தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude)
தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை
– அ. குமரேசன்
பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல் கொந்தளிப்புகள் ஆகிய காரணங்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு நகரத்து மக்களின் நூறாண்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல். கல்வித்துறையினர் “இலக்கியக் குப்பை” என்று தள்ளிவைத்தனர், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் “கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்து அந்தப் புத்தகம் நீக்கப்பட்டது. மோசமான சொல்லாடல்கள், பாலியல் சித்தரிப்புகள் என்றெல்லாம் கூறி அந்த நாவலைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மீறி தனித்து நிற்கிறது “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude).
கொலம்பியா நாட்டின் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez 1927–2014) எழுதிய இந்தப் புத்தகம் 1967ஆம் ஆண்டில் வெளியானது. ஒரு கற்பனை நகரத்தில், ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை சந்திக்க வைக்கிற இந்நாவல் “மாய மெய்யியல்” உத்தியில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்று மதிக்கப்படுகிறது.
மனிதர்களின் தனிமை, வரலாற்றின் சுழற்சி ஆகிய கருப்பொருள்களை ஆராய்ந்து, மெய்யியலின் அழகிய கூறுகளை இணைக்கிற நாவல், விதியை மாற்ற முடியாது என்ற நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறது என்ற விமர்சனம் கூட எழுந்தது. நாவல் என்னதான் சொல்கிறது?
கற்பனை நகரம்
ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியா, அவரது இணையர் உர்சுலா இகுவாரன் இருவரும் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறி மகோண்டோ என்ற புதிய நகரத்தைக் கட்டமைக்கின்றனர். தனிமையான சொர்க்கம் என்று சொல்லத் தக்கதாக இருந்த அந்த நகரத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் சுரண்டல்கள், உள்நாட்டுப் போர்கள், அரசியல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ஆழமாகப் பாதிக்கின்றன. புயேண்டியா குடும்பம் இயல்பான காதல், உறவு, இன்பம், சோகம் என எதிர்கொள்வதோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவிக்கிறது. குறியீடுகளால் நிறைந்துள்ள நாவலில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
புயேண்டியா குடும்ப உறுப்பினர்கள், பலர் ஒரே விதமான பெயர்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்கள் முன்னோர்களின் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள், அந்தத் தவறுகளின் விளைவுகளும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. இது வரலாற்றின் சுழற்சி முறையை வலுப்படுத்துகிறது.
சுதந்திரமாக உலகெங்கும் சுற்றுகிற ஜிப்ஸி (நாடோடி) இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அறிவியல் ஞானம் கொண்டவரான மெல்குயாடஸ் என்ற கலகலப்பான மனிதரின் தலைமையில் அடிக்கடி அந்த நகரத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வேதியியல் புதுமைகள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார்கள், இது ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியாவை கவர்ந்திழுக்கிறது. மெல்குடயாஸ் ஒரு மர்ம மனிதராகவும், ரகசியக் குறிப்புகளாக ஏதோ எழுதிவைக்கிறார்.
புயேண்டியா இணையரின் மகன் ஜோஸ் ஆர்காடியோ வலிமையானவன் ஆனால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவன். மற்றொரு மகன் ஆரேலியானோ நிதானமானவன், ஆனால் புதிரானவன். இவன் பின்னர் அரசியல் கிளர்ச்சியில் பங்கேற்று தலைமைப் பொறுப்புக்கு வருகிறான். மகோண்டா நகரம் அரசியல் மோதல்களின் களமாகிறது. வியக்கத்தக்க மாற்றங்களுக்கும் உள்ளாகிறது.
நகரத்திற்கு ஒரு பெரிய வாழைப்பழ நிறுவனம் வருகிறது. விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களைக் கொள்முதல் செய்து எந்திரங்களின் மூலம் பதப்படுத்தி, பல்வேறு பொருள்களையும தயாரிக்கிற அந்த நிறுவனம் நவீனமயமாக்கலோடு, அப்பட்டமான உழைப்புச் சுரண்டலிலும் இறங்குகிறது. ஆட்சி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கிறது. கொந்தளிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்தப் போராட்டத்தின்போது ஒரு படுகொலை நடக்கிறது. நிறுவன உரிமையாளரின் செல்வாக்கால் அந்தக் கொலை பதிவிலிருந்தே நீக்கப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் நகரத்தின் குழப்பத்தையும் வீழ்ச்சியையும் குறிக்கின்றன.
