அழியவிடல் (Azhiyavidal) – நூல் அறிமுகம்
2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழின் முன்னணி அறிவியல் வரலாற்றாளர் ஆயிஷா இரா நடராசன் (Ayesha Era.Natarasan) சுட்டி விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
வனங்களையும் நீர்நிலைகளையும் தனது இருப்பிடமாக கொண்டு உயிர் வாழும் சில உயிரினங்கள் அழிவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன. அத்தகு உயிரினங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும்படி சிறுவர்களுக்கு எழுதும் உருக்கமான கடிதங்களாக தொகுக்கப்பட்டுள்ளது இந்த நூல்.
வளரும் தலைமுறையினரான சிறுவர்களின் வசம் தங்களின் வாழ்வை ஒப்படைத்து அழிந்து கொண்டிருக்கும் தங்கள் இனங்களை காப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மூலம் எடுக்கக் கூறியும் இயற்கை வாழிடங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்த நூலில் ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு உயிரியும் உருக்கமான கடிதத்தில் எழுதி தம்மைக் காப்பாற்ற வேண்டுகோள் விடுகின்றன.
இந்த நூலில்
காட்டெருமை
கங்கை டால்பின்
நீலகிரி வரையாடு
சிங்கவால் குரங்கு
கான மயில்
பிணந்தின்னிக் கழுகு
வெளி மான்
நீண்ட மூக்கு முதலை
ராமேஸ்வர சிலந்தி
பாண்டிச்சேரி சுறா
கடமான்
ஈபிடிச்சான் குருவி
செந்நாய்
இந்திரானா தவளை
ஜெர்டான் குருவி
பறக்கும் அணில்
புணுகுப் பூனை
பறக்கும் தவளை
சைபீரிய நாரை
எல்விரா எலி
குருட்டுக் கொக்கு
இந்திய காண்டாமிருகம்
வங்கப் புலி
ஆகிய விலங்குகள் சிறுவர்களுக்கு எழுதும் கடிதத்தின் வாயிலாக தங்களின் வாழ்வாதாரம் எப்படியெல்லாம் மனிதர்களால் உருக்குலைக்கப்படுகிறது என்பதையும் இயற்கைப் பேரழிவுகள் நிகழ்வதற்கு மனிதன் தனது பேராசை வலையை எப்படியெல்லாம் விரித்து நாசமாக்குகிறான் என்பதையும் விளக்கிச் சொல்கின்றன.
இதில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரியும் தங்களின் வாழ்வாதார முறைகளை விவரிப்பதோடு நின்று விடாமல் அவற்றின் சிறப்புப் பண்புகளையும் உடல் அமைப்பின் சிறப்புகளையும் அவை எவ்வாறெல்லாம் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன என்பதையும் நமது கவனத்தில் நிறுத்துகின்றன.
அழிவுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இத்தகு விலங்குகளை எதிர்வரும் தலைமுறையினர் படங்களில் மட்டுமே பார்த்தும் வெறும் பெயரளவில் மட்டுமே வாசித்தும் அறியக்கூடிய சூழலில் மனித குலம் இயற்கையைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
தேவையற்ற கற்பனைகள் மருத்துவத்திற்கு பயன்படும் என்ற அபரிதமான கருத்துக்கள் வேட்டையாடுதல் பெருமை என்ற ஆணவப் போக்கு ஆறுகளை அழித்தல் நெகிழிகளைக் கொண்டு நீர் நிலைகளை முற்றிலுமாக அழிக்க வைத்தல் என பல்வேறு காரணிகளால் இயற்கையும் சுற்றுச்சூழலும் சீர் கெட்டுப் போகும் சூழலில் இத்தகு உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களையும் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் உறைவிடத்தையும் இழந்து தவிக்கின்றன. அதுவே அவற்றை அழிவின் பாதைக்கு எடுத்துச் செல்கின்றன.
இந்திய நாட்டில் அழிவில் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தங்களை காக்கச் சொல்லி கேவலுடனும் அழுகையுடனும் தாய்முகம் நோக்கி அழும் பிள்ளைகள் போல நம்மிடம் பேசுகின்றன இந்த நூலின் வழியே.
தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற பேராசை மனிதனை ஆட்டிப்படைக்கும் சூழலில் இயற்கையை சமன்படுத்தாத வரை மனிதனின் உணவு சங்கிலி பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை அறிந்து விழிப்புணர்வு அடைதல் காலத்தின் அவசியம். அத்தகு விழிப்புணர்வைக் கொண்டு இயற்கையையும் இயற்கையின் வழியாக வாழும் உயிர்களையும் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தை மனிதன் உணர்ந்து கொள்ள இத்தகு நூல்கள் அவசியமாகின்றன.
நூலின் தகவல்கள் :
நூல் : அழியவிடல்
ஆசிரியர் : ஆயிஷா இரா நடராசன்
பக்கம் : 48
விலை : ரூ.40
முதல் பதிப்பு : ஜனவரி 2018
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/azhiyavidal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
இளையவன் சிவா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.