“அவதூறின் அம்புகள்” கவிதை
முகம் பார்த்துப் பேசத் துணிவற்ற
கோழை நெஞ்சங்கள் சில,
முதுகிற்குப் பின்னால் மட்டும்
வீரர்களாக மாறுகின்றன.
இல்லாத ஒருவரைப் பற்றி
இல்லாத கதைகளைப் புனைந்து,
வதந்திகளின் விருந்தில்
வயிறு நிரப்பிக் கொள்கின்றன.
நேரில் கண்டால்
நெய்யில் நனைந்த வார்த்தைகள்;
திரும்பிச் சென்றவுடன்
நஞ்சில் தோய்ந்த நாக்குகள்.
சிரிப்பின் பின்னால்
சிலந்தி வலை பின்னும் மனங்கள்,
நட்பின் பெயரில் நெருங்கி
நம்பிக்கையின் இதயத்தைத் துளைக்கின்றன.
சில நொடிகளுக்கு முன்
பாராட்டிப் பேசிய அதே உதடுகள்,
சில நொடிகளுக்குப் பின்
அவதூறின் அம்புகளை எய்கின்றன.
கேள்வி கேட்காமல்
கேட்டதை நம்பும் கூட்டம் உள்ளவரை,
வதந்தி ஒரு சொல் அல்ல—
வேரூன்றும் நச்சு மரம்.
ஆயிரம் நன்மைகள் செய்தாலும்
அவை கண்களுக்குத் தெரிவதில்லை;
ஒரு சிறு பிழை மட்டும்
பூதக்கண்ணாடியில் பெரிதாகிறது.
ஒருவர் கட்டிய மரியாதைக் கோட்டையை
ஒரே சொல்லால் இடிக்க நினைப்பவர்கள்,
தாங்கள் கட்டியதெதுவுமின்றி
அழிப்பதிலே பெருமை காண்கின்றனர்.
அடுத்தவர் வாழ்வைக் கலைப்பதே வேலை,
அவதூறு பேசுவதே பொழுதுபோக்கு;
வெறுப்பை விதைப்பதே தொழில்,
வேதனையை அறுப்பதே அறுவடை.
தங்கள் குறைகளை
பட்டாடையால் போர்த்திக்கொண்டு,
பிறர் குறைகளை மட்டும்
தெருச்சந்தையில் ஏலமிடுகின்றனர்.
கண்ணாடி வீட்டில் வாழ்பவர்கள் கூட
கற்களை வீசத் தயங்காத காலமிது;
தங்கள் சுவற்றின் விரிசல்களை மறைத்து,
பிறர் சுவற்றின் கீறல்களை எண்ணுகின்றனர்.
முகம் பார்த்துப் பேசும் துணிவின்றி
முதுகிற்குப் பின்னால் பேசும் இழிவை
கோழைத்தனம் என்பதா?
அல்லது பொறாமையின் முகமூடி என்பதா?
புறம் பேசி உருவான நட்புகள் யாவும்
புயலில் சிதறும் மணல் வீடுகள்;
உண்மையின் மழை பெய்தவுடன்
அவற்றின் முகமூடிகள் கரைந்துவிடும்.
வில்லிலிருந்து புறப்படும்
வார்த்தையெனும் அம்பு,
இதயத்தில் தைத்தபின்பு
திரும்பி எடுக்க இயலாது.
தீயால் ஏற்பட்ட காயம் ஆறலாம்
நாவால் ஏற்பட்ட காயம்
நினைவின் ஆழத்தில்
நெடுங்காலம் இரத்தம் சிந்தும்.
பிறர் வாழ்வை வாழ்த்த
வார்த்தைகள் இல்லையெனில்,
அவர்களை வீழ்த்துவதற்காக
வார்த்தைகளைத் தேடாதீர்கள்.
ஒரு மனிதனை உயர்த்தும் மொழியே
மனிதத்தின் முகவரி;
ஒரு மனிதனை அழிக்கும் மொழி
மனிதத்தின் அவமானம்.
பிறர் நிழலைக் குறை கூறுவதற்கு முன்
தன் இருளைப் பார்ப்பதே ஞானம்
பிறர் வாழ்வை அவதூறால் காயப்படுத்துவதற்கு பதில்
மௌனமாய் இருப்பதே அறம்.
முதுகில் பாயும் சொற்களை விட
தோளில் தட்டும் சொற்கள் பெருகட்டும்;
அவதூறின் நெருப்பை விட
அன்பின் விளக்குகள் எரியட்டும்.
மனிதனைக் கொல்ல ஆயுதங்கள் அவசியமல்ல
அவனது மரியாதையைக் கொல்லும்
பொறுப்பற்ற வார்த்தைகள் போதும்
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மக்களிடையே மனிதத்தைத் தட்டி எழுப்பும் அலாரம், இக்கவிதை.