Bharathi Krishnakumar's Kavisakkaravarthiyin Panivu Book Review By K. Ramesh. Book Day is Branch of Bharathi Puthakalayam. நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* - கி.ரமேஷ்

நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – கி.ரமேஷ்



நூல்: கவிச்சக்கரவர்த்தியின் பணிவு
ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார்
வெளியீடு: The Roots
பக்கம்: 144
விலை:ரூ.200/-

நான் தமுஎசவில் நுழைந்த காலத்தில் நான் அண்ணாந்து பார்த்து வியந்த ஒரு பேச்சாளுமை பாரதி கிருஷ்ணகுமார். அவரது உரை தொடங்கினால் நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவரது அருகில் நெருங்கினாலே பாக்கியம் என்று நினைத்ததுண்டு. அந்த ’உயர்ந்த மனிதர்’ எனக்காகக் கொஞ்சம் குனிந்து எனது தோளை அணைத்துக் கொண்டிருக்கும் நாளும் வரவே செய்திருக்கிறது. போன மாதம் அவரை அழைத்து நான் மொழிபெயர்த்த ஒரு நாவலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது என்னிடம் எனது முகவரியைக் கேட்டார். அப்போது அவர் கம்பன் விழாவுக்காக ராஜபாளையம் செல்வதாகவும் திரும்பி வந்த பின் பேசலாம் என்றும் கூறினார். அடுத்த இரண்டாவது நாள் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் “கவிச்சக்கரவர்த்தியின் பணிவு” என்ற புத்தகம் அவரது பேரன்புடன் எனது முகவரிக்கு வந்து சேர்ந்து விட்டது.

அவரை பாரதி கிருஷ்ணகுமார் என்றுதானே அழைக்கிறோம். கம்பர் எங்கே வந்து சேர்ந்தார் என்ற கேள்விக்கு விடையுடன் தொடங்குகிறார் பா.கி.(!). பாரதியிடமிருந்துதான் நான் கம்பனை அறிந்தேன். கம்பனுக்குள் வந்தேன் என்று விளக்கி விடுகிறார்.

இராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் மிகப்பெரும் காப்பியங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இதில் இராமாயணம் இப்போது பல பிரச்சனைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் வருத்தத்துடன் காண வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த இராமாயணத்தில் எத்தனை இருக்கின்றன என்பதில் தொடங்குகிறார் பா.கி. உலகெங்கும் முன்னூறு வகை இராமாயணங்கள் இருக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார். அனைத்துக்கும் மூலகாவியமாக வால்மீகியின் இராமாயணம்தான் இருக்கிறது. அதிலிருந்து மூலத்தை எடுத்துக் கொண்டு பல வகையான இராமாயணங்கள் உருவாகி இருக்கின்றன. நாம் தமிழில் “விடிய விடிய இராமாயணம் கேட்டு விட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்கிறான்” என்று திட்டுவதுண்டு. ஆனால் அப்படியும் ஒரு இராமாயணம் இருக்கிறது!



ஆக, மூலகாப்பியமான வால்மீகி இராமாயணத்திலிருந்து மொழியாக்கம் செய்து கம்பராமாயணத்தை இயற்றி என் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலவராகிறார் கம்பர். கம்பர் வால்மீகியின் காப்பியத்தைப் பின்பற்றி எழுதியிருந்தாலும், அவர் இருந்த இடம், பொருள், ஏவல் ஆகியவற்றுக்கேற்ப அதனை தொகுத்து, விரித்து தமிழ் மண்ணுக்கேற்ப மாற்றி விட்டிருக்கிறார். தோழர். ஏ.பாலசுப்ரமணியன் அவர்களின் தகப்பனார் டி.பரமசிவ அய்யர் எழுதிய புத்தகத்தில் கம்பர் வாழ்ந்த காலத்தின் மன்னனான சோழனைப் புகழும் வகையில் மொழியாக்கத்தைப் படைத்ததாகக் குறிப்பிடுவார். ஆனால் சோழனுக்கும் மேலாக கம்பரைப் பாதுகாத்த சடையப்ப வள்ளலை உயர்த்தியிருப்பதாக பா.கி. சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை ஒரு ஆய்வு நூலாகவே படைத்திருக்கிறார் பா.கி. கம்பன் இந்தப் பெரும் காப்பியத்தைத் தமிழில் படைத்தாலும், அதை ஏற்க வைப்பதற்காக, அதனை அரங்கேற்றுவதற்காக எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதை விளக்குகிறார். அதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம் என்கிறார். வடமொழியை உயர்வாகவும், தமிழை நீச மொழியாகவும் பார்த்ததாக இருக்கலாம்; வால்மீகி எழுதியதை அப்படியே மொழிபெயர்க்காமல் அதைத் தழுவியே எழுதிய காரணமாக இருக்கலாம்; இன்னும் அரசியல், வைணவ-சைவ மோதல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் சளைக்காமல் போராடிய கம்பர் கடைசியில் அனைத்துத் தடைகளையும் தாண்டி தனது காப்பியத்தை அரங்கேற்றுகிறார்.

