நேருக்கு மாறாக பேசுவதும் பேசுவதற்கு நேர் மாறாக நடந்து கொள்வதும் அணுக்களின் வேலையாகப் போய்விட்டது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் அறிவியலின் மகத்துவம் என்பது அது எதையும் பரிசோதித்து சாத்தியமா என பார்த்துவிடும் ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்துவதில் இருக்கிறது. ஆனால் நான் சொல்வது சாத்தியமா என்று உங்களால் கணிக்க முடியுமா சந்தேகமே. அதாவது மாற்று வழி சாத்தியமா. ஒரு நிகழ்வு பின் நோக்கி நடக்கவாய்ப்புள்ளதா என்பதே அது.
நீங்கள் ஒரு தேநீர் குவளையை கீழே கை தவறி போட்டுவிட்டீர்கள் அது சுக்கு நூறாக உடைந்துவிட்டது. பீங்கான் குவளை காலத்தை பின் நோக்கி நகர்த்தி பழையபடி முழு குவளையை தேநீரோடு பெற முடியுமா இதற்கு பெயர்தான் நேருக்கு மாறாக நடப்பது. அறிவியல் முறைப்படி இது சாத்தியமா என்பதற்கு உலகில் இன்று நடந்து வரும் அறிவியல் சோதனைகள் பற்றி அறிந்தால் உங்களுக்குத் தூக்கம் வராது. உணவு அருந்துவது முதல் மலஜலம் கழிப்பது வரை எல்லாவற்றையும் பற்றி தாறுமாறாக யோசிக்கத் தொடங்குவீர்கள். எனவே இக்கட்டுரையை இதற்குமேல் வாசிப்பது பற்றி உங்களை எச்சரிக்க வேண்டியுள்ளது. வாசிப்பு (சில சமயம்) உள்ள நலனுக்கு தீங்கானது. ஸ்டேட்யுட்டரி வார்னிங்.
சேவல் கூவியதால் பொழுது விடிந்ததா? பொழுது விடிவதால் சேவல் கூவியதா? ஆனால் நமது பேராசிரியர்கள் சிறப்பு உரைகளின் போது இது போன்ற விசயங்களை ஒரு நூதன காட்சியாக்கி திரையில் ஓடவிடுகிறார்கள். அவர்கள் குவளை உடைந்தபோது எடுத்த படத்தைச் சுருளை பின்னோக்கி ஓடவிட்டு கச்சிதமாக அவை பின்நோக்கி நடப்பதாகக் காட்டுகிறார்கள். இது போன்ற காட்சிகள் அரங்கம் நிறைய சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. மக்கள் சிரிப்பதற்கு காரணம் இயல்பில் இது சாத்தியமில்லை என்ற புரிதலால் தான் ஆனால் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கிய பாய்ச்சலை இப்படி பின்நோக்கி இயக்கிக் காட்டுவது மனித இனத்தின் பலவீனத்தைப் பறைசாற்றுகிறது.
ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீங்கள் எங்கே தேடினாலும் சரி நேரம் காலம் என்பது ஒரு வழி பயணம்தான். எதிர்காலம் நோக்கிய பாய்ச்சல் மட்டுமே. நமது அன்றாட வாழ்வின் அனுபவம் என்ன? இடமிருந்து வலமாக சுழலும் கடிகாரம், ஒருபோதும் வலமிருந்து இடமாக எசிக்திசையில் ஓடாது. அல்லது அறிவியலில் இன்று வரை அது சாத்தியப்படவில்லை. ஆம்லேட் மறுபடி முட்டையாகாது. உடைந்த பீங்கான் தானாகவே ஒன்றிணையாது. நீங்கள் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் போக முடியாது (சாரி.. இது கொஞ்சம் ஓவராக உள்ளது) இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இயற்பியல் என்ன சொல்கிறது என்றால் நியூட்டனின் இயக்க விதி முதல், இன்றைய குவாண்ட இயற்பியலின் அணுத்துகளியல் கோட்பாடுகள் வரை நாம் எதிர்பார்க்காத முடிவைத் தருகின்றன. காலம் முன்னோக்கிய பாய்ச்சலிலிருந்தாலும் பின்னோக்கி சென்றாலும் இந்த விதிகள் மாறாதவை. கதை கண்டு உணர்ந்த பிறகு உலகில் பல இடங்களில் பல்வேறு அறிவியலாளர்கள் ஒரு பயித்திய மனநிலையை அடைந்து தங்களது ஆய்வுகளைச் சற்றே நம்ப முடியாத அளவுக்கு இயல்பு மாறி செய்ய முனைந்து வருகிறார்கள்.
