நூல் அறிமுகம்: ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்

நூல் அறிமுகம்: ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்




நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

கைரதி 377 என்ற தலைப்பில் கோவைக் கவிஞர் மு.ஆனந்தன்  11 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

120 பக்கங்களைக் கொண்ட  மெலிந்த தொகுப்பு. ஆனால் சடசடவென்று வாசித்துக் கடந்துவிட முடியாத பேரரதிர்வுகளை உள்ளடக்கிய பக்கங்கள் அவை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட  கதைகளே என்றாலும் ஆசிரியரின் தன் அனுபவக்கதைகள் போல் விரிந்து செல்கின்றன.

“மாத்தராணி க்ளினிக்” கின் கதைக்களம் மதுரை. எவ்வித வர்ணனைச் சொற்களும் இல்லாமல் மேலமாசி வீதி, பெரியார் – பழங்காநத்தம் பேருந்து நிலையங்கள், திடீர் நகர், மருத்துவக் கல்லூரி என மதுரையின் நிலவியலை மிகத் துல்லியமாக நடக்கச் செய்கிறார் இக்கோவைக்கார எழுத்தாளர். இப்படியே விழுப்புரம், கொங்குப் பகுதியின் மசக்கவுண்டன் பாளையம், தில்லி ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி எனக் கதைக்களம் வெவ்வேறாகத் தாவிச் செல்கிறது. ஆனால் அத்தனை களங்களும் அதற்குள் நம்மைக் கொண்டு போய் நிறுத்தி வைக்கிறது.

கதையின் பாத்திரங்கள் ஒன்று இஸ்லாமியப் பின்னணி. இன்னொன்று கிருத்துவம், மற்றது பிராமணக் குடும்பம், கவுண்டர் சமூகம், ஆதிப் பழங்குடி தாசபளச்சிகர் என பலவாக இருந்தாலும் அவற்றின் புழங்கு மொழித் தனித்துவத்தோடு மெய்மையை அவரால் நிறுவ முடிகிறது.

இவையத்தனையிலும் உச்சம் நடு நீரோட்டத்தில் பெருமளவு விலக்கி வைப்பட்ட திருநர்களின் குழூவுச் சொற்களையும் நேர்த்தியாகத் தோழர் ஆனந்தன் கையாண்டிருப்பது. காலங்களிலும் 150 ஆண்டுகளுக்கு முன்னும், சுதந்திரம் கிடைத்த அடுத்த வருடத்திலும், இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலும், தற்காலத்தினூடும் புரண்டு எழுந்து வரலாற்று வாசம் மணக்கக் கதைகளை நடத்திச் செல்கிறார்.

இவையெல்லாம் கூட எழுதுபவன் முனைந்து செய்து விடக் கூடியது தான். ஆனால் இவரது முதன்மைப் பாத்திரங்கள் அனைத்தும் அவரே சொல்வது போல திருநர்களாக இருப்பது, அவர்கள் பால் தனித்த கரிசனம் இல்லாத  ஒருவரால் இப்படி எழுதி விடமுடியாது.

பொதுச் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாலினமான திருநர்களின் கதைகளை மட்டுமே கொண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வரதான் கொண்ட கருத்தியலின் பால் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டவரால் மட்டுமே துணிந்து கொண்டு வர இயலும்.

மு.ஆனந்தன் பாத்திரங்களாகவோ, பாத்திரத்தின் பக்கச் சார்பாகவோ இல்லாமல் காட்சிகளை செட்டான மொழியில் படம் பிடிக்கிறார். வாசகன் திருநர் பக்கம் நிற்கும்படியாக அவற்றைத் தொகுத்து அளிக்கிறார். அவர்களது இயல்பான உரையாடல் மொழியின் வழியாகத் தனது தர்க்கத்தை நிறுவுகிறார். பத்திக்குப் பத்தி அலட்டல் இல்லாத (உரைநடை) முரண்டைத் தொழிற்படுகிறது. தலைப்பில் இருந்தே அது துவங்கி விடுகிறது, “மாறிய பாலினரின் மாறாத வலிகள்” என்று.

உண்மைத் தரவுகள், வரலாற்று மெய்மைகள், தனித்துவமான சொல்லாடல்கள், யூகித்தும் உணரமுடியாத வலியுணர்வுகள் என அத்தனைக் கைச்சரக்கு வைத்திருந்தாலும் எதையும் திகட்டி விடாத விகிதாச்சரத்துடன் மு.ஆனந்தனால் தூவ முடிந்துள்ளது. சற்றே பிசகினாலும் கொச்சையான பாலுணர்வுக் கிளர்ச்சியாக மாறி விடக்கூடிய களத்தில் நின்று வாசகனின் கண்களாகவும், மனமாகவும் செயல்படுகிறார்.

இவரது ஆழ்ந்த மனிதாய உணர்வுகளும், செய்நேர்த்தியும் (இவர் வக்கீலாக இருப்பதால்) வழக்கறிஞர்களின் தர்க்கத்தின்பாலும்
மரியாதையை ஏற்படுத்துகிறது.

வாழ்த்துகளுடன்  – போப்பு

மு.ஆனந்தன்- 9443049987

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *