விட்டில் பூச்சியாய்…
இருந்தே விண்ணுலகம்
பறக்க ஆசை…
புத்தகப் பக்கங்களில்…
மறைக்கப்பட்ட மயிலிறகில்
உருவான புதிய உயிரை
உலகம் காண ஆசை…
எதிரிகளும்…புன்னகைத்தே…
நட்பு பாராட்டும் நல்லுறவில்…
தன்னிலை மறக்க ஆசை…
சிலைகளுக்குள் உயிராய்
வாழும்…கடவுளும்… உணர்வாய்
என்னுடன் ஒருநாள் வாழ ஆசை…
பூட்டிய அறைக்குள்…கொஞ்சமாய்
இருக்கும் ஒளியில்… மணம் வீசும்
மலரின்…அழகை இரசித்திட ஆசை…
காற்றில் பறந்திடும்…காகிதமாய்…
நல்காதலர்களுக்கு மத்தியில் தூதாய்…
கவி பரிமாறிட ஆசை…
பாதி கடந்த கடல் நடுவே…
கடலலையின் அசைவும்…
ஆழமும்…கூறும் மொழி அறிய ஆசை…
மின்மினிப் பூச்சிகளின்…வெளிச்சத்தில்
இரவின் இருளில்…நடைபாதையில்
தனியாய் நடந்திட ஆசை…
ஆயிரமாயிரம் ஆசைகளில்…
ஆசைகளைத் துறந்த…புத்தரின்
சிலையை வணங்கிட ஆசை…
இந்நிமிடம் தோன்றிய ஆசைகள்
யாவும் எழுத்தாக்கி…எழுதி விட்டேன்…
இன்னும் எண்ண முடியாமல்
இதயத்தில் மறைந்திருக்கும்
என்னென்னவோ
எழுதா ஆசைகள்…
– சக்தி ராணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

