நூல்: ஆயிஷா
ஆசிரியர்: ஆயிஷா. இரா. நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹15.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ayesha-ayisha-era-natrasan/
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். அதிலும் குறிப்பாக புதிதாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று ஓர் எந்திரமாய் கீச்சிட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
24 பக்கமே உள்ள சிறிய புத்தகம் வாசிப்பவர் மனதை சற்று அதிகமாகவே கனக்க வைக்கிறது. ஆயிஷா என்னும் சிறுமியின் கேள்விகள் நிறைந்த உலகத்திற்கு நம்மை இழுத்துச் சென்று இறுதியில் கண்ணீரில் மூழ்கச் செய்கிறார் எழுத்தாளர்.
ஆயிஷா எதையும் அவ்வளவு சுலபமாக நம்பி விட மாட்டாள். கேள்விகளை எழுப்பி பூரண விளக்கம் தேடுவாள். ஆசிரியர்களின் தொழிலைக் கேள்விகளின் மூலம் கடினமாக்கினாள். அதனால்தானோ என்னவோ அவளுடைய ஆசிரியர்களுக்கு அவள் அறிவாளியாக அல்லாமல் அதிகப்ரசங்கியாகவே தெரிந்தாள்.
“டீச்சர் அடிச்சா வலிக்காம இருக்க எதாவது மருந்து இருக்கா?” என்னும் ஆயிஷாவின் கேள்வி அடிக்கடி செவிகளில் கேட்டுக்கொண்டு இருப்பது போன்ற உணர்வு.
இந்தப் புத்தகம் படித்தபோது சிறு வயதில் என்னுள் இருந்த ஆயிஷாவை உணர்ந்தேன். மதிப்பெண் பந்தயத்தில் என்னுள் இருந்த ஆயிஷா காணாமல் போய் விட்டாள். கேள்வி கேட்கும் பழக்கம் மதிப்பெண்ணுக்கு எதிரி என்று தான் தோன்றுகிறது. முடிந்த வரை அடுத்த தலைமுறையின் கேள்விகளுக்காவது மதிப்பளிப்போம்.
நன்றி
உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)