நாம் நமது இறந்த காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் எதிர்காலம் அப்படி அல்ல. அடுத்த ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. நமக்கு நமது அன்றாட வேலைகள் செயல்முறைகள் என சிலவற்றைக் கருத்தில் கொண்டு தோராயமாக இது இப்படி நடக்கும் என்று தெரிகிறது. இறந்தகாலம் அப்படி அல்ல. நமக்கு பெரும்பாலும் ஓரளவு தெரிந்தது அது. சென்ற மாதம் ஆறாம் தேதி வீட்டில் என்ன சமயல் என்றால் நாம் …. கண்டிப்பாக நினைவில் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த யதார்த்தம் காலம் சம்பந்தமானது அல்ல. நமது நினைவாற்றல் சம்பந்தப்பட்டது. விசயத்தை சரியாகச் சொல்கிறேன். சென்ற மாதம் ஆறாம் தேதி சமையலை இப்போது அங்கே சென்று மாற்ற முடியுமா?
ஆனால் இன்றைய இரவு மெனுவை நீங்கள் மாற்றலாம். எதிர்காலம் என்பதை நிகழ்காலத்தால் மாற்ற முடிகிறது. ஆனால் அதே நிகழ்காலத்தால் இறந்த காலத்தை ஒன்றும் செய்ய முடிவதில்லை. இறந்த காலமும் எதிர்காலமும் நமது உளவியல் படி முற்றிலும் வேறு வேறானதாகப்படுகிறது. நம் எதிர்காலத்தை வடிவமைக்கும் சுதந்திரம் நமக்கு இருப்பதுபோல இறந்த காலத்தைத் தலையிட்டு எதுவும் செய்திட நம்மால் முடிவது இல்லை என்பது ஒரு உலக நடப்புபோல பதிவாகிவிட்டது. வருத்தம், ஏமாற்றம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற சொற்கள் கூட இறந்தகாலம் எதிர்காலம் சார்ந்தவையாக நாம் பிரித்துவிட முடியும். முடியும்னா பலவற்றை மாற்றிவிடமாட்டோமா.
ஆனால் இந்த பிரபஞ்சம் அணுக்களால் ஆனது. நாமும் அணுக்களால் ஆனவர்கள். இந்த அணுக்கள் கச்சிதமான இயற்பியல் விதிகளின்படி இயங்குகின்றன என்பதை வைத்துப் பார்த்தால் இறந்த காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கியே இந்த விதிகள் செயல்படுவதாகத் தோன்றுகிறது. ஒரு வழிப்பாதை எல்லாமே ஒரு வழிப்பாதை விதிகளா? ஏனெனில் எங்கோ முட்டைதான் ஆம்லேட் ஆகும் ஆம்லேட் மீண்டும் முட்டை ஆகாது என்று ஒருவிதி இருக்க வேண்டும். பின்னோக்கிய பயணம் சாத்தியமே இல்லையா. இந்தப் பிரபஞ்சமே ஒரு வழி பயணத்தில் எதிர்காலம் நோக்கி எதையோ முன் வைத்து பாய்கிறதா என்பது அறிவியலைவிட தத்துவஞானிகளுக்குத்தான் அதிக தீனிபோட்ட கேள்வியாக இருக்கிறது.
