தனித்திருத்தலின் பெருவலி :
தனித்திருக்கும் மனமென்பது
வெளியேறிவிட்டப் பறவையொன்றின் கூடு
தனித்திருக்கும் இவ்வாழ்வென்பது
துயரங்களின் வாசிக்கப்படாத புத்தகங்களால்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புராதனமொன்றின்
நேற்றைய அலமாரி
தனித்திருக்கும் இந்நாளென்பது
உடைந்து சிதறிய கண்ணாடியொன்றின் சில்லினைப்போல
ரசம்மழிந்த இன்றின் சிதைந்த முகம்
தனித்திருக்கும் இப்பாழ்வெளியில்
நாற்புறமெங்கும் சூழ்ந்திருக்கும் இருளில்
நம்மை தொலைத்துவிட்டு நம்மையே தேடியலைவது
தோள்பற்றக் கைகளின்றி
தனித்திருத்தலென்பது மெல்ல மரித்துக்கொண்டிருக்கும்
கனவுகளின் ஒரு கைப்பிடி சாம்பல்
சொற்களின்றி சில்லிட்டுப்போன தன்பிணத்தை
சுமந்து திரியும் துர்வாழ்வு.
*******
தாய்மை போற்றுதும் :
கூகையும்
நடுங்குமொரு கடுங்குளிரின் இரவொன்றில்
கண்திறவா தன் குட்டிகளுக்கு
கால்தூக்கி மடிகொடுக்கும் நாயொன்றின்
அடிவயிற்று கதகதப்பினை நினைத்தபடி கடந்து செல்கிறேன்
எனக்காக சுரந்த அம்மாவின் மார்பு நதியின்று
மேகங்களால் புறக்கணிக்கப்பட்ட
வற்றிய நிலமானது
ஈன்ற பொழுதில்
வாழ்வில் காணா வலிபொறுத்தவளின்
சிந்திய குருதித் துளிகளுக்கும்
காலத்தின்
துயரங்களைச் சுமக்கும் தாயொருத்தியின்
அடிவயிற்றுச் சுருக்கங்களுக்கும்
எழுதிக்கொண்டிருக்கும்
இந்த கவிதையொன்றும் ஈடாகாது.
******