நூல் அறிமுகம்: எஸ். ராமகிருஷ்ணனின் “அவளது வீடு” – அன்புக்குமரன்

நூல் அறிமுகம்: எஸ். ராமகிருஷ்ணனின் “அவளது வீடு” – அன்புக்குமரன்




எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகங்களில் இது நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம். அவரின் சிறுகதை தொகுப்பில் “அவளது வீடு” நான் வாசிக்கும் முதல் புத்தகம்.

எனது இனிய டால்ஸ்டாய், பதேர் பாஞ்சாலி என்ற 2 கட்டுரைகள் கிட்டத்தட்ட ஒரு கதை கேட்பது போலத்தான் மிக சுவாரசியமாக இருக்கும். இப்படி பட்ட ஒரு படைப்பாளியின் புனைக்கதைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படைப்புதான் “அவளது வீடு” என்ற சிறு கதை தொகுப்பு.

நாவல் வாசிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு தவம் போன்றது, அதை தொடர்ந்து வாசிக்காவிட்டால், அந்த கதையுலகில் நாம் சஞ்சரிப்பது கடினம் என்று நான் உணர்ந்ததாலோ என்னவோ, சிறு கதை புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன.

எழுத்தாளர் கே.வி ஷைலஜா அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆற்றிய உரையில் “அவளது வீடு” என்ற ஒரு கதையை அவையோருக்கு சொன்ன காணொளியை யூடூபில் நான் ஒரு முறை எனது மகிழுந்தை ஒட்டியப்படியே கேட்டிருக்கிறேன். பின்பு புத்தகங்களே துணை! என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே இந்த கதையை விவரித்தார்.பெண்களின் அடிப்படைத் தேவைகள் இது தான், அவர்களுக்கு இது போதும் என்ற கருத்துப்படிவம் நிறைந்த நடுத்தர ஆண்வர்கத்தினரின் மூர்க்கத்தனமான உளவியல் வன்முறையைச் சொல்லாமல் சொல்லும் கதை இது.

இந்த கதையை கேட்டபோது ஒரு பேருந்து பயணத்தில் இரு தோழிகளின் உரையாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. அதில் ஒரு தோழி சொல்கிறாள் “நான் வெகுநாட்களாக ஒரு இருசக்கர வாகனம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன், ஆனால் வீட்டிலோ அந்த செலவுக்கு நகை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் “. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் மற்றோரு தோழி “ஆண்களுக்கு என்று வரும் பொழுது, அவர்களுக்கு வண்டி, வீடு என்று அவர்களுக்கென வாங்கிக்கொள்கிறார்கள், நமக்கு என்று வரும் பொழுது நகை, புடவை கல்யாணம் என்பதோடு முடிந்து விடுகிறது. ஒரு ஆண்மகனாக எனக்கு வாய்த்திருக்கும் சுதந்திரத்தை நினைத்து பெருமை கொள்வதா அல்லது அவர்களின் நிலையை நினைத்து அனுதாபப்படுவதா? தெரியவில்லை. இவை இரண்டுமே அந்த பேருந்து பயணம் முடிவடையும் வரைதான்.

அவளளது வீடு கதையை கேட்டவுடனேயே இந்த சிறுகதையை எழுத்து வடிவத்தில் வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் டிசம்பர் 2020 தேசாந்திரி பதிப்பகத்தில் “அவளது வீடு” என்று தலைப்பிலேயே ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு அசத்திவிட்டார்கள். சென்னை புத்தக கணக்காட்சிற்கு முன்னதாக சிறிய அளவில் 40 பதிப்பகங்கள் கலந்து கொண்ட ஒரு புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் என் கண்களில் பட்டதும் அளவில்லா மகிழ்ச்சியுடன் அதை என் வசப்படுத்திக்கொண்டேன்.

இந்த கதைகளை தேர்ந்தெடுத்தது வாசகர்கள்தான்.

20 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பில் ஒரு கதை கூட எனக்கு சலிப்பு தரவில்லை. பரவலாக இந்த சமூகத்தில் இணக்கமான ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் நடுவில் சிலர் சில விசித்திர பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து மறைக்கின்றனர். இந்த சிறுகதைத் தொகுப்பில் பெருவாரியான கதைகள் இவர்களின் வாழ்க்கையை சற்று எட்டி பார்த்து நமக்கு பரவலாக கிடைக்கும் பொது ஞானம் அல்லாது வழக்கத்திற்கு மாறான ஞானத்தை தருவதாக உணர்கிறேன்.

