2022 – 23 ல் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம்
அண்மையில், திரு. நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பான, “புத்தரின் பேராசைப்பல்” என்ற நூலைப் படித்தேன். அனைத்து கதைகளுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பரிசுப் பெற்ற கதைகள் என்பது கூடுதல் சிறப்பான தகவலாக இருந்தது.
அந்த தொகுப்பில், முதல் கதையாக இடம் பெற்றுள்ள “உயிரின் ஒலி” சிறுகதை, உயிர் வரை வலித்தது. ஒரு லோகோ பைலட் அனுபவிக்கும் வலியின் துயரம், மிக நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை வெளி வந்த பிறகு, அரசாங்கம் இந்த துயரை விரைவில் நீக்குவோம் என்று அறிவித்திருப்பது ஆறுதலை தந்தது.
“பேரமைதியின் ஓசை”யில், ஒரு ஃபோலிக் ஆர்டிஸ்ட், தன் கடின உழைப்பால், 3 மணி நேரம் உழைத்து உருவாக்கிய ஸ்பெஷல் சவுண்ட் எஃபெக்ட் படத்தில் இடம் பெறாமல் போனதை அறிந்து மன்ம் புழுங்கும் போது, நம் மனமும் துக்கித்து போகிறது.
” புத்தரின் பேராசைப் பல்” ஒரு வித்தியாசமான கதைக் களம். புது விதமான அனுபவத்தை தந்தது. “தீதும், நன்றும் பிறர் தர வாரா” “அவரவர் மனசாட்சியே அவரவர்க்கு புத்தர்” ஆகியவைகளை பொட்டில் அடித்தாற் போல் சொன்னக் கதை. அதை விவரித்த பாங்கு மிக அற்புதம்.
அந்தக் கால திண்ணைப் பள்ளிகள் இயங்கிய விதம், அப்போதைய வர்ணாசிரம முறை, பாமரனிடமும் கற்றுக் கொள்ள இருந்த கணக்குகள், கலைகள், மக்களின் வெவ்வேறு விதமான ரசனைகள் என்று கதையை வாசிக்கும் போது, அந்த காலக்கட்டத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்தது “திண்ணை” சிறுகதை.
புளியம்பழம் நம் நடு விரல் போல் இருக்கும் என்றது “கடவுளின் விரல்” கதை. அது எனக்கு புதிய செய்தி. அது உண்மை என்று உணர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது. இப்போது நகர்புற குழந்தைகளிடையே வழக்கத்தில் இல்லாத சொட்டாங்கி, பல்லாங்குழி, கிச்சு கிச்சு தாம்பாளம் ஆகியவைகளை படித்த போது, இளமைக் கால நினைவுகள் மனதில் தோன்றி, மனது கும்மாளமிட்டது. ஏழை – பணக்கார வித்தியாசம் குழந்தைகளிடம் இல்லை என்ற கருத்தை ஆணித்தரமாக உரைத்தது simply superb.
“குருத்து அகம் விரித்து” கதையில், இலை முருகேசன், எம்.ஏ படித்து விட்டு, பிரபல சமையற்காரரிடம் எடுபிடியாக, மூட்டை தூக்குவது, அரிசி களைதல், காய் வெட்டுவது, பந்தியில் இலை போடுவது, எச்சில் இலையை எடுப்பது, சமயத்தில் சில குடிகாரர்கள், ” எச்சக்கலை” என்று கூப்பிடுவதையும் tolerate செய்வது என்று விவரிப்பது very powerful. ஒரு பள்ளி ஆசிரியரே, இலை எடுப்பவன் தன் மாணவன் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை என்று யதார்த்ததை எழுத்தாளர் புட்டு வைத்திருப்பது marvellous. மறந்து போன வரிகளை நினைவுபடுத்திக் கொள்ள, நாம் பயன்படுத்தும் உத்தியை கதாசிரியர் விளக்கியது, very realistic. அரசியல்வாதிகளின் இயல்பை தோலுரித்துக் காட்டியதற்கு ஒரு பெரிய “சபாஷ்”.
” குமரி வாழையின் குருத்து…. உண்க அடிகள்” ஏ க்ளாஸ் end.
குரும்பபாளையம் என்ற குக்கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகள். அதில் ஒரு வீட்டில் இருக்கும் மூலிகை வைத்தியர் பற்றியும், ஆங்காங்கே கடுக்காய் எப்படி வலிபோக்கும், கார்த்திகைப்பூ என்பது தான் செங்காந்தள் மலர், அதன் வீரியம் எப்படிப்பட்டது, இந்த காலத்திலும், சாதி என்ன என்று கேட்கும், அனைத்திலும் வியாபார நோக்கத்தை புகுத்தும் நகரத்தாரின் நாகரீகமற்ற செயல், கிராமத்தினரின் எளிமை, விருந்தோம்பல், புகைப்படத்தை பார்த்தே, அவரவர்களின் உடல் நலனை தெரிந்துக் கொள்ளும் வைத்தியரின் நுண்ணறிவு, ஆகிய ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செதுக்கியது போன்ற எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தது “செங்காந்தள்” கதையில்.