அறிவியல் இதற்கான விடையை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை. இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக அது சாத்தியமில்லை என்று அர்த்தமில்ல என்பது உலகெங்கும் இது குறித்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகளின் வாதம். எனவே பின்னோக்கி சுழலும் பேராசிரியர்களின் வீடியோவை பார்க்கும் உண்மையான இயற்பியலாளர் சிரிக்கமாட்டார். நாம் முதலில் புவி ஈர்ப்பு விசையை பரிசீலிப்போம். ஒரு சூரியன் மற்றும் ஒரு கோள் உள்ள அமைப்பை வீடியோ காட்சியாக எடுத்து அதைப் பின்னோக்கி ஓடவிட்டால் என்ன நடக்கும். கோளை சுழலவிட்டு ஏதோ ஒரு திசையில் சூரியனையும் சுற்றிவர வைக்கிறேன். அதனைப் படமெடுக்கிறேன் பிறகு படத்தை எதிர்மறை ஆக்குகிறேன் இப்போது என்ன நடக்கும். கோள் பின்னோக்கிச் சுழல்வதோடு சூரியனை எதிர்த்திசையிலும் சுற்றிவரும் ஒரு நீள் வட்டப்பாதையில் பின்னோக்கி நடக்கிறது. அதேசமயம் அந்தக் கோள் சூரியனை பின் நோக்கி (எதிர் திசையில்) பயணிக்கும் வேகம் மற்றும் அதன் கடக்கும் தூரம் சம அளவு காலத்தில் சம அளவு தூரத்தைக் கடந்து கெப்ளரின் வரியையும் மீறாது எனவே கோள் சூரியனை சுற்றி எப்படி எத்திசையில் பயணித்தாலும் இயற்பியல் விதி மீறல் இல்லை. எனவே புவி ஈர்ப்பு என்பது காலத்தின் பின்னோக்கி செல்லும் வாய்ப்போடு உள்ளது, மதியம் சாப்பிட்டது பழையபடி வெளிவந்துவிடுமா என நாம் கேட்கக்கூடாது.
வேறுவகையில் சொல்வதானால் ஒரு சிக்கல் மிக்க அமைப்பில் எல்லா அணுத்துகள்களும் தங்களது வேகத்தை மாற்றாமல் காலத்தின் எதிர்த்திசையில் சட்டென்று பயணிக்கத் துவங்கினால் சுழற்சியை அவிழ்த்துவிட்ட எதிர் சுழற்சிபோல செயல்படும் திடீரென பெரும்பான்மை அணுக்கள் சுற்றப்பட்ட நூல் கண்டு அவிழ்வதுபோல எதிர்த்திசை காலப்பயணம் செய்யும்போது, அவை செய்யப்பட்டவற்றை படிப்படியாக முன்னோக்கி மீட்கும் அவிழ்ப்பு நிலையை அடைகின்றன.
ஈர்ப்பு விசை கோட்பாடு ஒன்றின்மீது, செயல்படும் விசை மாற்றம் அடையும்போது அந்த பொருளின் திசை வேகம் மாறும் என்று சொல்கிறது. காலத்தை மட்டுமே நான் திசைமாற்றினால் விசையே திசைவேகமோ மாறுவது இல்லை. ஒரு பொருளின் மீது செயல்படும் ….. விசை அடுத்தடுத்து காலத்தின் பின்னோக்கியும் அதே வேகத்தில் செயல்படுவதால் திசைவேகம் மாறுவதில்லை. இப்படி, நாம் ஈர்ப்பு விசை என்பது காலக்கோட்டில் பின்னோக்கியும் போகிறது என நிரூபிக்க முடியும்.
மின்சாரவியல் மற்றும் காந்தவியல் விதிகள்? அவையும் இதேபோல காலத்தின் இரு திசையிலும் சாத்தியமே. எவ்வகை காலதிசையிலும் மின்சார இயலின் அடிப்படை மாறுவது இல்லை. எதிர் மின் வாய் நேர்மின்வாயாகவும், நேர்மின்வாய் எதிர் மின் வாயாகவும் மாறினாலும் மின் கடத்தல் மாறாது. அணுவியலின் அடிப்படை நியூக்ளியர் விதிகள் பெரும்பாலும் காலத்தின் இரு திசைக்கும் மாறா தன்மை கொண்டதாக நம்மால் நிரூபிக்க முடியும்.
