“கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்
எழுத்தாளர் அருள்மொழி அவர்களின் டைரி சிறுகதை தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த சிறுகதை “கோழைத்தனம்” சாதிய பெருமிதமும், ஆணாதிக்க மனோபாவமும் ஒன்று சேர்ந்து பெண்ணியம் பேச வைப்பது இக்கதையின் மையக்கரு..
மாலதி, ஒரு லாரி ஓட்டுனரின் மகளாகப் பிறந்திருந்தாலும், தனது கடின உழைப்பால் டாக்டராக உயர்ந்து, தன் குடும்பத்திலும் பரம்பரையிலும் முதல் பெண் மருத்துவராக திகழ்கிறார்.. அதனைத் தொடர்ந்து அவளது திருமணம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மருத்துவர் சண்முகசுந்தரத்துடன் நடைபெறுகிறது..
திருமணத்தின் ஆரம்பத்தில், மாமியார் செண்பகவல்லி உள்ளிட்ட குடும்பத்தினர் மாலதியை அன்போடு கவனிப்பது போலத் தோன்றினாலும், காலப்போக்கில் அவர்களின் உண்மையான மனப்போக்கு வெளிப்படுகிறது, உயர்ந்த கல்வியும், மருத்துவராகச் சேவை செய்யும் வாய்ப்பும் இருந்தும், மாலதியை வேலைக்கு அனுப்புவதில் அவர்கள் காட்டும் தயக்கம், பெண்களின் திறமைகள் குடும்பச் சுவர்களுக்குள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைக் கூர்மையாக சுட்டிக்காட்டுகிறது..
அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அவற்றை குடும்பத்தினர் அலட்சியப்படுத்தி தட்டிக் கழிப்பது, மாலதியின் உள்ளத்தில் ஆழமான மனக்குமுறலையும் விரக்தியையும் உருவாக்குகிறது..
நீண்ட நாள் உழைப்பால் பெற்ற கல்வி பயனின்றி போகிறதே என்ற உணர்வு, அவளின் உளவியல் நிலையை பாதிக்கிறது.. ஆரம்பத்தில், குழந்தையின்மை அவளை வருத்தினாலும், குழந்தை பிறந்தபின்னரும் அதையே காரணமாக்கி அவளது மருத்துவப் பணியில் சேர்வதைத் தடுக்கிற சூழல், குடும்பத்திற்குள் செயல்படும் பெண்ணிய எதிர்ப்பின் வெளிப்படையான வடிவமாக அமைகிறது..
இதற்கிடையில், இடைத்தரகர்கள் மூலம் எப்படியாவது வேலைவாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பில் மாலதி தன்னைத் தானே தள்ளிக்கொண்டு செல்லும் நிலை உருவாகிறது..
அந்த முயற்சிகளில், அவள் எடுக்கும் ஒரு முக்கியமான முடிவுதான் என்ன? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவள் நிற்கும் அந்தத் தருணம் எதனால்?
படித்து, கல்வியில் தேறிய ஒரு பெண்ணாக அவள் எடுத்திருக்கும் அந்த முடிவு சரிதானா? என்பதை அறிய இந்நூலை வாசிப்போம்..
இக்கதை, ஒருபுறம் பெண்களின் சாதனைகளைப் பெருமையாகக் கொண்டாடும் சமூகத்தையும், மறுபுறம் அதே பெண்களின் கனவுகளையும் சுயநிலையையும் மறுக்கும் இரட்டை முகத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.. மாலதியின் உளவியல் போராட்டம், அமைதியான எதிர்ப்பு, மற்றும் தன்னம்பிக்கையை இழக்காமல் போராடிய போராட்டம் முடிவில் வெற்றி பெற்றதா?
மொத்தத்தில், கல்வி பெற்ற பெண்களின் கனவுகள் எவ்வாறு குடும்ப கட்டுப்பாடுகளால் அடக்கப்படுகின்றன என்பதைக் காட்டும் வலுவான சமூக விமர்சனமாகத் திகழ்கிறது..
பெண்களின் உளவியலை புரிந்து கொண்டு இக்கதையை படைத்து சிறு நூலாக அச்சிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையோட்டம் சிறப்பு, சொல்லப்போனால் இக்கதை போக்கு பெற்றோர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் முக்கியமாக வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் என்றே கூறலாம்..
கல்வியில் உயர்ந்து விளங்கும் மாணவச் செல்வங்களின் உள்ளமதில்
ஒளிந்திருக்கும் கோழைத்தனத்தை ஒழிக்க அறிவை மட்டும் அளிப்பதோடு நில்லாது மன தைரியத்தையும் விதைத்து, அவர்கள் கற்ற கல்விக்கு துணையாக நிற்க,
உள்ளத்தில் உறுதியை வளர்ப்பதே சமூக மாற்றத்தை நிலை நிறுத்தும்..
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கோழைத்தனம்” சிறுகதை |
| ஆசிரியர்: | அருள்மொழி |
| வெளியீடு: | |
| விலை: | ₹.25 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அ. சுகிர்தா நெல்லை. |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