வாடகை வீட்டிற்கான விளம்பரங்களைப் பார்த்து அந்த வீடுகளை தேடி போகும் ஒரு பெண்மணி, பெய்யும் மழையின் அளவுகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பெடுக்கும் ஒரு தந்தை, ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்ற இலக்கிய கூட்டத்தில் ஒற்றை பெண்மணியாய் போய் தன் மனம் கவர்ந்த எழுத்தாளரை தரிசிக்கும் ஒரு இல்லத்தரசி, சேவலுக்காக தன் குடும்பத்தைத் துச்சமாக மதிக்கும் ஒரு கிராமத்து கிழவர், ஒரு ஆயுதத்தை பரிசுப் பொருளாக தன்வசம் எப்போதும் வைத்திருக்கும் ஒரு மனைவி, டயரிகள் எழுதும் பழக்கமுடையவர் அதை கடைசியாகப் புரட்டிப்பார்க்கும் ஒரு முதியவர், செகாவை காணவரும் வினோதமான விருந்தாளி, பாம்பை தன் கட்டுப்பாட்டில் வைப்பதை ஒரு போதையாகக் கொண்ட ஒரு பாம்பாட்டி, பின்னோக்கி செல்லும் ஒரு மனிதர்,வீட்டில் எப்பொழுதும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு அப்பா என்று பட்டியல் சற்று நீளம் தான்.

20 கதைகளில் பெரும்பாலான கதைகள் என்னை கவர்ந்தன. வெறும் இருட்டு மற்றும் பனாரஸ் என்னை வெகுவாக கவரவில்லை. ஒரு வேளை இதற்கு சற்றும் ஒவ்வாத கருக்களைக் கொண்ட மற்ற கதைகளோடு சேர்த்து இதை வாசித்ததன் காரணமாக இருக்கலாம்.

இதில் என் மனதுக்கு நெருக்கமான கதைகள் “அவளது வீடு”, “ஆண் மழை”, “எம்பாவாய்”, “தனலக்ஷ்மியின் துப்பாக்கி” , “பதினாறு டயரிகள்”, “இன்னும் சில கிளிகள் “, “நீரிலும் நடக்கலாம்”, “அப்பா புகைக்கிறார்”, “சௌ ந்தரவள்ளியின் மீசை”.

மிகச் சிறிய கதையான வானோர் என்ற கதை , எஸ்.ராமகிருஷ்ணனின் பிரசுரிக்கப்படாத உப்பு என்ற சிறுகதையை நினைவுப் படுத்தியது.

சௌந்தரவள்ளியின் மீசை உளவியல் ரீதியாக ஒரு மாணவியின் பாதிப்பை சித்தரித்தாலும் அதற்கு மாறாக எனக்கு இரு இனிய தருணங்களை நினைவூட்டியது.

1. போப்பின்ஸ் என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் கண்ணாடியை முதல்முதலாக பார்க்கும் ஒரு தம்பதியினரின் எதிர்வினை
2. என் கல்லூரி பருவத்தில் கேரளாவில் உள்ள தன் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய சக மாணவியின் கையை பார்த்து ஆர்வத்தினால் மலையாளத்தில் ஒரு கேள்வியை கேட்டு அவளை நாணச் செய்தது. அந்த கேள்வியின் தமிழாக்கம் “உன் கைகளில் உள்ள முடியை காணவில்லை”. அதற்கு அவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் அளித்த பதில் “பிரேமிடம் நல்ல கவனிக்கும் திறன் உள்ளது ”

இந்த சிறுகதை வாசிப்பில் மற்றொன்று புலன் படுகிறது. யாருக்கும் தீங்கில்லாமல் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் தோற்றத்தினாலோ, மனரீதியாகவோ, பழக்கத்தினாலோ மாறுமட்டு இருப்பவர்களை நாம் ஏற்று கொண்டதே இல்லை. மாறாக பரவலாக உலவும் இணக்கமானவர்களின் செயற்பாடுகளாக “புகைப்பிடித்தல், மனைவியை அடித்தல், பெண்களை பின் தொடர்தல், ஏதோ ஒரு மயக்கத்தில் தன்னை அடிமையாக்கி குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்” என ஈரமில்லாமல் வாழ்கின்ற ஆண்வர்கத்தினரை பெரும்பாலான பெண்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஆக்க பூர்வமாக ஒரு இலக்கியத்தை ரசிப்பது, திருமணப் பரிசாக ஒரு பொருளை தன் வசம் பாதுகாத்து வைப்பது, வசிப்பதற்கு விசாலமான வீடு வேண்டி இருக்கும் பெண்மணி என நியாயமாக யாருக்கும் தீங்கில்லாத பழக்கங்களைக் கொண்டிருக்கும் பெண்மணிகளை எதிரியாக கருதும் சமூகம் வருத்தத்திற்குரியது.

கல்வி போராளிகளுக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் நாம். இல்லையேல் பண்பாட்டு தொடர்ச்சி என்ற பேரில் ஆண்களின் அட்டூழியங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

அன்புடன்,
அன்புக்குமரன் எத்தியரசன்

நூல் : அவளது வீடு
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
விலை : ரூ.₹270
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *