குருட்டுப் பாம்பு (Blind Snake) என்பது உலகில் வாழக்கூடிய மிகச் சிறிய பாம்பு இனங்களில் ஒன்றாகும். இது பார்ப்பதற்கு மண்புழு போல் காணப்படும். ஆகவே இது புழுப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.
பெயர்
இதன் அறிவியல் பெயர் இண்டோடைப்ளோப்ஸ் பிராமினஸ் (Indotyphlops braminus) என்பதாகும். இது பிராமினி குருட்டுப் பாம்பு (Brahminy blind snake) அல்லது பூந்தொட்டிப் பாம்பு (Flowerpot snake) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக பிராமின் என்ற வார்த்தை இலத்தீன் வடிவமாகும்.
இது பொதுவான குருட்டுப் பாம்பு, தீவு குருட்டுப் பாம்பு, தெலியா பாம்பு மற்றும் ஹவாய் குருட்டுப் பாம்பு என்று பல விதமாக அறியப்படுகிறது. தாவர வர்த்தகத்தின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இது தற்செயலாக அறிமுகமானது. பூந்தொட்டியில் வளர்க்கப்பட்ட செடியின் மண் மூலம் இவ்வாறு பரவியது. ஆகவே இது பூந்தொட்டிப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் இந்தப் பாம்பைக் குருடி (Kurudi) என்கின்றனர். தமிழில் சிறு பாம்பு (Sirupaambu) என்கின்றனர்.
இது செய்யான் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக சியான் பாம்பு எனவும் அழைக்கின்றனர். செய்யான் என்ற பெயர்தான் காலப் போக்கில் மருவி சியான் என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் குருடிப் பாம்பு மற்றும் செவிப் பாம்பு என்கின்றனர்.
வாழிடம்
இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இது உலகின் பல்வேறு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இனமாகும். குறிப்பாக தாவரங்களைப் பூந்தொட்டிகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட மண்ணின் மூலம் பரவியது. இது கடல் மட்டத்திலிருந்து 4900 அடி உயரம் வரை உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது.
இந்தப் பாம்பு இந்தியா முழுவதும் காணப்படுகிறது. அந்தமான் தீவுகளிலும் உள்ளது. மேலும் இலட்சத்தீவுகளில் காணப்படும் ஒரே பாம்பு இனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது விவசாயப் பகுதிகள், நகர்ப்புறங்கள், பூந்தோட்டங்கள், ஈரமான இலைகள், மரக்கட்டைகள், வீடுகளின் விரிசல்களில் உள்ள ஓட்டைகள், எறும்பு மற்றும் கரையான் கூடுகளிலும் வாழ்கின்றன.
உடல் அமைப்பு
இந்தப் பாம்பு 5 முதல் 10.2 சென்டிமீட்டர் நீளம் வரை வளர்கிறது. வழக்கத்திற்கு மாறாக 16 சென்டிமீட்டர் நீளத்தையும் அடைகிறது. இதன் தடிமன் 0.5 சென்டிமீட்டர் ஆகும். இதற்கு தலை மற்றும் கழுத்து தெளிவற்றதாக இருக்கும். ஆகவே தலை மற்றும் வால் ஒரே மாதிரியாக இருக்கும். இதற்கு பல் மேல் தாடையில் மட்டுமே உள்ளது.
இது மற்ற பாம்புகளைப் போல் அல்லாமல், தலை செதில்கள் உடல் செதில்களைப் போலவே காணப்படும். பளபளப்பான செதில்கள் உடம்பின் நெடுகிலும் இருக்கும். மற்ற பாம்புகளுக்கு இருப்பதைப் போல பெரிய குறுக்குத் தகடு போன்ற வயிற்றுச் செதில்கள் இவற்றில் இல்லை. இவற்றின் கண்கள் தலைச் செதில்களுக்கு உள்ளே மறைந்திருக்கும். சிறிய புள்ளிகளாக கண்கள் அரிதாகவே தெரியும். இவை பார்வையற்றவை.
இந்தப் பாம்புகளின் சாதாரண நிறம் பழுப்பு ஆகும். இது கரி சாம்பல், வெள்ளி – சாம்பல், வெளிர் மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களிலும் காணப்படும். சிலவற்றில் கருமை மஞ்சள் புள்ளிகள் விழுந்து இருப்பதும் உண்டு. இதில் மிக அரிதாக வெள்ளை நிறம் (அல்பினோ) கொண்ட பாம்பும் உள்ளது. இதன் வால் குட்டையாகவும், மொட்டையாகவும் இருக்கும். வாலின் நுனியில் கூர்மையான ஸ்பர் உள்ளது.
பண்புகள்
இது மண்ணில் புதைந்து வாழ்கிறது. இது நஞ்சற்ற பாம்பு. இது மண்புழு போன்ற தோற்றத்தைக் கொண்டது. ஆனால் உடலை வளைத்து, நெளிந்து சற்று வேகமாக நகரக் கூடியது. அப்போது உற்று நோக்கினால் இப்பாம்பின் மீது சிறு செதில்கள் இருப்பதைக் காணலாம். இது கெட்டி இல்லாத மண்ணில் வளை செய்து கொண்டு போகும். அதற்கு வாலின் நுனியில் உள்ள முள் போன்ற செதில் உதவுகிறது.
வாழ்க்கை
இது எறும்புகள், கரையான்களின் லார்வாக்கள், பூச்சிகளின் புழு, கூட்டுப்புழு, மண்புழு ஆகியவற்றை உண்ணும். இது ஒரு பார்த்தீனோஜெனடிக் (Parthenogenetic) ஆகும். இந்தப் பாம்பு இனத்தில் பெண் இனம் மட்டுமே உள்ளது. இது இனப் பெருக்கம் செய்ய ஆண் துணை தேவை இல்லை.
அனைத்து பெண் பாம்புகளும், மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை. இந்தப் பாம்புகள் சுயமாகவே அதிகபட்சம் 8 முட்டைகள் வரை இடுகின்றன. இதன் ஆயுள் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
மூடநம்பிக்கை
இந்தப் பாம்பு மோப்பச் சக்தியால் கறையானைத் தேடிக் கொண்டு வீட்டிற்குள் வருவதுண்டு. குறிப்பாக பாய்க்கு அடியில் காணப்படும். இந்தப் பாம்பைக் கண்டால் உடனே அடித்துக் கொன்று விடுவார்கள். இரவில் தூங்கும் பொழுது நம் காதுக்குள் புகுந்து விடும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆகவே தான் இது செவிப் பாம்பு என அழைக்கின்றனர்.
இது காதுக்குள் புகுந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடையாது. மேலும் இந்தப் பாம்பு யாரையும் கடிக்காது. கடித்தாலும் நஞ்சு கிடையாது. இந்தப் பாம்பு ஒரு அப்பாவி ஜீவன். இதனால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆகவே இதை அடித்துக் கொல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
கட்டுரையாளர்:-
ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்
பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு:
நகரமயமாதல், புவி வெப்பமடைதல், பெருங்கடலின் சூழலியல், நிலத்தடி நீரின் சிக்கல்கள், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள், ஒலி மாசு, நுண் நெகிழிகள்… என எதையும் மனிதன் விட்டுவைக்கவில்லை என்று சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பேசும் இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
நூலை பெற:
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்
https://thamizhbooks.com/product/samakala-sutru-suzhal-savalgal/
மேலும் தொடர்புக்கு: 44 2433 2924
மேலும் இதேபோல் சுற்றுசூழல் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகளை படிக்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.