பிறகுதான் பா.கி. தலைப்புக்குள் நுழைகிறார். கவிச்சக்கரவர்த்தியின் பணிவு!. அடக்கமுடைமை என்ற ஒரு அதிகாரத்தைத் திருவள்ளுவர் படைத்திருந்தாலும், அவையடக்கம் என்கிற இந்த மரபு கம்பனுக்கு முன் தமிழில் கிடையாது. கம்பர்தான் அதைத் தொடங்கி வைக்கிறார். ஏன் இப்படி ஒரு தொடக்கம்? ஏனென்றால் அந்தக் காப்பியத்தை எழுதி அரங்கேற்ற கம்பர் சந்தித்த எதிர்ப்புகள் அதைச் செய்ய வைக்கின்றன. அதில் ஆறு பாடல்கள். அவையடக்கம், பணிவு ஏன் முதன் முதலில் வர வேண்டும்? அதுவும் காப்பியத்தின் நடுவில் இருக்கும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு ஏன் முன்னால் எழுத வேண்டும்? அந்த ஆறு பாடல்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் எடுத்துரைக்கிறார் பா.கி.



”ஒப்பற்ற படைப்புகளையும், படைப்பாற்றல் கொண்ட மனிதர்களையும், மனதாரக் கொண்டாடிப் போற்றி, அங்கீகரிப்பதற்குப் பதிலாக அதனை எதிர்ப்பதும் அல்லது கள்ளமௌனம் சாதித்துத் திரையிட்டு மறைக்க முயல்வதும் இன்றைக்கும் நாம் பார்க்கும் குணக்கேடுகளில் ஒன்று. இத்துணை வளர்ச்சியும், வாசிப்பும், நவீனத் தகவல் தொழில்நுட்பமும் இயங்குகிற காலத்திலேயே அத்தகைய எரிச்சல் கலந்த மனம் கொண்டவர்கள் வாழ்கிற போது, பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அத்தகைய மனிதர்கள் வாழ்ந்துதானே இருப்பார்கள் !”. (பக்கம் 79). இந்தச் சொற்கள் பலரின் வாழ்வில் உண்மையாகவே விளையாடியவை. கவிச்சக்கரவர்த்தி கம்பனே இதற்கு ஆட்பட்டானென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்!.

பா.கி. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு 37 புத்தகங்களை வழித்துணையாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு அறிஞரும் சொல்வதிலிருந்து பொருத்தமான விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறார். இதனை ஒரு ஆய்வேடாகவே கருத வேண்டும். இதற்கே ஒரு முனைவர் பட்டம் அவருக்குக் கொடுக்கலாம். இந்த நூலைப் படித்து விட்டுக் கம்பனைப் படிக்காமல் போய் விட்டோமே என்று நமக்கெல்லாம் (கம்பனைப் படிக்காதவர்களுக்கு) ஒரு குற்றவுணர்வு கூட ஏற்படலாம். கம்பனைப் படித்து விட வேண்டும் என்ற வேகமும் வரலாம்.

இந்தப் புத்தகத்தில் நான் காண்பது கம்பனின் பணிவை மட்டுமல்ல. இந்த உயர்ந்த மனிதர் பாரதி கிருஷ்ணகுமாரின் பணிவையும் சேர்த்துத்தான். அடக்கம் அமரருள் உய்க்கும்!.

அன்புடன்
கி.ரமேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *