அழகிய பெரியவனின் "சின்னக்குடை" நாவல் புத்தகம் | Azhagiya Periyavan's Chinnakudai Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

அழகிய பெரியவனின் “சின்னக்குடை” நாவல் – நூல் அறிமுகம்

“சின்னக்குடை” நாவல் – நூல் அறிமுகம்


தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்படும் கூடுதல் நிலத்தில் இருந்த தனது வீட்டை திடீரென்று இழப்பதோடு – அதற்கான இழப்பீடும் கிடைக்கப்பெறாமல் – வாழ்வின் புதிய நெருக்கடிகளுக்காளாக நேரும் கருவி இசைக் கலைஞன் (மிருதங்கம், தபேலா, பம்பை போன்ற தோற்கருவிகள் வாசிப்பவன்) இன்பனும் அவனது மனைவி கனகாங்கியும் வாழ்வின் சுழலில் சிக்கி இரண்டு குழந்தைகளுடன் மனைவி வழி உறவினரின் ஆதரவில் வாழ நேரும் கதையை தனக்கே உரிய சொல்லல் மொழியில் கூறிச் செல்கிறார் அழகியபெரியவன்.

நாள்தோறும் மதுவின் அல்லது ஏதோ ஒரு லாகிரி போதையில் சிக்கி உழல்பவனாகவும் லௌகீக வாழ்வின் நெருக்கடிகளை மட்டுமே எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கும் வழக்கமான இசைஞனுக்கு மாற்றாக நாள்தோறும் ஜிம்முக்குச் சென்று கட்டுமஸ்தாகவும் ஆரோக்கியமாகவும் உடலைப் பேணும் இன்பனின் பாத்திர உருவாக்கம் உண்டாக்கும் அதிர்வுகள் புதுமை. நல்ல இசை ஞானத்தோடும் – அதே சமயம் ஓரளவு அன்றாட வாழ்வியல் அறிவோடும் – தெளிவான சிந்தனையோடும் இன்பனைப் படைத்திருப்பது கூடுதல் அழகு.

சமவாய்ப்பாக கனகாங்கியின் பாத்திரமும் – தன் ஊருக்கு இசைக் கச்சேரி நடத்த வந்த ஒரே நாளில் இன்பனைத் தன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்யச் சொல்வது முதல் வாழ்வின் நெருக்கடி பொழுதுகளில் ஆழமாய் தீர்க்கமாய் முடிவுகள் எடுப்பது வரை – தைரியமிக்க சுயமரியாதை மிக்க ஆளுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரு குழந்தைகளுடன் பெரிதான எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி – இருப்பதைக் கொண்டு மகிழ்வுறும் – தெளிவான நதி போல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு என்ற பெயரில் இருந்த ஓலை வீடும் இடிபடுகிறது. அதற்கு இழப்பீடு பெற முயல்கையில், அது வரை குடியிருந்த வீடு இருந்த இடம் புறம்போக்கு என்றும் அந்த இடத்திற்கு தனது தந்தை ‘தோராயப் பட்டா’ மட்டுமே வாங்கி வைத்துள்ளதும் தெரிய வந்ததும் பேரிடியாக இறங்குகிறது. தற்காலிகமாகக் குடியேறிய இடத்தில் மேற்கூரையற்ற தடுப்பில் குளிக்கும் கனகாங்கியை வீட்டு உரிமையாளரின் மகன் மாடியில் இருந்து கள்ளத்தனமாகப் பார்ப்பதைக் கண்டு வெகுண்டு அவனை அடித்து துவைத்துவிடுவதோடு – வழக்குக்கு யோசித்து மனைவிவழி உறவினர் ஊருக்குச் சென்று மக்காச்சோள நாள் வியாபாரம் தொடங்க நேர்கிறது.

நிதானமாகச் செல்லும் வாழ்வு அப்படியே எல்லா நாளும் அமைவதில்லை. மனிதர்களின் வழியிலோ, இயற்கையின் வழியிலோ, மனிதன் ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைப்புகளின் வழியிலோ வாழ்வு பெரும் அதிர்வுக்குள்ளாக நேர்கிறது. அப்படி நேரிடும் அதிர்வு – அது வரையிலான ஆற்றொழுக்கு வாழ்வை பெரும் ஆவேசத்துடன் அடித்து நாம் அறியாத மறுபக்கம் திருப்புகிறது. அப்போது மனித மனதின் நிலை என்னவாக இருக்கிறது – அந்தச் சூழலில் மனித மனம் பிறர் மீது எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது போன்ற வினாக்களை நாவல் எழுப்பியபடி நகர்கிறது.