இத்தாலியில் நடக்கும் காலத்தை பின்னோக்கிச் செலுத்தும் ஆய்வு முடிவுகள் சற்றே பீதியை ஏற்படுத்துகின்றன. மிக துல்லியமாகக் காலத்தைக் கணித்து புவி தன்னைத் தானே சுற்றும் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைக் கணக்கிட்டு இருக்கிறார்கள். காரணம் பேரலை உராய்வு எனும் புவி சார்ந்த ஹாவார்டு டார்வின் என்பவரின் கோட்பாடு. ஒரு மில்லியன் வருடங்கள் அல்லது அதற்கும் மேல். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் புவி தன்னைத்தானே சுற்றும் வேகம் முற்றிலும் குறைந்து சில வினாடிகள் நின்று பிறகு பின்னோக்கி சுழலும். அப்போது காலம் எதிர்த்திசையில் நகரும் பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் இப்படியான படிநிலை சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் அருமையான மனித கற்பனையும் தன் நியாபக குதிரையை பின்னோக்கிச் செலுத்தி அதிரவைக்கிறது. நீங்கள் கல்லூரி படிப்பவர் என்றால் மெல்ல பள்ளி இறுதி தேர்வு பிளகு ஒவ்வொரு வகுப்பாக பின்னோக்கி படித்து உங்கள் எல்லாவகை வீட்டுப்பாட, பரீட்சை மதிப்பெண் வசவுகளைத் திரும்பப் பெறலாம். திருமணம் ஆனவராக இருந்தால் மற்றொரு பின்னோக்கி நகரும் தேன் நிலவு இன்று பிரபஞ்சம் விரிவடைந்து வருவதற்கு ஆதாரங்கள் உள்ளன ஒரு புள்ளியில் நின்று பிறகு பின்னோக்கிச் சுருங்கி ஒற்றை தன்மை (singularity)யில் முடிவை நோக்கி அது செல்லும் அப்போது பேராசிரியர்கள் வீடியோ மாஜிக் செய்யாமலே காலம் எதிர்திசையில் பயணிக்கும். ரொம்ப சீரியஸான ஒரு ஆய்வுக்கு வருகிறேன். போஸ்டனில் ஒரு அறிவியல் மாநாட்டில் இந்த ஆய்வு முன்வைக்கப்பட்டது.
வெளிப்படையான மீளாத்தன்மை எனும் பதத்தை அவர்கள் முன் வைக்கிறார்கள். சமைக்கப்பட்ட உணவைத் திரும்ப பின்னோக்கி நிகழ வைத்து உப்பு காரம் (அல்லது இனிப்பு) கோதுமை பருப்பு எனத் திரும்பப் பெற முடியுமா? வெளிப்படையான மீளா தன்மையைப் பரிசோதிக்க நாய்கள் ஒரு கண்ணாடிக் குடுவை அமைப்பை ஏற்படுத்தினோம். ஒரு குடுவையில் சாதாரண நீர் அதன் சுவராக விளங்கும் அடுத்த பகுதியில் நீல சாயம் பெற்ற எழுது மை கலக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. நடுவில் சுவர் விடுபட்டபோது மெல்ல நீலசாயத் தண்ணீர் நிறமற்ற நீரை நீலமயமாக்கத் தொடங்கும் ஒவ்வொரு மூலக்கூறிலும் நீலம் படிப்படியாக பரவுகிறது. முதலில் நீலத்தன்மை இல்லாத தூயநிலை.. பிறகு அறைகுறையாக நீலத்தன்மை உருவானநிலை. பின் கடைசியாக முழுமையான நீல நிலை என்று காலத்தை மூன்றாகப் பிரித்து பழையபடி இந்த மூன்று படிநிலைகளை மறுதிசையில் அடைய முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனை bமுழுவதுமாக வீடியோ எடுத்து அதை பேராசிரியர்கள் பாணியில் திருப்பிக் காட்டினார்கள்.
ஒரு வித்தியாசம் ஒளிப்படத்தை பின்நோககி இயக்கியபோது மொத்தமாக உருபெருக்கி மிக கிட்டத்தில் இயற்பியலாளர்கள் மூலக்கூறு மூலக்கூறாக மறுதிசை மாற்றத்தை அனுபவிக்க வழி செய்திருந்தார்கள். இப்போது நமது ஆய்வு சூடு பிடித்தது. அதில் ஒரு பெட்டிபோல திரை மூன்றே மூலக்கூறுகள். சுவற்றிலிருந்து சாயம் மெல்ல மெல்ல வலமிருந்து இடமாக வெளுக்கத் தொடங்கியது. இரு வகையான அணுக்கள் நாம் அவற்றை நீல அணுக்கள் வெள்ளை அணுக்கள் என அழைப்போம். ஆரம்பத்தில் நீல அணுக்கள் மட்டுமே இருக்கின்றன. மெல்ல வலப்புறமாக வெள்ளை அணுக்கள் உருவாகின்றன. ஆனால் அதேசமயம் வெப்ப முழுக்கவியலின் இரண்டாம் விதி அந்த அணுக்களை ஒரே இடத்தில் இருக்கவும் விடவில்லை. அவை பிரெளனிய நடமாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிரெளனிய அலைக்கழிப்பும் பின்னோக்கி நடக்கிறது. நீல அணுக்கள் மெல்ல வெள்ளைத் தன்மை பெற்றபடியே சுழல்கின்றன. பிரெளனிய வெப்ப நடமாட்டத்தை ஏதேனும் ஒரு வகையில் கட்டுப்படுத்தாமல் காலத்தின் பின்னோக்கிய பாய்ச்சல் சாத்தியமில்லை என்பதே அவர்களது முடிவு.