“சலஞ்சலம்” கதை ஒரு மாறுபட்ட உலகை கண் முன் நிறுத்தியது. சங்கு குளிப்பவர்களின் அன்றாட வாழ்க்கையை விவரித்திருந்தது கண் முன்னால் பார்ப்பது போல் அவ்வளவு அழகாக இருந்தது. சலஞ்சலம் சங்கை, 46 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி போகும் மூட நம்பிக்கையை கடைசியில் க்ளைமாக்ஸ் என்னும் வெடி குண்டால் தகர்த்தெறிந்திருக்கும் ஆசிரியரின் புத்திக்கூர்மையை, வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆசிரியரின் கடும் உழைப்பு கதை முழுவதிலும் மிளிர்கிறது.
“பாரதூரம்” – சரக்குந்து ஓட்டுநரின் பல விதமான நாம் அறியாத கஷ்டங்களையும், கொரோனா ஊரடங்கு அறிவித்தவுடன் யாரையும் தெரியாத, அந்த ஊரின் மொழியையும் அறியாத ஒரு இடத்தில், நடு ரோட்டில் இன்னும் எத்தனை நாட்கள் என்ற இலக்கே இல்லாமல், தங்க நேர்ந்த அவல நிலையில் உள்ள அந்த சரக்குந்து ஓட்டுநரின் சோகம் நம்மையும் தாக்குகிறது. கதை முழுவதும் அந்த லாரியுடன் சேர்ந்து நாமும் பிரயாணித்த உணர்வு. Hats off!
“சொல்லால் வரைந்த வாள்” “தாத்தா பகொல்ட்க்கு ஊமைத்துரை கொடுத்த வாளை திருப்பிக் கேட்க நமக்கு உரிமையில்லை. அது போல், அடைக்கலம் என்று வருபவர்க்கு எப்பாடு பட்டாவது அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவதே நம் பண்பாடு” போன்ற வரிகள் எல்லாம் எழுத்தாளரின் முத்திரையே அல்லாமல் வேறென்ன்?
“மழைத்தூறல் போல் கோடிட்ட சந்தனச் சட்டை” படிக்கும் போதே நெக்குருகச் செய்த கதை. ஒரு தாத்தா – பேரன் உறவை காவியமாக படைத்து, துணிக்கும் நமக்குமான உறவைப் பற்றி சொன்னது, ஆஹா, கிழி, கிழி….! படிப்பவர்களை நெகிழ வைத்து, தன் எழுத்துக்கான வெற்றியை நிலை நாட்டிக் கொண்டார் கதாசிரியர்.
“வெறியாட்டு” என்ன ஒரு கிராமிய மணம் கமழும் கதை! காடுகளில் தேனெடுப்பவர்கள் வாழ்க்கை, கிராமத்து திருவிழா, அவர்களின் சட்டத்திட்டங்கள், உறவு முறை, வைத்தியம்…வாவ்!…கிராம வாழ்க்கை முறைகளை பிரித்து மேய்ந்திருக்கிறார் ஆசிரியர்.
“கெலிங்”. 1900 ஆம் ஆண்டுகளில், தொழிலாளர்கள் அனுபவித்த அடிமை முறை – சித்திரவதை பற்றிய ஒரு கதை. படிக்க, படிக்க கண்கள் குளமாயின. ஒரு வேளை சாப்பாடு கேட்டதற்காக ஒருவன் அடித்து கொல்லப்படுவதும், அவன் மனைவி உயிரோடு புதைக்கப்படுவதும், கொடுமையின் உச்சக்கட்டம்.
மொத்தத்தில், ஒவ்வொரு கதையும் வேறு, வேறு கதைக் கருக்களைக் கொண்டவைகள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள்.
கதாசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் அவர் வேலைப்பார்க்கும் பணிச்சூழலை வாசித்து விட்டு, கதைகளை படிக்க, படிக்க இலக்கியத்தின் பால் எழுத்தாளர் கொண்ட தீவிர ஆர்வம் புலப்படுகிறது. கதாசிரியரின் கற்பனை வளம், களப்பணி, நடை, கடும் உழைப்பு, மொழி ஆளுமை ஆகிய ஒவ்வொன்றும் போற்றுதற்குரியது. இன்றைய தமிழ் எழுத்தாளர்களில், மிகச் சிறந்த எழுத்தாளர்களை பட்டியலிட்டால், அதில் திரு. நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் பெயரும் நிச்சயம் இடம் பெறும்.
வி.ஜி. ஜெயஸ்ரீ
நூலின் பெயர்: புத்தரின் பேராசைப் பல்
எழுதியவர்: நெய்வேலி பாரதிக்குமார்
எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்)
விலை: ரூ.225/-

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பத