நகரத்தையே உருவாக்கிய புயேண்டியா குடும்பத்தின் தலைமுறைகள், புதிய அணுகுமுறைகள் இல்லாதவர்களாகப் பழைய தவறுகளைத் தொடர்கிறார்கள், அழிவைச் சந்திக்கிறார்கள். எஞ்சியிருக்கும் புயேண்டியா அந்த ஜிப்ஸி தலைவர் மெல்குயாடஸ் ரகசியமாக எழுதிவைத்திருந்த கையெழுத்துப் பிரதியை எடுத்து, புதிரான குறியீடுகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கிறான். அதில் தன் குடும்பத்தின் அழிவு குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான். தலைவிதி போல எழுதப்பட்டிருப்பது பற்றிய யோசனையோடு படித்துக்கொண்டிருக்கும்போதே புயல் தாக்குகிறது. ஊரை முற்றிலுமாகக் குலைத்துப் போடுகிறது.
ஒவ்வொரு தலைமுறையும் மகோண்டோவை எவ்வாறு பாதிக்கிறது என்று நாவல் சித்தரிக்கிறது. நகரம் உருவாக்கப்பட்ட லட்சியத்திலிருந்து அது முடிந்து போகும் சோகம் வரையிலான காலத்தின் ஓட்டமே கதையாகிறது. கதாபாத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா, தலைவிதித் தத்துவத்தை நாவல் போதிக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. ஆனால், மாற்றமே இல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செயல்படுகிறபோது அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரே மாதிரியான முடிவுகளை எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கும், அதை ஒருவர் கணித்து எழுதியிருப்பது வழக்கமான தலைவிதி நம்பிக்கையாகாது என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட புறச்சூழல்கள் தனி மனிதர்களின் காதல் உறவுகளைக் கூடச் சீர்குலைக்கின்றன; பல கதாபாத்திரங்களைத் தனிமைக்குக் கொண்டு செல்கின்றன; விதிப்படி நடப்பது போலக் காட்சியளித்து, நுட்பமான முறையில் மனிதச் செயல்களே எதையும் தீர்மானிக்கின்றன என்றும், மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன என்றும் விளக்கமளிக்கிறார்கள்.
நாவலுக்கு எழுந்த எதிர்ப்புக்குக் காரணம், உழைப்புச் சுரண்டலையும், பாரம்பரியத்தின் பெயரால் தொடரும் பழமைப் போக்குகளையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் என்ற கருத்தும் பகிரப்பட்டிருக்கிறது.
முன்னோடி
நாவலின் படைப்பாளி கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் உண்மை நடப்புகளையும், கற்பனை வளர்ச்சிகளையும் இணைக்கிற மாய மெய்யியல் படைப்பாக்க உத்தியின் முன்னோடிகளில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவருடைய இந்த நாவல் பன்னாட்டு அளவில் பாராட்டுகளைப் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெருமிதத்திற்குரிய படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. “காலரா காலத்தில் காதல்” (Love in the Time of Cholera –1985) “ஒரு மரண முன்னறிவிப்பின் காலவரிசை” (Chronicle of a Death Foretold – 1985) உள்ளிட்ட நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
லத்தீன் அமெரிக்காவின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள், சிறுகதைகளுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்குக் கல்வி நிறுவனங்கள் தடைவிதித்ததை எதிர்த்து ஆங்கில ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். பின்னர் நாவல் நூலகங்களுக்குள் வந்தது.
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எதிர்ப்புக்கு உள்ளானதன் பின்னணியில் அவரது சோசலிசக் கருத்துகளும், கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பும் இருந்தன. அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
ஓடிடி திரையில்
இந்த புத்தகத்திற்கு பெரிய இலக்கிய விருது எதுவும் கிடைக்கவில்லை என்றாலும். 2007இல் நடந்த ஸ்பானிஷ் மாநாட்டில் இது அந்த மொழியின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல் 46 மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான படிகள் விற்பனையாகியுள்ளன.
“தனிமையின் நூறாண்டுகள்” ஸ்பானிஷ் மொழியில் வலைத் தொடராகத் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன், சென்ற ஆண்டிலிருந்து நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கவிதையழகோடு உருவாகியுள்ளதாகப் பாராட்டப்படும் இந்தத் தொடர் மார்க்வெஸ் குடும்பத்தினரின் ஆதரவுடன் படமாக்கப்பட்டுள்ளது.
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மார்க்வேஸில் மட்டுமின்றி மரியா பூசோவிடத்திலும் கார்க்கியின் ஆர்ட்மோனாவ் பாதிப்பு நுட்பமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.