ஆனால் அங்கு வந்திருந்த ரஷ்ய விஞ்ஞானிகள் அதிரடியால் இறங்கினார்கள். ஒரு முக்கிய பிரச்சனை எண்ட்ரோப்பி. இந்த உலகில் பொருட்கள் யாவுமே ஒழுங்கிலிருந்து ஒழுங்கீனத்தை நோக்கியே நகர்கின்றன. கொதிநீரை மேசை மீது வைத்தால் வெப்பம் அறைமுழுக்க பரவுகிறது. இதனால் கொதிநீரின் வெப்பம் குறைகிறது. விரைவில் அறைமுழுக்க வெப்பம் சீராகிட மேலும் ஒழுங்கார்வு நிலையே தொடரும். இதன் பின்னோக்கிய பாய்ச்சல் பற்றியதே ரஷ்ய இயற்பியலாளர்களின் அலசலாக இருந்தது.
அவர்கள் சமச்சீர்மை எனும் சொல்லை பயன்படுத்தினார்கள். பைசா நகரத்தின் சாய் கோபுர உச்சியில் இருந்து கீழ்நோக்கி ஒரு எடைமிகுந்த கல்லைப் போடும்போது அது எங்கே சென்று தரையில் விழும் என்பதை ஊகிக்க முடியும். புவியின் ஈர்ப்பு விசை அந்த கல்லின் கீழ் நோக்கிய பயணத்திற்கு ஒரு வகையில் வந்து சக்தியாகச் செயல்பட்டுள்ளது. அதே கல் மேல் நோக்கி அதே அளவு (புவி ஈர்ப்பு) விசையோடு வீசப்பட்டால் அதே தளத்தினை (அதாவது அது எங்கிருந்து வீசப்பட்டதோ அத்தளத்தை) அடையும். இதை செய்ய டி.சமச்சீர்மையை தகர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு கடிகாரம் காலத்தை முன் நோக்கிச் செலுத்தும் அதே வேகத்தில் காலத்தை பின்நோக்கியும் செலுத்திட டி–சமச்சீர்மை (டி என்பதை ஆங்கில டைம்) தகர்க்கப்பட வேண்டும்.
ஆனால் நீல சாயத்தையும் தண்ணீரையும் தனித்தனியே பெறுவதற்குச் சாயத் தண்ணீரைக் கொதிக்க வைத்தாலே போதும். நீர் ஆவியாக மேலே தனித்துப் படியும் நீல சாய தூள்மட்டும் கீழே தங்கிவிடும். ஆனால் இது காலத்தைப் பின்னோக்கி செலுத்திய சாதனை அல்ல. எனினும் பிரித்தெடுக்க பழையபடி ஆக்கிவிட முடிகிறதே. அதுபோல விரைந்து வரும் ஒரு எதிர்காலத்தில் ஆஸ்பத்திரியில் தப்பான அறுவை சிகிச்சை செய்து காலமான ஒருத்தரை டி– சமச்சீர்மையை தகர்த்து பழையபடி மீட்க முடியும் என்றே தோன்றுகிறது. இப்படி இரண்டாயிரம் வருடத்திற்கு முன் நம்பிய ஒரு கூட்டம்தான் தங்களது உடலைப் பதப்படுத்த பிரமிடுகளில் வைத்து அடைத்துப் பாதுகாத்தது. மீதி எல்லாம் விடுங்கள். மீண்டும் உலகப் போர், ஹிட்லர் அணுகுண்டு இந்த குண்டக்க மண்டக்க ஆய்வுகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
(நோபல் அறிஞர் ரிச்சர்டு ஃபைன்மன் – 1965ல் பிரபல இயற்பியல் இதழான பிஸிக்கல் ரிப்யூ இதழில் எழுதிய கட்டுரை.)
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3: