இளையோர் இலக்கிய இமயம் கழுதை வண்டி!
முதலில்“ கழுதை வண்டி ‘ – தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. கதையா?…. கட்டுரையா?… என்ன மாதிரி படைப்பு என்று யோசித்து — யோசித்து…..
புத்தகம் கிடைத்து படித்ததும் – கதைகளின் வளமையான சொற்களிடையே மனம் சுருண்டு- கதைகளின் ஈர்ப்பில் இருந்து விடுபடமுடியாமல் கழுதை வண்டியுடன் ஊர் ஊராய் மெல்ல … மெல்ல… பயனித்து…. இறுதியில் இமயத்தின் உச்சியில் ஏறி நின்று தனியன்… தனியன்… என்றழைத்த என் குரலுக்கு……
(‘கழுதை வண்டி’) – இதை வாசிப்பவர்கள்
சாதாரணமாணவர்கள் – ஆனால்
இதில் வசிப்பவர்கள்
சரித்திரமாணவர்கள் ‘-
என்ற தனியனின் பதிலை கேட்டதும் – பல கோடி சிறகுகள் முளைத்துசர்ர்… என்று கழுதை வண்டி அருகே இறங்கினேன். ஆயிஷா இரா .நடராசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
எல்லோர்க்குள்ளும் ஒரு சரித்திரம் புதைந்து கிடக்கிறது சரித்திரத்தை உருவாக்குவதிலும் – புரட்டிப்போடுவதிலும்- நிலைப்படுத்துவதிலும் – முக்கிய பங்காற்றுவது ‘நாக்கு’ காலம் காலமாக வாய்மொழிக்கதைகள் வழியாக சரித்திரம் வாழ்ந்து கொண்டிருப்பதை தனியன் வாயிலாக நிரூபித்த – பன்முக, ஆளுமைத் திறன்மிக்க படைப்பாளியின் திறன் ரசனைக்குரியது. நாம் ஆயிஷா இரா. நடராசனின் காலத்தில் வாழ்கிறோம் என்பதே சிறப்பு என பறைசாற்ற இந்த ஒரு நூல் போதும்.
கதை வண்டி பயணிக்கும் பாதை நெடுகிலும் எழுத்தாளரின் தனி முத்திரைகளாக – வரலாற்று அறிவின் எச்சங்களும் , வாழ்வியல் நியதிகள்- பொது நல நோக்குகள் அறிவியல் ஆர்வத்தின் படிமங்கள் – கற்பனை நயம் – என கதை முழுவதும் அழகு மயிலாய் தோகை விரிக்கிறது ஆசிரியரின் வளமான தமிழ்!.
கதைகளத்தில் தனி ஆளாய் நின்று வாய்வழிகதைகளால் சிக்ஸர்களாக அடித்து …. தூக்கி… அதகளம் பண்ணியது தனியனா? தோனியா?…. கோலியா?
தனிமை – வலி – ஏக்கம், பசி, ரணம் – இவற்றுடன் கரம்கோர்த்து தான் தன் பயணத்தை இலகுவாக்கும் மாயாஜாலக்காரன் அவன் நெஞ்சுக்குள் சோகம் சுருண்டாலும் – அவன் சொல்லும் கதையின் சொற்களுக்குள் சுகத்தை தூக்கி வைத்த ஆசிரியரின் சூட்சுமத்தை பாராட்டுவதில் நான் வள்ளல்! வாழ்க்கை
கற்பித்த அனுபவத்தினால் திடமும் – துணிவும். அறிவில் தெளிவு- சிந்தனை திறன் – அதையும் தாண்டி- சமயோசித புத்தியால் மக்களை ஈர்த்தல் – என பன்முகத்தன்மையால் – உச்சகட்ட திருப்பமாக – தனியனுக்கு தலைமை மகுடம் சூட்டியவரின் சாதுர்ரியம் சாணக்கியத்தனத்துக்கு சான்றானது இனிய வரலாறு தானே! ,இவைகளை பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கவே முடியாது . ஆயிஷா சார் கதையை வாசித்ததும் – கதை ஏன் எவர்க்கும் மறப்பதில்லை? என்ற கேள்வி இஸ்ரோ ராக்கெட்டாய் சீறீ- என் நினைவுகிடங்கில் விடைத்தேடி பாய்ந்தது…. பாய்ந்தது கதை கேட்பதில் ஆர்வம் – சொல்பவர்களின் குரல் – நடிப்பு- பாவனைகள் – மொழி – இவைகள் நம்மை ஈர்ப்பதால் கதைகள் மறப்பதில்லை. ஞாபகம் மனதில் தோன்றி மனதோடு மட்டும் முடிவதல்ல – நினைவாற்றல் – உடலோடும் – ஐம்புலன்களோடும் – அனுபவங்கள் வழியாக எண்ணங்கள் நினைவுகளாக பதிகின்றன என்ற பதிவை என் மனதில் ஒளிரச்செய்தவன் தனியன் – தனித்துவமானவன் – அவனை இனியனாக்கிய பெருமை ஆசிரியரையேச் சாரும் !
பேசும் தராசுகளின் அருங்காட்சியகம் – எத்தனை வகை வகையான தராசுகள் – எத்தனை எத்தனை பயன்பாடுகள் – படிக்க …. படிக்க மலைக்க வைக்கிறது. வானில் நிறத்தை அளக்ககூட ஒரு தராசு, ஆனால் படைப்பாளியின் கூர்ந்த அறிவுத்திறனை அளக்கதராசு இல்லாதது பெருங்குறை அதை ஆசிரியரே வைத்தது சிறப்புதானே! யோசித்து தருவது மட்டுமல்ல நேசித்துத் தருவதே உன்னத படைப்பு- ஆயிஷா வரிசையில் தனியனும் சேர்கிறான்.
ஆயிஷா நம் 300 கிராம் இதயத்தை திருடியவள் தனியனோ 1300 கிராம் எடையுள்ள நம் மூளைக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான். ஆயிஷாப் போல் தனியனுக்கு மிக … மிக.. நீண்ட ஈயுள் நிச்சயம் . வாழ்த்துக்கள் ‘ஆயிஷா ‘ சார்.
அட்டையில் தனியனுக்கு முடிசூட்டி , கதையின் முடிவை வண்ணத்தூரிகையால் சுட்டிய ஓவியக்கலைஞருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
வரலாறு என்பது
வந்து போனவர்களின் தொகுப்பல்ல,
‘சாதனைகளை ‘- தந்து
கொண்டிருப்பவர்களின் தொகுப்பு”
நூலின் முன்னுரையில் ரமேஷ் வைத்தியா குறிப்பிடுவதைப் போல கழுதைவண்டியை ஒரு மாணவர் தலைகுனிந்து வாசித்தால் போதும் . தலைமைப் பண்பின் சிகரமாகிவிடலாம்.
நூல் மணம் நுகர்ந்தவர்,
நல்லாசிரியர் தா. கமலா
நூலின் தகவல்கள்
நூல் : கழுதை வண்டி
நூலாசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்,பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.100
நூலறிமுகம் எழுதியவர்
நல்லாசிரியர் தா. கமலா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

