பால்ய கால சகி என்ற நாவல் 1940களில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் கேரளாவில் வைக்கதில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். பலமுறை சிறை சென்றவர். இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, பிரேம் நசீர் விருது போன்ற பல விருதுகளை பெற்றவர்.
பால்ய கால சகி என்ற இந்த குறுநாவல் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த பக்கத்து வீட்டுப் பிள்ளைகளான மஜீத்தும், சுகராவும் சிறு வயது முதலே நண்பர்கள். அவர்கள் சிறு வயதில் அன்பான நண்பர்களாக இருந்ததை விட சண்டை பிடித்துக் கொண்டிருந்ததே அதிகம்.
இருவரும் இளம் பருவத்தை அடையும்போது நண்பர்களாக இருந்து ஒரு கட்டத்தில் அவர்களையும் அறியாமல் காதலராகிப் போகிறார்கள்.
பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் மீதிக்கதை.
மஜீத்தும், சுகராவும் சிறுவயதாக இருந்தபோது அவர்களின் உரையாடல்களை மிகவும் சுவாரசியமாக இயம்பி இருக்கிறார் ஆசிரியர்.
மஜீத்துக்கு சுன்னத் செய்யும்போது ஏற்படும் வலியையும், வேதனையையும் சுகராவிற்கு காது குத்தும் போது ஏற்படும் வேதனையை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுவதும் ஆறுதல் கூறிக் கொள்வதும் மிக சுவாரசியமான உரையாடல்களாக அமைந்துள்ளன.
இருவரும் சேர்ந்து தோட்டம் அமைப்பது ,நீர் பாய்ச்சுவது, மாமரத்தில் அடியில் இருவரும் தினமும் சந்தித்து உரையாடுவதுமான அவர்களின் அன்பு மனதைக் கவர்கின்றன.
மஜீத் சிறிது வசதியான வீட்டுப் பிள்ளையாதலால் அவன் வெளியூர் சென்று படிக்கிறாள். சுகரா ஏழை வீட்டுப் பெண்ணாகையால் அவளால் படிக்க இயலாமல் போகிறது. மஜீத்தின் தாய் தாய்மைக்கே உரிய அன்புடனும் பாசத்துடனும் கதை நெடுகிலும் மிளிர்கிறார். அஜித்தின் வாப்பா அன்பானவர் ஆனால் மிகவும் கண்டிப்பானவர்
ஒரு நாள் மஜீத்தினுடைய வாப்பாவின் சர்வாதிகாரத்தினால் அவர் அடிக்கவே சுகராவிடமும் சொல்லாமல் மஜீத் ஊரை விட்டுச் சென்று பல ஆண்டுகள் கழித்துத் திரும்பி வரும்போது அவருடைய தந்தை அனைத்துச் சொத்துகளையும் இழந்து கடனாளியாகி இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்ய முடியாத கஷ்டத்தில் இருக்கிறார்.
அதன் பிறகு அவன் ஏதாவது செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான் அப்போது அவன் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாதவை.
அதேபோன்று சுகராவும் அவள் வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களும் சொல்ல முடியாதவை.
ஊரை விட்டுச் சென்ற மஜீத் திரும்பி வந்தபோது சுகராவும் மஜீத்தும் சந்தித்த காட்சிகளும் அவர்களின் உரையாடல்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இவர்களின் அன்பும் காதலும் ஆசிரியரின் இலக்கிய எழுத்து நடையில் மிளிர்கிறது.
இக்கதையில் ஏழை இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களையும், அவர்களின் நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களையும் ஆசிரியர் காட்டியிருக்கிறார். இக்கதையில் ஒரு கதாபாத்திரம் கூட சுகமான வாழ்வு வாழ்ந்ததாக ஆசிரியர் காட்டவில்லை. இறுதி வரை மிகவும் சோகமயமான கதையாகவே நகர்கிறது.
அடிமேல் அடி விழும் ,பட்ட காலிலே படும் என்பது போல் இதில் வரும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் அடுத்தடுத்து அதிகமான துன்பங்களைச் சுமந்தபடியே செல்கிறார்கள்.
மொத்தத்தில் இக்கதை முழுவதும் சோகத்தை அப்பிக்கொண்டு நிற்கிறது. இவ்வளவு சோகமயமான கதையை இதுவரை படித்ததில்லை. ஆனாலும் 70 ஆண்டுக்கும் மேலாக இக்கதை கிளாசிக் நாவல் வரிசையில் களை கட்டி இன்று வரை மக்கள் மனதில் நிற்கிறது. இது ஒரு மகத்தான எழுத்தாளன் தந்த மனம் தொடும் கதை.
ச சுபாஷிணி திருச்சி .
புத்தகம் : பால்ய கால சகி
ஆசிரியர் வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில் : குளச்சல் யூசுஃப்
பக்கங்கள்: 80
பதிப்பகம் : காலச்சுவடு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பத