அவள் உடல் அப்படியே சிலிர்த்து ஆடியபடியே இருந்தது. அவன் எழுப்பிய ஒலிகள் எதுவும் அவளின் புறஉலக காதுக்கு எட்டவேயில்லை .. ஈரம் காயாத அவளது மார்பில் அப்படியே அவன் தலை சாய்த்துக்கொண்டான் இளஞ்சூட்டில் அவைகள் விம்மி விம்மி தணிந்தன. அதன் பிறகு அவன் தலையை அங்கிருந்து எடுக்கவேயில்லை.
தங்கேஸ்