நிலவெளியும் சூழலும் மன நிலையை நிர்ணயிப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை புதினம் அவ்வப்போது காட்டியபடி செல்கிறது. அது வரை வாழ்ந்த இடத்துக்கு தன் தந்தை பட்டா கூட வாங்கவில்லை என்று தெரியவந்த போது – ‘திடீர்னு இப்படி ஏக்க ஏக்கயா விட்டுட்டு போயிட்டாங்க.. என்ன மனுசன் இவரு’ என்று தந்தை மீது ஏற்படும் வெறுப்பானது – மக்காச்சோளம் விற்கும் காலத்தில், ஓரிடத்தில் வேறொரு நிலவெளியில் (கட்டி முடிக்கப்படாத இரயில்வே மேம்பால உச்சியில் நின்று) யோசிக்கையில் – உடைந்து போய் தந்தையின் நல்லுணர்வுகளும் நற்குணங்களுமே நினைவில் எஞ்சுகிறது. இது போல மலை உச்சியில் கட்டப்படும் தேவாலயத்தில் இருக்கும் போது இன்பனுக்கும் யோவானுக்கும் ஏற்படும் உணர்வெழுச்சிகள் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வெக்கையான வீட்டில் குடிவந்ததும் கனகாங்கியின் மன உணர்வுகளிலும் வெறுப்புப் படர்வதை இன்பன் உணரும் இடமும் அவ்வாறே.

அது நாள் வரையில் இசைக்கச்சேரி, இசைக்கருவி, நண்பர்கள், மனைவி, அவளுடனான காதல், நினைத்தால் வேலை என்று தன்போக்கில் திரிந்து கொண்டிருக்கும் இன்பன் மீது – அதுவும் இரு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லும் – நடுத்தர வயதில் – வந்து விழும் குடும்பத்தைக் கரை சேர்க்கும் பொறுப்பின் அழுத்தத்தின் கனத்தால் வாசிக்கும் நமக்கும் மூச்சு முட்டுகிறது.

இன்பனுக்கு எப்போதும் காமம் மனதோரத்தில் எரிந்தபடியே இருக்கிறது. எல்லோருக்கும் இப்படித்தானா எனக் கேள்வியும் எழுகிறது. இது குறித்து அவனுக்கும் யோவானுக்குமான உரையாடல் நிகழுமிடம் குறிப்பிடத்தக்கது. எப்படியோ அவனை வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து ஆற்றுப்படுத்துவதும் அதுவாகவே ஆகிப்போகிறது. எல்லோருக்கும் அப்படித்தானே – வதைபடும் தருணங்களின்போது – நம்மை ஆற்றுப்படுத்த (அது இலக்கியமோ, இசையோ, பயணமோ, நட்போ, காதலோ ஏதோவொன்று) நம் கூடவே இருக்கிறதுதானே..!

இந்தப் பிரதான கதையின் ஊடாகச் சொல்லப்படும் நாகப்பனுக்குக் கருங்கூழாங்கல் கிடைத்த காதல் கதையும், செங்கையனுக்கும் தஞ்சை வெங்கோஜி பாகவதருக்குமான ‘இசை’பட வாழ்ந்த கணங்களும் – இவை இரண்டும் இன்பனின் முந்தைய இரண்டு தலைமுறைக் கதைகள் – இன்பனுடையதையும் சேர்த்து அருந்ததிய வாழ்வியலின் இன்னொரு முகமாக நமக்கு முன்வைக்கப்படுவது பிரதியின் உள்ளார்ந்த அரசியல். ஆனால் பிரதியில் எங்குமே அருந்ததிய வாழ்வியல் வலிந்து சொல்லப்படவே இல்லை. கதையின்போக்கில் இயைந்து வெளிப்படுவதும் கூட ஓர் அழகியலின் அரசியலே.

அருந்ததியர் குறித்த கதையாடல்களில் பெரும்பாலானவை பொது சமூகத்தில் இருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்பட்ட சூழலையும், கழிவகற்றும் பணியை நிர்ப்பந்தித்து அதை அவர்கள் வாழ் சூழ்நிலையாக்கி அதன் காரணமான ஒதுக்கலையும் விவரித்து வருகையில் (அதுவும் முக்கியமான தலித் அரசியல் செயல்பாடுகளில் ஒன்றே), மைய நீரோட்ட வாழ்வியலை ஒழுகும் ‘இன்பன்-கனகாங்கி’ போன்றோரின் இத்தகைய கதைகளும் இன்று சொல்லப்படுவது அவசியமே..!

அந்த வகையில் இப்புதினமானது ஆசிரியருக்கும் சரி வாசிக்கும் நமக்குமே ஓர் அரசியல் செயல்பாட்டின் பங்களிப்பாகிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “சின்னக்குடை” நாவல்
ஆசிரியர்: அழகிய பெரியவன்
வெளியீடு:
நற்றிணை பதிப்பகம்
விலை: ₹.160
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *